கம்பராமாயணம் (ராமாவதாரம்)
பால காண்டம்
பாயிரம்
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே. 1
சிற்குணத்தர் தெரிவு அரு நல் நிலை
எற்கு உணர்த்த அரிது எண்ணிய மூன்றினுள்
முற் குணத்தவரே முதலோர் அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ. 2
ஆதி அந்தம் அரி என யாவையும்
ஓதினார் அலகு இல்லன உள்ளன
வேதம் என்பன மெய்ந் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர்பற்று இலார். 3
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன்மற்று இக்
காசுஇல் கொற்றத்து இராமன் கதைஅரோ. 4
நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை.
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே. 5
வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இது இயம்புவது யாது எனின்
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே. 6
துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போலும்என் பாஅரோ. 7
முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ. 8
அறையும் ஆடரங்கும் மடப் பிள்ளைகள்
தறைவயில் கீறிடின் தச்சரும் காய்வரோ.
இறையும் ஞானம் இலாத என் புன் கவி
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ. 9
தேவபாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும் முந்திய
நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ. 10
நடையின்நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர்வயின் தந்ததே. 11
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடுஇயல் வழி அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டு அழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவார்க்கே.
12
1. ஆற்றுப் படலம்
ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசலம்பு முலையவர் கண் எனும்
பூசலம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்றணி கூறுவாம். 1
நீற ணிந்த கடவுள் நிறத்தவான்
ஆற ணிந்து சென் றார்கலி மேய்ந்தகில்
சேற ணிந்த முலைத் திரு மங்கைதன்
வீற ணிந்தவன் மேனியின் மீண்டதே. 2
பம்பி மேகம் பரந்தது பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்
அம்பின் ஆற்றுதும் என்று அகன்குன்றின்மேல்
இம்பர் வாரி எழுந்தது போன்றதே. 3
புள்ளி மால்வரை பொன்னென நோக்கிவான்
வெள்ளி வீழிடை வீழ்த்தெனத் தாரைகள்
உள்ளி யுள்ள எலாமுவந்து ஈயும்அவ்
வள்ளி யோரின் வழங்கின மேகமே. 4
மானம் நேர்ந்து அறம் நோக்கி மனுநெறி
போன தண் குடை வேந்தன் புகழ் என
ஞானம் முன்னிய நான்மறையாளர் கைத்
தானம் என்ன தழைத்தது நீத்தமே. 5
தலையும் ஆகமும் தாளும் தழீஇயதன்
நிலைநி லாதிறை நின்றது போலவே
மலையின் உள்ள எ லாம் கொண்டு மண்டலால்
விலையின் மாதரை ஒத்ததுஅவ் வெள்ளமே. 6
மணியும் பொன்னும் மயில் தழைப்பீலியும்
அணியும் ஆனை வெண்கோடும் அகிலும் தண்
இணை இல் ஆரமும் இன்ன கொண்டு ஏகலான்
வணிக மாக்களை ஒத்ததுஅவ் வாரியே. 7
பூ நிரைத்து மென் தாது பொருந்தியும்
தேன ளாவியும் செம்பொன் விராவியும்
ஆனை மாமத வாற்றொடு அளாவியும்
வான வில்லை நிகர்த்ததுஅவ் வாரியே. 8
மலை எடுத்து மரங்கள் பறித்து மாடு
இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்
அலை கடல் தலை அன்று அணை வேண்டிய
நிலையுடைக் கவி நீத்தம்அந் நீத்தமே. 9
ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பிகந்து
ஊக்க மேமிகுந்து உள்தெளிவு இன்றியே
தேக்கு எறிந்து வருதலின்தீம் புனல்
வாக்கும் தேன்நுகர் மாக்களை மானுமே. 10
பணை முகக் களி யானை பல் மாக்களோடு
அணி வகுத்தென ஈர்த்து இரைத்து ஆர்த்தலின்
மணி உடைக் கொடி தோன்ற வந்து ஊன்றலால்
புணரிமேல் பொரப் போவதும் போன்றதே. 11
இரவி தன்குலத்து எண்ணிப்பல் வேந்தர்தம்
புரவு நல்லொழுக் கின்படி பூண்டது
சரயு என்பது தாய்முலை யன்னது இவ்
உரவு நீர்நிலத்து ஓங்கும் உயிர்க்கெலாம்.
12
கொடிச்சியர் இடித்த சுண்ணம் குங்குமம் கோட்டம்
ஏலம்
நடுக்குறு சந்தம் சிந்தூரத்தொடு நரந்தம் நாகம்
கடுக்கை ஆர் வேங்கை கோங்கு பச்சிலை கண்டில்
வெண்ணெய்
அடுக்கலின் அளிந்த செந் தேன் அகிலொடு நாறும்
அன்றே. 13
எயினர்வாழ் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி
வயின்வயின் எயிற்றி மாதர் வயிறலைத்து ஒட ஓட்டி
அயின்முகக் கணையும் வில்லும் வாரிகொண்டு அலைக்கும்
நீரால்
செயிர் தருங் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே.
14
செறிநறுந் தயிரும் பாலும் வெண்ணெயும் சேந்த
நெய்யும்
உறியோடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி
மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால்
பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே.
15
கதவினை முட்டி மள்ளர் கையெடுத்து ஆர்ப்ப எய்தி
நுதலணி ஓடை பொங்க நுகர்வரி வண்டு கிண்டத்
ததைமணி சிந்த உந்தித் தறியிறத் தடக்கை சாய்த்து
மத மழை யானை என்ன மருதம் சென்று அடைந்தது அன்றே.
16
முல்லையைக் குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை
ஆக்கி
புல்லிய நெய்தல் தன்னைப் பொருஅரு மருதம் ஆக்கி
எல்லைஇல் பொருள்கள் எல்லாம் இடை தடுமாறும்
நீரால்
செல்லுறு கதியில் செல்லும் வினைஎனச் சென்றது
அன்றே. 17
காத்த கால் மள்ளர் வெள்ளக் கலிப்பறை கறங்கக்
கைபோய்ச்
சேர்த்த நீர்த் திவலை பொன்னும் முத்தமும் திரையின்
வீசி
நீத்த மாந்தலைய தாகி நிமிர்ந்து பார் கிழிய
நீண்டு
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்த
தன்றே. 18
கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது
என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது
அன்றே. 19
தாதுகு சோலைதோறும் சண்பகக் காடுதோறும்
போத விழ் பொய்கைதோறும் புதுமணத்தடங்கள்தோறும்
மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்புதோறும் உயிர்என உலாய தன்றே. 20
2. நாட்டுப் படலம்
வாங்கரும் பாத நான்கும் வகுத்தவான் மீகி என்பான்
தீங்கவி செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்
ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவ மாந்தி
மூங்கையான் பேச லுற்றான் என்னயான் மொழிய லுற்றேன்.
1
வரம்பெலாம் முத்தம் தத்தும் மடையெலாம் பணில
மாநீர்க்
குரம்பெலாம் செம்பொன் மேதிக் குழியெலாம் கழுநீர்க்
கொள்ளை
பரம்பெலாம் பவளம் சாலிப் பரப்பெலாம் அன்னம்
பாங்கர்க்
கரும்பெலாம் செந்தேன் சந்தக் காவெலாம் களிவண்டு
ஈட்டம். 2
ஆறுபாய் அரவம் மள்ளர் ஆலை பாய் அமலை ஆலைச்
சாறு பாய் ஓதை வேலைச் சங்கின் வாய்ப் பொங்கும்
ஓசை
ஏறு பாய் தமரம் நீரில் எருமை பாய் துழனி இன்ன
மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும்மா மருத வேலி.
3
தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைகண் விழித்து
நோக்கத்
தெண்திரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கும்
மாதோ. 4
தாமரைப் படுவ வண்டும் தகை வரும் திருவும் தண்
தார்க்
காமுகர்ப் படுவ மாதர் கண்களும் காமன் அம்பும்
மா முகில் படுவ வாரிப் பவளமும் வயங்கு முத்தும்
நாமுதல் படுவ மெய்யும் நாம நூல் பொருளு மன்னோ.
5
நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை யுறங்கும்
மேதி
தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்
தூரிடை யுறங்கும் ஆமை துறையிடை யுறங்கும் இப்பி
போரிடை யுறங்கும் அன்னம் பொழிலிடை யுறங்கும்
தோகை. 6
படை உழ எழுந்த பொன்னும் பனிலங்கள் உதிர்த்த
முத்தும்
இடறிய பரம்பில் காந்தும் இன மணித்தொகையும்
நெல்லின்
மிடை பசுங்கதிரும் மீனும் மென் தழைக் கரும்பும்
வண்டும்
கடைசியர் முகமும் போதும் கண்மலர்ந்து ஒளிரும்
மதோ. 7
தெள்விளிச் சீறியாழ்ப் பாணர் தேம்பிழி நறுவ
மாந்தி
வள்விசிக் கருவி பம்ப வயின்வயின் வழங்கு பாடல்
வெள்ளிவெண் மாடத் தும்பர் வெயில்விரி பசும்பொற்
பள்ளி
எள்ளருங் கருங்கள் தோகை இன்துயில் எழுப்பும்
அன்றே. 8
ஆலைவாய் கரும்பின் தேனும் அரி தலை பாளைத் தேனும்
சோலைவாய்க் கனியின் தேனும் தொடைஇழி இறாலின்
தேனும்
மாலைவாய் உகுத்த தேனும் வரம்பிகந்தோடி வங்க
வேலைவாய் மடுப்ப உண்டு மீனெலாங் களிக்குமாதோ.
9
பண்கள்வாய் மிழற்றும் இன்சொல் கடைசியர் பரந்து
நீண்ட
கண் கைகால் முகம் வாய் ஒக்கும் களையலாற் களையி
லாமை
உண்கள்வார் கடைவாய் மள்ளர் களைகிலாது உலாவி
நிற்பார்
பெண்கள் பால் வைத்த நேயம் பிழைப்பாரோ சிறியோர்
பெற்றால். 10
புதுப்புனல் குடையும் மாதர் பூவொடு நாவி பூத்த
கதுப்புறு வெறியே நாறுங் கருங்கடல் தரங்கமென்றால்
மதுப்பொதி மழலைச் செவ்வாய் வாள் கடைக் கண்ணின்
மைந்தர்
விதுப்புற நோக்கும் மின்னார் மிகுதியை விளம்பலாமோ.
11
வெண்தளக் கலவைச் சேறும் குங்கும விரைமென் சாந்தும்
குண்டலக் கோல மைந்தர் குடைந்தநீர்க் கொள்ளை
சாற்றின்
தண்டலைப் பரப்பும் சாலி வேலியும் தழீஇய வைப்பும்
வண்டலிட்டு ஓட மண்ணும் மதுகரம் மொய்க்கும்
மாதோ. 12
சேலுண்ட ஒண் கணாரில் திரிகின்ற செங்கால் அன்னம்
மாலுண்ட நளினப் பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை
காலுண்ட சேற்று மேதி கன்று உள்ளி கனைப்பச்
செர்ந்த
பாலுண்டு துயிலப் பச்சைத் தேரை தாலாட்டும்
பண்ணை. 13
குயிலினம் வதுவை செய்யக் கொம்பிடை குனிக்கும்
மஞ்ஞை
அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு
செய்யப்
பயில்சிறை யரச அன்னம் பன்மலர்ப் பள்ளி நின்றும்
துயில் எழத் தும்பி காலைச் செவ்வழி முரல்வ
சோலை. 14
பொருந்திய மகளிரோடு வதுவையிற் பொருந்துவாரும்
பருந்தொடு நிழல் சென்று என்ன இயல் இசை பயன்
துய்ப்பாரும்
மருந்தினும் இனிய கேள்வி செவியுற மாந்துவாரும்
விருந்தினர் முகம் கண்டு அன்ன விழா அணிவிரும்புவாரும்.
15
கறுப்புறு மனமும் கண்ணிற் சிவப்புறு சூட்டுங்
காட்டி
உறுப்புறு படையில் தாக்கி உறுபகை யின்றிச்
சீறி
வெறுப் பில களிப்பின் வெம்போர் மதுகைய வீர
வாழ்க்கை
மறுப்பட வாவி பேணா வாரணம் பொருத்து வாரும்.
16
எருமை நாகு ஈன்ற செங்கண் ஏற்றையோடு ஏற்றை சீற்றத்து
உரும் இவை என்னதாக்கி ஊழுற நெருக்கி ஒன்றாய்
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன அதனை நோக்கி
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சுற ஆர்க்கின்றாரும்.
17
முள்ளரை முளரி வெள்ளி முளையிற முத்தும் பொன்னும்
தள்ளுற மணிகள் சிந்தச் சலஞ்சலம் புலம்பச் சாலில்
துள்ளிமீன் துடிப்ப ஆமை தலைபுடை சுரிப்பத்
தூம்பின்
உள் வரால் ஒளிப்ப மள்ளர் உழுபகடு உரப்பு வாரும்.
18
முறை அறிந்து அவாவை நீக்கி முனிவுழி முனிந்து
வெஃகும்
இறை அறிந்து உயிர்க்கு நல்கும் இசை கெழு வேந்தன்
காக்கப்
பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வப் பூதலம்
தன்னில் பொன்னின்
நிறை பரம் சொரிந்து வங்கம் நெடு முதுகு ஆற்றும்
நெய்தல். 19
எறிதரும் அரியின் சும்மை எடுத்தவான் இட்ட போர்கள்
குறிகொளும் போத்திற் கொல்வார் கொன்றநெற் குவைகள்
செய்வார்
வறியவர்க்கு உதவி மிக்க விருந்துண மனையில்
உய்ப்பான்
நெறிகளும் புதையப் பண்டி நிறைத்து மண் நெளிய
ஊர்வார். 20
கதிர்படு வயலின் உள்ள கடிகமழ் பொழிலின் உள்ள
முதிர்பல மரத்தின் உள்ள முதிரைகள் புறவின்
உள்ள
பதிபடு கொடியின் உள்ள படிவளர் குழியின் உள்ள
மதுவள மலரிற் கொள்ளும் வண்டென மள்ளர் கொள்வார்.
21
முந்துமுக் கனியின் நானா முதிரையின் முழுத்த
நெய்யின்
செந்தயிர்க் கண்டங் கண்டம் இடையிடை செறிந்த
சோற்றின்
தந்தம் இல் இருந்து தாமும் விருந் தொடும் தமரி
னோடும்
அந்தணர் அமுது அருத்தி அயிலுறும் அமலைத்து
எங்கும். 22
பருவ மங்கையர் பங்கய வாள்முகத்து
உருவ உண்கணை ஒண்பெடை யாம் எனக்
கருதி அன்பொடு காமுற்று வைகலும்
மருத வேலியின் வைகின வண்டரோ. 23
வேளை வென்ற விழிச்சியர் வெம்முலை
ஆளை நின்று முனிந்திடும் அங்கொர்பால்
பாளை தந்த மதுப்பரு கிப்பரு
வாளை நின்று மதர்க்கும் மருங்கெலாம். 24
ஈர நீர் படிந்து இன்னிலத்தே சில
கார்கள் என்ன வரும் கரு மேதிகள்
ஊரில் நின்ற கன்று உள்ளிட மென் முலை
தாரை கொள்ள தழைப்பன சாலியே. 25
முட்டு இல் அட்டில் முழங்குற வாக்கிய
நெட்டுலைக் கழுநீர் நெடு நீத்தம் தான்
பட்ட மென் கழுகு ஓங்கு படப்பை போய்
நட்ட செந்நெல்லின் நாறு வளர்க்குமே. 26
சூட்டுடைத் துணைத் தூ நீற வாரணம்
தாள் துணைக் குடைய தகை சால் மணி
மேட்டு இமைப்பன மின்மினி ஆம் எனக்
கூட்டின் உய்க்கும் குரீஇயின் குழாம் அரோ.
27
தோயும் வெண்தயிர் மத்தொலி துள்ளவும்
ஆய வெள்வளை வாய்விட்டு அரற்றவும்
தேயு நுண்ணிடை சென்று வணங்கவும்
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார். 28
தினைச்சி லம்புவ தீஞ்சொல் இளங்கிளி
நனைச்சி லம்புவ நாகிள வண்டு பூம்
புனைச்சி லம்புவ புள்ளினம் வள்ளியோர்
மனைச்சி லம்புவ மங்கல வள்ளையோ. 29
குற்ற பாகு கொழிப்பவர் கோள்நெறி
கற்றி லாத கருங்கண் நுளைச்சியர்
முற்றில் ஆர முகந்துதம் முன்றிலில்
சிற்றில கோலிச் சிதறிய முத்தமே. 30
துருவை மென்பிணை ஈன்ற துளக்கிலா
வரிம ருப்பிணை வந்தலை யேற்றைவான்
உரும் இடித்தெனத் தாக்குறும் ஓதையின்
வெருவி மால்வரைச் சூல்மழை மின்னுமே. 31
கன்று உடை பிடி நீக்கிக் களிற்றினம்
வன்றொடர்ப் படுக்கும் வன வாரிசூழ்
குன்று டைக் குல மள்ளர் குழூஉக்குரல்
இன் துணைக்களி யன்ன மிரிக்குமே. 32
வள்ளி கொள்பவர் கொள்வன மாமணித்
துள்ளி கொள்வன தூங்கிய மாங்கனி
புள்ளி கொள்வன பொன்விரி புன்னையிற்
பள்ளி கொள்வன பங்கயத்து அன்னமே. 33
கொன்றை வேய்ங்குழற் கோவலர் முன்றிலில்
கன்று உறங்கும் குரவை கடைசியர்
புந்த லைப்புனம் காப்புடை போதரச்
சென்று இசைக்கும் நுளைச்சியர் செவ்வழி. 34
சேம்பு காலிறச் செங்கழு நீர்க்குளத்
தூம்பு காலச் சுரிவளை மேய்வன
காம்பு கால்பொரக் கண்ணகன் மால்வரைப்
பாம்பு நான்றெனப் பாய்பசுந் தேறலே. 35
பெருந்த டங்கட் பிறைநுத லார்க்கெலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே. 36
பிறை முகத் தலை பெட்பின் இரும்பு போழ்
குறை நறைக் கறிக் குப்பை பருப்பொடு
நிறை வெண் முத்தின் நிறத்து அரிசி குவை
உறைவ கொட்பின் ஊட்டிடம் தோறெலாம். 37
கலம் சுரக்கும் நிதியம் கணக்கு இலா
நிலம் சுரக்கும் நிறை வளம் நல் மணி
பிலம் சுரக்கும் பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கு எலாம்.
38
கூற்றம் இல்லையொர் குற்றம் இலாமையால்
சீற்றம் இல்லை தம் சிந்தையிற் செம்மையால்
ஆற்ற நல்லறம் அல்லது இலாமையால்
ஏற்றம் அன்றி இழித்தகவு இல்லையே. 39
நெறிக டந்து பரந்தன நீர்த்தமே
குறிய ழிந்தன குங்குமத் தோள்களே
சிறிய மங்கையர் தேயு மருங்குலே
வெறிய வும்மவர் மென்மலர்க் கூந்தலே. 40
அகில்இ டும்புகை அட்டில் இடும்புகை
நகலின் ஆலை நறும்புகை நான்மறை
புகலும் வேள்வியிற் பூம்புகை யோடளாய்
முகிலின் விம்மி முயங்கின எங்கணும். 41
இயல்புடை பெயர்வன மயின்மணி யிழையின்
வெயில்புடை பெயர்வன மிளிர்முலை குழலின்
புயல்புடை பெயர்வன பொழிலவர் விழியின்
கயல்புடை பெயர்வன கடிகமழ் கழனி. 42
இடையிற மகளிர்கள் எறிபுனல் மறுகக்
குடையவர் துவரிதழ் அலர்வன குமுதம்
மடைபெயர் அனம்என மடநடை யிளகக்
கடைசியர் முகமென மலர்வன கமலம். 43
விதியினை நகுவன அயில்விழி பிடியின்
கதியினை நகுவன அவர்நடை கமலப்
பொதியினை நகுவன புணர்முலை கலைவாழ்
மதியினை நகுவன வனிதையர் வதனம். 44
பகலினொடு இகலுவ படர்மணி மடவார்
நகிலினொடு இகலுவ நனிவளர் இளநீர்
துகிலினொடு இகலுவ சுதைபுரை நுரைகார்
முகிலினொடு இகலுவ கடிமண முரசம். 45
காரொடு நிகர்வன கடிபொழில் கழனிப்
போரொடு நிகர்வன பொலன்வரை யணைசூழ்
நீரொடு நிகர்வன நிறைகடல் நிதிசால்
ஊரொடு நிகர்வன இமையவர் உலகம். 46
நெல்மலை யல்லன நிரைவரு தரளம்
சொன்மலை யல்லன தொடுகட லமிர்தம்
நன்மலை யல்லன நதிதரு நிதியம்
பொன்மலை யல்லன மணிபடு புளினம். 47
பந்தினை இளையவர் பயில் இடம் மயில் ஊர்
கந்தனை அனையவர் கலை தெரி கழகம்
சந்தனவனம் அல சண்பக வனமாம்
நந்தன வனம் அல நறை விரி புறவம். 48
கோகிலம் நவில்வன இளையவர் குதலைப்
பாகு இயல் கிளவிகள் அவர் பயில் நடமே
கேகயம் நவில்வன கிளர் இள வளையின்
நாகுகள் உமிழ்வன நகை புரை தரளம். 49
பழையர்தம் மனையன பழ நறை நுகரும்
உழவர்தம் மனையன உழு தொழில் புரியும்
மழவர்தம் மனையன மணஒலி இசையின்
கிழவர்தம் மனையன கிளை பயில் வளை யாழ். 50
கோதைகள் சொரிவன குளிர் இள நறவம்
பாதைகள் சொரிவன பரு மணி கனகம்
ஊதைகள் சொரிவன உறை உறும் அமுதம்
காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள் 51
இடம் கொள் சாயல் கண்டு இளைஞர் சிந்தைபோல்
தடங் கொள் சோலைவாய் மலர் பெய் தாழ் குழல்
வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும்
தொடர்ந்து போவனதோகை மஞ்ஞையே. 52
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரை இலாமையால்
வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால். 53
எள்ளும் ஏனலும் இறுங்கும் சாமையும்
கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும்
அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும்
தள்ளும் நீர்மையின் தலைமயங்குமே. 54
உயரும் சார்வு இலா உயிர்கள் செய் வினைப்
பெயரும் பல் கதிப் பிறக்குமாறுபோல்
அயிரும் தேனும் இன் பாகும் ஆயர் ஊர்த்
தயிரும் வேரியும் தலைமயங்குமே. 55
கூறு பாடலும் குழலின் பாடலும்
வேறு வேறு நின்று இசைக்கும் வீதிவாய்
ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம் என
சாறும் வேள்வியும் தலைமயங்குமே. 56
மூக்கில் தாக்குறும் மூரி நந்தும் நேர்
தாக்கின் தாக்குறும் பறையும் தண்ணுமை
வீக்கின் தாக்குறும் விளியும் மள்ளர்தம்
வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே. 57
தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப்
பாலின் ஊட்டுவார் செங் கை பங்கயம்
வால் நிலா உறக் குவிவ மானுமே. 58
பொற்பின் நின்றன பொலிவு பொய்யிலா
நிற்பின் நின்றன நீதி மாதரார்
அற்பின் நின்றன அறங்கள் அன்னவர்
கற்பின் நின்றன காலமாரியே. 59
சோலை மாநிலந் துருவி யாவரே
வேலை கண்டுதா மீள வல்லவர்
சாலும் வார்புனல் சரயு வும்பல
காலின் ஓடியும் கண்டது இல்லையே. 60
வீடு சேரநீர் வேலை கால்மடுத்து
ஊடு பேரினும் உலைவி லாநலம்
கூடு கோசலம் என்னும் கோதிலா
நாடு கூறினாம் நகரம் கூறுவாம். 61
3. நகரப் படலம்
செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின் சீரிய கூரிய தீம்
சொல்
வவ்விய கவிஞர் அனைவரும் வடநூல் முனிவரும் புகழ்ந்தது
வரம்பு இல்
எவ் உலகத்தோர் யாவரும் தவம் செய்து ஏறுவான்
ஆதரிக்கின்ற
அவ் உலகத்தோர் இழிவதற்கு அருத்தி புரிகின்றது
அயோத்தி மா நகரம். 1
நிலமகள் முகமோ திலகமோ கண்ணோ நிறைநெடு மங்கல
நாணோ
இலகுபூண் முலைமேல் ஆரமோ உயிரின் இருக்கையோ
திருமகட்கு இனிய
மலர்கொலோ மாயோன் மார்பினன் மணிகள் வைத்தபொற்
பெட்டியோ வானோர்
உலகின்மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளே யாதென
உரைப்பாம். 2
உமைக்கொரு பாகத் தொருவனும் இருவர்க்கு ஒருதனிக்
கொழுநனும் மலர்மேல்
கமைப் பெருஞ் செல்வக் கடவுளும் உவமை கண்டிலர்
அங்கது காண்பான்
அமைப்பருங் காதல் அது பிடித்து உந்த அந்தரம்
சந்திரா தித்தர்
இமைப்பிலர் திரிவர் அதுவலால் இதனுக்கு இயம்பலாம்
ஏதுமற் றியாதோ. 3
அயின் முகக் குலிசத்து அமரர்கோன் நகரும் அளகையும்
என்றிவை அயனார்
பயிலுற வுற்ற படிபெரும் பான்மை பகர்திரு நகரிது
படைப்பான்
மயன்முதற் றெய்வத் தச்சரும் தத்தம் மனத் தொழில்
நாணினர் மறந்தார்
புயல்தொடு குடுமி நெடுநிலை மாடத்து இந்நகர்
புகலுமாறு எவனோ. 4
புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம் என்னும்
ஈது அரு மறைப் பொருளே
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும்
வளர்த்தார்.
எண் அருங் குணத்தின் அவன் இனிது இருந்து இவ்
ஏழ் உலகு ஆள் இடம் என்றால்
ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு போகம் உறைவு இடம்
உண்டு என உரைத்தல். 5
தங்கு பேரருளும் தருமமும் துணையாத் தம் பகைப்
புலன்கள் ஐந்து அவிக்கும்
பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும்
புகலிடம் ஆன
செங்கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப திருவின்
வீற்றீருந்தனன் என்றால்,
அங்கண் மா ஞாலத்து இந்நகர் ஒக்கும் பொன் நகர்
அமரர் நாட்டு யாதோ. 6
அரசெலாம் அவண அணி எலாம் அவணரும் பெறல் மணி
எலாம் அவண
புரைசை மால் களிரும் புரவியும் தேரும் பூதலத்து
யாவையும் அவண
விரைசுவார் முனிவர் விண்ணவர் இயக்கர் விஞ்சையர்
முதலினோர் என்றால்
உரைசெய்வேன் யானே ஆனபோது அதனுக்கு உவமைதான்
அரிது அரோ உளதோ. 7
நால்வகைச் சதுரம் விதிமுறை நாட்டி நனிதவ உயர்ந்தன
பனிதோய்
மால்வரைக் குலத்தின் யாவையும் இல்லை ஆதலால்
உவமைமற் றில்லை
நூல்வரைத் தொடர்ந்து பயத்தொடு பழகி நுணங்கிய
நூலவர் உணர்வே
போல் வகைத் தல்லால் உயர்வினொடு உயர்ந்து என்னலாம்
பொன் மதில் நிலையே. 8
மேவரும் உணர்வின் முடிவிலா மையினால் வேதமும்
ஒக்கும் விண் புகலால்
தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும் திண்பொறி
யடக்கிய செயலால்
காவலிற் கலையூர் கன்னியை யொக்கும் சூலத்தாற்
காளியை ஒக்கும்
யாவையும் ஒக்கும் பெருமையால் எய்தற்கு அருமையால்
ஈசனை ஒக்கும். 9
பஞ்சின்வான் மதியை யூட்டிய வனைய படருகிர்ப்
பங்கயச் செங்கால்
வஞ்சிபோல் மருங்குற் குரும்பைபோற் கொங்கை வாங்குவேய்
வைத்தமென் பணைத்தோள்
அஞ்சொலார் பயிலும் அயோத்திமா நகரின் அழகுடைத்
தோஎன அறிவான்
இஞ்சிவான் ஓங்கி இமையவர் உலகம் காணிய எழுந்தது
ஒத்து உளதே. 10
கோலிடை யுலகம் அளத்தலிற் பகைஞர் முடித்தலை
கோடலின் மனுவின்
நூல்நெறி நடக்கும் செவ்வையின் யார்க்கும் நோக்கருங்
காவலின் வலியின்
வேலொடு வாள்விற் பயிற்றலின் வெய்ய சூழ்ச்சியின்
வெலற்குஅரு வலத்தின்
சால்புடை உயர்விற் சக்கர நடாத்தும் தன்மையின்
தலைவரொத் துளதே. 11
சினத்து அயில் கொலை வாள் சிலை மழு தண்டு சக்கரம்
தோமரம் உலக்கை,
கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல் என்று
இவை கணிப்பு இல கொதுகின்
இனத்தையும் உவணத்து இறையையும் இயங்கும் காலையும்
இதம் அல நினைவார்
மனத்தையும் எறியும் பொறி உள என்றால் மற்று
இனி உணர்த்துவது எவனோ. 12
பூணினும் புகழே அமையும் என்று இனைய பொற்பில்
நின்று உயிர் நனி புரக்கும்
யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கு மிரவிதன்
குலமுதல் நிருபர்
சேணையும் கடந்து திசையையும் கடந்து திகிரியும்
செந் தனிக்கோலும்
ஆணையும் காக்கும் ஆயினும் நகருக்கு அணியென
இயற்றியது அன்றே. 13
அன்னமா மதிலுக்கு ஆழிமால் வரையை அலைகடல் சூழ்ந்தென
அகழி
பொன்விலை மகளிர் மனமெனக் கீழ்ப்போய்ப் புன்கவி
எனத்தெளி வின்றிக்
கன்னியர் அல்குல் தடமென யார்க்கும் படிவரும்
காப்பின தாகி
நன்னெறி விலக்கும் பொறியென எறியும் கராத்தது
நவிலலுற் றதுநாம். 14
ஏகுகின்ற தன்க ணங்க ளோடும் எல்லை காண்கிலா
நாகம் ஒன்று அகல்கி டங்கை நாம வேலை ஆமெனா
மேகம் மொண்டு கொண்டெ ழுந்து விண்தொ டர்ந்த
குன்றமென்று
ஆக நொந்து நின்று தாரை அம்மதிற்கண் வீசுமே.
15
அந்த மாம திற்பு றத்து அகத்தெ ழுந்து அலர்ந்த
நீள்
கந்த நூறு பங்க யத்த கான மான மாதரார்
முந்து வாள்மு கங்க ளுக்கு உடைந்து போன மொய்ம்பெலாம்
வந்து போர்ம லைக்க மாம தில்வ ளைத்த மானுமே.
16
சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்று முற்று
பாரெலாம்
போழ்ந்த மாகி டங்கிடைக் கிடந்து பொங்கு இடங்கர்மா
தாழ்ந்த வங்க வாரி யிற்த டுப்பு ஓணாம தத்தினால்
ஆழ்ந்த யானை மீது எழுந்து அழுந்து கின்ற போலுமே.
17
ஈரும் வாளின் வால்வி திர்த்து எயிற்று இளம்பி
றைக்குலம்
பேர மின்னி வாய்வி ரித்து எரிந்த கட்பி றங்குதீச்
சோர வொன்றை யொன்று முன்தொ டர்ந்து சீறு இடங்கர்மா
போரில் வந்து சீறு கின்ற போர்அ ரக்கர் போலுமே.
18
ஆளும் அன்னம் வெண் குடைக் குலங்களா அருங் கராக்
கோள் எலாம் உலாவு கின்ற குன்றம் அன்ன யானையா
தாள் உலாவு பங்கயத் தரங் கமும் துரங் கமா
வாளும் வேலும் மீனம் ஆக மன்னர் சேனை மானுமே.
19
விளிம்பு சுற்றும் முற்று வித்து வெள்ளி கட்டி
உள்ளுற
பளிங்கு பொன் தலத்து அகட்டு அடுத் துறப் படுத்தலின்
தளித்த கல் தலத்தொடு அச்சலத்தினை தனித் துறத்
தெளிந்து உணர்த் துகிற்றும் என்றல் தேவ ராலும்
ஆவதோ. 20
அன்ன நீள் அகன் கிடங்கு சூழ்கிடந்த ஆழியை
துன்னி வேறு சூழ்கிடந்த தூங்கு வீங்கு இருட்
பிழம்பு
என்னலாம் இறும்பு சூழ்கிடந்த சோலை எண்ணில்
அப்
பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே.
21
எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற முன்னம்
மால்
ஒல்லை உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்ததால்
மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறுறா வழக்கினால்
நல்ல ஆறு சொல்லும் வேதம் நான்கும் அன்ன வாயிலே.
22
தா இல் பொன் தலத்தின் நல் தவத்தினோர்கள் தங்கு
தாள்
பூ உயிர்த்த கற்பகப் பொதும்பர் புக்கு ஒதுங்குமால்
ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ வந்து அணைத்திடா
ஓவியப் புறாவின் மாடு இருக்க ஊடு பேடையே.
23
கல்ல டித்த டுக்கி வாய் பளிங்க ரிந்து கட்டிமீது
எல்லி டப்ப சும்பொன் வைத்து இலங்கு பன்ம ணிக்குலம்
வில்லி டக்கு யிற்றி வாள் விரிக்கும் வெள்ளி
மாமரம்
புல்லி டக்கி டத்தி வச் சிரத்த கால்பொ ருத்தியே.
24
மரக தத்து இலங்கு போதி கைத்த லத்து வச்சிரம்
புரைத புத்த டுக்கி மீது பொன்கு யிற்றி மின்குலாம்
நிரைம ணிக்கு லத்தி நாளி நீள் வகுத்த வோளிமேல்
விரவு கைத்த லத்தின் உய்த்த மேத கத்தின் மீதரோ.
25
ஏழ்பொ ழிற்கும் ஏழ்நி லத் தலம்ச மைத்த தென்ன
நூல்
ஊழ்உ றக்கு றித்த மைத்த உம்பர் செம்பொன் வேய்ந்துமீச்
சூழ்சு டர்ச் சிரத்துநன் மணித்த சும்பு தோன்றலால்
வாழ்நி லக்கு லக்கொ ழுந்தை மெளலி சூட்டியன்னவே.
26
திங்களும் கரிதென வெண்மை தீற்றிய
சங்கவெண் சுதையுடைத் தவள மாளிகை
வெங்கடுங் கால்பொர மேக்கு நோக்கிய
பொங்கு இரும் பாற்கடல் தரங்கம் போலுமே. 27
புள்ளியம் புறவுஇறை பொருந்து மாளிகை
தள்ளருந் தமனியத் தகடு வேய்ந்தன
எள்ளருங் கதிரவன் இளவெ யிற்குழாம்
வெள்ளியங் கிரிமிசை விரிந்த போலுமே. 28
வயிர நல் கால் மிசை மரகதத் துலாம்
செயிர் அறப் போதிகை கிடத்தி சித்திரம்
உயிர் பெறக் குயிற்றிய உம்பர் நாட்டவர்
அயிர் உற இமைப்பன அளவு இல் கோடியே. 29
சந்திர காந்தத்தின் தலத்த சந்தனப்
பந்தி செய் தூணின்மேல் பவளப் போதிகை
செந் தனி மணித் துலாம் செறிந்த திண் சுவர்
இந்திர நீலத்த எண் இல் கோடியே. 30
பாடகக் கால் அடி பதுமத்து ஒப்பன
சேடரைத் தழீஇயின செய்ய வாயின
நாடகத் தொழிலின நடுவு துய்யன
ஆடகத் தோற்றத்த அளவு இலாதன. 31
புக்கவர் கண் இமை பொருந்துறாது ஒளி
தொக்குடன் தயங்கி விண்ணவரின் தோன்றலால்
திக்குற நினைப்பினில் செல்லும் தெய்வ வீடு
ஒக்க நின்று இமைப்பன இம்பர் நாட்டினும்.
32
அணி இழை மகளிரும் அலங்கல் வீரரும்
தணிவன அறநெறி தணிவு இலாதன
மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது
பணி பிறிது இயன்றில பகலை வென்றன. 33
வானுற நிவந்தன வரம்பு இல் செல்வத்த
தான் உயர் புகழ் எனத் தயங்கு சோதிய
ஊனம் இல் அறநெறி உற்ற எண் இலாக்
கோன் நிகர் குடிகள் தம் கொள்கை சான்றன. 34
அருவியின் தாழ்ந்து முத்து அலங்கு தாமத்த
விரி முகிற்குலம் எனக் கொடி விராயின
பரு மணிக் குவையன பசும் பொன் கோடிய
பொரு மயில் கணத்தன மலையும் போன்றன. 35
அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின
முகிலொடு வேற்றுமை தெரிகலா முழுத்
துகிலொடு நெடுன் கொடிச் சூலம் மின்னுவ
பகல் இடு மின் அணிப் பரப்புப் பொன்றவே. 36
துடி இடைப் பணை முலைத் தோகை அன்னவர்
அடி இணைச் சிலம்பு பூண்டு அரற்று மாளிகைக்
கொடியிடைத் தரள வெண் கோவை சூழ்வன
கடியுடைக் கற்பகம் கான்ற மாலையே. 37
காண் வரு நெடு வரைக் கதலிக் கானம் போல்
தாள் நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன
வாள் நனி மழுங்கிட மடங்கி வைகலும்
சேண் மதி தேய்வது அக்கொடிகள் தேய்க்கவே.
38
பொந்திணி மண்டபம் அல்ல பூத்தொடர்
மன்றுகள் அல்லன மாட மாளிகை
குன்றுகள் அல்லன மணிசெய் குட்டிமம்
முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே. 39
மின்னென விளக்கென வெயிற்பி ழம்பெனத்
துன்னிய தமனியத் தொழில்த ழைத்தஅக்
கன்னிநன் னகர்நிழல் கதுவ லால் அரோ
பொன்னுலகு ஆயதுஅப் புலவர் வானமே. 40
எழுமிடத் தகன்றிடை யொன்றி எல்படு
பொழுதிடைப் போதலிற் புரிசைப் பொன்மதில்
அழன்மணி திருத்திய அயோத்தி யாளுடை
நிழலென பொலியுமால் நேமி வான்சுடர். 41
ஆய்ந்தமே கலையவர் அம்பொன் மாளிகை
வேய்ந்தகார் அகிற்புகை உண்ட மேகம் போய்த்
தோய்ந்தமாக் கடல்நறுந் தூப நாறுமேல்
பாய்ந்ததா ரையின் நிலை பகர வேண்டுமோ. 42
குழலிசை மடந்தையர் குதலை கோதையர்
மழலையங் குழலிசை மகர யாழிசை
எழிலிசை மடந்தையர் இன்சொல் இன்னிசை
பழையர்தம் சேரியிற் பொருநர் பாட்டிசை. 43
கண்ணிடைக் கனல்சொரி களீறு கால்கொடு
மண்ணிடை வெட்டுவ வேட்கு மைந்தர்கள்
பண்ணைகள் பயிலிடம் குழிப டைப்பன
சுண்ணம்அக் குழிகளைத் தொடர்ந்து தூர்ப்பன.
44
பந்துகள் மடந்தையர் பயிற்று வாரிடைச்
சிந்துவ முத்தினம் அவைதி ரட்டுவார்
அந்தமில் சிலதியர் ஆற்று குப்பைகள்
சந்திரன் ஒளிகெடத் தழைப்ப தண்ணிலா. 45
அரங் கிடை மடந்தையர் ஆடு வார்அவர்
கருங்கடைக் கண்ணயில் காமர் நெஞ்சினை
உருங்குவ மற்று அவர்உயிர்கள் அன்னவர்
மருங்குல்போல் தேய்வன வளர்வது ஆசையே. 46
பொழிவன சோலைகள் புதிய தேன் சில
விழைவன தென்றலும் மிஞிறு மெல்லென
நுழைவன அன்னவை நுழைய நோவொடு
குழைவன தணந்தவர் கொதிக்கும் கொங்கையே. 47
இறங்குவ மகரயாழ் எடுத்த இன்னிசை
நிறங்கிளர் பாடலால் நிமிர்வ அவ்வழி
கறங்குவ வள்விசி கருவி கண்முகிழ்த்து
உறங்குவ மகளிரோடு ஓதும் கிள்ளையே. 48
குதைவரிச் சிலைநுதற் கொவ்வை வாய்ச்சியர்
பதவுகைத் தொழில்கொடு பழிப்பி லாதன
ததைமலர்த் தாமரை அன்ன தாளினால்
உதைபடச் சிவப்பன உரவுத் தோள்களே. 49
பொழுதுணர் வரியவப் பொருவின் மாநகர்த்
தொழுதகை மடந்தையர் சுடர்வி ளக்கெனப்
பழுதறு மேனியைப் பார்க்கும் ஆசைகொல்
எழுதுசித் திரங்களும் இமைப்பி லாதவே. 50
தணிமலர்த் திருமகள் தயங்கு மாளிகை
இணரொளி பரப்பி நின்று இருள்து ரப்பன
திணிசுடர் நெய்யுடைத்தீவி ளக்கமோ
மணி விளக்கு அல்லன மகளிர் மேனியே. 51
பதங்களில் தண்ணுமை பாணி பண்ணுற
விதங்களின் விதிமுறை சதிமி திப்பவர்
மதங்கியர் அச்சதி வகுத்துக் காட்டுவ
சதங்கைகள் அல்லன புரவித் தாள்களே. 52
முளைப்பன முறுவல் அம்முறுவல் வெந்துயர்
விளைப்பன அன்றியும் மெலிந்து நாள்தொறும்
இளைப்பன நுண்ணிடை இளைப்ப மென்முலை
திளைப்பன முத்தொடு செம்பொன் ஆரமே. 53
இடையிடை எங்கணுங் களிய றாதன
நடையிள அன்னங்கள் நளின நீர்க்கயல்
பெடையின வண்டுகள் பிரச மாந்திடும்
கடகரி யல்லன மகளிர் கண்களே. 54
தழல் விழி ஆளியும் துணையும் தாழ் வரை
முழை விழை கிரி நகர் களிற்றைன் மும் மத
மழை விழும் விழும்தொறும் மண்ணும் கீழ் உறக்
குழை விழும் அதில் விழும் கொடித் திண் தேர்களே.
55
ஆடு வார் புரவியின் குரத்தை ஆர்ப்பன
சூடுவார் இகழ்ந்த அத் தொங்கல் மாலைகள்
ஓடுவார் இழுக்குவது ஊடல் ஊடு உறக்
கூடுவார் வன முலைக் கொழித்த சாந்தமே. 56
இளைப்ப அருங் குரங்களால் இவுளி பாரினைக்
கிளப்பன அவ் வழி கிளர்ந்த தூளியின்
ஒளிப்பன மணி அவை ஓளிர மீது தேன்
துளிப்பன குமரர்தம் தோளின் மாலையே. 57
விலக்கருங் கரிமதம் வேங்கை நாறுவ
குலக்கொடி மாதர்வாய் குமுத நாறுவ
கலக்கடைக் கணிப்பருங் கதிர்கள் நாறுவ
மலர்க் கடி நாறுவ மகளிர் கூந்தலே. 58
கோவை இந் நகரொடு எண் குறிக்கலாத அத்
தேவர் தம் நகரியைச் செப்புகின்றது ஏன்
யாவையும் வழங்கு இடத்து இகலி இந் நகர்
ஆவணம் கண்டபின் அளகை தோற்றதே. 59
அதிர் கழல் ஒலிப்பன அயில்இ மைப்பன
கதிர்மணி யணிவெயில் கால்வ மான்மதம்
முதிர்வுறக் கமழ்வன முத்தம் மின்னுவ
மதுகரம் இசைப்பன மைந்தர் ஈட்டமே. 60
வளையொலி வயிரொலி மகர வீணையின்
கிளையொலி முழவொலி கின்ன ரத்தொலி
துளையொலி பல்லியந் துவைக்கும் சும்மையின்
விளையொலி கடலொலி மெலிய விம்முமே. 61
மன்னவர் தருதிறை யளக்கும் மண்டபம்
அன்னமென் நடையவர் ஆடும் மண்டபம்
முன்னரும் அருமறை ஓதும் மண்டபம்
பன்னருங் கலைதெரி பட்டி மண்டபம். 62
இரவியிற் சுடர்மணி இமைக்கும் தோரணத்
தெருவில் சிறியன திசைகள் சேண்விளங்கு
அருவியிற் பெரியன ஆனைத் தானங்கள்
பரவையிற் பெரியன புரவிப் பந்தியே. 63
சூளிகை மழைமுகில் தொடக்குந் தோரணம்
மாளிகை மலர்வன மகளிர் வாள்முகம்
வாளிகள் அன்னவை மலர்வ மற்றவை
யாளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே. 64
மன்னவர் கழலொடு மாறு கொள்வன
பொன்னளித் தேரொலி புரவித் தாரொலி
இன்னகை அவர்சிலம்பு ஏங்க ஏங்குவ
கன்னியர் குடைதுறைக் கமல அன்னமே. 65
ஊடவும் கூடவும் உயிரின் இன் இசை
பாடவும் விறலியர் பாடல் கேட்கவும்
ஆடவும் அகன் புனல் ஆடி அம் மலர்
சூடவும் பொழுது போம்சிலர்க்கு அத் தொல் நகர்.
66
முழங்கு திண் கட கரி மொய்ம்பின் ஊரவும்
எழும் குரத்து இவுளியொடு இரதம் ஏறவும்
பழங்கணோடு இரந்தவர் பரிவு தீர்தர
வழங்கவும் பொழுது போம்சிலர்க்கு அம் மா நகர்.
67
கரியொடு கரியெதிர் பொருத்திக் கைப்படை
வரிசிலை முதலிய வழங்கி வாலுளைப்
புரவியிற் பொருவில்செண்டு ஆடிப் போர்க்கலை
தெரிதலிற் பொழுதுபோம் சிலர்க்கு அச்சேண்நகர்.
68
நந்தன வனத்தலர் கொய்து நவ்விபோல்
வந்திளை யவரொடு வாவி ஆடிவாய்ச்
செந்துவர் அழிதரத் தேறல் மாந்தித்தூது
உந்தலிற் பொழுதுபோம் சிலர்க்குஅவ் வொண்நகர்.
69
நானா விதமா நளிமாதிர வீதி யோடி
மீனா றுவேலைப் புனல்வெண்முகில் உண்ணு மாபோல்
ஆனாத மாடத்து இடையாடு கொடிக்கண் மீப்போய்
வானறு நண்ணிப் புனல்வற்றிட நக்கு மன்னோ.
70
வந்தோ ரணங்கள் புணர்வாயிலும் வானின் உம்பர்
சென்றோங்கி மேலோ ரிடம் இல்லெனச் செம்பொன் இஞ்சி
குன்றோங்கு தோளார் குணங்கூட்டிசைக் குப்பை
யென்ன
ஒன்றோடு இரண்டும் உயர்ந்து ஓங்கின உம்பர் நாண.
71
காடும் புனமும் கடல் அன்ன கிடங்கும் மாதர்
ஆடும் குளனும் அருவிச் சுனைக் குன்றும் உம்பர்
வீடும் விரவும் மணப் பந்தரும் வீணை வண்டும்
பாடும் பொழிலும் மலர்ப் பல்லவப் பள்ளி மன்னோ
72
தெள் வார் மழையும் திரை ஆழியும் உட்க நாளும்
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள்
கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ.
73
கல்லாது நிற்பார் பிறர் இன்மையின் கல்வி முற்ற
வல்லாரும் இல்லை அவை வல்லர் அல்லாரும் இல்லை
எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ.
74
ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து எண் இல்
கேள்வி
ஆகும் முதல் திண் பணை போக்கி அருந் தவத்தின்
சாகம் தழைத்து அன்பு அரும்பி தருமம் மலர்ந்து
போகங் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே.
75
4. அரசியற் படலம்
தயரதன் மாண்பு
அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன்;
செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்;
இம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்
மொய்ம் மாண் கழலோன் - தரு நல் அற மூர்த்தி
அன்னான். 1
ஆதிம் மதியும், அருளும், அறனும், அமைவும்,
ஏதில் மிடல் வீரமும், ஈகையும், எண் இல் யாவும்,
நீதிந் நிலையும், இவை, நேமியினோர்க்கு நின்ற
பாதி; முழுதும் இவற்கே பணி கேட்ப மன்னோ. 2
மொய் ஆர்கலி சூழ் முது பாரில், முகந்து தானக்
கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை;
மெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு ஏய்த்த, யாரும்
செய்யாத, யாகம் இவன் செய்து மறந்த மாதோ. 3
தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும், முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும்
நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு
கேள்வி
ஆயப் புகும்கால், அறிவு ஒக்கும்;-எவர்க்கும்,
அன்னான். 4
ஈந்தே கடந்தான், இரப்போர் கடல்; எண் இல் நுண்
நூல்
ஆய்ந்தே கடந்தான், அறிவு என்னும் அளக்கர்;
வாளால்
காய்ந்தே கடந்தான், பகை வேலை; கருத்து முற்றத்
தோய்ந்தே கடந்தான், திருவின் தொடர் போக பௌவம்.
5
வெள்ளமும், பறவையும், விலங்கும், வேசையர்
உள்ளமும், ஒரு வழி ஓட நின்றவன்;
தள்ள அரும் பெரும் புகழ்த் தயரதப் பெயர்
வள்ளல்; வள் உறை அயில் மன்னர் மன்னனே. 6
உலகமனைத்தையும் ஒரு குடைக்
கீழ் ஆள்பவன்
நேமி மால் வரை மதில் ஆக, நீள் புறப்
பாம மா கடல் கிடங்கு ஆக, பல் மணி
வாம மாளிகை மலை ஆக, மன்னற்குப்
பூமியும் அயோத்தி மா நகரம் போலுமே. 7
பாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால்
மே வரும் கை அடை வேலும் தேயுமால்;
கோவுடை நெடு மணி மகுட கோடியால்
சேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால். 8
தயரதனின் குடையும் செங்கோலும்
மண்ணிடை உயிர்தொறும் வளர்ந்து, தேய்வு இன்றி,
தண் நிழல் பரப்பவும், இருளைத் தள்ளவும்,
அண்ணல்தன் குடை மதி அமையும்; ஆதலான்,
விண்ணிடை மதியினை 'மிகை இது' என்பவே. 9
தயரதன் அரசு செய்யும் திறம்
வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்,
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்,
செயிர் இலா உலகினில், சென்று, நின்று, வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான்.
10
குன்றென உயரிய குவவுத் தோளினான்,
வென்றி அம் திகிரி, வெம் பருதியாம் என,
ஒன்றென உலகிடை உலாவி, மீமிசை
நின்று, நின்று, உயிர்தொறும் நெடிது காக்குமே.
11
'எய்' என பழு பகை எங்கும் இன்மையால்,
மொய் பெறாத் தினவு உறு முழவுத் தோளினான்,
வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து, இனிது அரசு செய்கின்றான்.
12
மிகைப் பாடல்கள்
விரிகதிர் பரப்பி, மெய்ப் புவனம் மீது இருள்
பருகுறும் பரிதி அம் குலத்தில், பார்த்திபன்
இரகு, மற்று அவன் மகன் அயன் என்பான், அவன்
பெருகு மா தவத்தினில் பிறந்த தோன்றலே. 5-1
5. திரு அவதாரப் படலம்
மகப் பேறு இல்லாமை குறித்து தயரதன்
வசிட்டனிடம் வருந்துதல்
ஆயவன், ஒரு பகல், அயனையே நிகர்
தூய மா முனிவனைத் தொழுது, 'தொல் குலத்
தாயரும், தந்தையும், தவமும், அன்பினால்
மேய வான் கடவுளும், பிறவும், வேறும், நீ;
1
'எம் குலத் தலைவர்கள், இரவிதன்னினும்
தம் குலம் விளங்குறத் தரணி தாங்கினார்,
மங்குநர் இல் என, வரம்பு இல் வையகம்,
இங்கு, நின் அருளினால், இனிதின் ஓம்பினேன்.
2
அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற,
உறு பகை ஒடுக்கி, இவ் உலகை ஓம்பினேன்;-
பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம்
மறுகுவது என்பது ஓர் மறுக்கம் உண்டுஅரோ. 3
'அருந் தவ முனிவரும், அந்தணாளரும்,
வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார்;
இருந் துயர் உழக்குநர் என் பின் என்பது ஓர்
அருந் துயர் வருத்தும், என் அகத்தை' என்றனன்.
4
முன்னம் அமரர்க்குத் திருமால்
அருளியதை வசிட்டன் சிந்தித்தல்
முரசு அறை செழுங் கடை, முத்த மா முடி,
அரசர் தம் கோமகன் அனைய கூறலும்,
விரை செறி கமல மென் பொருட்டில் மேவிய
வர சரோருகன் மகன் மனத்தில் எண்ணினான்- 5
அலை கடல் நடுவண், ஓர் அனந்தன் மீமிசை,
மலை என விழி துயில்வளரும் மா முகில்,
'கொலைதொழில் அரக்கர்தம் கொடுமை தீர்ப்பென்'
என்று,
உலைவுறும் அமரருக்கு உரைத்த வாய்மையே. 6
பாக சாதனந்தனைப் பாசத்து ஆர்த்து, அடல்
மேகநாதன், புகுந்து இலங்கை மேய நாள்,-
போக மா மலர் உறை புனிதன்,- மீட்டமை,
தோகை பாகற்கு உறச் சொல்லினான் அரோ. 7
இருபது கரம், தலை ஈர்-ஐந்து, என்னும் அத்
திருஇலி வலிக்கு, ஒரு செயல் இன்று, எங்களால்;
கரு முகில் என வளர் கருணை அம் கடல்
பொருது, இடர் தணிக்கின் உண்டு' எனும் புணர்ப்பினால்.
8
திரை கெழு பயோததித் துயிலும், தெய்வ வான்
மரகத மலையினை வழுத்தி நெஞ்சினால்,
கர கமலம் குவித்து இருந்த காலையில்,-
பரகதி உணர்ந்தவர்க்கு உதவு பண்ணவன், 9
கரு முகில் தாமரைக் காடு பூத்து, நீடு
இரு சுடர் இரு புறத்து ஏந்தி, ஏந்து அலர்த்
திருவொடும் பொலிய, ஓர் செம்பொன் குன்றின்மேல்
வருவபோல், கலுழன்மேல் வந்து தோன்றினான்.
10
எழுந்தனர், கறைமிடற்று இறையும்; தாமரைச்
செழுந் தவிசு உவந்த அத் தேவும் சென்று, எதிர்
விழுந்தனர் அடிமிசை விண்ணுளோரொடும்;
தொழும்தொறும், தொழும் தொறும், களி துளங்குவார்.
11
ஆடினர்; பாடினர்; அங்கும் இங்குமாய்
ஓடினர்; உவகை மா நறவு உண்டு ஓர்கிலார்;
'வீடினர் அரக்கர்' என்று உவக்கும் விம்மலால்,
சூடினர், முறை முறை துளவத் தாள்-மலர். 12
பொன்வரை இழிவது ஓர் புயலின் பொற்பு உற,
என்னை ஆள் உடையவன் தோள்நின்று எம்பிரான்,
சென்னி வான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து,
அரி
துன்னு பொற் பீடமேல் பொலிந்து தோன்றினான்.
13
விதியொடு முனிவரும், விண்ணுளோர்களும்,-
மதி வளர் சடைமுடி மழுவலாளனும்
அதிசயமுடன் உவந்து, அயல் இருந்துழி-
கொதி கொள் வேல் அரக்கர் தம் கொடுமை கூறுவார்:
14
'ஐ-இரு தலையினோன் அனுசர் ஆதியாம்
மெய் வலி அரக்கரால், விண்ணும் மண்ணுமே
செய் தவம் இழந்தன; -திருவின் நாயக!-
உய் திறம் இல்லை' என்று உயிர்ப்பு வீங்கினார்.
15
'எங்கள் நீள் வரங்களால், அரக்கர் என்று உளார்,
பொங்கு மூஉலகையும் புடைத்து அழித்தனர்;
செங் கண் நாயக! இது தீர்த்தி; இல்லையேல்,
நுங்குவர் உலகை, ஓர் நொடியில்' என்றனர்.
16
என்றனர், இடர் உழந்து, இறைஞ்சி ஏத்தலும்,
மன்றல் அம் துளவினான், 'வருந்தல்; வஞ்சகர்-
தம் தலை அறுத்து, இடர் தணிப்பென் தாரணிக்கு;
ஒன்று நீர் கேண்ம்' என, உரைத்தல் மேயினான்:
17
'வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய்,
கானினும், வரையினும், கடி தடத்தினும்,
சேனையோடு அவதரித்திடுமின் சென்று' என,
ஆனனம் மலர்ந்தனன் -அருளின் ஆழியான்: 18
'மசரதம் அனையவர் வரமும், வாழ்வும், ஓர்
நிசரத கணைகளால் நீறுசெய்ய, யாம்,
கச ரத துரக மாக் கடல்கொள் காவலன்,
தசரதன், மதலையாய் வருதும் தாரணி. 19
'வளையொடு திகிரியும், வடவை தீதர
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்,
இளையர்கள் என அடி பரவ ஏகி, நாம்,
வளைமதில் அயோத்தியில் வருதும்' என்றனன்.
20
என்று அவன் உரைத்தபோது, எழுந்து துள்ளினார்;
நன்றிகொள் மங்கல நாதம் பாடினார்;-
'மன்றல் அம் செழுந் துளவு அணியும் மாயனார்,
இன்று எமை அளித்தனர்' என்னும் ஏம்பலால்.
21
'போயது எம் பொருமல்' என்னா, இந்திரன் உவகை
பூத்தான்;
தூய மா மலர் உளோனும், சுடர்மதி சூடினோனும்,
சேய் உயர் விசும்பு உளோரும், 'தீர்ந்தது எம்
சிறுமை' என்றார்;
மா இரு ஞாலம் உண்டோ ன், கலுழன்மேல் சரணம் வைத்தான்.
22
என்னை ஆளுடைய ஐயன், கலுழன் மீது எழுந்து போய
பின்னர், வானவரை நோக்கி, பிதாமகன் பேசுகின்றான்:
"முன்னரே எண்கின்வேந்தன் யான்"-என,
முடுகினேன்; மற்று,
அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடுமின்'
என்றான். 23
தருவுடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான், 'எனது
கூறு
மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும்' என்ன;
இரவி, 'மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன்'
என்று ஓத;
அரியும், 'மற்று எனது கூறு நீலன்' என்று அறைந்திட்டானால்.
24
வாயு, 'மற்று எனது கூறு மாருதி' எனலும், மற்றோர்,
'காயும் மற்கடங்கள் ஆகி, காசினி அதனின்மீது
போயிடத் துணிந்தோம்' என்றார்; புராரி, 'மற்று
யானும் காற்றின்
சேய்' எனப் புகன்றான்; மற்றைத் திசையுளோர்க்கு
அவதி உண்டோ . 25
அருள் தரும் கமலக் கண்ணன் அருள்முறை, அலர்
உளோனும்,
இருள் தரும் மிடற்றினோனும், அமரரும், இனையர்
ஆகி
மருள் தரும் வனத்தில், மண்ணில், வானரர் ஆகி
வந்தார்;
பொருள் தரும் இருவர் தம் தம் உறைவிடம் சென்று
புக்கார். 26
புதல்வரை அளிக்கும் வேள்வி
செய்ய வசிட்டன் கூறுதல்
ஈது, முன் நிகழ்ந்த வண்ணம் என, முனி, இதயத்து
எண்ணி,
'மாதிரம் பொருத திண் தோள் மன்ன! நீ வருந்தல்;
ஏழ்-ஏழ்
பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும்
வேள்வி,
தீது அற முயலின், ஐய! சிந்தைநோய் தீரும்' என்றான்.
27
வேள்வி செய்ய வேண்டுவது
யாது என தயரதன் வினவுதல்
என்ன மா முனிவன் கூற, எழுந்த பேர் உவகை பொங்க,
மன்னவர்மன்னன், அந்த மா முனி சரணம் சூடி,
'உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து
அடைவது உண்டோ ?
அன்னதற்கு, அடியேன் செய்யும் பணி இனிது அளித்தி'
என்றான். 28
கலைக்கோட்டு முனிவனைக் கொண்டு
வேள்வி செய்யுமாறு வசிட்டன் உரைத்தல்
'மாசு அறு சுரர்களோடு மற்றுளோர் தமையும் ஈன்ற
காசிபன் அருளும் மைந்தன், விபாண்டகன், கங்கை
சூடும்
ஈசனும் புகழ்தற்கு ஒத்தோன், இருங் கலை பிறவும்
எண்ணின்
தேசுடைத் தந்தை ஒப்பான், திருவருள் புனைந்த
மைந்தன், 29
'வரு கலை பிறவும், நீதி மனுநெறி வரம்பும்,
வாய்மை
தரு கலை மறையும், எண்ணின், சதுமுகற்கு உவமை
சான்றோன்,
திருகலை உடைய இந்தச் செகத்து உளோர் தன்மை தேரா
ஒரு கலை முகச் சிருங்க உயர் தவன் வருதல் வேண்டும்.
30
'பாந்தளின் மகுட கோடி பரித்த பார் அதனில் வைகும்
மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன்,
மா தவத்தன், எண்ணின்
பூந் தவிசு உகந்து உளோனும், புராரியும், புகழ்தற்கு
ஒத்த
சாந்தனால் வேள்வி முற்றின், தணையர்கள் உளர்
ஆம்' என்றான். 31
கலைக்கோட்டு முனிவனை அழைத்து
வரும் வழி பற்றி தயரதன் கேட்டல் ஆங்கு,
உரை இனைய கூறும் அருந் தவர்க்கு அரசன், செய்ய
பூங் கழல் தொழுது, வாழ்த்தி, பூதல மன்னர் மன்னன்,
'தீங்கு அறு குணத்தால் மிக்க செழுந் தவன் யாண்டை
உள்ளான்?
ஈங்கு யான் கொணரும் தன்மை அருளுதி, இறைவ!'
என்றான். 32
கலைக்கோட்டு முனிவனின் வரலாற்றை
வசிட்டன் உரைத்தல்
'புத்து ஆன கொடு வினையோடு அருந் துயரம் போய்
ஒளிப்ப,-புவனம் தாங்கும்
சத்து ஆன குணம் உடையோன், தயையினொடும் தண் அளியின்
சலை போல்வான்,
எத்தானும் வெலற்கு அரியான்,மனுகுலத்தே வந்து
உதித்தோன்,இலங்கும் மோலி
உத்தானபாதன்,-அருள் உரோமபதன் என்றுஉளன்,இவ்
உலகை ஆள்வோன்;33
'அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில்
நெடுங் காலம் அளவது ஆக,
மின்னி எழு முகில் இன்றி வெந் துயரம் பெருகுதலும்,
வேத நல் நூல்
மன்னு முனிவரை அழைத்து, மா தானம் கொடுத்தும்,
வான் வழங்காது ஆக,
பின்னும், முனிவரர்க் கேட்ப, "கலைக்கோட்டு-முனி
வரின், வான் பிலிற்றும்" என்றார்.34
'"ஓத நெடுங் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர்
விலங்கு எனவே உன்னும்
கோது இல் குணத்து அருந் தவனைக் கொணரும் வகை
யாவது?" எனக் குணிக்கும் வேலை
சோதி நுதல், கரு நெடுங் கண், துவர் இதழ் வாய்,
தரள நகை, துணை மென் கொங்கை,
மாதர் எழுந்து, "யாம் ஏகி, அருந் தவனைக்
கொணர்தும்" என, வணக்கம் செய்தார். 35
ஆங்கு, அவர் அம் மொழி உரைப்ப, அரசன் மகிழ்ந்து,
அவர்க்கு, அணி, தூசு, ஆதி ஆய
பாங்கு உள மற்றவை அருளி, "பனிப் பிறையைப்
பழித்த நுதல், பணைத்த வேய்த் தோள்,
ஏங்கும் இடை,தடித்த முலை,இருண்ட குழல்,மருண்ட
விழி,இலவச் செவ்வாய்ப்
பூங்கொடியீர்! ஏகும்" என, தொழுது இறைஞ்சி,
இரதமிசைப் போயினாரே. 36
'ஓசனை பல கடந்து, இனி ஒர் ஓசனை
ஏசு அறு தவன் உறை இடம் இது என்றுழி,
பாசிழை மடந்தையர், பன்னசாலை செய்து,
ஆசு அறும் அருந் தவத்தவரின் வைகினார். 37
'அருந் தவன் தந்தையை அற்றம் நோக்கியே,
கருந் தடங் கண்ணியர், கலை வலாளன் இல்
பொருந்தினர்; பொருந்துபு, "விலங்கு எனாப்
புரிந்து
இருந்தவர் இவர்" என, இனைய செய்தனர்.
38
'அருக்கியம் முதலினோடு ஆசனம் கொடுத்து,
"இருக்க" என, இருந்த பின், இனிய
கூறலும்,
முருக்கு இதழ் மடந்தையர் முனிவனைத் தொழா,
பொருக்கென எழுந்து போய், புரையுள் புக்கனர்.
39
'திருந்து இழையவர், சில தினங்கள் தீர்ந்துழி,
மருந்தினும் இனியன வருக்கை, வாழை, மாத்
தருங் கனி பலவொடு, தாழை இன் கனி,
"அருந் தவ, அருந்து" என, அருந்தினான்
அரோ. 40
'இன்னவன் பல் பகல் இறந்தபின், திரு
நல் நுதல் மடந்தையர், நவை இல் மாதவன் -
தன்னை, "எம் இடத்தினும், சார்தல் வேண்டும்"
என்று,
அன்னவர் தொழுதலும், அவரொடு ஏகினான். 41
'விம்முறும் உவகையர், வியந்த நெஞ்சினர்,
"அம்ம! ஈது, இது" என, அகலும் நீள்
நெறி,
செம்மை சேர் முனிவரன் தொடரச் சென்றனர்;-
தம் மனம் என மருள் தையலார்களே. 42
'வளநகர் முனிவரன் வருமுன், வானவன்
களன் அமர் கடு எனக் கருகி, வான் முகில்,
சள சள என மழைத் தாரை கான்றன-
குளனொடு நதிகள் தம் குறைகள் தீரவே. 43
'பெரும் புனல், நதிகளும் குளனும், பெட்பு உற,
கரும்பொடு செந்நெலும் கவின் கொண்டு ஓங்கிட,
இரும் புயல் ககன மீது இடைவிடாது எழுந்து
அரும் புனல் சொரிந்து போது, அரசு உணர்ந்தனன்.
44
"காமமும், வெகுளியும், களிப்பும், கைத்த
அக்
கோமுனி இவண் அடைந்தனன் கொல்-கொவ்வை வாய்த்
தாமரை மலர் முகத் தரள வாள் நகைத்
தூம மென் குழலினர் புணர்த்த சூழ்ச்சியால்?"
45
'என்று எழுந்து, அரு மறை முனிவர் யாரொடும்
சென்று, இரண்டு ஓசனை சேனை சூழ்தர,
மன்றல் அம் குழலியர் நடுவண், மா தவக்
குன்றினை எதிர்ந்தனன் - குவவுத் தோளினான்.
46
'வீழ்ந்தனன் அடிமிசை, விழிகள் நீர் தர;
"வாழ்ந்தனெம் இனி" என, மகிழும் சிந்தையான்,
தாழ்ந்து எழு மாதரார் தம்மை நோக்கி,
"நீர்
போழ்ந்தனிர் எனது இடர், புணர்ப்பினால்"
என்றான். 47
'அரசனும் முனிவரும் அடைந்த ஆயிடை,
வர முனி, "வஞ்சம்" என்று உணர்ந்த
மாலைவாய்,
வெருவினர் விண்ணவர்; வேந்தன் வேண்டலால்,
கரை எறியாது அலை கடலும் போன்றனன். 48
'வள் உறு வயிர வாள் மன்னன், பல் முறை,
எள்ள அரு முனிவனை இறைஞ்சி, யாரினும்
தள்ள அருந் துயரமும், சமைவும், சாற்றலும்,
உள் உறு வெகுளி போய் ஒளித்த தாம் அரோ. 49
'அருள் சுரந்து, அரசனுக்கு ஆசியும் கொடுத்து,
உருள் தரும் தேரின்மீது ஒல்லை ஏறி, நல்
பொருள தரும் முனிவரும் தொடரப் போயினன் -
மருள் ஒழி உணர்வுடை வரத மா தவன். 50
'அடைந்தனன், வள நகர் அலங்கரித்து எதிர்
மிடைந்திட, முனியொடும் வேந்தன்; கோயில் புக்கு,
ஒடுங்கல் இல் பொன் குழாத்து உறையுள் எய்தி,
ஓர்
மடங்கல்-ஆதனத்தின்மேல் முனியை வைத்தனன்.
51
'அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி, வேறு
உரைக்குவது இலது என உவந்து, தான் அருள்
முருக்கு இதழ்ச் சாந்தையாம் முக நலாள்தனை,
இருக்கொடு விதிமுறை இனிதின் ஈந்தனன். 52
'வறுமை நோய் தணிதர வான் வழங்கவே,
உறு துயர் தவிர்ந்தது, அவ் உலகம்; வேந்து அருள்
செறிகுழல் போற்றிட, திருந்து மா தவத்து
அறிஞன், ஆண்டு இருக்குநன்; அரச!' என்றனன்.
53
கலைக்கோட்டு முனிவனை அழைக்கத்
தயரதன் உரோமபதன் நாட்டுக்குச் செல்லுதல்
என்றலுமே,முனிவரன்தன் அடிஇறைஞ்சி,'ஈண்டு ஏகிக்
கொணர்வென்'என்னா,
துன்று கழல் முடிவேந்தர் அடி போற்ற, சுமந்திரனே
முதல்வர் ஆய
வன் திறல் சேர் அமைச்சர் தொழ, மா மணித் தேர்
ஏறுதலும், வானோர் வாழ்த்தி,
'இன்று எமது வினை முடிந்தது' எனச் சொரிந்தார்
மலர் மாரி, இடைவிடாமல். 54
காகளமும் பல் இயமும் கனை கடலின் மேல் முழங்க,
கானம் பாட,
மாகதர்கள், அரு மறை நூல் வேதியர்கள், வாழ்த்து
எடுப்ப, மதுரச் செவ் வாய்த்
தோகையர் பல்லாண்டு இசைப்ப, கடல்-தானை புடை
சூழ, சுடரோன் என்ன
ஏகி, அரு நெறி நீங்கி, உரோமபதன் திருநாட்டை
எதிர்ந்தான் அன்றே. 55
உரோமபதன் தயரதனை எதிர்கொண்டழைத்து
உபசரித்தல்
கொழுந்து ஓடிப் படர் கீர்த்திக் கோவேந்தன்
அடைந்தமை சென்று ஒற்றர் கூற,
கழுந்து ஓடும் வரி சிலைக் கைக் கடல்-தானை புடை
சூழ, கழற் கால் வேந்தன்,
செழுந் தோடும் பல் கலனும் வெயில் வீச, மாகதர்கள்
திரண்டு வாழ்த்த,
எழுந்து ஓடும் உவகையுடன் ஓசனை சென்றனன் - அரசை
எதிர்கோள் எண்ணி. 56
எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் - தனைக்
கண்ணுற்று, எழிலி நாண
அதிர்கின்ற பொலந் தேர் நின்று அரசர்பிரான்
இழிந்துழி, சென்று அடியில் வீழ,
முதிர்கின்ற பெருங் காதல் தழைத்து ஓங்க, எடுத்து
இறுக முயங்கலோடும்,
கதிர் கொண்ட சுடர் வேலான் தனை நோக்கி, இவை
உரைத்தான் - களிப்பின் மிக்கான்: 57
'யான் செய்த மா தவமோ! இவ் உலகம் செய் தவமோ!
யாதோ! இங்ஙன்,
வான் செய்த சுடர் வேலோய்! அடைந்தது?' என, மனம்
மகிழா மணித் தேர் ஏற்றி,
தேன் செய்த தார் மௌலித் தேர் வேந்தைச் செழு
நகரில் கொணர்ந்தான் - தெவ்வர்
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும்
உரவுத் தோளான் 58
ஆடகப் பொன் சுடர்,இமைக்கும் அணி மாடத் திடை,ஓர்
மண்டபத்தை அண்மி,
பாடகச் செம் பதும மலர்ப் பாவையர் பல்லாண்டு
இசைப்ப, பைம் பொன் பீடத்து,
ஏடு துற்ற வடிவேலோன் தனை இருத்தி, கடன்முறைகள்
யாவும் நேர்ந்து,
தோடு துற்ற மலர்த் தாரான் விருந்து அளிப்ப,
இனிது உவந்தான், சுரர் நாடு ஈந்தான்.59
கலைக்கோட்டு முனிவனை தயரதன்
விருப்பப்படி அயோத்திக்கு அழைத்துவருவதாக உரோமபதன் கூறல்
செவ்வி நறுஞ் சாந்து அளித்து, தேர் வேந்தன்
தனைநோக்கி, 'இவண் நீ சேர்ந்த
கவ்வை உரைத்து அருள்தி' என, நிகழ்ந்த பரிசு
அரசர்பிரான் கழறலோடும்,
'அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அருந் தவனைக்
கொணர்ந்து ஆங்கண் விடுப்பென்; ஆன்ற
செவ்வி முடியோய்!'எனலும்,தேர்ஏறிச் சேனையொடும்அயோத்தி
சேர்ந்தான்.60
உரோமபதன் வேண்ட, கலைக்கோட்டு
முனிவன் மனைவியுடன் அயோத்திக்குப் புறப்படுதல்
மன்னர்பிரான் அகன்றதன்பின்,வயவேந்தன்,அருமறைநூல்
வடிவம் கொண்டது
அன்ன முனிவரன் உறையுள்தனை அணுகி,அடிஇணைத்தாமரைகள்
அம்பொன்
மன்னு மணி முடி அணிந்து, வரன்முறை செய்திட,
'இவண் நீ வருதற்கு ஒத்தது
என்னை?' என, 'அடியேற்கு ஓர் வரம் அருளும்;
அடிகள்!' என, 'யாவது?' என்றான். 61
'புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க பெருந்தகைதன்
புகழில் பூத்த
அறன்ஒன்றும் திருமனத்தான்,அமரர்களுக்கு இடர்இழைக்கும்
அவுணர் ஆயோர்
திறல் உண்ட வடிவேலான்,"தசரதன்" என்று,உயர்கீர்த்திச்
செங்கோல்வேந்தன்,
விறல் கொண்ட மணி மாட அயோத்திநகர் அடைந்து,
இவண் நீ மீள்தல்!' என்றான். 62
'அவ் வரம் தந்தனம்; இனித் தேர் கொணர்தி' என,
அருந் தவத்தோன் அறைதலோடும்,
வெவ் அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன்,
அடி இறைஞ்சி, 'வேந்தர்வேந்தன்
கவ்வை ஒழிந்து உயர்ந்தனன்' என்று, அதிர் குரல்
தேர் கொணர்ந்து, 'இதனில், கலை வலாள!
செவ்வி நுதல் திருவினொடும் போந்து ஏறுக!' என,
ஏறிச் சிறந்தான் மன்னோ. 63
முனிவன் போவதைக் கண்டு,
தேவர்கள் மகிழ்தல்
குனி சிலை வயவனும் கரங்கள் கூப்பிட,
துனி அறு முனிவரர் தொடர்ந்து சூழ்வர,
வனிதையும், அரு மறை வடிவு போன்று ஒளிர்
முனிவனும், பொறிமிசை நெறியை முன்னினார்.
64
அந்தர துந்துமி முழக்கி, ஆய் மலர்
சிந்தினர், களித்தனர் - அறமும் தேவரும் -
'வெந்து எழு கொடு வினை வீட்டும் மெய்ம்முதல்
வந்து எழ அருள் தருவான்' என்று எண்ணியே.
65
தயரதன் மகிழ்வுடன் முனிவனை
எதிர்கொள்ளல்
தூதுவர் அவ் வழி அயோத்தி துன்னினார்;
மாதிரம் பொருத தோள் மன்னர்மன்னன்முன்
ஓதினர், முனி வரவு; ஓத, வேந்தனும்,
காதல் என்ற அளவு அறும் கடலுள் ஆழ்ந்தனன்.
66
எழுந்தனன் பொருக்கென, இரதம் ஏறினன்;
பொழிந்தன மலர் மழை; ஆசி பூத்தன;
மொழிந்தன பல் இயம்; முரசம் ஆர்த்தன;
விழுந்தன தீவினை, வேரினோடுமே. 67
தயரதன் அடிவணங்க, முனிவன்
ஆசி கூறுதல்
'பிதிர்ந்தது எம் மனத் துயர்ப் பிறங்கல்' என்று
கொண்டு,
அதிர்ந்து எழு முரசுடை அரசர் கோமகன்
முதிர்ந்த மா தவமுடை முனியை, கண்களால்
எதிர்ந்தனன், ஓசனை இரண்டொடு ஒன்றினே. 68
நல் தவம் அனைத்தும், ஓர் நவை இலா உருப்
பெற்று, இவண் அடைந்தெனப் பிறங்குவான் தனை,
சுற்றிய சீரையும், உழையின் தோற்றமும்,
முற்று உறப் பொலிதரு மூர்த்தியான் தனை, 69
அண்டர்கள் துயரமும், அரக்கர் ஆற்றலும்,
விண்டிடப் பொலிதரும் வினை வலாளனை,
குண்டிகை, குடையொடும், குலவு நூல் முறைத்
தண்டொடும், பொலிதரு தடக் கையான் தனை, 70
இழிந்து போய் இரதம், ஆண்டு, இணை கொள் தாள்
மலர்
விழுந்தனன், வேந்தர்தம் வேந்தன், மெய்ம்மையால்,
மொழிந்தனன் ஆசிகள்-முதிய நான்மறைக்
கொழுந்து மேல் படர் தரக் கொழுகொம்பு ஆயினான்.
71
தயரதன் முனிவனுடன் அயோத்தியை
அடைதல்
அயல் வரும் முனிவரும் ஆசி கூறிட,
புயல் பொழி தடக் கையால் தொழுது, பொங்கு நீர்க்
கயல் பொரு விழியொடும் கலை வலாளனை,
இயல்பொடு கொணர்ந்தனன், இரதம் ஏற்றியே. 72
அடி குரல் முரசு அதிர் அயோத்தி மா நகர்
முடியுடை வேந்தன், அம் முனிவனோடும், ஓர்
கடிகையின் அடைந்தனன், -கமல வாள் முக
வடிவுடை மடந்தையர் வாழ்த்து எடுப்பவே. 73
வசிட்டனுடன் கலைக்கோட்டு
முனிவன் அரசவை அடைதல்
கசட்டுறு வினைத் தொழில் கள்வராய் உழல்
அசட்டர்கள் ஐவரை அகத்து அடக்கிய
வசிட்டனும், அரு மறை வடிவு போன்று ஒளிர்
விசிட்டனும், வேத்தவை பொலிய மேவினார். 74
தயரதன் கலைக்கோட்டு முனிவனை
உபசரித்து மொழிதல்
மா மணி மண்டபம் மன்னி, மாசு அறு
தூ மணித் தவிசிடை, சுருதியே நிகர்
கோ முனிக்கு அரசனை இருத்தி, கொள் கடன்
ஏமுறத் திருத்தி, வேறு, இனைய செப்பினான்:
75
'சான்றவர் சான்றவ! தருமம், மா தவம்,
போன்று ஒளிர் புனித! நின் அருளில் பூத்த என்
ஆன்ற தொல் குலம் இனி அரசின் வைகுமால்;
யான் தவம் உடைமையும், இழப்பு இன்றாம் அரோ.'
76
முனிவன் தன்னை அழைத்த காரணம்
வினாவுதல்
என்னலும், முனிவரன் இனிது நோக்குறா,
'மன்னவர்மன்ன! கேள்: வசிட்டன் என்னும் ஓர்
நல் நெடுந் தவன் துணை; நவை இல் செய்கையால்,
நின்னை இவ் உலகினில் நிருபர் நேர்வரோ?' 77
என்று இவை பற்பல இனிமை கூறி, 'நல்
குன்று உறழ் வரி சிலைக் குவவுத் தோளினாய்!
நன்றி கொள் அரி மகம் நடத்த எண்ணியோ,
இன்று எனை அழைத்தது இங்கு? இயம்புவாய்!' என்றான்.
78
மைந்தர் இல்லாக் குறையை
மன்னன் தெரிவித்தல்
'உலப்பு இல் பல் ஆண்டு எலாம், உறுகண் இன்றியே,
தலப் பொறை ஆற்றினென்; தனையர் வந்திலர்;
அலப்பு நீர் உடுத்த பார் அளிக்கும் மைந்தரை
நலப் புகழ் பெற, இனி நல்க வேண்டுமால்.' 79
மைந்தரை அளிக்கும் வேள்வி
இயற்றவேண்டும் என முனிவன் கூறுதல் என்றலும்,
'அரச! நீ இரங்கல்; இவ் உலகு
ஒன்றுமோ? உலகம் ஈர் - ஏழும் ஓம்பிடும்
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம்
இன்று நீ இயற்றுதற்கு எழுக, ஈண்டு!' என்றான்.
80
மன்னன் யாகசாலையில் புகுதல்
ஆயதற்கு உரியன கலப்பை யாவையும்
ஏயெனக் கொணர்ந்தனர்; நிருபர்க்கு ஏந்தலும்,
தூய நல் புனல் படீஇ, சுருதி நூல் முறை
சாய்வு அறத் திருத்திய சாலை புக்கனன். 81
முனிவன் பன்னிரு திங்கள்
வேள்வி இயற்றி, மகவு அருள் ஆகுதி வழங்குதல்
முழங்கு அழல் மும்மையும் முடுகி, ஆகுதி
வழங்கியே, ஈர்-அறு திங்கள் வாய்த்த பின்,
தழங்கின துந்துமி; தா இல் வானகம்
விழுங்கினர் விண்ணவர், வெளி இன்று என்னவே.
82
முகமலர் ஒளிதர மொய்த்து, வான் உளோர்,
அக விரை நறு மலர் தூவி, ஆர்த்து எழ,
தகவுடை முனியும், அத் தழலின் நாப்பணே,
மக அருள் ஆகுதி வழங்கினான் அரோ. 83
வேள்வித் தீயில் பூதம் எழுந்து,
சுதை நிகர் பிண்டத்தைத் தரையில் வைத்து மறைதல்
ஆயிடை, கனலின் நின்று, அம் பொன் தட்டினில்
தூய நல் சுதை, நிகர் பிண்டம் ஒன்று, - சூழ்
தீ எரிப் பங்கியும், சிவந்த கண்ணும் ஆய்,
ஏயென, பூதம் ஒன்று எழுந்தது - ஏந்தியே. 84
வைத்தது தரைமிசை, மறித்தும் அவ் வழி
தைத்தது பூதம். அத் தவனும், வேந்தனை,
'உய்த்த நல் அமுதினை, உரிய மாதர்கட்கு,
அத் தகு மரபில்நின்று, அளித்தியால்' என்றான்.
85
முனிவன் பணித்தபடி, தயரதன்
தம் மனைவியர் மூவர்க்கும் பிண்டத்தைப் பகிர்ந்து அளித்தல்
மா முனி பணித்திட, மன்னர் மன்னவன்,
தூம மென் சுரி குழல் தொண்டைத் தூய வாய்க்
காமரு கோசலை கரத்தில், ஓர் பகிர்,
தாம் உற அளித்தனன், சங்கம் ஆர்த்து எழ. 86
கைகயன் தனையைதன் கரத்தும், அம் முறைச்
செய்கையின் அளித்தனன், தேவர் ஆர்த்து எழ-
பொய்கையும், நதிகளும், பொழிலும், ஓதிமம்
வைகுறு கோசல மன்னர் மன்னனே. 87
நமித்திரர் நடுக்குறு நலம் கொள் மொய்ம்புடை
நிமித் திரு மரபுளான், முன்னர், நீர்மையின்
சுமித்திரைக்கு அளித்தனன் - சுரர்க்கு வேந்து,
'இனிச்
சமித்தது என் பகை' என, தமரொடு ஆர்ப்பவே.
88
பிதிர்ந்து வீழ்ந்ததையும்
தயரதன் சுமித்திரைக்கு அளித்தல்
பின்னும், அப் பெருந்தகை, பிதிர்ந்து வீழ்ந்தது-
தன்னையும், சுமித்திரைதனக்கு நல்கினான் -
ஒன்னலர்க்கு இடமும், வேறு உலகின் ஓங்கிய
மன்னுயிர்தமக்கு நீள் வலமும், துள்ளவே. 89
வேள்வி முடிந்தபின் தயரதன்
அரசவைக்கு வருதல்
வாம் பரி வேள்வியும், மகாரை நல்குவது
ஆம் புரை ஆகுதி பிறவும், அந்தணன்
ஓம்பிட முடிந்தபின், உலகு காவலன்
ஏம்பலோடு எழுந்தனன் - யாரும் ஏத்தவே. 90
முருடொடு பல் இயம் முழங்கி ஆர்த்தன;
இருள் தரும் உலகமும் இடரின் நீங்கின;
தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீர்ந்துழி,
அருள் தரும் அவையில் வந்து அரசன் எய்தினான்.
91
தேவர் முதலிய யாவர்க்கும்
சிறப்புச் செய்து, சரயு நதியில் தயரதன் நீராடுதல்
செய்ம் முறைக் கடன் அவை திறம்பல் இன்றியே
மெய்ம் முறைக் கடவுளோர்க்கு ஈந்து, விண்ணுளோர்க்கு
அம் முறை அளித்து, நீடு அந்தணாளர்க்கும்
கைம் முறை வழங்கினன், கனக மாரியே. 92
வேந்தர்கட்கு, அரசொடு, வெறுக்கை, தேர், பரி,
வாய்ந்த நல் துகிலொடு, வரிசைக்கு ஏற்பன
ஈந்தனன்; பல் இயம் துவைப்ப ஏகி, நீர்
தோய்ந்தனன் - சரயு நல் துறைக்கண் எய்தியே.
93
தயரதன் வசிட்டனை வணங்குதல்
முரசு இனம் கறங்கிட, முத்த வெண்குடை
விரசி மேல் நிழற்றிட, வேந்தர் சூழ்தர,
அரசவை அடைந்துழி, அயனும் நாண் உற
உரை செறி முனிவன் தாள் வணங்கி, ஓங்கினான்.
94
தம்மை வணங்கிய தயரதனுக்கு
ஆசி கூறி, கலைக்கோட்டு முனிவன் தன் இருப்பிடத்திற்கு மீள்தல்
அரிய நல் தவமுடை வசிட்டன் ஆணையால்,
இரலை நல் சிருங்க மா இறைவன் தாள் தொழா,
உரிய பற்பல உரை பயிற்றி, 'உய்ந்தனென்;
பெரிய நல் தவம் இனிப் பெறுவது யாது?' என்றான்.
95
'எந்தை! நின் அருளினால் இடரின் நீங்கியே
உய்ந்தனென் அடியனேன்' என்ன, ஒண் தவன்,
சிந்தையுள் மகிழ்ச்சியால் வாழ்த்தி, தேர்மிசை
வந்த மா தவரொடும் வழிக்கொண்டு ஏகினான். 96
ஏனைய முனிவரும் ஆசி வழங்கி
நீங்குதல்
வாங்கிய துயருடை மன்னன், பின்னரும்,
பாங்குரு முனிவர் தாள் பழிச்சி ஏத்தல் கொண்டு,
ஓங்கிய உவகையர் ஆசியோடு எழா,
நீங்கினர்; இருந்தனன், நேமி வேந்தனே. 97
தேவிமார் மூவரும் கருவுறுதல்
தெரிவையர் மூவரும், சிறிது நாள் செலீஇ,
மருவிய வயாவொடு வருத்தம் துய்த்தபின்,
பொரு அரு திரு முகம் அன்றி, பொற்பு நீடு
உருவமும், மதியமோடு ஒப்பத் தோன்றினார். 98
கோசலை வயிற்றில் திருமால்
அவதரித்தல்
ஆயிடை, பருவம் வந்து அடைந்த எல்லையின்,
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட,
வேய் புனர்பூசமும், விண்ணுளோர்களும்,
தூய கற்கடகமும், எழுந்து துள்ளவே, 99
சித்தரும், இயக்கரும், தெரிவைமார்களும்,
வித்தக முனிவரும், விண்ணுளோர்களும்,
நித்தமும், முறை முறை நெருங்கி ஆர்ப்புற,
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே. 100
ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து,
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை,
திரு உறப் பயந்தனள் - திறம் கொள் கோசலை.
101
கைகேயி மைந்தனைப் பெறுதல்
ஆசையும், விசும்பும், நின்று அமரர் ஆர்த்து
எழ,
வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துற,
பூசமும் மீனமும் பொலிய, நல்கினாள்,
மாசு அறு கேகயன் மாது மைந்தனை. 102
சுமித்திரை இரு மகவு ஈன்றாள்
தளை அவிழ் தருவுடைச் சயிலகோபனும்,
கிளையும், அந்தரமிசைக் கெழுமி ஆர்ப்புற,
அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வுற,
இளையவற் பயந்தனள், இளைய மென் கொடி. 103
படம் கிளர் பல் தலைப் பாந்தள் ஏந்து பார்
நடம் கிளர்தர, மறை நவில நாடகம்,
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட,
விடம் கிளர் விழியினாள், மீட்டும், ஈன்றனள்.
104
வானவர் மகிழ்ச்சி
ஆடினர் அரம்பையர்; அமுத ஏழ் இசை
பாடினர் கின்னரர்; துவைத்த பல் இயம்;
'வீடினர் அரக்கர்' என்று உவக்கும் விம்மலால்,
ஓடினர், உலாவினர், உம்பர் முற்றுமே. 105
புதல்வர் பிறந்ததைச் சேடிமார்
தயரதனிடம் தெரிவித்தலும், சோதிடர் ஆய்ந்து,
'நாள் முதலியன நன்று' என்பதும்
ஓடினர் அரசன்மாட்டு, உவகை கூறி நின்று
ஆடினர், சிலதியர்; அந்தணாளர்கள்
கூடினர்; நாளொடு கோளும் நின்றமை
நாடினர்; 'உலகு இனி நவை இன்று' என்றனர்.
106
தயரதன் புனல் படிந்து, தானம்
செய்து பின் குழந்தைகளைப் பார்த்தல்
மா முனிதன்னொடு, மன்னர் மன்னவன்,
ஏமுறப் புனல் படீஇ, வித்தொடு இன் பொருள்
தாம் உற வழங்கி, வெண் சங்கம் ஆர்ப்புற,
கோ மகார் திருமுகம் குறுகி நோக்கினான்.
107
புதல்வர் பிறந்த மகிழ்ச்சியில்
தயரதன் புரிந்த நற்பணிகள்
'"இறை தவிர்ந்திடுக பார், யாண்டு ஒர்
ஏழ்; நிதி
நிறை தரு சாலை தாள் நீக்கி, யாவையும்,
முறை கெட, வறியவர் முகந்து கொள்க" எனா,
அறை பறை' என்றனன் - அரசர் கோமகன். 108
'படை ஒழிந்திடுக; தம்பதிகளே, இனி,
விடை பெறுகுக, முடி வேந்தர்; வேதியர்,
நடையுறு நியமமும் நவை இன்று ஆகுக;
புடை கெழு விழாவொடு பொலிக, எங்கணும். 109
'ஆலையம் புதுக்குக; அந்தணாளர்தம்
சாலையும், சதுக்கமும், சமைக்க, சந்தியும்;
காலையும் மாலையும், கடவுளர்க்கு, அணி
மாலையும் தீபமும், வழங்குக' என்றனன். 110
செய்தி கேட்ட நகர மாந்தரின்
மகிழ்ச்சி
என்புழி, வள்ளுவர், யானை மீமிசை
நன் பறை அறைந்தனர்; நகர மாந்தரும்,
மின் பிறழ் நுசுப்பினார் தாமும், விம்மலால்,
இன்பம் என்ற அளக்க அரும் அளக்கர் எய்தினார்.
111
ஆர்த்தனர் முறை முறை அன்பினால்; உடல்
போர்த்தன புளகம்; வேர் பொடித்த; நீள் நிதி
தூர்த்தனர், எதிர் எதிர் சொல்லினார்க்கு எலாம்;-
'தீர்த்தன்' என்று அறிந்ததோ அவர்தம் சிந்தையே?
112
பண்ணையும் ஆயமும், திரளும் பாங்கரும்,
கண் அகன் திரு நகர் களிப்புக் கைம்மிகுந்து,
எண்ணெயும், களபமும், இழுதும், நானமும்,
சுண்ணமும், தூவினார் - வீதிதோறுமே. 113
பன்னிரண்டு நாள் கழித்து
வசிட்டன் குழந்தைகளுக்குப் பெயரிடுதல்
இத்தகை மா நகர், ஈர்-அறு நாளும்,
சித்தம் உறும் களியோடு சிறந்தே,
தத்தமை ஒன்றும் உணர்ந்திலர்; தாவா
மெய்த் தவன் நாமம் விதிப்ப மதித்தான். 114
இராமன், பரதன், இலக்குவன்,
சத்துருக்கன், என நால்வருக்கும் பெயர் வைத்தல்
சுரா மலைய, தளர் கைக் கரி எய்த்தே,
'அரா-அணையில் துயில்வோய்!' என, அந் நாள்,
விராவி, அளித்தருள் மெய்ப்பொருளுக்கே,
'இராமன்' எனப் பெயர் ஈந்தனன் அன்றே. 115
சுரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரத மறைப் பொருள் மெய்ந்நெறி கண்ட
வரதன், உதித்திடு மற்றைய ஒளியை,
'பரதன்' எனப் பெயர் பன்னினன் அன்றே. 116
உலக்குநர் வஞ்சகர்; உம்பரும் உய்ந்தார்;
நிலக் கொடியும் துயர் நீத்தனள்; இந்த,
விலக்க அரு மொய்ம்பின் விளங்கு ஒளி நாமம்,
'இலக்குவன்' என்ன, இசைத்தனன் அன்றே, 117
'முத்து உருக்கொண்டு செம் முளரி அலர்ந்தால்
ஒத்திருக்கும் எழிலுடைய இவ் ஒளியால்,
எத் திருக்கும் கெடும்' என்பதை எண்ணா,
'சத்துருக்கன்' எனச் சாற்றினன் நாமம். 118
பெயரிட்ட போது தயரதன் தானம்
செய்து உவத்தல்
பொய் வழி இல் முனி, புகல்தரு மறையால்,
இவ் வழி, பெயர்கள் இசைத்துழி, இறைவன்
கை வழி, நிதி எனும் நதி கலைமறையோர்
மெய் வழி உவரி நிறைந்தன மேன்மேல். 119
தம் குமாரர்கள் மீது தயரதன்
கொண்ட அன்பு
'காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே,
ஓவிய எழிலுடை ஒருவனை அலது, ஓர்
ஆவியும் உடலமும் இலது' என, அருளின்
மேவினன் - உலகுடை வேந்தர்தம் வேந்தன். 120
குமாரர்களின் வளர்ச்சி
அமிர்து உகு குதலையொடு அணி நடை பயிலா,
திமிரம் அது அற வரு தினகரன் எனவும்,
தமரமதுடன் வளர் சதுமறை எனவும்,
குமரர்கள் நிலமகள் குறைவு அற வளர் நாள்-
121
வசிட்டன் கல்வி கற்பித்தல்
சவுளமொடு உபநயம் விதிமுறை தருகுற்று,
'இ(வ்)அளவது' என ஒரு கரை பிறிது இலவா,
உவள் அரு மறையினொடு ஒழிவு அறு கலையும்,
தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே. 122
படைப் பயிற்சி யானையும், இரதமும், இவுளியும், முதலா
ஏனைய பிறவும், அவ் இயல்பினில் அடையுற்று,
ஊன் உறு படை பல சிலையொடு பயிலா,
வானவர் தனிமுதல், கிளையொடு வளர, 123
முனிவர் முதலிய யாவரும்
குமாரர்களை விரும்புதல்
அரு மறை முனிவரும், அமரரும், அவனித்
திருவும், அந் நகர் உறை செனமும், 'நம் இடரோடு
இரு வினை துணிதரும், இவர்களின்; இவண் நின்று
ஒரு பொழுது அகல்கிலம், உறை' என உறுவார்.
124
இராமனும் இலக்குவனும், பரதனும்
சத்துருக்கனும், இணைபிரியாதிருத்தல்
ஐயனும் இளவலும், அணி நிலமகள்தன்
செய்தவம் உடைமைகள் தெரிதர, நதியும்,
மை தவழ் பொழில்களும், வாவியும், மருவி,
'நெய் குழல் உறும் இழை' என நிலைதிரிவார்.
125
பரதனும் இளவலும், ஒருநொடி பகிராது,
இரதமும் இவுளியும் இவரினும், மறைநூல்
உரைதரு பொழுதினும், ஒழிகிலர்; எனை ஆள்
வரதனும் இளவலும் என மருவினரே. 126
நான்கு குமாரரும் முனிவரர்
இருப்பிடம் சென்று மாலையில் மீள்தள்
வீரனும், இளைஞரும், வெறி பொழில்களின்வாய்,
ஈரமொடு உறைதரு முனிவரரிடை போய்,
சோர் பொழுது, அணிநகர் துறுகுவர்; எதிர்வார்,
கார் வர அலர் பயிர் பொருவுவர், களியால்.
127
ஏழையர் அனைவரும், இவர் தட முலை, தோய்
கேழ் கிளர் மதுகையர், கிளைகளும், 'இளையார்
வாழிய!' என, அவர் மனன் உறு கடவுள்-
தாழ்குவர்-கவுசலை தயரதன் எனவே. 128
'கடல் தரு முகில், ஒளிர் கமலம் அது அலரா,
வட வரையுடன் வரு செயல் என, மறையும்
தடவுதல் அறிவு அரு தனி முதலவனும்,
புடை வரும் இளவலும்' என, நிகர் புகல்வார்.
129
நகரத்தவரின் நலனை இராமன்
உசாவுதலும், அவர்கள் உவந்து விடையளித்தலும்
எதிர் வரும் அவர்களை, எமையுடை இறைவன்,
முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா,
'எது வினை? இடர் இலை? இனிது நும் மனையும்?
மதி தரு குமரரும் வலியர்கொல்?' எனவே, 130
அஃது, 'ஐய! நினை எமது அரசு என உடையேம்;
இஃது ஒரு பொருள் அல; எமது உயிருடன் ஏழ்
மகிதலம் முழுதையும் உறுகுவை, மலரோன்
உகு பகல் அளவு' என, உரை நனி புகல்வார்.
131
யாவரும் போற்ற, இராமன் இனிது
இருத்தல்
இப் பரிசு, அணி நகர் உறையும் யாவரும்,
மெய்ப் புகழ் புனைதர, இளைய வீரர்கள்
தப்பு அற அடி நிழல் தழுவி ஏத்துற,
முப் பரம் பொருளினும் முதல்வன் வைகுறும்.
132
மிகைப் பாடல்கள்
'பொறை இலா அறிவு, போகப் புணர்ப்பு இலா இளமை,
மேவத்
துறை இலா வனச வாவி, தூசு இலார் போலித் தூய்மை,
நறை இலா மலரும், கல்வி நலம் இலாப் புலமை, நன்னீர்ச்
சிறை இலா நகரும், போலும், சேய் இலாச் செல்வம்'
என்றான். 4-1
சுடு தொழில் அரக்கரால் தொலைந்து, வான் உளோர்,
சுடு அமர் களன் அடி கலந்து கூறலும்,
படு பொருள் உணர்ந்த அப் பரமன், 'யான் இனி
அடுகிலென்' என மறுத்து, அவரொடு ஏகினான்.
5-1
கறை மிடற்று அண்ணலும் கடவுளோர்களும்
மறை முதற் கிழவனை வந்து நண்ணலும்,
முறைமையின் கடன் முறை முற்றி, முண்டகத்து
இறைவனும், அவரொடும் இனிதின் ஏகினான். 5-2
வடவரைக் குடுமியின் நடுவண், மாசு அறு
சுடர் மணி மண்டபம் துன்னி, நான்முகக்
கடவுளை அடி தொழுது, அமர கண்டகர்
இடி நிகர் வினையம் அது இயம்பினான் அரோ.
5-3
என்று இனையன பல இயம்பி, 'எங்கணும்,
கன்றி, அவ் அரக்கரை அழித்துக் காத்தியேல்,
ஒன்றிய உயிர்களும் உலகு யாவையும்
இன்று நீ படைத்தி' என்று இசைத்து, பின்னரும்.
5-4
ஆயவர் அயன் முதல் அமரர், ஈறு இலா
நாயகன் இரு பதம் நயந்து, சிந்தைமீது
ஓய்வு இலாது, அவன் அரு மறைகள் ஓதியே,
நேயமோடு இருந்து, இவை நிகழ்த்தல் மேயினார்.
8-1
'காத்தி நீ எமை; காக்கிலர்தம்மை யாம்
ஏத்தியே இளைத்தோம்; இறைவா! இடர்ப்
பார்த்தியோ?-திருப் பாற்கடற் பள்ளியின்
மூர்த்தியே! முதல்வா! முகில் மேனியாய்!
8-2
'அந்தகாரத்து அரக்கர் செய் தீமையால்,
நொந்துளோம்; இறைவா! நொடிப் போதினில்
வந்து மாற்றிடும் வண்ணம் எமக்கு அருள்-
எந்தையே! கருணாகரனே!' எனா. 8-3
அறி துயில் எழுந்தனன், அமரர் கூப்பிடும்
மறை மொழித் துதி ஒலி வந்து இசைக்கவே;
நிறை குணத்து அமரர்கள் நினைத்து அழைப்பதை,
இறைவனும், திரு உளத்து அறிந்து, அங்கு எய்தவே.
9-1
வானவர் அம் முறை வழங்க, மா மதித்
தேன் உறும் இதழி அம் தெரியல் வேணியான்
ஆனவர் தமைக் கரம் அமைத்து அங்கு, ஐயனைத்
தான் முகம் நோக்கியே சாற்றல் மேயினான்.
15-1
எனக் கலை மா முகச் சிருங்கன் இவ் உரை-
தனைச் சொல, தரணிபர்க்கு அரசன் தான் மகிழ்ந்து,
அனைத்து உலகு உயிரொடும் அறங்கள் உய்ய, தம்
மனத் துயர் அகன்றிட, வணங்கிக் கூறுவான்.
78-1
மேடம் ஆம் மதி; திதி நவமி; மீன் கழை;
நீடு உறு மாலை கற்கடகம்; நீதி சேர்
ஓடை மா களிறு அனான் உதய ராசி கோள்
நாடின், ஏகாதசர் நால்வர் உச்சரே. 106-1
என்றனர் சாதகம் ஈசற்கு; ஏனையர்
தம் தமக்கும் தகும் முறையில், தாம் தெரிந்து,
ஒன்றிய தமனியத்து எழுதி ஓதினார்-
வன் திறல் சுரர் குரு வாழ்த்து எடுப்பவே.
106-2
நோக்கினன் களிப்பு எழ; நுணங்கு கேள்வி நூல்
ஆக்கிய முனிவனை வணங்கி, 'ஐய! என்
பாக்கியம் பலித்தது, இப் பாலர்' என்று, பார்
காக்குறும் அரசனும், கழறல் மேயினான்.
107-1
சுந்தரப் பொடிகளும் செம் பொற் சுண்ணமும்
சந்தனம் நீரொடு கலந்து, தையலார்
பந்தியில், சிவறியால் சிதற, பார் மிசை
இந்திரவில் எனக் கிடந்தது எங்குமே. 115-1
அரு மறை நெறி வழி, அரசனும், அன்னப்
பிரசனம் மதலையர் பெறு வழி உதவி,
கரை அறு திரு நகர் விழவொடு களியர்,
இருமையும் உதவுறு தானமும் ஈந்தான். 120-1
6. கையடைப் படலம்
மகிழ்வுடன் வாழ்ந்த தயரதன் அரசர்தம் பெருமகன், அகிலம் யாவையும்
விரசுறு தனிக் குடை விளங்க, வென்றி சேர்
முரசு ஒலி கறங்கிட, முனிவர் ஏத்துற,
கரை செயல் அரியது ஓர் களிப்பின் வைகும் நாள்,
1
நனை வரு கற்பக நாட்டு நல் நகர்
வனை தொழில் மதி மிகு மயற்கும் சிந்தையால்
நினையவும் அரியது, விசும்பின் நீண்டது, ஓர்
புனை மணி மண்டபம் பொலிய எய்தினான். 2
தயரதன் அரியணையில் வீற்றிருக்க,
விசுவாமித்திர முனிவனின் வருகை தூய
மெல் அரியணைப் பொலிந்து தோன்றினான்;
சேய் இரு விசும்பிடைத் திரியும் சாரணர்,
'நாயகன் இவன்கொல்?' என்று அயிர்த்து, நாட்டம்
ஓர்
ஆயிரம் இல்லை என்று ஐயம் நீங்கினார். 3
மடங்கல்போல் மொய்ம்பினான் முன்னர், 'மன்னுயிர்
அடங்கலும் உலகும் வேறு அமைத்து, தேவரோடு
இடம் கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு'
எனாத்
தொடங்கிய, துனி உறு, முனிவன் தோன்றினான்.
4
தயரதன் முனிவனை வணங்கி உபசரித்து
மொழிதல் வந்து முனி எய்துதலும், மார்பில்
அணி ஆரம்,
அந்தரதலத்து இரவி அஞ்ச, ஒளி விஞ்ச,
கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும்
இந்திரன் என, கடிது எழுந்து அடி பணிந்தான்.
5
பணிந்து, மணி செற்றுபு குயிற்றி அவிர் பைம்
பொன்
அணிந்த தவிசு இட்டு, இனிது அருத்தியொடு இருத்தி,
இணைந்த கமலச் சரண் அருச்சனை செய்து, 'இன்றே
துணிந்தது, என் வினைத் தொடர்' எனத் தொழுது
சொல்லும்: 6
'நிலம் செய் தவம் என்று உணரின், அன்று; நெடியோய்!
என்
நலம் செய் வினை உண்டு எனினும், அன்று; நகர்,
நீ, யான்
வலம் செய்து வணங்க, எளிவந்த இது முந்து என்
குலம் செய் தவம்' என்று இனிது கூற, முனி கூறும்:
7
தயரதனை விசுவாமித்திரன்
புகழ்தல்
'என் அனைய முனிவரரும் இமையவரும் இடையூறு ஒன்று
உடையரானால்,
பல் நகமும் நகு வெள்ளிப் பனிவரையும், பாற்கடலும்,
பதும பீடத்து
அந் நகரும், கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட
அயோத்தி என்னும்
பொன் நகரும், அல்லாது, புகல் உண்டோ ? இகல்
கடந்த புலவு வேலோய்!8
'இன் தளிர்க் கற்பக நறுந் தேன் இடை துளிக்கும்
நிழல் இருக்கை இழந்து போந்து,
நின்று அளிக்கும் தனிக் குடையின் நிழல் ஒதுங்கி,
குறை இரந்து நிற்ப, நோக்கி,
குன்று அளிக்கும் குல மணித் தோள் சம்பரனைக்
குலத்தோடும் தொலைத்து, நீ கொண்டு
அன்று அளித்த அரசு அன்றோ, புரந்தரன் இன்று
ஆள்கின்றது?-அரச!' என்றான். 9
தயரதன் கை கூப்பித் தொழுது,
'யான் செய்வது அருளுக!' என வேண்டுதல்
உரைசெய்யும் அளவில், அவன் முகம் நோக்கி, உள்ளத்துள் ஒருவராலும்
கரை செய்ய அரியது ஒரு பேர் உவகைக் கடல் பெருக,
கரங்கள் கூப்பி,
'அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென்; மற்று,
இனிச் செய்வது அருளுக!' என்று,
முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய, பின்
மொழியும் முனிவன், ஆங்கே: 10
வேள்வி காக்க தயரதனிடம்
கரிய செம்மலை முனிவன் வேண்டல் 'தரு
வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு, தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி என, நிருதர்
இடை விலக்கா வண்ணம்,
"செருமுகத்துக் காத்தி" என, நின்
சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி' என, உயிர் இரக்கும் கொடுங்
கூற்றின், உளையச் சொன்னான்.11
தயரதன் துயர் உறுதல்
எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின்
எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தாலெனச்
செவியில் புகுதலோடும்,
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த, ஆர் உயிர்
நின்று ஊசலாட,
'கண் இலான் பெற்று இழந்தான்' என உழந்தான் கடுந்
துயரம்-காலவேலான்.12
தயரதன் தானே வந்து வேள்வி
காப்பேன் எனல் தொடை ஊற்றின் தேன் துளிக்கும்
நறுந் தாரான் ஒருவண்ணம் துயரம் நீங்கி,
'படையூற்றம் இலன்; சிறியன் இவன்; பெரியோய்!
பணி இதுவேல், பனி நீர்க் கங்கை
புடை ஊற்றும் சடையானும், புரந்தரனும், நான்முகனும்,
புகுந்து செய்யும்
இடையூற்றுக்கு இடையூறாய், யான் காப்பென்; பெரு
வேள்விக்கு எழுக!' என்றான். 13
விசுவாமித்திர முனிவனின்
கோபம்
என்றனன்; என்றலும், முனிவோடு எழுந்தனன், மண்
படைத்த முனி; 'இறுதிக் காலம்
அன்று' என, 'ஆம்' என இமையோர் அயிர்த்தனர்;
மேல் வெயில் கரந்தது; அங்கும் இங்கும்
நின்றனவும் திரிந்தன; மேல் நிவந்த கொழுங் கடைப்
புருவம் நெற்றி முற்றச்
சென்றன; வந்தது நகையும்; சிவந்தன கண்; இருண்டன,
போய்த் திசைகள் எல்லாம்.14
வசிட்டன் உரையால் தயரதன்
தெளிதல்
கறுத்த மா முனி கருத்தை உன்னி, 'நீ
பொறுத்தி' என்று அவற் புகன்று, 'நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ?' எனா, வசிட்டன் கூறுவான்: 15
'பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய்
மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல்,
ஐய! நின் மகற்கு அளவு இல் விஞ்சை வந்து
எய்து காலம் இன்று எதிர்ந்தது' என்னவே, 16
தயரதன் இராம இலக்குவரை முனிவனிடம்
ஒப்புவித்தல்
குருவின் வாசகம் கொண்டு, கொற்றவன்,
'திருவின் கேள்வனைக் கொணர்மின், சென்று' என,-
'வருக என்றனன்' என்னலோடும், வந்து
அருகு சார்ந்தனன், அறிவின் உம்பரான். 17
வந்த நம்பியைத் தம்பிதன்னொடும்
முந்தை நான்மறை முனிக்குக் காட்டி, 'நல்
தந்தை நீ, தனித் தாயும் நீ, இவர்க்கு;
எந்தை! தந்தனென்; இயைந்த செய்க!' என்றான்.
18
இராம இலக்குவருடன் முனிவன்
புறப்படுதல்
கொடுத்த மைந்தரைக் கொண்டு, சிந்தை முந்து
எடுத்த சீற்றம் விட்டு, இனிது வாழ்த்தி, 'மேல்
அடுத்த வேள்வி போய் முடித்தும் நாம்' எனா,
நடத்தல் மேயினான், நவைக்கண் நீங்கினான்.
19
ஆயுதம் தாங்கி இராம இலக்குவர்
முனிவன் பின் செல்லுதல்
வென்றி வாள் புடை விசித்து, மெய்ம்மைபோல்
என்றும் தேய்வுறாத் தூணி யாத்து, இரு
குன்றம் போன்று உயர் தோளில், கொற்ற வில்
ஒன்று தாங்கினான் - உலகம் தாங்கினான். 20
அன்ன தம்பியும் தானும், ஐயன் ஆம்
மன்னன் இன் உயிர் வழிக் கொண்டாலென,
சொன்ன மா தவன் - தொடர்ந்து, சாயைபோல்,
பொன்னின் மா நகர்ப் புரிசை நீங்கினான். 21
மூவரும் சரயு நதியை அடுத்த
சோலையைச் சேர்தல்
வரங்கள் மாசு அற, தவம் செய்தோர்கள் வாழ்
புரங்கள் நேர் இலா நகரம் நீங்கிப் போய்,
அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று
இரங்கு வார் புனல் சரயு எய்தினார். 22
கரும்பு கால் பொரக் கழனி வார்ந்த தேன்
வரம்பு மீறிடு மருத வேலிவாய்,
அரும்பு கொங்கையார் அம் மெல் ஓதிபோல்
சுரும்பு வாழ்வது ஓர் சோலை நண்ணினார். 23
தீய்ந்த சோலையைக் கண்டு
இராமன் வினாவுதல் தாழும் மா மழை தவழும்
நெற்றியால்
சூழி யானைபோல் தோன்றும் மால் வரைப்
பாழி மா முகட்டு உச்சி, பச்சை மா
ஏழும் ஏற, போய் ஆறும் ஏறினார். 24
தேவு மாதவன் - தொழுது, தேவர்தம்
நாவுள் ஆகுதி நயக்கும் வேள்வியால்
தாவும் மா புகை தழுவு சோலை கண்டு,
'யாவது ஈது?' என்றான் - எவர்க்கும் மேல் நின்றான்.
25
மிகைப் பாடல்கள்
அப்பெருந் திருவொடும் 'அகில நாதன்' என்று,
எப்பெரும் புவனமும் இறைஞ்சி ஏத்தவே,
தப்ப அருந் தருமமும் தயாவும் தாங்கியே,
ஒப்புரவுடன் அவன் உவந்து வாழும் நாள். 1-1
அரிஅணை மிசை தனில், அழகு மன்றினில்,
புரி தவம் மிகு பதப் பொற்பின் நீடு அருள்
அரசர்கள் முடி படி அணைய, அம் பொனின்
உரை பொடி மலை குவை ஒப்ப குப்பையோ. 1-2
'"இனைய சோலை மற்று யாவது?" என்று,
மா
முனிவ! கூறு' என முதல்வன் கூறலும்,
பனுவல் வேத நூல் பகரும் மா தவன்,
'தனு வலாய்! இதன் தன்மை கேள்' எனா, 24-1
'சம்பரப் பெயர்த் தானவ(ன்)னுடன்
உம்பர் கோமகன் அமர் உடன்ற நாள்,
வெம்பி, மற்று அவன் வெற்றி கொண்ட போது,
அம்பரம் இழந்து, அவனி வந்தனன்; 24-2
'அவனி வந்து, மன்னவர் இடம்தொறும்,
தவனன் என்னவே தான் உழன்று, அறிந்து,
"இவனில் வேறு மற்றுஇல்லை எற்கு"
எனா,
உவன் விரும்பி வந்து, உந்தை நாடு உறா,
24-3
'இந்த இவ் இடத்து எய்தி, இந்திரன்,
"சந்த வார் பொழில் தரு ஒர் ஐந்தையும்
வந்து நிற்க" எனா, மன நினைப்பின்முன்
முந்து வந்து மா முரல நின்றவால். 24-4
'நின்ற சோலைவாய், நியமம் நித்தமும்
குன்றல் இன்றியே செய்து கொண்டு, அவன்
நன்றியால் இருந்து, அரசை நண்ணியே,
துன்று சோலையின் தொழில் உணர்த்தினான்.
24-5
'உருவம் மாறி, வேறு உருவமாகியே,
நிருப! நின் குடை நிழலின் நிற்றலும்,
பரிவின் நோக்கி, "நீ பகர்தியால்"
எனத்
தருவின் நாயகந்தான் விளம்பினான்: 24-6
'"சதமகன் தனைச் சம்பரன் எனும்
மதமகன் துரந்து அரசு வவ்வினான்;
கதம் அகன்றிடாக் கனக வெற்பு அவன்
விதம் அகன்று வந்து, உன்னை மேவினேன்."
24-7
'என்றபோது தன் இரதம் ஏறியே
சென்று, மற்று அவன் சேனையோடு உகக்
கொன்று, வாசவன் அரசு கொள்ளவே
அன்று அளித்து, மீண்டு அயோத்தி மேவினான்.
24-8
'அன்னது ஆதலின் அவனி வந்த கா
இன்ன நாமம், இச் சோலை' என்றலும்,
மன்னர்மன்னவன் மதலை, 'நன்று' எனா,
பின்னை நன்று உயிர்ப் பிரியம் ஆயினார்.
24-9
7. தாடகை வதைப் படலம்
விசுவாமித்திரன் கூறிய அங்க நாட்டு
வரலாறும், காமன் ஆச்சிரமப் பெருமையும்
'திங்கள் மேவும் சடைத் தேவன்மேல், மாரவேள்,
இங்கு நின்று எய்யவும், எரிதரும் நுதல் விழிப்
பொங்கு கோபம் சுட, பூளை வீ அன்ன தன்
அங்கம் வெந்து, அன்று தொட்டு அனங்கனே ஆயினான்.
1
'வாரணத்து உரிவையான் மதனனைச் சினவு நாள்,
ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால், இவண் எலாம்,
ஆரணத்து உறையுளாய்! அங்க நாடு; இதுவும், அக்
காரணக் குறியுடைக் காமன் ஆச்சிரமமே. 2
'பற்று அவா வேரொடும் பசை அற, பிறவி போய்
முற்ற, வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு
சென்று
உற்ற வானவன், இருந்து யோகு செய்தனன் எனின்,
சொற்றவாம் அளவதோ, மற்று இதன் தூய்மையே?' 3
இரவு தங்கி, மறுநாள் மூவரும்
ஒரு பாலைவனம் சேர்தல்
என்று, அ(வ்) அந்தணன் இயம்பலும், வியந்து,
அவ் வயின்
சென்று, வந்து எதிர் தொழும் செந் நெறிச் செல்வரோடு
அன்று உறைந்து, அலர் கதிர்ப் பரிதி மண்டிலம்
அகன்
குன்றின் நின்று இவர, ஓர் சுடு சுரம் குறுகினார்.
4
பாலை நிலத்தின் தன்மை
பருதிவானவன் நிலம் பசை அறப் பருகுவான்
விருது மேற்கொண்டு உலாம் வேனிலே அல்லது ஓர்
இருது வேறு இன்மையால், எரி சுடர்க் கடவுளும்
கருதின், வேம் உள்ளமும்; காணின், வேம் நயனமும்.
5
படியின்மேல் வெம்மையைப் பகரினும், பகரும் நா
முடிய வேம்; முடிய மூடு இருளும் வான் முகடும்
வேம்;
விடியுமேல், வெயிலும் வேம்; மழையும் வேம்;
மின்னினோடு
இடியும் வேம்; என்னில், வேறு யாவை வேவாதவே?
6
விஞ்சு வான் மழையின்மேல் அம்பும் வேலும் பட,
செஞ்செவே செருமுகத்து அன்றியே, திறன் இலா
வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து
அஞ்சினார் நெஞ்சுபோல், என்றும் ஆறாது அரோ.
7
பேய் பிளந்து ஒக்க நின்று உலர் பெருங் கள்ளியின்
தாய் பிளந்து உக்க கார் அகில்களும், தழை இலா
வேய் பிளந்து உக்க வெண் தரளமும், விட அரா
வாய் பிளந்து உக்க செம் மணியுமே-வனம் எலாம்.
8
பாரும் ஓடாது; நீடாது எனும் பாலதே:
சூரும் ஓடாது; கூடாதுஅரோ: சூரியன்
தேரும் ஓடாது, மா மாகம் மீ; தேரின், நேர்
காரும் ஓடாது; நீள் காலும் ஓடாது அரோ. 9
கண் கிழித்து உமிழ் விடக் கனல் அரா-அரசு கார்
விண் கிழித்து ஒளிரும் மின் அனைய பல் மணி,
வெயில்
மண் கிழித்திட எழும் சுடர்கள், மண்மகள் உடல்
புண் கிழித்திட எழும் குருதியே போலுமே. 10
புழுங்கு வெம் பசியொடு புரளும் பேர் அரா
விழுங்க வந்து எழுந்து எதிர் விரித்த வாயின்வாய்,
முழங்கு திண் கரி புகும் முடுகி-மீமிசை
வழங்கு வெங் கதிர் சுட, மறைவு தேடியே! 11
ஏக வெங் கனல் அரசிருந்த, காட்டினில்
காகமும் கரிகளும் கரிந்து சாம்பின;-
மாக வெங் கனல் எனும் வடவைத் தீச் சுட,
மேகமும் கரிந்து இடை வீழ்ந்த போலுமே. 12
கானகத்து இயங்கிய கழுதின் தேர்க் குலம்,
'தான் அகத்து எழுதலால் தலைக் கொண்டு ஓடிப்போய்,
மேல் நிமிர்ந்து எழுந்திடில் விசும்பும் வேம்'
எனா,
வானவர்க்கு இரங்கி, நீர் வளைந்தது ஒத்ததே!
13
ஏய்ந்த அக் கனலிடை எழுந்த கானல்-தேர்,
காய்ந்த அக் கடு வனம் காக்கும் வேனிலின்
வேந்தனுக்கு அரசு வீற்றிருக்கச் செய்தது ஓர்
பாய்ந்த பொன் காலுடைப் பளிக்குப் பீடமே!
14
தா வரும் இரு வினை செற்று, தள்ள அரும்
மூவகைப் பகை அரண் கடந்து, முத்தியில்
போவது புரிபவர் மனமும், பொன் விலைப்
பாவையர் மனமும், போல் பசையும் அற்றதே! 15
பொரி பரல் படர் நிலம் பொடிந்து கீழ் உற
விரிதலின், பெரு வழி விளங்கித் தோன்றலால்,
அரி மணிப் பணத்து அரா-அரசன் நாட்டினும்
எரி கதிர்க்கு இனிது புக்கு இயங்கல் ஆயதே!
16
வெம்மையை தாங்கும் ஆற்றல்
பெற இராம இலக்குவருக்கு இரண்டு மந்திரங்களை முனிவன் உபதேசித்தல்
எரிந்து எழு கொடுஞ் சுரம் இனையது எய்தலும்,
அருந் தவன், 'இவர், பெரிது அளவு இல் ஆற்றலைப்
பொருந்தினர் ஆயினும், பூவின் மெல்லியர்;
வருந்துவர் சிறிது' என மனத்தின் நோக்கினான்.
17
நோக்கினன் அவர் முகம்; நோக்க, நோக்குடைக்
கோக் குமரரும் அடி குறுக, நான்முகன்
ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அவ் வழி
ஊக்கினன்; அவை அவர் உள்ளத்து உள்ளினார்.
18
அந்த நிலம் அழிந்த காரணத்தை
முனிவனிடம் இராமன் வினாவுதல்
'சுழி படு கங்கை அம் தொங்கல் மோலியான்
விழி பட வெந்ததோ? வேறுதான் உண்டோ ?
பழி படர் மன்னவன் பரித்த நாட்டினூங்கு
அழிவது என்? காரணம், அறிஞ! கூறு' என்றான்.
19
விசுவாமித்திரன் தாடகையின்
வரலாறு கூறுதல்
என்றலும், இராமனை நோக்கி, 'இன் உயிர்
கொன்று உழல் வாழ்க்கையள், கூற்றின் தோற்றத்தள்,
அன்றியும் ஐ-இருநூறு மையல் மா
ஒன்றிய வலியினள், உறுதி கேள்' எனா, 20
'மண் உருத்து எடுப்பினும், கடலை வாரினும்,
விண் உருத்து இடிப்பினும், வேண்டின், செய்கிற்பாள்;
எண் உருத் தெரிவு அரும் பாவம் ஈண்டி, ஓர்
பெண் உருக் கொண்டெனத் திரியும் பெற்றியாள்;
21
'பெரு வரை இரண்டொடும், பிறந்த நஞ்சொடும்,
உரும் உறழ் முழக்கொடும், ஊழித் தீயொடும்,
இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம் எனின்,
வெருவரு தோற்றத்தள் மேனி மானுமே; 22
'சூடக அரவு உறழ் சூலக் கையினள்;
காடு உறை வாழ்க்கையள்;-கண்ணின் காண்பரேல்,
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!-
"தாடகை" என்பது அச் சழக்கி நாமமே;
23
'உளப் பரும் பிணிப்பு அறா உலோபம் ஒன்றுமே
அளப்ப அருங் குணங்களை அழிக்குமாறுபோல்,
கிளப்ப அருங் கொடுமைய அரக்கி கேடு இலா
வளப் பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள்;
24
'இலங்கை அரசன் பணி அமைந்து, ஒர் இடையூறா,
விலங்கள் வலிகொண்டு, எனது வேள்வி நலிகின்றாள்;-
அலங்கல் முகிலே!-அவள் இ(வ்) அங்க நிலம் எங்கும்
குலங்களொடு அடங்க நனி கொன்று திரிகின்றாள்;
25
'முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம்
தன் உணவு எனக் கருது தன்மையினள்;-மைந்த!-
என் இனி உணர்த்துவது? இனிச் சிறிது நாளில்
மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும்' என்றான்.
26
தாடகையின் உறைவிடத்தை இராமன்
வினாவுதல்
அங்கு, உறுவன் அப் பரிசு உரைப்ப, அது கேளா,
கொங்கு உறை நறைக் குல மலர்க் குழல் துளக்கா,
'எங்கு உறைவது, இத் தொழில் இயற்றுபவள்?' என்றான்
-
சங்கு உறை கரத்து ஒரு தனிச் சிலை தரித்தான்.
27
தாடகை உறையும் மலையை முனிவன்
காட்ட, தாடகை அங்குத் தோன்றுதல்
கைவரை எனத் தகைய காளை உரை கேளா,
ஐவரை அகத்திடை அடைத்த முனி, 'ஐய!
இவ் வரை இருப்பது அவள்' என்பதனின் முன்பு,
ஓர்
மை வரை நெருப்பு எரிய வந்ததென, வந்தாள்.
28
தாடகையின் தோற்றம்
சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும்
நிலம் புக மிதித்தனள்; நெளித்த குழி வேலைச்
சலம் புக, அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப்
பிலம் புக, நிலக் கிரிகள் பின் தொடர, வந்தாள்
29
இறைக்கடை துடித்த புருவத்தள், எயிறு என்னும்
பிறைக் கடை பிறக்கிட மடித்த பில வாயள்,
மறைக் கடை அரக்கி, வடவைக் கனல் இரண்டு ஆய்
நிறைக் கடல் முளைத்தென, நெருப்பு எழ விழித்தாள்.
30
கடம் கலுழ் தடங் களிறு கையொடு கை தெற்றா,
வடம் கொள, நுடங்கும் இடையாள், மறுகி வானோர்
இடங்களும், நெடுந் திசையும், ஏழ் உலகும், யாவும்,
அடங்கலும் நடுங்க, உரும் அஞ்ச, நனி ஆர்த்தாள்.
31
தாடகை ஆரவாரத்துடன் அவர்களை
நோக்கி நகைத்து, வீர உரை பகர்தல்
ஆர்த்து, அவரை நோக்கி நகைசெய்து, எவரும் அஞ்ச,
கூர்த்த நுதி முத் தலை அயில் கொடிய கூற்றைப்
பார்த்து, எயிறு தின்று, பகு வாய்முழை திறந்து,
ஓர்
வார்த்தை உரைசெய்தனள்-இடிக்கும் மழை அன்னாள்-
32
'கடக்க அரும் வலத்து எனது காவல் இது; யாவும்
கெட, கருவறுத்தனென்; இனி, "சுவை கிடக்கும்
விடக்கு அரிது" எனக் கருதியோ? விதிகொடு
உந்த,
படக் கருதியோ?-பகர்மின், வந்த பரிசு!' என்றே.
33
'வேல் கொண்டு எறிவேன்?' எனத் தாடகை சினந்து வருதல்
மேகம் அவை இற்று உக விழிந்தனள், புழுங்கா,
மாக வரை இற்று உக உதைத்தனள்; மதித் திண்
பாகம் எனும் முற்று எயிறு அதுக்கி, அயில் பற்றா,
'ஆகம் உற உய்த்து, எறிவென்' என்று, எதிர் அழன்றாள்.
34
'பெண்' என்றெண்ணி இராமன் கணை தொடாதிருத்தல்
அண்ணல் முனிவற்கு அது கருத்து எனினும், 'ஆவி
உண்' என, வடிக் கணை தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில் தொடங்கியுளளேனும்,
'பெண்' என மனத்திடை பெருந்தகை நினைந்தான்.
35
இராமன் கருத்தறிந்த முனிவன், 'இவள் பெண் அல்லள்;
கொல்லுதி' எனல்
வெறிந்த செம் மயிர் வெள் எயிற்றாள், தனை
எறிந்து கொல்வென் என்று ஏற்கவும், பார்க்கிலாச்
செறிந்த தாரவன் சிந்தைக் கருத்து எலாம்
அறிந்து, நான்மறை அந்தணன் கூறுவான்: 36
'தீது என்றுள்ளவை யாவையும் செய்து, எமைக்
கோது என்று உண்டிலள்; இத்தனையே குறை;
யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும்,
மாது என்று எண்ணுவதோ?-மணிப் பூணினாய்! 37
'நாண்மையே உடையார்ப் பிழைத்தால், நகை;
வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர்
தோண்மையே இவள் பேர் சொலத் தோற்குமேல்,
ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே? 38
'இந்திரன் இடைந்தான்; உடைந்து ஓடினார்,
தந்திரம் படத் தானவர், வானவர்;
மந்தரம் இவள் தோள் எனின், மைந்தரோடு,
அந்தரம் இனி யாதுகொல், ஆண்மையே? 39
'கறங்கு அடல் திகிரிப் படி காத்தவர்
பிறங்கடைப் பெரியோய்! பெரியோரொடும்
மறம்கொடு, இத் தரை மன்னுயிர் மாய்த்து, நின்று,
அறம் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமோ? 40
'சாற்றும் நாள் அற்றது எண்ணி, தருமம் பார்த்து,
ஏற்றும் விண் என்பது அன்றி, இவளைப் போல்,
நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஓர்
கூற்றும் உண்டுகொல்?-கூற்று உறழ் வேலினாய்!
41
'மன்னும் பல் உயிர் வாரி, தன் வாய்ப் பெய்து
தின்னும் புன்மையின் தீமையது ஏது? -ஐய!-
"பின்னும் தாழ் குழல் பேதைமைப் பெண் இவள்
என்னும் தன்மை, எளிமையின் பாலதே! 42
'ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்; இவட்
சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்;
ஆறி நின்றது அருள் அன்று; அரக்கியைக்
கோறி' என்று, எதிர் அந்தணன் கூறினான். 43
முனிவனின் ஏவலுக்கு இராமன்
இசைந்து கூறுதல்
ஐயன் அங்கு அது கேட்டு, 'அறன் அல்லவும்
எய்தினால், "அது செய்க!" என்று ஏவினால்,
மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு' என்றான்.
44
தாடகை சூலப் படையை ஏவ, இராமன்
அம்பால் அதனைத் துணித்தல்
கங்கைத் தீம் புனல் நாடன் கருத்தை, அம்
மங்கைத் தீ அனையாளும் மனக்கொளா,
செங் கைச் சூல வெந் தீயினை, தீய தன்
வெங் கண் தீயொடு மேற்செல வீசினாள். 45
புதிய கூற்று அனையாள் புகைந்து ஏவிய
கதிர் கொள் மூஇலைக் கால வெந் தீ, முனி
விதியை மேற்கொண்டு நின்றவன்மேல், உவா
மதியின்மேல் வரும் கோள் என, வந்ததே. 46
மாலும், அக் கணம் வாளியைத் தொட்டதும்,
கோல வில் கால் குனித்ததும், கண்டிலர்;
காலனைப் பறித்து அக் கடியாள் விட்ட
சூலம் அற்று வீழ் துண்டங்கள் கண்டனர். 47
தாடகை கல் மழை பொழிய, இராமன் அம்பு மழையால் தடுத்தல்
அல்லின் மாரி அனைய நிறத்தவள்,
சொல்லும் மாத்திரையின், கடல் தூர்ப்பது ஓர்
கல்லின் மாரியைக் கைவகுத்தாள்; அது
வில்லின் மாரியின், வீரன் விலக்கினான். 48
மின்னொடும் அசனியோடும் வீழ்வதே போல-வீழ்ந்தாள்.
50
இராம பாணம் தாடகையின் நெஞ்சில் ஊடுருவ, அவள் மாய்ந்து
மண்ணில் வீழ்தல்
சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக்
குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம் கழன்று,
கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று
அன்றே! 49
பொன் நெடுங் குன்றம் அன்னான், புகர் முகப்
பகழி என்னும்
மன் நெடுங் கால வன் காற்று அடித்தலும், -இடித்து,
வானில்
கல் நெடு மாரி பெய்யக் கடையுகத்து எழுந்த மேகம்,
மின்னொடும் அசனியோடும் வீழ்வதே போல-வீழ்ந்தாள்.
50
பொடியுடைக் கானம் எங்கும் குருதிநீர் பொங்க
வீழ்ந்த
தடியுடை எயிற்றுப் பேழ் வாய்த் தாடகை, தலைகள்தோறும்
முடியுடை அரக்கற்கு, அந் நாள், முந்தி உற்பாதம்
ஆக,
படியிடை அற்று வீழ்ந்த வெற்றி அம் பதாகை ஒத்தாள்.
51
கான் திரிந்து ஆழி ஆகத் தாடகை கடின மார்பத்து
ஊன்றிய பகழி வாயூடு ஒழிகிய குருதி வெள்ளம்
ஆன்ற அக் கானம் எல்லாம் பரந்ததால்-அந்தி மாலைத்
தோன்றிய செக்கர் வானம் தொடக்கு அற்று வீழ்ந்தது
ஒத்தே! 52
வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத,
காசு உலாம் கனகப் பைம் பூண், காகுத்தன் கன்னிப்
போரில்,
கூசி, வாள் அரக்கர்தங்கள் குலத்து உயிர் குடிக்க
அஞ்சி,
ஆசையால் உழலும் கூற்றும், சுவை சிறிது அறிந்தது
அன்றே. 53
தேவர்கள் மகிழ்ந்து வாழ்த்துதல்
'யாமும் எம் இருக்கை பெற்றேம்; உனக்கு இடையூறும்
இல்லை;
கோமகற்கு இனி நீ தெய்வப் படைக்கலம் கொடுத்தி'
என்னா,
மா முனிக்கு உரைத்து, பின்னர், வில் கொண்ட
மழை அனான்மேல்
பூமழை பொழிந்து வாழ்த்தி, விண்ணவர் போயினாரே.
54
மிகைப் பாடல்கள்
உள்ளிய காலையின் ஊழித் தீயையும்
எள்ளுறு கொழுங் கனல் எரியும் வெஞ்சுரம்,
தெள்ளு தண் புனலிடைச் சேறல் ஒத்தது;
வள்ளலும், முனிவனை வணங்கிக் கூறுவான்:
18-1
'கல் நவில் தோளினாய்! கமலத் தோன் அருள்
மன்னுயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து,
இன் உயிர் வளர்க்கும் ஓர் எரி கொள் கூற்றமே
அன்னவள் யாவள் என்று அறையக் கேட்டியால்:
20-1
'இயக்கர்தம் குலத்துளான், உலகம் எங்கணும்
வியக்குறும் மொய்ம்பினான், எரியின் வெம்மையான்,
மயக்கு இல் சற்சரன், எனும் வலத்தினான், அருள்
துயக்கு இலன் சுகேது என்று உளன் ஒர் தூய்மையான்.
20-2
'அன்னவன் மகவு இலாது அயரும் சிந்தையான்,
மன் நெடுந் தாமரை மலரின் வைகுறும்
நல் நெடு முதல்வனை வழுத்தி, நல் தவம்
பல் நெடும் பகல் எலாம் பயின்ற பான்மையான்.
20-3
'முந்தினன் அரு மறைக் கிழவன், "முற்றும்
நின்
சிந்தனை என்?" என,"சிறுவர் இன்மையால்
நொந்தனென்; அருள்க" என, "நுணங்கு
கேள்வியாய்!
மைந்தர்கள் இலை; ஒரு மகள் உண்டாம்" என்றான்.
20-4
'"பூ மட மயிலினைப் பொருவும் பொற்பொடும்,
ஏமுறு மதமலை ஈர்-ஐஞ்ஞூறுடைத்
தாம் மிகு வலியொடும், தனயை தோன்றும்; நீ
போ" என, மலர் அயன் புகன்று போயினான்.
20-5
'ஆயவன் அருள்வழி, அலர்ந்த தாமரைச்
சேயவள் என வளர் செவ்வி கண்டு, "இவட்கு
ஆயவன் யார்கொல்?" என்று ஆய்ந்து, தன்
கிளை
நாயகன், சுந்தன் என்பவற்கு நல்கினான்.
20-6
'"காமனும் இரதியும் கலந்த காட்சி ஈது
ஆம்" என, இயக்கனும் அணங்கு அனாளும், வேறு
யாமமும் பகலும் ஓர் ஈறு இன்று என்னலாய்,
தாம் உறு பெருங் களிச் சலதி மூழ்கினார்.
20-7
'பற்பல நாள் செலீஇ, பதுமை போலிய
பொற்பினாள் வயிற்றிடை, புவனம் ஏங்கிட,
வெற்பு அன புயத்து மாரீசனும், விறல்
மல் பொரு சுவாகுவும், வந்து தோன்றினார்.
20-8
'மாயமும், வஞ்சமும், வரம்பும் இல் ஆற்றலும்,
தாயினும் பழகினார் தமக்கும் தேர்வு ஓணாது,
ஆயவர் வளர்வுழி, அவரை ஈன்ற அக்
காய் சினத்து இயக்கனும், களிப்பின் மேன்மையான்.
20-9
தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர,
மோதுறு கடல் எலாம் ஒரு கை மொண்டிடு
மாதவன் உறைவிடம் அதனின் வந்து, நீள்
பாதவம் அனைத்தையும் பறித்து வீசினான்.
20-10
'விழைவு அறு மா தவம் வெஃகினோர் விரும்பு
உழை, கலை, இரலையை உயிர் உண்டு, ஓங்கிய
வழை முதல் மரன் எலாம் மடிப்ப, மா தவன்
தழல் எழ விழித்தனன்; சாம்பல் ஆயினான்.
20-11
'மற்றவன் விளிந்தமை மைந்தர் தம்மொடும்
பொற்றொடி கேட்டு, வெங் கனலின் பொங்குறா,
'முற்றுற முடிக்குவென் முனியை' என்று எழா,
நற்றவன் உறைவிடம் அதனை நண்ணினாள். 20-12
'இடியொடு மடங்கலும் வளியும் ஏங்கிட,
கடி கெட அமரர்கள், கதிரும் உட்கிட,
தடியுடை முகில் குலம் சலிப்ப, அண்டமும்
வெடிபட, அதிர்ந்து, எதிர் விளித்து மண்டவே.
20-13
'தமிழ் எனும் அளப்ப அருஞ் சலதி தந்தவன்
உமிழ் கனல் விழி வழி ஒழுக, உங்கரித்து
"அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக!" என, உரைத்தனன், அசனி எஞ்சவே.
20-14
'வெருக்கொள, உலகையும் விண்ணுளோரையும்
முருக்கி, எவ் உயிரும் உண்டு, உழலும் மூர்க்கராம்
அரக்கர்கள் ஆயினர், அக் கணத்தினில்
உருக்கிய செம்பென உமிழ் கண் தீயினர்.
20-15
'ஆங்கு அவன், வெகுளியும், அறைந்த சாபமும்
தாங்கினர்; எதிர் செயும் தருக்கு இலாமையின்,
நீங்கினர்; சுமாலியை நேர்ந்து, "நின்கு
யாம்
ஓங்கிய புதல்வர்" என்று, உறவு கூர்ந்தனர்.
20-16
'அவனொடும் பாதலத்து அநேக நாள் செலீஇ,
தவன் உறு தசமுகன் தனக்கு மாதுலர்
இவர் என, புடைத்து அழித்து, உலகம் எங்கணும்,
பவனனின் திரிகுநர், பதகி மைந்தர்கள்.
20-17
'மிகும் திறல் மைந்தரை வேறு நீங்குறா,
தகும் தொழில் முனிவரன் சலத்தை உன்னியே,-
வகுந்துவின் வசுவரி வதிந்தது இவ் வனம்
புகுந்தனள்,-அழல் எனப் புழுங்கும் நெஞ்சினாள்.
20-18
'மன்னர் மன்னவன் காதல! மற்றும் ஒன்று
இன்னம் யான் உரைக்கின்றது யாது எனின்,
முன் ஓர் காலம் நிகழ்ந்த முறைமை ஈது'
என்ன ஓதலுற்றான் தவத்து ஈறு இலான். 39-1
'பிருகு என்னும் பெருந் தவன் தன் மனை
வரு கயல் கண் கியாதி, வல் ஆசுரர்க்கு
உருகு காதலுற, உறவாதலே
கருதி, ஆவி கவர்ந்தனன், நேமியான். 39-2
'"வானகத்தினில், மண்ணினில், மன்னுயிர்
போனகம் தனக்கு" என்று எணும் புந்திய
தானவன் குமுதிப் பெயராள்தனை
ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர்கோன்,
39-3
'ஆதலால், அரிக்கு, ஆகண்டலன் தனக்கு,
ஓது கீர்த்தி உண்டாயது அல்லால், இடை
ஏதம் என்பன எய்தியவோ? சொலாய்-
தாது அடர்ந்து தயங்கிய தாரினாய்!' 39-4
ஏக்கமோடும் இமையவர் எங்கணும்,
வாக்கின் முந்துற மாயை வளர்ப்பவள்,
மூக்கும் வார் செவியும் முறை போயிட,
தாக்கும் வள்ளற்கு இளவலும் தாக்கினான்.
48-1
விலக்கி நின்று, அவன் வெங் கணை விரைவினில்
விலக்கி,
கலக்கம் வானவர் தவிர்ந்திட, காலனும் கலங்கத்
துலக்கி, வையகத்து இடுக்கணும் முனிவர்தம் துயரும்
உலக்க, ஊழித் தீ ஒப்பது ஓர் கணை தொடுத்து எய்தான்.
48-2
8. வேள்விப் படலம்
விசுவாமித்திரர் இராமனுக்குப் படைக்கலம்
வழங்குதல்
விண்ணவர் போய பின்றை, விரிந்த பூமழையினாலே
தண்ணெனும் கானம் நீங்கி, தாங்க அருந் தவத்தின்
மிக்கோன்,
மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன்
வெண்ணெய்
அண்ணல்தன் சொல்லே அன்ன, படைக்கலம் அருளினானே.
1
ஆறிய அறிவன் கூறி அளித்தலும், அண்ணல்தன்பால்,
ஊறிய உவகையோடும், உம்பர்தம் படைகள் எல்லாம்,
தேறிய மனத்தான் செய்த நல்வினைப் பயன்கள் எல்லாம்
மாறிய பிறப்பில் தேடி வருவபோல், வந்த அன்றே.
2
இராமன் ஏவலுக்கு படைகள் அமைந்து நிற்றல்
'மேவினம்; பிரிதல் ஆற்றேம்; வீர! நீ விதியின்
எம்மை
ஏவின செய்து நிற்றும், இளையவன் போல' என்று
தேவர்தம் படைகள் செப்ப, 'செவ்விது' என்று அவனும்
நேர,
பூவைபோல் நிறத்தினாற்குப் புறத்தொழில் புரிந்த
அன்றே. 3
வழியில் எதிர்ப்பட்ட நதியைக் குறித்து இராமன் வினாவுதலும்,
முனிவனின் விடையும்
இனையன நிகழ்ந்த பின்னர், காவதம் இரண்டு சென்றார்;
அனையவர் கேட்க, ஆண்டு ஓர் அரவம் வந்து அணுகித்
தோன்ற,
'முனைவ! ஈது யாவது?' என்று, முன்னவன் வினவ,
பின்னர்,
வினை அற நோற்று நின்ற மேலவன் விளம்பலுற்றான்:
4
'எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள்' என்று,
அம் முனி புகல, கேளா, அதிசயம் மிகவும் தோன்ற,
செம்மலும் இளைய கோவும், சிறிது இடம் தீர்ந்த
பின்னர்,
'மைம் மலி பொழில் யாது?' என்ன, மா தவன் கூறலுற்றான்:
5
நதியை அடுத்த சோலையின் சிறப்பை இராமன் கேட்க, முனிவன்
எடுத்துரைத்தல்
'தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை'
என்று எண்ணும்
மங்கைமார் சிந்தை போலத் தூயது; மற்றும் கேளாய்:
எங்கள் நான்மறைக்கும், தேவர் அறிவிற்கும்,
பிறர்க்கும், எட்டாச்
செங் கண் மால் இருந்து, மேல்நாள் செய் தவம்
செய்தது அன்றே. 6
'"பாரின்பால், விசும்பின்பாலும், பற்று
அறப் படிப்பது அன்னான்
பேர்" என்ப; "அவன் செய் மாயப் பெரும்
பிணககு ஒருங்கு தேர்வார்
ஆர்?" என்பான்; அமல மூர்த்தி கருதியது
அறிதல் தேற்றாம்;
ஈர்-ஐம்பது ஊழி காலம் இருந்தனன் யோகத்து, இப்பால்.
7
முனிவன் உரைத்த மாவலி வரலாறு
'ஆனவன் இங்கு உறைகின்ற அந் நாள்வாய்
ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி என்பான்,
வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்; 8
'செய்தபின், வானவரும் செயல் ஆற்றா
நெய் தவழ் வேள்வியை முற்றிட நின்றான்;
ஐயம் இல் சிந்தையர் அந்தணர் தம்பால்,
வையமும் யாவும் வழங்க, வலித்தான்; 9
'ஆயது அறிந்தனர் வானவர், அந் நாள்;
மாயனை வந்து வணங்கி இரந்தார்;
"தீயவன் வெந் தொழில் தீர்" என நின்றார்;
நாயகனும், அது செய்ய நயந்தான். 10
'காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வால்-அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய்,
நீல நிறத்து நெடுந்தகை வந்து, ஓர்
ஆல் அமர் வித்தின் அருங் குறள் ஆனான். 11
'முப்புரிநூலினன், முஞ்சியன், விஞ்சை
கற்பது ஒர் நாவன், அனல் படு கையன்,
அற்புதன்,-அற்புதரே அறியும் தன்
சிற்பதம் ஒப்பது ஒர் மெய்க்கொடு-சென்றான்.
12
'அன்று அவன் வந்தது அறிந்து, உலகு எல்லாம்
வென்றவன், முந்தி வியந்து எதிர் கொண்டான்;
"நிந்தனின் அந்தணர் இல்லை; நிறைந்தோய்!
எந்தனின் உய்ந்தவர் யார் உளர்?" என்றான்.
13
'ஆண்தகை அவ் உரை கூற, அறிந்தோன்,
"வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி,
நீண்ட கையாய்! இனி, நின்னுழை வந்தோர்
மாண்டவர்; அல்லவர் மாண்பு இலர்" என்றான்.
14
'சிந்தை உவந்து எதிர், "என் செய்?"
என்றான்;
அந்தணன், "மூஅடி மண் அருள், உண்டேல்;
வெந் திறலாய்! இது வேண்டும்" எனா முன்,
"தந்தனென்" என்றனன்; வெள்ளி, தடுத்தான்:
15
'"கண்ட திறத்து இது கைதவம்; ஐய!
கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல்;
அண்டமும் முற்றும் அகண்டமும், மேல்நாள்,
உண்டவன் ஆம்; இது உணர்ந்துகொள்" என்றான்.
16
'"நினைக்கிலை; என் கை நிமிர்ந்திட வந்து,
தனக்கு இயலாவகை தாழ்வது, தாழ்வு இல்
கனக் கரியானது கைத்தலம் என்னின்,
எனக்கு இதன்மேல் நலம் யாது கொல்?" என்றான்.
17
'"துன்னினர் துன்னலர்" என்பது சொல்லார்,
முன்னிய நல் நெறி நூலவர்; 'முன்வந்து,
உன்னிய தானம் உயர்ந்தவர் கொள்க'
என்னின், இவன் துணை யாவர் உயர்ந்தார்? 18
'"வெள்ளியை ஆதல் விளம்பினை, மேலோர்
வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால்,
எள்ளுவ என் சில? இன் உயிரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால். 19
'"மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயாது
ஏந்திய கைகொடு இரந்தவர்;-எந்தாய்!-
வீந்தவர் என்பவர்; வீந்தவரேனும்,
ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே? 20
'"அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்;
கொடுப்பவர் முன்பு, 'கொடேல்' என நின்று,
தடுப்பவரே பகை; தம்மையும் அன்னார்
கெடுப்பவர்; அன்னது ஒர் கேடு இலை" என்றான்.
21
'"கட்டுரையின், தம கைத்து உள போழ்தே
இட்டு, இசைகொண்டு, அறன் எய்த முயன்றோர்
உள் தெறு வெம் பகை ஆவது உலோபம்;
'விட்டிடல்' என்று விலக்கினர் தாமே."
22
'முடிய இம் மொழி எலாம் மொழிந்து, மந்திரி,
"கொடியன்" என்று உரைத்த சொல் ஒன்றும்
கொண்டிலன்;
"அடி ஒரு மூன்றும், நீ, அளந்து கொள்க"
என,
நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான். 23
'கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்,
பயந்தவர்களும் இகழ் குறளன், பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள, விசும்பின் ஓங்கினான்
-
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே. 24
'நின்ற கால் மண் எலாம் நிரப்பி, அப்புறம்
சென்று பாவிற்றிலை, சிறிது பார் எனா;
ஒன்ற, வானகம் எலாம் ஒடுக்கி, உம்பரை
வென்ற கால் மீண்டது, வெளி பெறாமையே. 25
'உலகு எலாம் உள்ளடி அடக்கி, ஓர் அடிக்கு
அலகு இலாது, அவ் அடிக்கு, அன்பன் மெய்யதாம்,
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன்,-
சிலை குலாம் தோளினாய்!-சிறியன் சாலவே! 26
'"உரியது இந்திரற்கு இது" என்று,
உலகம் ஈந்து போய்,
விரி திரைப் பாற்றுடல் பள்ளி மேவினான்;
கரியவன், உலகு எலாம் கடந்த தாள் இணை
திருமகள் கரம் செக்கச் சிவந்து காட்டிற்றே!
27
திருமால் இருந்த இடமே வேள்விக்கு ஏற்ற இடம் என முனிவன்
கூறுதல்
'ஆதலால், அரு வினை அறுக்கும்; ஆரிய!
காதலால் கண்டவர் பிறவி காண்குறார்;
வேதநூல் முறைமையால் வேள்வி முற்றுவேற்கு,
ஈது அலாது இல்லை, வேறு இருக்கற்பாலதே. 28
இராம இலக்குவர் காவல் இருக்க, முனிவன் வேள்வி தொடங்குதல்
'ஈண்டு இருந்து இயற்றுவென் யாகம், யான்' எனா,
நீண்ட பூம் பழுவத்தை நெறியின் எய்தி, பின்
வேண்டுவ கொண்டு, தன் வேள்வி மேவினான்,
காண்தகு குமரரைக் காவல் ஏவியே. 29
எண்ணுதற்கு, ஆக்க, அரிது இரண்டு-மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை,
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்,
கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தனர். 30
இராமன் முனிவனிடம் தீய அரக்கரின் வருகைப் பற்றி வினாவல்
காத்தனர் திரிகின்ற காளை வீரரில்
மூத்தவன், முழுது உணர் முனியை முன்னி, 'நீ,
தீத் தொழில் இயற்றுவர் என்ற தீயவர்,
ஏத்த அருங் குணத்தினாய்! வருவது என்று?' என்றான்.
31
அது சமயம் அரக்கர் ஆரவாரம் செய்து வருதல்
வார்த்தை மாறு உரைத்திலன், முனிவன், மோனியாய்;
போர்த் தொழில் குமரனும், தொழுது போந்தபின்,
பார்த்தனன் விசும்பினை; -பருவ மேகம்போல்
ஆர்த்தனர், இடித்தனர், அசனி அஞ்சவே. 32
அரக்கர் சேனையின் திறன்
எய்தனர்; எறிந்தனர்; எரியும், நீருமாய்ப்
பெய்தனர்; பெரு வரை பிடுங்கி வீசினர்;
வைதனர்; தெழித்தனர்; மழுக் கொண்டு ஓச்சினர்;
செய்தனர், ஒன்று அல தீய மாயமே. 33
ஊன் நகு படைக்கலம் உருத்து வீசின,
கானகம் மறைத்தன, கால மாரி போல்;
மீன் நகு திரைக் கடல் விசும்பு போர்த்தென,
வானகம் மறைத்தன, வளைந்த சேனையே. 34
வில்லொடு மின்னு, வாள் மிடைந்து உலாவிட,
பல் இயம் கடிப்பினில் இடிக்கும் பல் படை,
'ஒல்' என உரறிய ஊழிப் பேர்ச்சியுள்,
வல்லை வந்து எழுந்தது ஓர் மழையும் போன்றவே.
35
அரக்கரை இலக்குவனுக்கு இராமன் காட்டுதல்
கவருடை எயிற்றினர்; கடித்த வாயினர்;
துவர் நிறப் பங்கியர்; சுழல் கண் தீயினர்;
'பவர் சடை அந்தணன் பணித்த தீயவர்
இவர்' என, இலக்குவற்கு இராமன் காட்டினான்.
36
உடனே அம்பு எய்து வீழ்த்துவதாக இலக்குவன் கூறுதல்
ஈண்ட அக் குமாரனும், கடைக் கண் தீ உக,
விண்தனை நோக்கி, தன் வில்லை நோக்கினான்;
'அண்டர் நாயக! இனிக் காண்டி, ஈண்டு அவர்
துண்டம் வீழ்வன' என, தொழுது சொல்லினான்.
37
வேள்விச் சாலையின்மேல் இராமன் சரக்கூடம் அமைத்தல்
'தூம வேல் அரக்கர்தம் நிணமும் சோரியும்
ஓம வெங் கனலிடை உகும்' என்று உன்னி, அத்
தாமரைக் கண்ணனும், சரங்களே கொடு,
கோ முனி இருக்கை, ஓர் கூடம் ஆக்கினான். 38
இராமன் போர் செய்யத் தொடங்குதல்
நஞ்சு அட எழுதலும் நடுங்கி, நாள்மதிச்
செஞ் சடைக் கடவுளை அடையும் தேவர்போல்,
வஞ்சனை அரக்கரை வெருவி, மா தவர்,
'அஞ்சனவண்ண! நின் அபயம் யாம்' என்றார். 39
தவித்தனன் கரதலம்; 'கலங்கலீர்' என,
செவித்தலம் நிறுத்தினன், சிலையின் தெய்வ நாண்;
புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன்;
குவித்தனன், அரக்கர்தம் சிரத்தின் குன்றமே.
40
இராமனின் அம்பு சுபாகுவைக்
கொன்று, மாரீசனைக் கடலில் சேர்த்தல்
திருமகள் நாயகன் தெய்வ வாளிதான்,
வெருவரு தாடகை பயந்த வீரர்கள்
இருவரில் ஒருவனைக் கடலில் இட்டது; அங்கு
ஒருவனை அந்தகபுரத்தின் உய்த்ததே. 41
இறவாது எஞ்சிய அரக்கர்கள்
அஞ்சி ஓடுதல்
துணர்த்த பூந் தொடையலான் பகழி தூவினான்;
கணத்திடை விசும்பினைக் கவித்துத் தூர்த்தலால்,
'பிணத்திடை நடந்து இவர் பிடிப்பர் ஈண்டு' எனா
உணர்த்தினர், ஒருவர்முன் ஒருவர் ஓடினார்.
42
பிற போர்க் கள நிகழ்ச்சிகள்
ஓடின அரக்கரை உருமின் வெங் கணை
கூடின; குறைத் தலை மிறைத்துக் கூத்து நின்று
ஆடின; அலகையும், ஐயன் கீர்த்தியைப்
பாடின; பரந்தன, பறவைப் பந்தரே. 43
தேவர்கள் இராமனை வாழ்த்துதல்
பந்தரைக் கிழித்தன, பரந்த பூ மழை;
அந்தர துந்துமி முகிலின் ஆர்த்தன;
இந்திரன் முதலிய அமரர் ஈண்டினார்;
சுந்தர வில்லியைத் தொழுது வாழ்த்தினார்.
44
புனித மா தவர் ஆசியின் பூ மழை பொழிந்தார்;
அனைய கானத்து மரங்களும் அலர் மழை சொரிந்த;
முனியும், அவ் வழி வேள்வியை முறைமையின் முற்றி,
இனிய சிந்தையன், இராமனுக்கு இனையன இசைத்தான்;
45
வேள்வியை இனிது முடித்த
முனிவன் இராமனைப் பாராட்டுதல்
'பாக்கியம் எனக்கு உளது என நினைவுறும் பான்மை
போக்கி, நிற்கு இது பொருள் என உணர்கிலென்
- புவனம்
ஆக்கி, மற்றவை அனைத்தையும் அணி வயிற்று அடக்கி,
காக்கும் நீ, ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே.'
46
'யான் இனி செய்யவேண்டிய பணி யாது?' என இராமன் முனிவனைக்
கேட்டல்
என்று கூறிய பின்னர், அவ் எழில் மலர்க் கானத்து,
அன்று, தான் உவந்து, அருந் தவ முனிவரோடு இருந்தான்;
குன்றுபோல் குணத்தான் எதிர், கோசலை குருசில்,
'இன்று யான் செயும் பணி என்கொல்? பணி!' என
இசைத்தான். 47
முனிவன் 'சனகன் வேள்வியைக் காணச் செல்வோம்' என்று
சொல்ல, மூவரும் மிதிலைக்குப் புறப்படுதல்
'அரிய யான் சொலின், ஐய! நிற்கு அரியது ஒன்று
இல்லை;
பெரிய காரியம் உள; அவை முடிப்பது பின்னர்;
விரியும் வார் புனல் மருதம் சூழ் மிதிலையர்
கோமகன்
புரியும் வேள்வியும், காண்டும் நாம்; எழுக!'
என்று, போனார். 48
மிகைப் பாடல்கள்
'மானச மடுவில் தோன்றி வருதலால், 'சரயு' என்றே
மேல் முறை அமரர் போற்றும் விழு நதி அதனினோடும்,
ஆன கோமதி வந்து எய்தும் அரவம் அது' என்ன, அப்பால்
போனபின், பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை
உற்றார். 4-1
சுரர் தொழுது இறைஞ்சற்கு ஒத்த தூ நதி யாவது?'
என்றே,
வரமுனிதன்னை, அண்ணல் வினவுற, மலருள் வைகும்
பிரமன் அன்று அளித்த வென்றிப் பெருந்தகைக்
குசன் என்று ஓதும்
அரசர்கோன் அளித்த மைந்தர் அரு மறை அனைய நால்வர்;
4-2
'குசன், குசநாபன், கோது இல் குணத்தின் ஆதூர்த்தன்,
கொற்றத்து
இசை கெழு வசு, என்று ஓதும் இவர் பெயர்; இவர்கள்
தம்முள்,
குசன் கவுசாம்பி, நாபன் குளிர் மகோதயம், ஆதூர்த்தன்
வசை இல் தன்மவனம், மற்றை வக் கிரிவிரசம், வாழ்ந்தார்.
4-3
'அவர்களில் குசநாபற்கே ஐ-இருபதின்மர் அம்சொல்
துவர் இதழ்த் தெரிவை நல்லார் தோன்றினர் வளரும்
நாளில்
இவர் பொழில்-தலைக்கண் ஆயத்து எய்துழி, வாயு
எய்தி,
கவர் மனத்தினனாய், அந்தக் கன்னியர் தம்மை நோக்கி,
4-4
'கொடித்தனி மகரம் கொண்டான் குனி சிலைச் சரத்தால்
நொந்தேன்;
வடித் தடங் கண்ணீர்! என்னை மணத்திர்' என்று
உரைப்ப, "எந்தை
அடித்தலத்து உரைத்து, நீரோடு அளித்திடின்,
அணைதும்" என்ன,
ஒடித்தனன் வெரிநை; வீழ்ந்தார், ஒளி வளை மகளிர்
எல்லாம். 4-5
'சமிரணன் அகன்றதன் பின், தையலார், தவழ்ந்து
சென்றே,
அமிர்து உகு குதலை மாழ்கி, அரசன் மாட்டு உரைப்ப,
அன்னான்,
நிமிர் குழல் மடவார்த்தேற்றி, நிறை தவன் சூளி
நல்கும்
திமிர் அறு பிரமதத்திற்கு அளித்தனன், திரு
அனாரை. 4-6
'அவன் மலர்க் கைகள் நீவ, கூன் நிமிர்ந்து,
அழகு வாய்த்தார்;
புவனம் முற்றுடைய கோவும், புதல்வர் இல்லாமை,
வேள்வி
தவர்களின் புரிதலோடும், தகவு உற, தழலின் நாப்பண்,
கவனவேகத் துரங்கக் காதி வந்து உதயம்செய்தான்.
4-7
'அன்னவன் தனக்கு, வேந்தன், அரசொடு, முடியும்
ஈந்து,
பொன்னகர் அடைந்த பின்னர், புகழ் மகோதயத்தில்
வாழும்
மன்னவன் காதிக்கு, யானும், கவுசிகை என்னும்
மாதும்,
முன்னர் வந்து உதிப்ப, அந்த முடியுடை வேந்தர்
வேந்தன். 4-8
'பிருகுவின் மதலை ஆய, பெருந் தகைப் பிதாவும்
ஒவ்வா,
இரிசிகன் என்பவற்கு மெல்லியலாளை ஈந்தான்;
அரு மறையவனும் சில் நாள் அறம் பொருள் இன்பம்
முற்றி,
விரி மலர்த் தவிசோன் தன்பால் விழுத் தவம் புரிந்து
மீண்டான். 4-9
காதலன் சேணின் நீங்க, கவுசிகை தரிக்கலாற்றாள்,
மீது உறப் படாலுற்றாள், விழு நதி வடிவம் ஆகி;
மா தவர்க்கு அரசு நோக்கி, "மா நிலத்து
உறுகண் நீக்கப்
போதுக, நதியாய்" என்னா, பூமகன் உலகு புக்கான்.
4-10
'எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின் முன்னம்,
தடுப்பது நினக்கு அழகிதோ, தகவு இல் வெள்ளி?
கொடுப்பது விலக்கு கொடியோய்! உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்!.
21-1
குறியவன் கையில் நீர் விழாமல், குண்டிகை
மறிபட, வாமனன் மலர்க் கைத் தர்ப்பையால்,
செறிவது நீக்கிட, சிதைந்து கண் உடைந்து
உறு துயர் வெள்ளியும் ஒதுங்கிப் போயினான்.
23-1
நீட்டிய வேலையில் நீரை மாற்றினான்;
நாட்டம் அது அகத்துளான், சிலம்பின் நாமத்தான்,
ஓட்டினன் தருப்பையை; உடை கண் நீர் விழ,
வாட்டம் இல் அந்தணன் மலர்க் கை நீட்டினான்.
23-2
9. அகலிகைப் படலம்
மூவரும் சோணை நதியை அடைய, சூரியன்
மறைதல்
அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின
நலம் பெய் பூண்முலை, நாகு இள வஞ்சியாம் மருங்குல்,
புலம்பும் மேகலைப் புது மலர், புனை அறல் கூந்தல்,
சிலம்பு சூழும் கால், சோணை ஆம் தெரிவையைச்
சேர்ந்தார். 1
நதிக்கு வந்து அவர் எய்தலும், அருணன் தன் நயனக்
கதிக்கு முந்துறு கலின மான் தேரொடும், கதிரோன்,
உதிக்கும் காலையில் தண்மை செய்வான், தனது உருவில்
கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான்போல், கடல் குளித்தான்.
2
மூவரும் இரவு சோலையில் தங்குதல்
கறங்கு தண் புனல், கடி நெடுந் தாளுடைக் கமலத்து
அறம் கொள் நாள்மலர்க் கோயில்கள் இதழ்க் கதவு
அடைப்ப,
பிறங்கு தாமரைவனம் விட்டு, பெடையொடு களி வண்டு
உறங்குகின்றது ஓர் நறு மலர்ச் சோலை புக்கு,
உறைந்தார். 3
மூவரும் கங்கை நதியைக் காணுதல்
காலன் மேனியின் கருகு இருள் கடிந்து, உலகு
அளிப்பான்
நீல ஆர்கலி, தேரொடு நிறை கதிர்க் கடவுள்,
மாலின் மா மணி உந்தியில் அயனொடு மலர்ந்த
மூல தாமரை முழு மலர் முளைத்தென, முளைத்தான்.
4
அங்கு நின்று எழுந்து, அயன் முதல் மூவரும்
அனையார்,
செங் கண் ஏற்றவன் செறி சடைப் பழுவத்தில் நிறை
தேன்
பொங்கு கொன்றை ஈர்த்து ஒழுகலால், பொன்னியைப்
பொருவும்
கங்கை என்னும் அக் கரை பொரு திரு நதி கண்டார்.
5
மூவரும் மிதிலை சேர்தல்
பள்ளி நீங்கிய, பங்கயப் பழன நல் நாரை,
வெள்ள வான் களை களைவுறும் கடைசியர் மிளிர்ந்த
கள்ள வாள் நெடுங் கண் நிழல், கயல் எனக் கருதா,
அள்ளி, நாணுறும், அகன் பணை மிதிலை நாடு அணைந்தார்.
6
மிதிலை நாட்டு வளம்
வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க,
அரும்பு நாள்மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப,
நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறு மலர் யாழின்,
கரும்பு, பாண் செய, தோகை நின்று ஆடுவ-சோலை.
7
பட்ட வாள் நுதல் மடந்தையர், பார்ப்பு எனும்
தூதால்,
எட்ட ஆதரித்து உழல்பவர் இதயங்கள் கொதிப்ப,
வட்ட நாள் மரை மலரின் மேல், வயலிடை மள்ளர்
கட்ட காவி அம் கண் கடை காட்டுவ-கழனி. 8
தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர,
கூவும் மென் குயில் குதலையர் குடைந்த தண் புனல்வாய்,
ஓவு இல் குங்குமச் சுவடு உற, ஒன்றோடு ஒன்று
ஊடி,
பூ உறங்கினும், புன் உறங்காதன - பொய்கை. 9
முறையினின் முது மேதியின் முலை வழி பாலும்,
துறையின் நின்று உயர் மாங்கனி தூங்கிய சாறும்,
அறையும் மென் கரும்பு ஆட்டிய அமுதமும், அழி
தேம்
நறையும் அல்லது, நளிர் புனல் பெருகலா-நதிகள்.
10
இழைக்கும் நுண் இடை இடைதர, முகடு உயர் கொங்கை,
மழைக் கண், மங்கையர் அரங்கினில், வயிரியர்
முழவம்
முழக்கும் இன் இசை வெருவிய மோட்டு இள மூரி
உழக்க, வாளைகள் பாளையில் குதிப்பன-ஓடை. 11
படை நெடுங் கண் வாள் உறை புக, படர் புனல் மூழ்கி,
கடைய முன் கடல் செழுந் திரு எழும்படி காட்டி,
மிடையும், வெள் வளை புள்ளொடும் ஒலிப்ப, மெல்லியலார்
குடைய, வண்டினம் கடி மலர் குடைவன-குளங்கள்.
12
அகலிகை கல்லாய்க் கிடந்த மேட்டைக் காணுதல்
இனைய நாட்டினில் இனிது சென்று, இஞ்சி சூழ்
மிதிலை
புனையும் நீள் கொடிப் புரிசையின் புறத்து வந்து
இறுத்தார்;
மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி
கனையும் மேட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடைக்
கண்டார். 13
கல்லின்மேல் இராமனது பாத
தூளி பட, அகலிகை பழைய வடிவம் பெற்று எழல்
கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்-துகள் கதுவ,-
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு, உருவம்
கொண்டு, மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப,-
பண்டை வண்ணமாய் நின்றனள்; மா முனி பணிப்பான்:
14
அகலிகையை வரலாறு
'மா இரு விசும்பின் கங்கை மண் மிசைக் கொணர்ந்தோன்
மைந்த!
மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள்,
தீவினை நயந்து செய்த தேவர்கோன் தனக்குச் செங்
கண்
ஆயிரம் அளித்தோன் பன்னி; அகலிகை ஆகும்' என்றான்.
15
பொன்னை ஏய் சடையான் கூறக் கேட்டலும், பூமி
கேள்வன்,
'என்னையே! என்னையே! இவ் உலகு இயல் இருந்த வண்ணம்!
முன்னை ஊழ் வினையினாலோ! நடு ஒன்று முடிந்தது
உண்டோ ?
அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக!'
என்றான். 16
அவ் உரை இராமன் கூற, அறிவனும், அவனை நோக்கி,
'செவ்வியோய்! கேட்டி: மேல்நாள், செறி சுடர்க்
குலிசத்து அண்ணல்
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி,
நவ்விபோல் விழியினாள்தன் வன முலை நணுகலுற்றான்;
17
'தையலாள் நயன வேலும், மன்மதன் சரமும், பாய,
உய்யலாம் உறுதி நாடி உழல்பவன், ஒரு நாள் உற்ற
மையலால் அறிவு நீங்கி, மா முனிக்கு அற்றம்
செய்து,
பொய் இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான்.
18
'புக்கு, அவளோடும், காமப் புது மண மதுவின்
தேறல்
ஒக்க உண்டு இருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்த
பின்னும்,
'தக்கது அன்று' என்ன ஓராள்; தாழ்ந்தனள் இருப்ப,
தாழா
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும், முடுகி வந்தான்.
19
'சரம் தரு தபம் அல்லால் தடுப்ப அருஞ் சாபம்
வல்ல
வரம் தரு முனிவன் எய்த வருதலும், வெருவி, மாயா,
நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள்
நின்றாள்;
புரந்தரன் நடுங்கி, ஆங்கு ஓர் பூசை ஆய்ப் போகலுற்றான்.
20
'தீ விழி சிந்த நோக்கி, செய்ததை உணர்ந்து,
செய்ய
தூயவன், அவனை, நின் கைச் சுடு சரம் அனைய சொல்லால்,
"ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு
உண்டாக" என்று
ஏயினன்; அவை எலாம் வந்து இயைந்தன், இமைப்பின்
முன்னம். 21
'எல்லை இல் நாணம் எய்தி, யாவர்க்கும் நகை வந்து
எய்தப்
புல்லிய பழியினோடும் புரந்தரன் போய பின்றை,
மெல்லியலாளை நோக்கி, "விலைமகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி" என்றான்; கருங்கல் ஆய்,
மருங்கு வீழ்வாள். 22
'"பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர்
கடனே; அன்பால்,
அழல்தருங் கடவுள் அன்னாய்! முடிவு இதற்கு அருளுக!"
என்ன,
"தழைத்து வண்டு இமிரும் தண் தார்த் தசரதராமன்
என்பான்
கழல்-துகள் கதுவ, இந்தக் கல் உருத் தவிர்தி"
என்றான். 23
'இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்: இனி, இந்த உலகுக்கு
எல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது
உண்டோ ?
மை வண்ணத்து அரக்கி போரில், மழை வண்ணத்து அண்ணலே!
உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்; கால் வண்ணம் இங்குக்
கண்டேன்.' 24
அகலிகை இராமன் பாதம் பணிந்து செல்லுதல்
தீது இலா உதவிசெய்த சேவடிக் கரிய செம்மல்,
கோது இலாக் குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில்
கொண்டு
'மா தவன் அருள் உண்டாக வழிபடு; படர் உறாதே,
போது நீ, அன்னை!' என்ன பொன் அடி வணங்கி போனாள்.
25
அகலிகையை கௌதமரிடம் சேர்த்த
பின் மூவரும் மிதிலையில் புறமதிலை அடைதல்
அருந்தவன் உறையுள்தன்னை அனையவர் அணுகலோடும்,
விருந்தினர்தம்மைக் காணா, மெய்ம் முனி, வியந்த
நெஞ்சன்,
பரிந்து எதிர் கொண்டு புக்கு, கடன் முறை பழுதுறாமல்
புரிந்தபின், காதி செம்மல் புனித மா தவனை நோக்கி,
26
'அஞ்சன வண்ணத்தாந்தன் அடித் துகள் கதுவாமுன்னம்,
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக!'
என்ன,
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும், கருத்துள்
கொண்டான். 27
குணங்களால் உயர்ந்த வள்ளல் கோதமன் கமலத் தாள்கள்
வணங்கினன், வலம் கொண்டு ஏத்தி, மாசு அறு கற்பின்
மிக்க
அணங்கினை அவன் கை ஈந்து, ஆண்டு அருந் தவனோடும்,
வாச
மணம் கிளர் சோலை நீங்கி, மணி மதில் கிடக்கை
கண்டார். 28
மிகைப் பாடல்கள்
'இனைய சோலை மற்று யாது?' என இராகவன் வினவ,
வினை எலாம் அற நோற்றவன் விளம்புவான்; 'மேல்நாள்,
தனையவர் ஆனவர்க்கு இரங்கியே, காசிபன் தனது
மனையுளாள் தவம் புரிந்தனள், இவண்' என வலித்தான்.
3-1
'அண்ட கோளகைக்கு அப்புறத்து, என்னை ஆளுடைய
கொண்டல் நீள் பதத்து எய்தி, ஓர் விஞ்சையர்
கோதை,
புண்டரீக மென் பதத்தியைப் புகழ்ந்தனள்; புகழ,
வண்டு அறா மது மாலிகை கொடுத்தனள் மகிழ்ந்து.
3-2
'அன்ன மாலையை யாழிடைப் பிணித்து, அயன் உலகம்,
கன்னி மீடலும், கசட்டுறு முனி எதிர் காணா,
"என்னை ஆளுடை நாயகிக்கு இசை எடுப்பவள்"
என்று,
அன்னள் தாள் இணை வணங்கி நின்று ஏத்தலும், அனையாள்.
3-3
'"உலகம் யாவையும் படைத்து, அளித்து, உண்டு,
உமிழ், ஒருவன்
இலகு மார்பகத்து இருந்து, உயிர் யாவையும் ஈன்ற
திலக வாணுதல் சென்னியில் சூடிய தெரியல்,
அலகு இல் மா முனி பெறுக" என் அளித்தனள்
அளியால், 3-4
'"தெய்வ நாயகி சென்னியின் சூடிய தெரியல்,
ஐய! யான் பெறப் புரிந்தது எத் தவம்?"
என ஆடி,
வெய்ய மா முனி சென்னியில் சூடியே, வினை போய்
உய்யும் ஆறு இது என்று உவந்து வந்து, உம்பர்
நாடு அடைந்தான். 3-5
'பெய்யும் மா முகில் வெள்ளிஅம் பிறங்கல் மீப்
பிறழும்
செய்ய தாமரை ஆயிரம் மலர்ந்து, செங் கதிரின்
மொய்ய சோதியை மிலைச்சிய முறைமை போன்று ஒளிரும்
மெய்யினோடு, அயிராவதக் களிற்றின் மேல் விலங்க,
3-6
'அரம்பை, மேனகை, திலோத்தமை, உருப்பசி, அனங்கன்
சரம் பெய் தூணியின் தளிர் அடி நூபுரம் தழைப்ப,
கரும்பையும் சுவை கைப்பித்த குதலையர், விளரி
நிரம்பு பாடலோடு ஆடினர், வீதிகள் நெருங்க,
3-7
'நீல மால் வரை தவழ்தரு கதிர் நிலாக் கற்றை
போலவே, இரு புடையினும், சாமரை புரள,
கோல மா மதி குறைவு அற நிறைந்து, ஒளி குலாவி,
மேல் உயர்ந்தென வெள்ளி அம் தனிக் குடை விளங்க,
3-8
'தழங்கு பேரியும், குறட்டொடு பாண்டிலும், சங்கும்,
வழங்கு கம்பலை மங்கல கீதத்தை மறைப்ப,
முழங்கு நான்மறை, மூரிநீர் முழக்கு என, உலகை
விழுங்க, மால் வரும் விழா அணி கண்டு உளம் வியந்தான்.
3-9
'தனை ஒவ்வாதவன் மகிழ்ச்சியால், வாசவன் தன்
கை
வனையும் மாலையும் நீட்டலும், தோட்டியால் வாங்கி,
துனை வலத்து அயிராவதத்து எருத்திடைத் தொடுத்தான்;
பனை செய் கையினால் பறித்து அடிப்படுத்தது,
அப் பகடு. 3-10
'"கண்ட மா முனி விழி வழி ஒழுகு வெங் கனலால்,
அண்ட கூடமும் சாம்பராய் ஒழியும்" என்று,
அழியா,
விண்டு நீங்கினர் விண்ணவர்; இரு சுடர் மீண்ட;
எண் திசாமுகம் இருண்டது; சுழன்றது எவ் உலகும்.
3-11
'புகை எழுந்தன, உயிர்த்தொறும்; எயில் பொடித்தவனின்
நகை எழுந்தன; நிவந்தன புருவம், நல் நுதலில்;
சிகை எழும் சுடர் விழியினன், அசனியும் திகைப்ப,
"மிகை எழுந்திடு சதமக! கேள்" என
வெகுண்டான். 3-12
'"பூத நாயகன், புவிமகள் நாயகன், பொரு
இல்
வேத நாயகன், மார்பகத்து இனிது வீற்றிருக்கும்
ஆதி நாயகி விருப்புறு தெரியல் கொண்டு அணைந்த
மாதராள்வயின் பெற்றனென், முயன்ற மா தவத்தால்.
3-13
'"இன்று நின் பெருஞ் செவ்வி கண்டு, உவகையின்
ஈந்த
மன்றல் அம் தொடை இகழ்ந்தனை; நினது மா நிதியும்
ஒன்று அலாத பல் வளங்களும் உவரி புக்கு ஒளிப்ப,
குன்றி, நீ துயர் உறுக" என உரைத்தனன்,
கொதித்தே. 3-14
'அரமடந்தையர், கற்பகம், நவ நிதி, அமிர்தம்,
சுரபி, வாம்பரி, மதமலை, முதலிய தொடக்கத்து
ஒரு பெரும் பொருள் இன்றியே உவரி புக்கு ஒளிப்ப
வெருவி ஓடின, கண்ணன் வாழ் வெண்ணெய் மேவாரின்.
3-15
'அந்த வேலையில், இந்திரன் சிந்தை நொந்து அழிந்து,
வந்து, வானவ முனிவனை வழிபட்டு வழுத்த,
"நந்தும் நின் பெருஞ் செல்வம் மால் அருளினால்,
நயக்க
முந்தும்" என்று சாபத்தினின் மோக்கமும்
மொழிந்தான். 3-16
'வெய்ய மா முனி வெகுளியால் விண்ணகம் முதலாம்
வையம் யாவையும் வறுமை நோய் நலிய, வானோரும்,
தையல் பாகனும், சதுமுகக் கடவுளும், கூடி,
செய்ய தாமரைத் திரு மறு மார்பனைச் சேர்ந்தார்.
3-17
'வெஞ் சொல் மா முனி வெகுளியால் விளைந்தமை விளம்பி,
கஞ்ச நாள் மலர்க் கிழவனும், கடவுளர் பிறரும்,
"தஞ்சம் இல்லை; நின் சரணமே சரண்"
எனச் செப்ப,
"அஞ்சல், அஞ்சல்!" என்று உரைத்தனன்,
உலகு எலாம் அளந்தோன். 3-18
'"மத்து மந்தரம்; வாசுகி கடை கயிறு; அடை
தூண்
மெத்து சந்திரன்; சுராசுரர் வேறு வேறு உள்ள
கொத்து இரண்டு பால் வலிப்பவர்; ஓடதி கொடுத்து,
கத்து வாரிதி மறுகுற, அமிழ்து எழக் கடைமின்;
3-19
'"யாமும் அவ் வயின் வருதும்; நீர் கதுமென
எழுந்து
போமின்" என்று அருள்புரிதலும், இறைஞ்சினர்
புகழ்ந்து,
"நாமம் இன்று" எனக் குனித்தனர்,
நல்குரவு ஒழிந்தது.
ஆம் எனும் பெருங் களி துளக்குறுதலால், அமரர்.
3-20
'மலை பிடுங்கினர்; வாசுகி பிணித்தனர்; மதியை
நிலை பெறும்படி நட்டனர்; ஓடதி நிரைத்தார்;
அலை பெறும்படி பயோததி கடைந்தனர்; அவனி
நிலை தளர்ந்திட, அனந்தனும், கீழுற நெளித்தான்.
3-21
'திறல் கொள் ஆமை ஆய், முதுகினில் மந்தரம் திரிய
விறல் கொள் ஆயிரம் தடக் கைகள் பரப்பி, மீ வலிப்ப,
மறன் நிலாம் முனி வெகுளியால் மறைந்தன வரவே,
அறன் இலா மனத்து அடைகிலா நெடுந் தகை அமைத்தான்.
3-22
'இறந்து நீங்கின யாவையும், எம்பிரான் அருளால்,
பிறந்த; அவ்வயின் சுராசுரர் தங்களில் பிணங்க,
சிறந்த மோகினி மடந்தையால், அவுணர்தம் செய்கை
துறந்து மாண்டனர்; ஆர் அமிர்து அமரர்கள் துய்த்தார்.
3-23
'வெருவும் ஆலமும் பிறையும் வெள் விடையவற்கு
அளித்து,
தருவும் வேறு உள தகைமையும் சதமகற்கு அருளி,
மருவு தொல் பெரு வளங்களும் வேறு உற வழங்கி,
திருவும் ஆரமும் அணிந்தனன், சீதர மூர்த்தி,
3-24
'அந்த வேலையில் திதி பெருந் துயர் உழந்து அழிவாள்,
வந்து காசிபன் மலரடி வணங்கி, "என் மைந்தர்
இந்திராதியர் புணர்ப்பினால் இறந்தனர்; எனக்கு
ஓர்
மைந்தன் நீ அருள், அவர் தமை மடித்தலுக்கு"
என்றாள். 3-25
'என்று கூறலும், "மகவு உனக்கு அளித்தனம்;
இனி, நீ,
சென்று பாரிடை, பருவம் ஓர் ஆயிரம் தீர,
நின்று, மா தவம் புரிதியேல், நினைவு முற்றுதி"
என்று
அன்று கூறிட, புரிந்தனள் அருந்தவம் அனையாள்.
3-26
'கேட்ட வாசவன், அன்னவட்கு அடிமையில் கிடைத்து,
வாட்டம் மா தவத்து உணர்ந்து, அவள் வயிற்று
உறு மகவை
வீட்டியே எழு கூறு செய்திடுதலும், விம்மி,
நாட்டம் நீர் தர, "மருந்து" எனும்
நாமமும் நவின்றான். 3-27
'ஆயது இவ் இடம்; அவ் இடம் அவிர் மதி அணிந்த
தூயவன் தனக்கு உமைவயின் தோன்றியே, தொல்லை
வாயுவும் புனல் கங்கையும் பொறுக்கலா வலத்த
சேய் வளர்ந்தருள் சரவணம் என்பதும் தெரிந்தான்.'
3-28
'இந்த மா நதிக்கு உற்று உள தகைமை யாவும்,
எந்தை! கூறுக' என்று இராகவன் வினவுற, 'எனை
ஆள்
மைந்த! நின் திரு மரபு உளான், அயோத்தி மா நகர்
வாழ்
விந்தை சேர் புயன், சகரன், இம் மேதினி புரந்தான்.
5-1
'விறல் கொள் வேந்தனுக்கு உரியவர் இருவரில்,
விதர்பை
பொறையின் நல்கிய அசமஞ்சற்கு அஞ்சுமான் புதல்வன்;
பறவை வேந்தனுக்கு இளைய மென் சுமதி முன் பயந்த
அறனின் மைந்தர்கள் அறுபதினாயிரர் வலத்தார்.
5-2
'திண் திறல் புனை சகரனும், தனையர் சேவகங்கள்
கண்டு, முற்றிய அய மகம் புரிதலும், கனன்று,
வண்டு துற்று தார் வாசவற்கு உணர்த்தினர், வானோர்;
ஒண் திறல் பரி கபிலனது இடையினில் ஒளித்தான்.
5-3
'வாவு வாசிபின் சென்றனன் அஞ்சுமான் மறுகி,
பூவில் ஒர் இடம் இன்றியே நாடினன் புகுந்து,
தேவர் கோமகன் கரந்தமை அறிந்திலன், திகைத்து,
மேவு தாதைதன் தாதைபால் உரைத்தனன், மீண்டு.
5-4
'கேட்ட வேந்தனும், மதலையர்க்கு அம்மொழி கிளத்த,
வாட்டம் மீக் கொள, சகரர்கள் வடவையின் மறுகி,
நாட்டம் வெங் கனல் பொழிதர, நானிலம் துருவி,
தோட்டு நுங்கினர் புவியினை, பாதலம் தோன்ற.
5-5
'நூறு யோசனை அகலமும் ஆழமும் நுடங்கக்
கூறு செய்தனர், என்பரால், வட குணதிசையில்;
ஏறு மா தவக் கபிலன்பின் இவுளி கண்டு, எரியின்
சீறி, வைதனர்; செருக்கினர், நெருக்கினர்; செறுத்தார்.
5-6
'மூளும் வெஞ் சினத்து அருந்தவன் முனிந்து,
எரி விழிப்ப,
பூளைசூடிதன் நகையினில் எயில் பொடிந்தனபோல்,
ஆளும் மைந்தர் ஆரு அயுதரும் சாம்பர் ஆய் அவிந்தார்;
வேள்வி கண்ட நல் வேந்தனுக்கு உரைத்தனர், வேயர்.
5-7
'உழைத்த வெந் துயர்க்கு ஈறு காண்கிலன்; உணர்வு
ஒழியா,
அழைத்து மைந்தன் தன் மைந்தனை, "அவர் கழிந்தனரேல்,
இழைத்த வேள்வி இன்று இழப்பதோ?" என, அவன்
எழுந்து,
தழைத்த மா தவக் கபிலன் வாழ் பாதலம் சார்ந்தான்.
5-8
'விண்டு நீங்கினர் உடல் உகு பிறங்கல் வெண்
நீறு
கண்டு, நுண்ணெனும் மனத்தினன், கபில மா முனிதன்
புண்டரீக மென் தாள் தொழுது எழுந்தனன் புகழ,
"கொண்டு போக, நின் இவுளி!" என்று,
உற்றதும் குறித்தான். 5-9
'பழுதிலாதவன் உரைத்த சொல் கேட்டலும், பரிவால்
தொழுது, வாம் பரி கொணர்ந்து, அவி சுரர்களுக்கு
ஈயா,
முழுதும் வேள்வியை முற்றுவித்து, அரசனும் முடிந்தான்
-
எழுது கீர்த்தியாய்!-மைந்தனுக்கு அரசியல் ஈந்து.
5-10
'சகரம் தொட்டலால், "சாகரம்" எனப்
பெயர் தழைப்ப,
மகர வாரிதி சிறந்தது; மகிதலம் முழுதும்
நிகர் இல் மைந்தனே புரந்தனன்; இவன் நெடு மரபில்,
பகிரதன் எனும் பார்த்திபன் பருதி ஒத்து உதித்தான்.
5-11
'உலகம் யாவையும் பொது அறத் திகிரியை உருட்டி,
இவரும் மன்னவன் இருந்துழி, இறந்தவர் சரிதம்,
அலகு இல் தொல் முனி ஆங்கவற்கு உரைத்திட, அரசன்
திலகம் மண் உற வணங்கி நின்று, ஒரு மொழி செப்பும்:
5-12
'"கொடிய மா முனி வெகுளியின் மடிந்த எம்
குரவர்
முடிய நீள் நிரயத்தினில் அழுந்திடு முறைமை
கடியுமாறு, எனக்கு அருந் தவம் அமைகுறு கருமம்,
அடிகள்! சாற்றுக" என்றலும், அந்தணன் அறைவான்:
5-13
'"வையம் ஆளுடை மன்னவர் மன்னவ! மடிந்தோர்
உய்ய, நீள் தவம் ஒழிவு அறு பகல் எலாம் ஒருங்கே,
செய்ய நாள் மலர்க் கிழவனை நோக்கி, நீ செய்தி;
நையல்!" என்று இனிது உரைத்தனன், நவை அறு
முனிவன், 5-14
'ஞாலம் யாவையும் சுமந்திரன் தன்வயின் நல்கி,
கோலும் மா தவத்து இமகிரி மருங்கினில் குறுகி,
காலம் ஓர் பதினாயிரம் அருந் தவம் கழிப்ப,
மூல நான்மறைக் கிழவனும் வந்து, இவை மொழிவான்:
5-15
'"நின் பெருந் தவம் வியந்தனம்; நினது
நீள் குரவர்,
முன்பு இறந்தனர், அருந் தவன் முனிவின்; ஆதலினால்,
மன் பெரும் புவிஅதனில், வான் நதி கடிது அணுகி,
என்பு தோயுமேல், இருங் கதி பெறுவர்" என்று
இசைத்தான். 5-16
'"மாக மா நதி புவியிடை நடக்கின், மற்று
அவள்தன்
வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு அன்றி வேறு அரிதால்;
தோகை பாகனை நோக்கி, நீ அருந்தவம் தொடங்கு"
என்று
ஏகினான், உலகு அனைத்தும் எவ் உயிர்களும் ஈன்றான்.
5-17
'மங்கை பாகனை நோக்கி, முன் மொழிந்தன வருடம்
தங்கு மா தவம் புரிதலும், தழல் நிறக் கடவுள்
அங்கு வந்து, "நின் கருத்தினை முடித்தும்"
என்று அகன்றான்;
கங்கையைத் தொழ, காலம் ஐயாயிரம் கழித்தான்.
5-18
'ஒரு மடக் கொடி ஆகி வந்து, "உனது மா தவம்
என்?
பொரு புனல் கொடி வரின், அவள் வேகம் ஆர் பொறுப்பார்?
அரன் உரைத்த சொல் வினோதம்; மற்று இன்னும் நீ
அறிந்து,
பெருகு நல் தவம் புரிக!" என, வர நதி பெயர்ந்தாள்.
5-19
'கரந்தை, மத்தமோடு, எருக்கு அலர், கூவிளை,
கடுக்கை,
நிரந்த பொற் சடை நின் மலக் கொழுந்தினை நினையா,
அரந்தை உற்றவன், இரண்டரை ஆயிரம் ஆண்டு
புரிந்து நல் தவம் பொலிதர, வரை உறை புனிதன்,
5-20
'எதிர்ந்து, "நின் நினைவு என்?"
என, இறைஞ்சி, "எம் பெரும!
அதிர்ந்து, கங்கை ஈது அறைந்தனள்" என்றலும்,
"அஞ்சேல்!
பிதிர்ந்திடா வகை காத்தும்" என்று ஏகிய
பின்றை,
முதிர்ந்த மா தவம் இரண்டரை ஆயிரம் முடித்தான்.
5-21
'பெருகும் நீரொடு, பூதியும், வாயுவும், பிறங்கு
சருகும், வெங் கதிர் ஒளியையும், துய்த்து,
மற்று எதையும்
பருகல் இன்றியே, முப்பதினாயிரம் பருவம்,
உருகு காதலின் மன்னவன் அருந் தவம் உழந்தான்.
5-22
'உந்தி அம்புயத்து உதித்தவன் உறைதரும் உலகும்
இந்திராதியர் உலகமும், நடுக்குற இரைத்து,
வந்து தோன்றினள் வர நதி; மலைமகள் கொழுநன்
சிந்திடாது, ஒரு சடையினில் கரந்தனன் சேர.
5-23
'புல் நுனித் தரு பனி என, வர நதி, புனிதன்
சென்னியில் சுரந்து ஒளித்தலும், வணங்கினன்,
திகைத்து,
மன்னன் நிற்றலும், "வருந்தல்; நம் சடையள்,
வான் நதி இன்று"
என்ன விட்டனன், ஒரு சிறிது; அவனி போந்து இழிந்தாள்.
5-24
'இழிந்த கங்கைமுன், மன்னவன் விரைவொடும் ஏக,
கழிந்த மன்னவர் கதி பெற முடுகிய கதியால்,
அழுந்தும் மா தவச் சன்னுவின் வேள்வியை அழிப்ப,
கொழுந்து விட்டு எரி வெகுளியன், குடங்கையில்
கொள்ளா, 5-25
'உண்டு உவந்தனன், மறை முனிக் கணங்கள் கண்டு
உவப்ப,
கண்ட வேந்தனும் வணங்கி, முன் நிகழ்ந்தன கழற,
"கொண்டு போக!" என, செவிவழிக் கொடுத்தனன்;
குதித்து,
விண்டு நீங்கினர் உடல் உகு பொடியில் மேவினளே.
5-26
'நிரையம் உற்று உழல் சகரர்கள் நெடுங் கதி செல்ல,
விரை மலர் பொழிந்து ஆர்த்தன, விண்ணவர் குழாங்கள்;
முரைசம் முற்றிய பல்லியம் முறை முறை முழங்க,
அரைசன், அப்பொழுது, அணி மதில் அயோத்தி மீண்டு
அடைந்தான். 5-27
'அண்ட கோளகைப் புறத்தது ஆய், அகிலம் அன்று
அளந்த
புண்டரீக மென் மலரடிப் பிறந்து, பூமகனார்
கொண்ட தீர்த்தம் ஆய், பகிரதன் தவத்தினால் கொணர,
மண்தலத்து வந்து அடைந்தது, இம் மா நதி, மைந்த!
5-28
'சகரர்தம் பொருட்டு அருந் தவம் பெரும் பகல்
தள்ளி,
பகிரதம் கொணர்ந்திடுதலால், "பகிரதி"
ஆகி,
மகிதலத்திடைச் சன்னுவின் செவி வழி வரலால்,
நிகர் இல், "சானவி" எனப் பெயர் படைத்தது,
இந் நீத்தம்'. 5-29
என்று கூறலும், வியப்பினோடு உவந்தனர், இறைஞ்சி,
சென்று தீர்ந்தனர் கங்கையை; விசாலை வாழ் சிகரக்
குன்றுபோல் புயத்து அரசன் வந்து, அடி இணை குறுக,
நின்று, நல் உரை விளம்பி, மற்று அவ் வயின்
நீங்கா, 5-30
மது மலைந்த் வெண் தரளமும், (வயிரமும்), மணியும்,
கதிர் வளம் செயும் பவளமும், கழுத்திடைக் காட்டி,
எதிர் மலைந்த பைங் கூந்தலை இன வண்டு (நணுக),
புது மணம் செயும் மடந்தையர் போன்றன-பூகம்.
7-1
அந்த இந்திரனைக் கண்ட அமரர்கள், பிரமன் முன்னா
வந்து, கோதமனை வேண்ட, மற்று அவை தவிர்த்து,
மாறாச்
சிந்தையின் முனிவு தீர்ந்து, சிறந்த ஆயிரம்
கண் ஆக்க,
தம் தமது உலகு புக்கார்; தையலும் கிடந்தாள்,
கல் ஆய். 23-1
'வண்ண வார் குழலினாட்கும் வானவர் தமக்கும்
ஆகேன்;
எண்ணி நான் செய்த குற்றம், முனிவ! நீ பொறுத்தி'
என்ன,
'பண்ணிய உறுப்பில் கோடல் பத்து நூறு அவையும்
போக,
அண்ணிய விண்ணில் ஆளிக்கு ஆயிர நயனம்' என்றான்.
23-2
10. மிதிலைக் காட்சிப் படலம்
'மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து,
செய்யவள் இருந்தாள்' என்று, செழு மணிக் கொடிகள்
என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடி நகர், கமலச் செங்
கண்
ஐயனை, 'ஒல்லை வா' என்று அழைப்பது போன்றது அம்மா!
1
நிரம்பிய மாடத்து உம்பர் நிரை மணிக் கொடிகள்
எல்லாம்,
'தரம் பிறர் இன்மை உன்னி, தருமமே தூது செல்ல,
வரம்பு இல் பேர் அழகினாளை, மணம் செய்வான் வருகின்றான்'
என்று,
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின், ஆடக் கண்டார்.
2
பகல் கதிர் மறைய, வானம் பாற்கடல் கடுப்ப, நீண்ட
துகில் கொடி, மிதிலை மாடத்து உம்பரில் துவன்றி
நின்ற,
முகில்-குலம் தடவும் தோறும் நனைவன, முகிலின்
சூழ்ந்த
அகில்-புகை கதுவும் தோறும் புலர்வன, ஆடக் கண்டார்.
3
மூவரும் மிதிலையினுள் புகுதல்
ஆதரித்து, அமுதில் கோல் தோய்த்து, 'அவயவம்
அமைக்கும் தன்மை
யாது?' எனத் திகைக்கும் அல்லால், மதனற்கும்
எழுத ஒண்ணாச்
சீதையைத் தருதலாலே, திருமகள் இருந்த செய்ய
போது எனப் பொலிந்து தோன்றும், பொன் மதில்,
மிதிலை புக்கார். 4
விழுமிய வீதிகளைக் கடந்து
செல்லுதல்
சொற்கலை முனிவன் உண்ட சுடர் மணிக் கடலும்,
துன்னி
அல் கடந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும்
போல,
வில் கலை நுதலினாரும், மைந்தரும், வெறுத்து
நீத்த
பொன் கலன் கிடந்த மாட நெடுந் தெருஅதனில் போனார்.
5
தாறு மாய் தறுகண் குன்றம் தட மத அருவி தாழ்ப்ப,
ஆறும் ஆய், கலின மா விலாழியால் அழிந்து, ஓர்
ஆறு ஆய்,
சேறும் ஆய், தேர்கள் ஓடத் துகளும் ஆய், ஒன்றோடு
ஒன்று
மாறு மாறு ஆகி, வாளா கிடக்கிலா மறுகில், சென்றார்.
6
தண்டுதல் இன்றி ஒன்றி, தலைத்தலைச் சிறந்த காதல்
உண்டபின், கலவிப் போரின் ஒசிந்த மென் மகளிரேபோல்,
பண் தரு கிளவியார்தம் புலவியில் பரிந்த கோதை,
வண்டொடு கிடந்து, தேன் சோர், மணி நெடுந் தெருவில்
சென்றார். 7
வீதிகளில் கண்ட காட்சிகள்
நெய் திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல்,
தைவரு மகர வீணை தண்ணுமை தழுவித் தூங்க,
கை வழி நயனம் செல்ல, கண் வழி மனமும் செல்ல,
ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார்.
8
பூசலின் எழுந்த வண்டு மருங்கினுக்கு இரங்கிப்
பொங்க,
மாசு உறு பிறவி போல வருவது போவது ஆகி,
காசு அறு பவளச் செங் காய் மரகதக் கமுகு பூண்ட
ஊசலில், மகளிர், மைந்தர் சிந்தையொடு உலவக்
கண்டார். 9
வரப்பு அறு மணியும், பொன்னும், ஆரமும், கவரி
வாலும்,
சுரத்திடை அகிலும், மஞ்ஞைத் தோகையும், தும்பிக்
கொம்பும்,
குரப்பு அணை நிரப்பும் மள்ளர் குவிப்புற, கரைகள்தோறும்
பரப்பிய பொன்னி அன்ன ஆவணம் பலவும் கண்டார்.
10
வள் உகிர்த் தளிர்க் கை நோவ மாடகம் பற்றி,
வார்ந்த
கள் என நரம்பு வீக்கி, கையொடு மனமும் கூட்டி,
வெள்ளிய முறுவல் தோன்ற, விருந்து என மகளிர்
ஈந்த
தெள் விளிப் பாணித் தீம் தேன் செவி மடுத்து,
இனிது சென்றார். 11
கொட்பு உறு கலினப் பாய் மா, குலால் மகன் முடுக்கி
விட்ட
மட் கலத் திகிரி போல, வாளியின் வருவ, மேலோர்
நட்பினின் இடையறாவாய், ஞானிகள் உணர்வின் ஒன்றாய்,
கட்புலத்து இனைய என்று தெரிவு இல, திரியக்
கண்டார். 12
தயிர் உறு மத்தின் காம சரம் பட, தலைப்பட்டு
ஊடும்
உயிர் உறு காதலாரின், ஒன்றை ஒன்று ஒருவகில்லா,
செயிர் உறு மனத்த ஆகி, தீத் திரள் செங் கண்
சிந்த,
வயிர வான் மருப்பு யானை மலை என மலைவ கண்டார்.
13
வாளரம் பொருத வேலும், மன்மதன் சிலையும், வண்டின்
கேளொடு கிடந்த நீலச் சுருளும், செங் கிடையும்,
கொண்டு,
நீள் இருங் களங்கம் நீக்கி, நிரை மணி மாட நெற்றிச்
சாளரம்தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார்.
14
பளிக்கு வள்ளத்து வாக்கும் பசு நறுந் தேறல்
மாந்தி,
வெளிப்படு நகைய ஆகி, வெறியன மிழற்றுகின்ற,
ஒளிப்பினும், ஒளிக்க ஒட்டா ஊடலை உணர்த்துமா
போல்,
களிப்பினை உணர்த்தும் செவ்விக் கமலங்கள் பலவும்
கண்டார். 15
மெய் வரு போகம் ஒக்க உடன் உண்டு விலையும் கொள்ளும்
பை அரவு அல்குலார் தம் உள்ளமும், பளிங்கும்,
போல,
மை அரி நெடுங் கண் நோக்கம் படுதலும் கருகி,
வந்து
கை புகின் சிவந்து, காட்டும் கந்துகம் பலவும்
கண்டார். 16
கடகமும், குழையும், பூணும், ஆரமும், கலிங்க
நுண் நூல்
வடகமும், மகர யாழும் வட்டினி கொடுத்து, வாசத்
தொடையல் அம் கோதை சோர, பளிக்கு நாய் சிவப்பத்
தொட்டு;
படை நெடுங் கண்ணார் ஆடும் பண்ணைகள் பலவும்
கண்டார். 17
பங்கயம், குவளை, ஆம்பல், படர் கொடி வள்ளை,
நீலம்,
செங் கிடை, தரங்கம், கெண்டை, சினை வரால், இனைய
தேம்ப;
தங்கள் வேறு உவமை இல்லா அவயவம் தழுவி, சாலும்
மங்கையர் விரும்பி ஆடும் வாவிகள் பலவும் கண்டார்.
18
இயங்கு உறு புலன்கள் அங்கும் இங்கும் கொண்டு
ஏக ஏகி,
மயங்குபு திரிந்து நின்று மறுகுறும் உணர்வு
இது என்ன,
புயங்களில் கலவைச் சாந்தும், புணர் முலைச்
சுவடும் நீங்கா,
பயம் கெழு குமரர் வட்டு-ஆட்டு ஆடு இடம் பலவும்
கண்டார். 19
வெஞ் சினம் உருவிற்று என்னும் மேனியர், வேண்டிற்று
ஈயும்
நெஞ்சினர், ஈசன் கண்ணில் நெருப்பு உறா அனங்கன்
அன்னார்,
செஞ் சிலைக் கரத்தர், மாதர் புலவிகள் திருத்திச்
சேந்த
குஞ்சியர், சூழ நின்ற மைந்தர் தம் குழாங்கள்
கண்டார். 20
பாகு ஒக்கும் சொல் பைங் கிளியோடும் பல பேசி,
மாகத்து உம்பர் மங்கையர் நாண மலர் கொய்யும்
தோகைக் கொம்பின் அன்னவர்க்கு அன்னம் நடை தோற்றுப்
போகக் கண்டு, வண்டுஇனம் ஆர்க்கும் பொழில் கண்டார்.
21
அரண்மனையைச் சூழ்ந்துள்ள
அகழியை அடைந்தனர்
உம்பர்க்கு ஏயும் மாளிகை ஒளி நிழல் பாய,
இம்பர்த் தோன்றும் நாகர்தம் நாட்டின் எழில்
காட்டி,
பம்பிப் பொங்கும் கங்கையின் ஆழ்ந்த, படை மன்னன்
அம் பொன் கோயில் பொன் மதில் சுற்றும், அகழ்
கண்டார். 22
கன்னிமாடத்தில் நின்ற சீதையின்
பேர் எழில்
பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செஞ் சொற் கவி
இன்பம்-
கன்னிம் மாடத்து உம்பரின் மாடே, களி பேடோடு
அன்னம் ஆடும் முன் துறை கண்டு, அங்கு, அயல்
நின்றாள். 23
செப்பும்காலை, செங் கமலத்தோன் முதல் யாரும்,
எப் பெண்பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும்,
அப் பெண் தானே ஆயின போது, இங்கு, அயல் வேறு
ஓர்
ஒப்பு எங்கே கொண்டு, எவ் வகை நாடி, உரை செய்வேம்?
24
உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சிக் கரம் வைக்கும்
கமையாள் மேனி கண்டவர், காட்சிக் கரை காணார்,
'இமையா நாட்டம் பெற்றிலம்' என்றார்; 'இரு கண்ணால்
அமையாது' என்றார்-அந்தர வானத்தவர் எல்லாம்.
25
வென்று அம் மானை, தார் அயில் வேலும் கொலை வாளும்
பின்ற, மானப் பேர் கயல் அஞ்ச, பிறழ் கண்ணாள்,
குன்றம் ஆட, கோவின் அளிக்கும் கடல் அன்றி,
அன்று அம் மாடத்து உம்பர் அளிக்கும் அமுது
ஒத்தாள். 26
'பெருந்தேன் இன் சொல் பெண் இவள் ஒப்பாள் ஒரு
பெண்ணைத்
தரும், தான்' என்றால், நான்முகன் இன்னும் தரலாமே?-
அருந்தா அந்தத் தேவர் இரந்தால், அமிழ்து என்னும்
மருந்தே அல்லாது, என் இனி நல்கும் மணி ஆழி?
27
அனையாள் மேனி கண்டபின், அண்டத்து அரசு ஆளும்
வினையோர் மேவும் மேனகை ஆதி மிளிர் வேற் கண்
இனையோர், உள்ளத்து இன்னலினோர்; தம் முகம் என்னும்
பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல்
அன்றே? 28
மலர்மேல் நின்று இம் மங்கை இவ் வையத்திடை வைக,
பல காலும் தம் மெய் நனி வாடும்படி நோற்றார்
அலகு ஓவு இல்லா அந்தணரோ? நல் அறமேயோ?
உலகோ? வானோ? உம்பர்கொலோ? ஈது உணரேமால்! 29
தன் நேர் இல்லா மங்கையர், 'செங்கைத் தளிர்
மானே!
அன்னே! தேனே! ஆர் அமிழ்தே!' என்று அடி போற்றி,
முன்னே, முன்னே, மொய்ம் மலர் தூவி, முறை சார,
பொன்னே சூழும் பூவின் ஒதுங்கிப் பொலிகின்றாள்.
30
பொன் சேர் மென் கால் கிண்கிணி, ஆரம், புனை
ஆரம்,
கொன் சேர் அல்குல் மேகலை, தாங்கும் கொடி அன்னார்
தன் சேர் கோலத்து இன் எழில் காண, சத கோடி
மின் சேவிக்க மின் அரசு என்னும்படி நின்றாள்.
31
'கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவையெல்லாம்
வெல்லும் வெல்லும்' என்ன மதர்க்கும் விழி கொண்டாள்;
சொல்லும் தன்மைத்து அன்று அது; குன்றும், சுவரும்,
திண்
கல்லும், புல்லும், கண்டு உருக, பெண் கனி நின்றாள்.
32
வெங் களி விழிக்கு ஒரு விழவும் ஆய், அவர்
கண்களின் காணவே களிப்பு நல்கலால்,
மங்கையர்க்கு இனியது ஓர் மருந்தும் ஆயவள்,
எங்கள் நாயகற்கு, இனி, யாவது ஆம்கொலோ? 33
இழைகளும் குழைகளும் இன்ன, முன்னமே,
மழை பொரு கண் இணை மடந்தைமாரொடும்
பழகிய எனினும், இப் பாவை தோன்றலால்,
அழகு எனும் அவையும் ஓர் அழகு பெற்றதே! 34
இராமனும் சீதையும் ஒருவரை
ஒருவர் கண்டு, காதல் கொள்ளுதல்
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்.
35
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன;
வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே.
36
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்,
இருவரும் மாறிப் புக்கு, இதயம் எய்தினார்.
37
மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும்,
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்
-
கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால், பேசல் வேண்டுமோ? 38
இராமன் முனிவருடன் போக அவன்
நினைவால் சீதை ஓவியப்பாவைபோல் நிற்றல்
அந்தம் இல் நோக்கு இமை அணைகிலாமையால்,
பைந்தொடி, ஓவியப் பாவை போன்றனள்;
சிந்தையும், நிறையும், மெய்ந் நலனும், பின்
செல,
மைந்தனும், முனியொடு மறையப் போயினான். 39
சீதையின் காதல் நோய்
பிறை எனும் நுதலவள் பெண்மை என் படும்?-
நறை கமழ் அலங்கலான் நயன கோசரம்
மறைதலம், மனம் எனும் மத்த யானையின்
நிறை எனும் அங்குசம் நிமிர்ந்து போயதே! 40
மால் உற வருதலும், மனமும் மெய்யும், தன்
நூல் உறு மருங்குல்போல், நுடங்குவாள்; நெடுங்
கால் உறு கண் வழிப் புகுந்த காதல் நோய்,
பால் உறு பிரை என, பரந்தது எங்குமே. 41
நோம்; உரும் நோய் நிலை நுவலகிற்றிலள்;
ஊமரின், மனத்திடை உன்னி, விம்முவாள்;
காமனும், ஒரு சரம் கருத்தின் எய்தனன் -
வேம் எரிஅதனிடை விறகு இட்டென்னவே. 42
நிழல் இடு குண்டலம் அதனின், நெய் இடா,
அழல் இடா, மிளிர்ந்திடும் அயில் கொள் கண்ணினாள்,
சுழலிடு கூந்தலும் துகிலும் சோர்தர,
தழல் இடு வல்லியே போல, சாம்பினான். 43
தழங்கிய கலைகளும், நிறையும், சங்கமும்,
மழுங்கிய உள்ளமும், அறிவும், மாமையும்,
இழந்தவள்-இமையவர் கடைய, யாவையும்,
வழங்கிய கடல் என-வறியள் ஆயினாள். 44
வருந்திச் சோர்ந்த சீதையைத்
தோழியர் மலர்ப்படுக்கையில் சேர்த்தல்
கலம் குழைந்து உக, நெடு நானும் கண் அற,
நலம் குழைதர, நகில்முகத்தின் ஏவுண்டு,
மலங்கு உழை என, உயிர் வருந்திச் சோர்தர,
பொலங் குழை மயிலைக் கொண்டு, அரிதின் போயினார்.
45
காதொடும் குழை பொரு கயற் கண் நங்கை தன்
பாதமும் கரங்களும் அனைய பல்லவம்
தாதொடும் குழையொடும் அடுத்த, தண் பனிச்
சீத நுண் துளி, மலர் அமளிச் சேர்த்தினார்.
46
காதல் நோயால் துயருற்ற சீதையின்
நிலை
தாள் அறா நறு மலர் அமளி நண்ணினாள்-
பூளை வீ புரை பனிப் புயற்குப் தேம்பிய
தாள தாமரைமலர் ததைந்த பொய்கையும்,
வாள் அரா நுங்கிய மதியும், போலவே. 47
மலை முகட்டு இடத்து உகு மழைக்கண் ஆலிபோல்,
முலை முகட்டு உதிர்ந்தன, நெடுங் கண் முத்துஇனம்;
சிலை நுதற்கடை உறை செறிந்த வேர்வு, தன்
உலை முகப் புகை நிமிர் உயிர்ப்பின் மாய்ந்ததே.
48
கம்பம் இல் கொடு மனக் காம வேடன் கை
அம்பொடு சோர்வது ஓர் மயிலும் அன்னவள்,
வெம்புறு மனத்து அனல் வெதுப்ப, மென் மலர்க்
கொம்பு என, அமளியில் குழைந்து சாய்ந்தனள்.
49
சொரிந்தன நறு மலர் சுருக் கொண்டு ஏறின;
பொரிந்தன கலவைகள், பொரியின் சிந்தின;
எரிந்த வெங் கனல் சுட, இழையில் கோத்த நூல்
பரிந்தன; கரிந்தன, பல்லவங்களே. 50
நோய் முதல் அறியாது, தாதியர்
முதலியோர் தவித்தல்
தாதியர், செவிலியர், தாயர், தவ்வையர்,
மா துயர் உழந்து உழந்து அழுங்கி மாழ்கின்ர்;
'யாதுகொல் இது?' என, எண்ணல் தேற்றலர்;
போதுடன் அயினி நீர் சுழற்றிப் போற்றினர்.
51
காதல் நோயால் துயருற்ற சீதையின்
தோற்றம்
அருகில் நின்று அசைகின்ற ஆலவட்டக் கால்
எரியினை மிகுத்திட, இழையும், மாலையும்,
கரிகுவ, தீகுவ, கனல்வ, காட்டலால்,
உருகு பொற் பாவையும் ஒத்துத் தோன்றினாள்.
52
'அல்லினை வகுத்தது ஓர் அலங்கற் காடு' எனும்;
'வல் எழு; அல்லவேல், மரகதப் பெருங்
கல்' எனும், 'இரு புயம்'; 'கமலம் கண்' எனும்;
'வில்லொடும் இழிந்தது ஓர் மேகம்' என்னுமால்.
53
'நெருக்கி உள் புகுந்து, அரு நிறையும் பெண்மையும்
உருக்கி, என் உயிரொடு உண்டு போனவன்
பொருப்பு உறழ் தோள் புணர் புண்ணியத்தது
கருப்பு வில் அன்று; அவன் காமன் அல்லனே!
54
'உரைசெயின், தேவர்தம் உலகு உளான் அலன்-
விரை செறி தாமரை இமைக்கும் மெய்ம்மையால்;
வரி சிலைத் தடக் கையன், மார்பின் நூலினன்,
அரசிளங் குமரனே ஆகல்வேண்டுமால். 55
'பெண் வழி நலனொடும், பிறந்த நாணொடும்,
எண்வழி உணர்வும், நான் எங்கும் காண்கிலேன்
-
மண் வழி நடந்து, அடி வருந்தப் போனவன்,
கண் வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம்? 56
இராமனை நினைத்து சீதை உருகுதல்
'இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,
சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,
சுந்தர மணி வரை தோளுமே, அல;
முந்தி, என் உயிரை, அம் முறுவல் உண்டதே!
57
படர்ந்து ஒளி பரந்து உயிர் பருகும் ஆகமும்,
தடந் தரு தாமரைத் தாளுமே, அல;
கடம் தரு மா மதக் களி நல் யானைபோல்,
நடந்தது, கிடந்தது, என் உள்ளம் நண்ணியே.
58
'பிறந்துடை நலம் நிறை பிணித்த எந்திரம்,
கறங்குபு திரியும் என் கன்னி மா மதில்
எறிந்த அக் குமரனை, இன்னும், கண்ணிற் கண்டு,
அறிந்து, உயிர் இழக்கவும் ஆகுமேகொலாம்?'
59
என்று இவை இனையன விளம்பும் ஏல்வையின்,
'நின்றனன், இவண்' எனும்; 'நீங்கினான்' எனும்;
கன்றிய மனத்து உறு காம வேட்கையால்,
ஒன்று அல, பல நினைந்து, உருகும் காலையே.
60
அந்திமாலையின் தோற்றமும்
அன்ன மென் நடையவட்கு அமைந்த காமத் தீ,
தன்னையும் சுடுவது தரிக்கிலான் என,
நல் நெடுங் கரங்களை நடுக்கி, ஓடிப் போய்,-
முன்னை வெங் கதிரவன் - கடலில் மூழ்கினான்.
61
விரி மலர்த் தென்றல் ஆம் வீசு பாசமும்,
எரி நிறச் செக்கரும், இருளும், காட்டலால்,
அரியவட்கு அனல் தரும் அந்திமாலையாம்
கரு நிறச் செம் மயிர்க் காலன் தோன்றினான்.
62
மீது அறை பறவை ஆம் பறையும், கீழ் விளி
ஓத மென் சிலம்பொடும், உதிரச் செக்கரும்,
பாதக இருள் செய் கஞ்சுகமும், பற்றலால்,
சாதகர் என்னவும் தகைத்து - அம் மாலையே. 63
மாலைப் பொழுதில் சீதையின்
மன நிலையும் புலம்பலும்
கயங்கள் என்னும் கனல் தோய்ந்து, கடி நாள் மலரின்
விடம் பூசி,
இயங்கு தென்றல் மன்மதவேள் எய்த புண்ணினிடை
நுழைய,
உயங்கும் உணர்வும், நல் நலமும், உருகிச் சோர்வாள்
உயிர் உண்ண
வயங்கு மாலை வான் நோக்கி, 'இதுவோ கூற்றின்
வடிவு?' என்றாள். 64
'கடலோ? மழையோ? முழு நீலக் கல்லோ? காயா நறும்
போதோ?
படர் பூங் குவளை நாள் மலரோ? நீலோற்பலமோ? பானலோ?-
இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ?' என்று
தளர்வாள்முன்,
மடல் சேர் தாரான் நிறம் போலும் அந்தி மாலை
வந்ததுவே! 65
'மை வான் நிறத்து, மீன் எயிற்று, வாடை உயிர்ப்பின்,
வளர் செக்கர்ப்
பை வாய் அந்திப் பட அரவே! என்னை வளைத்துப்
பகைத்தியால்?
எய்வான் ஒருவன் கை ஓயான்; உயிரும் ஒன்றே; இனி
இல்லை;
உய்வான் உற, இப் பழி பூண, உன்னோடு எனக்குப்
பகை உண்டோ ? 66
ஆலம் உலகில் பரந்ததுவோ? ஆழி கிளர்ந்ததோ? அவர்தம்
நீல நிறத்தை எல்லோரும் நினைக்க, அதுவாய் நிரம்பியதோ?
காலன் நிறத்தை அஞ்சனத்தில் கலந்து குழைத்து,
காயத்தின்
மேலும், நிலத்தும், மெழுகியதோ?-விளைக்கும்
இருலாய் விளைந்ததுவே! 67
வெளி நின்றவரோ போய் மறைந்தார்; விலக்க, ஒருவர்தமைக்
காணேன்;
"எளியள், பெண்" என்று இரங்காதே,
எல்லி யாமத்து இருளூடே,
ஒளி அம்பு எய்யும் மன்மதனார், உனக்கு இம் மாயம்
உரைத்தாரோ?
அளியென் செய்த தீவினையே! அந்தி ஆகி வந்தாயோ?
68
நெய் விளக்கு அகற்றி, மணி
விளக்கு அமைத்துத் தோழியர் உபசரித்தல்
ஆண்டு, அங்கு, அனையாள், இனைய நினைந்து அழுங்கும்
ஏல்வை, அகல் வானம்
தீண்ட நிமிர்ந்த பெருங் கோயில், சீத மணியின்
வேதிகைவாய்,
'நீண்ட சோதி நெய் விளக்கம் வெய்ய' என்று, அங்கு,
அவை நீக்கி,
தூண்டல் செய்யா மணி விளக்கின் சுடரால், இரவைப்
பகல் செய்தார். 69
திங்களின் தோற்றம்
பெருந் திண் நெடு மால் வரை நிறுவி, பிணித்த
பாம்பின் மணித் தாம்பின்
விரிந்த திவலை பொதிந்த மணி விசும்பின் மீனின்
மேல் விளங்க,
இருந்த அமரர் கலக்கிய நாள், அமுதம் நிறைந்த
பொற்கலசம்
இருந்தது இடை வந்து எழுந்தது என எழுந்தது
- ஆழி வெண் திங்கள். 70
வண்டு ஆய், அயன் நான்மறை பாட, மலர்ந்தது ஒரு
தாமரைப் போது,
பண்டு ஆலிலையின்மிசைக் கிடந்து, பாரும் நீரும்,
பசித்தான்போல்,
உண்டான் உந்திக் கடல் பூத்தது; ஓதக் கடலும்,
தான் வேறு ஓர்
வெண் தாமரையின் மலர் பூத்தது ஒத்தது - ஆழி
வெண் திங்கள். 71
புள்ளிக் குறி இட்டென ஒள் மீன் பூத்த வானம்
பொலி கங்குல்
நள்ளில், சிறந்த இருட் பிழம்பை நக்கி நிமிரும்
நிலாக் கற்றை, -
கிள்ளைக் கிளவிக்கு என்னாம்கொல்?-கீழ்பால்
திசையின்மிசை வைத்த
வெள்ளிக் கும்பத்து இளங் கமுகின் பாளை போன்று
விரிந்துளதால், 72
வண்ண மாலை கைபரப்பி, உலகை வளைந்த இருள் எல்லாம்
உண்ண எண்ணி, தண் மதியத்து உதயத்து எழுந்த நிலாக்
கற்றை-
விண்ணும் மண்ணும் திசை அனைத்தும் விழுங்கிக்
கொண்ட, விரி நல் நீர்ப்
பண்ணை வெண்ணெய்ச் சடையன் தன் புகழ்போல்-எங்கும்
பரந்துளதால், 73
நீத்தம் அதனில் முளைத்து எழுந்த நெடுவெண் திங்கள்
எனும் தச்சன்,
மீ, தன் கரங்கள் அவை பரப்பி, மிகு வெண் நிலவு
ஆம் வெண் சுதையால்,
'காத்த கண்ணன் மணி உந்திக் கமல நாளத்திடைப்
பண்டு
பூத்த அண்டம் பழையது' என்று, புதுக்குவானும்
போன்றுளதால். 74
தாமரை மலர் குவிய, ஆம்பல்
அலர்தல்
விரை செய் கமலப் பெரும் போது, விரும்பிப் புகுந்த
திருவினொடும்
குரை செய் வண்டின் குழாம் இரிய, கூம்பிச் சாம்பிக்
குவிந்துளதால்;
உரை செய் திகிரிதனை உருட்டி, ஒரு கோல் ஓச்சி,
உலகு ஆண்ட
அரைசன் ஒதுங்க, தலை எடுத்த குறும்பு போன்றது,
அரக்கு ஆம்பல். 75
சீதை நிலவை பழித்துரைத்தல்
'நீங்கா மாயையவர் தமக்கு நிறமே தோற்றுப் புறமே
போய்,
ஏங்காக் கிடக்கும் எறி கடற்கும், எனக்கும்,
கொடியை ஆனாயே-
ஓங்கா நின்ற இருளாய் வந்து, உலகை விழுங்கி,
மேன்மேலும்
வீங்கா நின்ற கர் நெருப்பினிடையே எழுந்த வெண்
நெருப்பே! 76
'கொடியை அல்லை; நீ யாரையும் கொல்கிலாய்;
வடு இல் இன் அமுதத்தொடும், வந்தனை,
பிடியின் மென் நடைப் பெண்ணொடு; என்றால், எனைச்
சுடுதியோ?-கடல் தோன்றிய திங்களே! 77
காதல் நோயால் சீதை பட்ட
பாடு
மீது மொய்த்து எழு வெண் நிலவின் கதிர்
மோது மத்திகை மென் முலைமேல் பட,
ஓதிமப் பெடை வெங் கனல் உற்றென,
போது மொய்த்த அமளிப் புரண்டாள் அரோ! 78
நீக்கம் இன்றி நிமிர்ந்த நிலாக் கதிர்
தாக்க, வெந்து தளர்ந்து சரிந்தனள்;
சேக்கை ஆகி மலர்ந்த செந்தாமரைப்
பூக்கள் பட்டது அப் பூவையும் பட்டனள். 79
வாச மென் கலவைக் களி வாரி, மேல்
பூசப் பூசப் புலர்ந்து புழுங்கினள்;
வீச வீச வெதும்பினள், மென் முலை;-
ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம்கொலோ? 80
மலர்ப் படுக்கை கரிய, சேடியர்
மேலும் மலர் கொண்டு வந்து குவித்தல்
தாயரின் பரி சேடியர், தாது உகு
வீ, அரித் தளிர், மெல் அணை, மேனியில்
காய் எரிக் கரியக் கரிய, கொணர்ந்து,
ஆயிரத்தின் இரட்டி அடுக்கினார். 81
கன்னி நல் நகரில், கமழ் சேக்கையுள்,
அன்னம், இன்னணம் ஆயினள்; ஆயவள்,
மின்னின் மின்னிய, மேனி கண்டான் எனச்
சொன்ன அண்ணலுக்கு உற்றது சொல்லுவாம். 82
மிகைப் பாடல்கள்
இன்ன பல் வளங்கள் எல்லாம் இனிதுற நோக்கி, யார்க்கும்
முன்னவன் ஆய தேவும், முனிவனும், இளைய கோவும்,
பொன்னகர் இறையும் மற்றைப் பூதலத்து அரசும்
ஒவ்வா
மன்னவன் சனகன் கோயில் மணி மதில் புறத்தைச்
சேர்ந்தார். 20-1
நங்கையர் விழிக்கு நல் விழவும் ஆய், அவர்
இங்கிதத்தொடு தொழுது இறைஞ்சும் தேவும் ஆய்,
அங்கு அவர்க்கு அமுதும் ஆய், வந்த சானகி
எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்கொலோ? 32-1
தீங்கு செய் அரக்கர் தம் வருக்கம் தீயவும்,
ஓங்கிய தவங்களும், உலகும், வேதமும்
தாங்கி மேல் வளரவும், தழைத்த சானகி
ஆங்கு அவன் வடிவினை அகத்தில் உன்னுவாள்.
52-1
அப்புறத்து அலை கடல் அலர்ந்த தாமரை
ஒப்புற இந்து என்று உதித்த ஒள் அழல்
வெப்புறு வெங் கதிர் பரப்ப, விண் எலாம்
கொப்புளங் கொண்டென, உடுக்கள் கூர்ந்தவே.
76-1
11. கைக்கிளைப் படலம்
சனகன் எதிர்கொள்ள மூவரும் சென்று,
ஓர் மாளிகையில் தங்குதல்
ஏகி, மன்னனைக் கண்டு, எதிர் கொண்டு அவன்
ஓகையோடும் இனிது கொண்டு உய்த்திட,
போக பூமியில் பொன்னகர் அன்னது ஓர்
மாக மாடத்து, அனைவரும் வைகினார். 1
சதானந்த முனிவர் அவ்விடம்
வந்து முகமன் உரைத்தல்
வைகும் அவ் வழி, மா தவம் யாவும் ஓர்
செய்கை கொண்டு நடந்தென, தீது அறு
மொய் கொள் வீரன் முளரி அம் தாளினால்
மெய் கொள் மங்கை அருள் முனி மேவினான். 2
வந்து எதிர்ந்த முனிவனை வள்ளலும்
சிந்தை ஆர வணங்கலும், சென்று எதிர்,
அந்தம் இல் குணத்தான் நெடிது ஆசிகள்
தந்து, கோசிகன் தன் மருங்கு எய்தினான். 3
கோதமன் தரு கோ முனி கோசிக
மாதவன் தனை மா முகம் நோக்கி, 'இப்
போது நீ இவண் போத, இப் பூதலம்
ஏது செய்த தவம்?' என்று இயம்பினான். 4
இடர் முடித்தான் இவ் இளவல்
என விசுவாமித்திரன் மொழிதல்
பூந் தண் சேக்கைப் புனிதனையே பொரு
ஏய்ந்த கேண்மைச் சதானந்தன் என்று உரை
வாய்ந்த மா தவன் மா முகம் நோக்கி, நூல்
தோய்ந்த சிந்தைக் கௌசிகன் சொல்லுவான்: 5
'வடித்த மாதவ! கேட்டி இவ் வள்ளல்தான்
இடித்த வெங் குரல் தாடகை யாக்கையும்,
அடுத்து என் வேள்வியும், நின் அன்னை சாபமும்,
முடித்து, என் நெஞ்சத்து இடர் முடித்தான்'
என்றான். 6
'உன் அருள் இருக்கும் போது எய்த முடியாததும் உளதோ?'
என சதானந்த முனிவர் வினவுதல்
என்று கோசிகன் கூறிட, ஈறு இலா
வன் தபோதனன், 'மா தவ! நின் அருள்
இன்றுதான் உளதேல், அரிது யாது, இந்த
வென்றி வீரர்க்கு?' எனவும் விளம்பி, மேல்,
7
சதானந்தர் இராம இலக்குவருக்கு
விசுவாமித்திரர் வரலாறு உரைத்தல்
எள் இல் பூவையும், இந்திர நீலமும்,
அள்ளல் வேலையும், அம்புத சாலமும்,
விள்ளும் வீயுடைப் பானலும், மேவும் மெய்
வள்ளல்தன்னை மதிமுகம் நோக்கியே, 8
'நறு மலர்த் தொடை நாயக! நான் உனக்கு
அறிவுறுத்துவென், கேள்: இவ் அருந் தவன்
இறை எனப் புவிக்கு ஈறு இல் பல் ஆண்டு எலாம்
முறையினின் புரந்தே அருள் முற்றினான். 9
'அரசின் வைகி அறனின் அமைந்துழி,
விரசு கானிடைச் சென்றனன், வேட்டைமேல்;
உரைசெய் மா தவத்து ஓங்கல் வசிட்டனைப்
பரசுவான் அவன்பால் அணைந்தான் அரோ. 10
அருந்ததி கணவன் வேந்தற்கு அருங் கடன் முறையின்
ஆற்றி,
"இருந்தருள் தருதி" என்ன, இருந்துழி,
"இனிது நிற்கு
விருந்து இனிது அமைப்பென்" என்னா, சுரபியை
விளித்து, "நீயே
சுரந்தருள் அமிர்தம்" என்ன, அருள்முறை
சுரந்தது அன்றே. 11
'"அறு சுவைத்து ஆய உண்டி, அரச! நின் அனிகத்தோடும்
பெறுக!" என அளித்து, வேந்தோடு யாவரும்
துய்த்த பின்றை,
நறு மலர்த் தாரும் வாசக் கலவையும் நல்கலோடும்,
உறு துயர் தணிந்து, மன்னன் உய்த்து உணர்ந்து
உரைக்கலுற்றான்: 12
'மாதவ! எழுந்திலாய், நீ; வயப்புடைப் படைகட்கு
எல்லாம்
கோது அறும் அமுதம் இக்கோ உதவிய கொள்கைதன்னால்,
தீது அறு குணத்தால் மிக்க செழு மறை தெரிந்த
நூலோர்,
'மே தகு பொருள்கள் யாவும் வேந்தருக்கு' என்கைதன்னால்,
13
'"நிற்கு இது தருவது அன்றால், நீடு அருஞ்
சுரபிதன்னை
எற்கு அருள்" என்றலோடும், இயம்பலன் யாதும்,
பின்னர்,
"வற்கலை உடையென் யானோ வழங்கலென்; வருவது
ஆகின்,
கொற் கொள் வேல் உழவ! நீயே கொண்டு அகல்க!"
என்று கூற, 14
'"பணித்தது புரிவென்" என்னா, பார்த்திபன்
எழுந்து, பொங்கி,
பிணித்தனன் சுரபிதன்னை; பெயர்வுழி, பிணியை
வீட்டி,
"மணித் தடந் தோளினாற்குக் கொடுத்தியோ,
மறைகள் யாவும்
கணித்த எம் பெரும்?" என்ன, கலை மறை முனிவன்
சொல்வான்: 15
'"கொடுத்திலென், யானே; மற்று இக் குடைகெழு
வேந்தந்தானே
பிடித்து அகல்வுற்றது" என்ன, பெருஞ் சினம்
கதுவும் நெஞ்சோடு,
"இடித்து எழு முரச வேந்தன் சேனையை யானே
இன்று
முடிக்குவென், காண்டி" என்னா, மொய்ம்
மயிர் சிலிர்த்தது அன்றே. 16
'பப்பரர் யவனர் சீனர் சோனகர் முதல பல்லோர்
கைப்படை அதனினோடும் கபிலைமாட்டு உதித்து, வேந்தன்
துப்புடைச் சேனை யாவும் தொலைவுறத் துணித்தலோடும்,
வெப்புடைக் கொடிய மன்னன் தனயர்கள் வெகுண்டு
மிக்கார். 17
'"சுரபிதன் வலி இது அன்றால்; சுருதி நூல்
உணர வல்ல
வர முனி வஞ்சம்" என்னா, "மற்று அவன்
சிரத்தை இன்னே
அரிகுதும்" என்னப் பொங்கி, அடர்த்தனர்;
அடர, அன்னான்
எரி எழ விழித்தலோடும், இறந்தனர் குமரர் எல்லாம்.
18
'ஐ-இருபதின்மர் மைந்தர் அவிந்தமை அரசன் காணா,
நெய் பொழி கனலின் பொங்கி, நெடுங் கொடித் தேர்
கடாவி,
கை தொடர் கணையினோடும் கார்முகம் வளைய வாங்கி,
எய்தனன்; முனியும், தன கைத் தண்டினை,
"எதிர்க" என்றான். 19
'கடவுளர் படைகள் ஈறாக் கற்றன படைகள் யாவும்
விட விட, முனிவன் தண்டம் விழுங்கி மேல் விளங்கல்
காணா,
வடவரைவில்லி தன்னை வணங்கினன் வழுத்தலோடும்,
அடல் உறு படை ஒன்று ஈயா, அன்னவன் அகன்றான்
அன்றே. 20
'விட்டனன் படையை வேந்தன்; விண்ணுளோர்,
"உலகை எல்லாம்
சுட்டனன்" என்ன, அஞ்சித் துளங்கினர்;
முனியும் தோன்றி,
கிட்டிய படையை உண்டு கிளர்ந்தனன், கிளரும்
மேனி
முட்ட வெம் பொறிகள் சிந்த; பொரு படை முரணது
இற்றே. 21
'கண்டனன் அரசன்; காணா, "கலை மறை முனிவர்க்கு
அல்லால்,
திண் திறல் வலியும் தேசும் உள எனல் சீரிது
அன்றால்;
மண்டலம் முழுதும் காக்கும் மொய்ம்பு ஒரு வலன்
அன்று" என்னா,
ஒண் தவம் புரிய எண்ணி, உம்பர்கோன் திசையை உற்றான்.
22
'மாண்ட மா தவத்தோன் செய்த வலனையே மனத்தின்
எண்ணி,
பூண்ட மா தவத்தன் ஆகி அரசர்கோன் பொலியும் நீர்மை
காண்டலும், அமரர் வேந்தன் துணுக்குறு கருத்தினோடும்
தூண்டினன், அரம்பைமாருள் திலோத்தமை எனும் சொல்
மானை. 23
'அன்னவள் மேனி காணா, அனங்க வேள் சரங்கள் பாய,
தன் உணர்வு அழிந்து காதற் சலதியின் அழுந்தி,
வேந்தன்,
பன்ன அரும் பகல் தீர்வுற்று, பரிணிதர் தெரித்த
நூலின்
நல் நயம் உணர்ந்தோன் ஆகி, நஞ்சு எனக் கனன்று,
நக்கான். 24
'"விண் முழுது ஆளி செய்த வினை" என
வெகுண்டு, "நீ போய்,
மண்மகள் ஆதி" என்று, மடவரல் தன்னை ஏவி,
கண் மலர் சிவப்ப, உள்ளம் கறுப்புறக் கடிதின்
ஏகி,
எண்மரின் வலியன் ஆய யமன் திசை தன்னை உற்றான்.
25
'தென் திசை அதனை நண்ணிச் செய் தவம் செய்யும்
செவ்வி,
வன் திறல் அயோத்தி வாழும் மன்னவன் திரிசங்கு
என்பான்
தன் துணைக் குருவை நண்ணி, "தனுவொடும்
துறக்கம் எய்த
இன்று எனக்கு அருளுக!" என்ன, "யான்
அறிந்திலென் அது" என்றான். 26
"நினக்கு ஒலாது ஆகின், ஐய! நீள் நிலத்து
யாவரேனும்
மனக்கு இனியாரை நாடி, வகுப்பல் யான், வேள்வி"
என்ன,
"சினக் கொடுந் திறலோய்! முன்னர்த் தேசிகற்
பிழைத்து, வேறு ஓர்
நினக்கு இதன் நாடி நின்றாய்; நீசன் ஆய் விடுதி"
என்றான். 27
'மலர் உளோன் மைந்தன்-மைந்த!- வழங்கிய சாபம்
தன்னால்
அலரியோன் தானும் நாணும் வடிவு இழந்து, அரசர்
கோமான்,
புலரி அம் கமலம்போலும் பொலிவு ஒரீஇ, வதனம்,
பூவில்
பலரும் ஆங்கு இகழ்தற்கு ஒத்த படிவம் வந்துற்றது
அன்றே. 28
'காசொடு முடியும் பூணும் கரியதாம் கனகம் போன்றும்,
தூசொடும் அணியும் முந்நூல் தோல் தரும் தோற்றம்
போன்றும்,
மாசொடு கருகி, மேனி வனப்பு அழிந்திட, ஊர் வந்தான்;
"சீசி" என்று யாரும் எள்ள, திகைப்பொடு
பழுவம் சேர்ந்தான். 29
'கானிடைச் சிறிது வைகல் கழித்து, ஒர் நாள்,
கௌசிகப் பேர்க்
கோன் இனிது உறையும் சோலை குறுகினன்; குறுக,
அன்னான்,
"ஈனன் நீ யாவன்? என்னை நேர்ந்தது. இவ்
இடையில்?" என்ன,
மேல் நிகழ் பொருள்கள் எல்லாம் விளம்பினன்,
வணங்கி, வேந்தன். 30
'"இற்றதோ?" என நக்கு, அன்னான்,
"யான் இரு வேள்வி முற்றி,
மற்று உலகு அளிப்பென்" என்னா, மா தவர்தம்மைக்
கூவ,
சுற்றுறு முனிவர் யாரும் தொக்கனர்; வசிட்டன்
மைந்தர்,
"சுற்றிலம், அரசன் வேள்வி கனல் துறை புலையற்கு
ஈவான்." 31
'என்று உரைத்து, "யாங்கள் ஒல்லோம்"
என்றனர்; என்னப் பொங்கி,
"புன் தொழில் கிராதர் ஆகிப் போக"
எனப் புகறலோடும்,
அன்று அவர் எயினர் ஆகி, அடவிகள் தோறும் சென்றார்;
நின்று வேள்வியையும் முற்றி, 'நிராசனர் வருக!'
என்றான். 32
'"அரைசன் இப் புலையற்கு என்னே அனல்துறை
முற்றி, எம்மை
விரைசுக வல்லை என்பான்! விழுமிது!" என்று
இகழ்ந்து நக்கார்,
புரைசை மா களிற்று வேந்தை, "போக நீ துறக்கம்;
யானே
உரைசெய்தேன், தவத்தின்" என்ன, ஓங்கினன்
விமானத்து உம்பர். 33
'ஆங்கு அவன் துறக்கம் எய்த, அமரர்கள் வெகுண்டு,
"நீசன்
ஈங்கு வந்திடுவது என்னே? இரு நிலத்து இழிக!"
என்ன,
தாங்கல் இல்லாது வீழ்வான், "தாபதா! சரணம்"
என்ன,
ஓங்கினன், "நில் நில்!" என்ன உரைத்து,
உரும் ஒக்க நக்கான். 34
'"பேணலாது இகழ்ந்த விண்ணோர் பெரும் பதம்
முதலா மற்றைச்
சேண் முழுது அமைப்பல்" என்னா, "செழுங்
கதிர், கோள், நாள், திங்கள்,
மாண் ஒளி கெடாது, தெற்கு வடக்கவாய் வருக!"
என்று,
"தாணுவோடு ஊர்வ எல்லாம் சமைக்குவென்"
என்னும் வேலை. 35
'நறைத் தரு உடைய கோனும், நான்முகக் கடவுள்
தானும்,
கறைத் தரு களனும், மற்றைக் கடவுளர் பிறரும்,
தொக்கு,
"பொறுத்தருள், முனிவ! நின்னைப் புகல்
புகுந்தவனைப் போற்றும்
அறத் திறன் நன்று; தாரா கணத்தொடும் அமைக, அன்னான்.
36
'"அரச மா தவன் நீ ஆதி; ஐந்து நாள் தென்பால்
வந்து, உன்
புரை விளங்கிடுக!" என்னா, கடவுளர் போய
பின்னர்,
நிரை தவன் விரைவின் ஏகி, நெடுங் கடற்கு இறைவன்
வைகும்
உரவு இடம் அதனை நண்ணி, உறு தவம் உஞற்றும் காலை,
37
'குதை வரி சிலை வாள் தானைக் கோமகன் அம்பரீடன்,
சுதை தரு மொழியன், வையத்து உயிர்க்கு உயிர்
ஆய தோன்றல்,
வதை புரி புருட மேதம் வகுப்ப ஓர் மைந்தற் கொள்வான்,
சிதைவு இலன், கனகம் தேர் கொண்டு, அடவிகள் துருவிச்
சென்றான். 38
'நல் தவ ரிசிகன் வைகும் நனை வரும் பழுவம் நண்ணி,
கொற்றவன் வினவலோடும், இசைந்தனர்; குமரர்தம்முள்
பெற்றவள், "இளவல் எற்கே" என்றனள்;
பிதா, "முன்" என்றான்;
மற்றைய மைந்தன் நக்கு, மன்னவன் தன்னை நோக்கி,
39
'"கொடுத்தருள் வெறுக்கை வேண்டிற்று, ஒற்கம்
ஆம் விழுமம் குன்ற,
எடுத்து எனை வளர்த்த தாதைக்கு" என்று
அவன் - தொழுது வேந்தன்
தடுப்ப அருந் தேரின் ஏறி, தடை இலாப் படர் தலோடும்,
சுடர்க் கதிர்க் கடவுள் வானத்து உச்சி அம்
சூழல் புக்கான். 40
'அவ் வயின் இழிந்து வேந்தன் அருங் கடன் முறையின்
ஆற்ற,
செவ்விய குரிசில்தானும் சென்றனன், நியமம் செய்வான்;
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை ஆண்டுக் காணா,
கவ்வையினோடும் பாத கமலம் அது உச்சி சேர்ந்தான்.
41
'விறப்பொடு வணக்கம் செய்த விடலையை இனிது நோக்கி,
சிறப்புடை முனிவன், "என்னே தெருமரல்?
செப்புக!" என்ன,
"அறப் பொருள் உணர்ந்தோய்! என் தன் அன்னையும்
அத்தன் தானும்,
உறப் பொருள் கொண்டு, வேந்தற்கு உதவினர்"
என்றான், உற்றோன். 42
'மைத்துனனோடு முன்னோள் வழங்கிய முறைமை கேளா,
"தத்துறல் ஒழி நீ; யானே தடுப்பென், நின்
உயிரை" என்னா,
புத்திரர் தம்மை நோக்கி, "போக வேந்தோடும்"
என்ன,
அத் தகு முனிவன் கூற, அவர் மறுத்து அகறல் காணா,
43
'எழும் கதிரவனும் நாணச் சிவந்தனன் இரு கண்;
நெஞ்சம்
புழுங்கினன்; வடவை தீய மயிர்ப்புறம் பொறியின்
துள்ள,
அழுங்க இல் சிந்தையீர்! நீர் அடவிகள்தோறும்
சென்றே,
ஒழுங்கு அறு புளிஞர் ஆகி, உறு துயர் உறுக!'
என்றான். 44
'மா முனி வெகுளி தன்னால் மடிகலா மைந்தர் நால்வர்
தாம் உறு சவரர் ஆகச் சபித்து, எதிர்,
"சலித்த சிந்தை
ஏமுறல் ஒழிக! இன்னே பெறுக!" என இரண்டு
விஞ்சை
கோ மருகனுக்கு நல்கி, பின்னரும் குணிக்கலுற்றான்:
45
'"அரசனோடு ஏகி யூபத்து அணைக்குபு இம்
மறையை ஓதின்,
விரசுவர் விண்ணுளோரும் விரிஞ்சனும் விடைவலோனும்;
உரை செறி வேள்வி முற்றும்; உனது உயிர்க்கு
ஈறு உண்டாகா;
பிரச மென் தாரோய்!" என்ன, பழிச்சொடும்
பெயர்ந்து போனான். 46
'மறை முனி உரைத்த வண்ணம் மகத்து உறை மைந்தன்
ஆய,
சிறை உறு கலுழன், அன்னம், சே, முதல் பிறவும்
ஊரும்
இறைவர் தொக்கு அமரர் சூழ, இளவல் தன் உயிரும்,
வேந்தன்
முறை தரு மகமும், காத்தார்; வட திசை முனியும்
சென்றான். 47
'வடா திசை முனியும் நண்ணி, மலர்க் கரம் நாசி
வைத்து, ஆங்கு,
இடாவு பிங்கலையால் நைய, இதயத்தூடு எழுத்து
ஒன்று எண்ணி,
விடாது பல் பருவம் நிற்ப, மூல மா முகடு விண்டு,
தடாது இருள் படலை மூட, சலித்தது எத் தலமும்,
தாவி. 48
'எயில் உரித்தவன் யானை உரித்த நாள்,
பயிலுறுத்து உரி போர்த்த நல் பண்பு என,
புயல் விரித்து எழுந்தாலென, பூதலம்
குயிலுறுத்தி, கொழும் புகை விம்மவே. 49
'தமம் திரண்டு உலகு யாவையும் தாவுற,
நிமிர்ந்த வெங் கதிர்க் கற்றையும் நீங்குற,
கமந்த மாதிரக் காவலர் கண்ணொடும்,
சுமந்த நாகமும், கண் சும்புளித்தவே. 50
'திரிவ நிற்ப செக தலத்து யாவையும்,
வெருவலுற்றன; வெங் கதிர் மீண்டன;
கருவி உற்ற ககனம் எலாம் புகை
உருவி உற்றிட, உம்பர் துளங்கினார். 51
'புண்டரீகனும், புள் திருப் பாகனும்,
குண்டை ஊர்தி, குலிசியும், மற்று உள
அண்டர் தாமும், வந்து, அவ் வயின் எய்தி, வேறு,
எண் தபோதனன் தன்னை எதிர்ந்தனர். 52
'பாதி மா மதி சூடியும், பைந் துழாய்ச்
சோதியோனும், அத் தூய் மலராளியும்,
"வேத பாரகர், வேறு இலர், நீ அலால்;
மா தபோதன!" என்ன வழங்கினர். 53
'அன்ன வாசகம் கேட்டு உணர் அந்தணன்,
சென்னி தாழ்ந்து, இரு செங் கை மலர் குவித்து,
"உன்னு நல் வினை உற்றது" என்று ஓங்கினான்;
துன்னு தேவர்தம் சூழலுள் போயினார். 54
சதானந்தர் இராம இலக்குவரை
வாழ்த்தி தம் இடம் பெயர்தல்
'ஈது முன்னர் நிகழ்ந்தது; இவன் துணை
மா தவத்து உயர் மாண்பு உடையார் இலை;
நீதி வித்தகன் தன் அருள் நேர்ந்தனிர்;
யாது உமக்கு அரிது?' என்றனன், ஈறு இலான்.
55
என்று கோதமன் காதலன் கூறிட,
வென்றி வீரர் வியப்பொடு உவந்து எழா,
ஒன்று மா தவன் தாள் தொழுது ஓங்கிய
பின்றை, ஏத்திப் பெய்ர்ந்தனன், தன் இடம்.
56
இராமன் சீதை நினைவாய் இருத்தல்
முனியும் தம்பியும் போய், முறையால் தமக்கு
இனிய பள்ளிகள் எய்தியபின், இருட்
கனியும் போல்பவன், கங்குலும், திங்களும்,
தனியும், தானும், அத் தையலும், ஆயினான்.
57
சீதையின் உருவெளிப்பாடு
'விண்ணின் நீங்கிய மின் உரு, இம் முறை,
பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டேகொலோ?
எண்ணின், ஈது அலது என்று அறியேன்; இரு
கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பெனால். 58
வள்ளல் சேக்கைக் கரியவன் வைகுறும்
வெள்ளப் பாற்கடல்போல் மிளிர் கண்ணினாள்,
அள்ளல் பூமகள் ஆகும்கொலோ-எனது
உள்ளத் தாமரையுள் உறைகின்றதே? 59
அருள் இலாள் எனினும், மனத்து ஆசையால்,
வெருளும் நோய் விடக் கண்ணின் விழுங்கலால்,
தெருள் இலா உலகில், சென்று, நின்று, வாழ்
பொருள் எலாம், அவள் பொன் உரு ஆயவே! 60
'பூண் உலாவிய பொற் கலசங்கள் என்
ஏண் இல் ஆகத்து எழுதலஎன்னினும்;
வாள் நிலா முறுவல் கனி வாய் மதி
காணல் ஆவது ஒர் காலம் உண்டாம்கொலோ? 61
'வண்ண மேகலைத் தேர் ஒன்று, வாள் நெடுங்
கண் இரண்டு, கதிர் முலைதாம் இரண்டு,
உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால்;
எண்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டுமோ? 62
'கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன்,
பொன்னை முன்னிய பூங் கணை மாரியால்,
என்னை எய்து தொலைக்கும் என்றால், இனி,
வன்மை என்னும் இது ஆரிடை வைகுமே? 63
'கொள்ளை கொள்ளக் கொதித்து எழு பாற்கடல்
பள்ள வெள்ளம் எனப் படரும் நிலா,
உள்ள உள்ள உயிரைத் துருவிட,
வெள்ளை வண்ண விடமும் உண்டாம்கொலோ? 64
'ஆகும் நல்வழி; அல்வழி என் மனம்
ஆகுமோ? இதற்கு ஆகிய காரணம்,
பாகுபோல் மொழிப் பைந்தொடி, கன்னியே
ஆகும்; வேறு இதற்கு ஐயுறவு இல்லையே!' 65
திங்களின் மறைவும், நிலா
ஒளி மழுங்கலும்
கழிந்த கங்குல் அரசன் கதிர்க் குடை
விழுந்தது என்னவும், மேல் திசையாள் சுடர்க்
கொழுந்து சேர் நுதற் கோது அறு சுட்டி போய்
அழிந்தது என்னவும், ஆழ்ந்தது-திங்களே. 66
வீசுகின்ற நிலாச் சுடர் வீந்ததால்-
ஈசன் ஆம் மதி ஏகலும், சோகத்தால்
பூசு வெண் கலவைப் புனை சாந்தினை
ஆசை மாதர் அழித்தனர் என்னவே. 67
சூரிய உதயமும், ஒளி பரவுதலும்
ததையும் மலர்த் தார் அண்ணல் இவ்வண்ணம் மயல்
உழந்து, தளரும் ஏல்வை,
சிதையும் மனத்து இடருடைய செங்கமல முகம் மலர,
செய்ய வெய்யோன்,
புதை இருளின் எழுகின்ற புகர் முக யானையின்
உரிவைப் போர்வை போர்த்த
உதைய கிரி எனும் கடவுள் நுதல் கிழித்த விழியேபோல்,
உதயம் செய்தான். 68
விசை ஆடல் பசும் புரவிக் குரம் மிதிப்ப உதயகிரி
விரிந்த தூளி
பசை ஆக, மறையவர் கைந் நறை மலரும் நிறை புனலும்
பரந்து பாய,
அசையாத நெடு வரையின் முகடுதொறும் இளங் கதிர்
சென்று அளைந்து, வெய்யோன்,
திசை ஆளும் மத கரியைச் சிந்தூரம் அப்பியபோல்
சிவந்த மாதோ! 69
பண்டு வரும் குறி பகர்ந்து, பாசறையின், பொருள்
வயினின், பிரிந்து போன
வண்டு தொடர் நறுந் தெரியல் உயிர் அனைய கொழுநர்
வர மணித் தேரோடும்,
கண்டு மனம் களி சிறப்ப, ஒளி சிறந்து, மெலிவு
அகலும் கற்பினார்போல்,
புண்டரிகம் முகம் மலர, அகம் மலர்ந்து பொலிந்தன-பூம்
பொய்கை எல்லாம். 70
எண்ண அரிய மறையினொடு கின்னரர்கள் இசை பாட,
உலகம் ஏத்த,
விண்ணவரும், முனிவர்களும், வேதியரும், கரம்
குவிப்ப, வேலை என்னும்
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம்
புரி வாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன், கனகச் சடை விரிந்தாலென விரிந்த
- கதிர்கள் எல்லாம். 71
இராமன் துயில் நீத்து எழுதல்
கொல் ஆழி நீத்து, அங்கு ஓர் குனி வயிரச் சிலைத்
தடக் கைக் கொண்ட கொண்டல்,
எல் ஆழித் தேர் இரவி இளங் கரத்தால் அடி வருடி
அனந்தல் தீர்ப்ப,
அல் ஆழிக் கரை கண்டான் - ஆயிர வாய் மணி விளக்கம்
அழலும் சேக்கைத்
தொல் ஆழித் துயிலாதே, துயர் ஆழி-நெடுங் கடலுள்
துயில்கின்றானே. 72
மூவரும் சனகனது வேள்விச்
சாலை சென்று சார்தல்
ஊழி பெயர்ந்தெனக் கங்குல் ஒரு வண்ணம் புடை
பெயர, உறக்கம் நீத்த
குழி யானையின் எழுந்து, தொல் நியமத் துறை முடித்து,
சுருதி அன்ன
வாழி மாதவற் பணிந்து, மனக்கு இனிய தம்பியொடும்,
வம்பின் மாலை
தாழும் மா மணி மௌலித் தார்ச் சனகன் பெரு வேள்விச்
சாலை சார்ந்தான். 73
மிகைப் பாடல்கள்
நின்றனன் அரசன் என்றான்; நீ எனைக் கொண்டு போகை
நன்று என மொழிந்து நின்றான், நல்கிய தாயை நோக்கி,
'இன்று எனகி கொடுத்தியோ?' என்று இறைஞ்சினன்
கசிந்து நின்றான்;
தன் துணை மார்பில் சேர்த்துத் தழுவலும், அவனை
நோக்கி. 39-1
'என்று கூறி, இமையவர் தங்கள் முன்
வன் தபோத வதிட்டன் வந்து, என்னையே,
"நின்ற அந்தணனே" என நேர்ந்தவன்,
வென்றி வெந் திறல் தேவர் வியப்புற. 53-1
காதலால் ஒருத்தியை நினைப்ப, கண் துயில்
மாதராள் அவன் திறம் மறுப்ப, கங்குல் மான்,
'ஏதிலான் தமியன்' என்று, 'ஏகலேன்' என,
ஆதலால் இருந்தனன்; அளியன் என் செய்வான்?
61-1
12. வரலாற்றுப் படலம்
முனிவர்கள் ஏனையோர் சூழ சனகன் வீற்றிருத்தல்
முடிச் சனகர் பெருமானும், முறையாலே பெரு வேள்வி
முற்றி, சுற்றும்
இடிக் குரலின் முரச இயம்ப, இந்திரன் போல்,
சந்திரன் தோய், கோயில் எய்தி,
எடுத்த மணி மண்டபத்துள், எண்தவத்து முனிவரொடும்,இருந்தான்-பைந்
தார்
வடித்த குனி வரி சிலைக் கைம் மைந்தனும்,தம்பியும்,மருங்கின்
இருப்ப மாதோ.1
சனகன்இராமஇலக்குவரைப்பற்றி வினவ,முனிவர் அவ்விருவரைப்பற்றிக்
கூறல்
இருந்த குலக் குமரர்தமை, இரு கண்ணின் முகந்து
அழகு பருக நோக்கி,
அருந் தவனை அடி வணங்கி, 'யாரை இவர்? உரைத்திடுமின்,
அடிகள்!' என்ன,
'விருந்தினர்கள்; நின்னுடைய வேள்வி காணிய வந்தார்;
வில்லும் காண்பார்;
பெருந் தகைமைத் தயரதன் தன் புதல்வர்' என, அவர்
தகைமை பேசலுற்றான்: 2
இராம இலக்குவரின் குல மரபை முனிவன் முற்பட
எடுத்துரைத்தல்
'ஆதித்தன் குல முதல்வன் மனுவினை யார் அறியாதார்?
பேதித்த உயிர் அனைத்தும் பெரும் பசியால் வருந்தாமல்,
சோதித் தன்வரி சிலையால் நிலமடந்தை முலை சுரப்ப,
சாதித்த பெருந் தகையும், இவர் குலத்து ஓர்
தராபதிகாண்! 3
'பிணி அரங்க, வினை அகல, பெருங் காலம் தவம்
பேணி, -
மணி அரங்கு நெடு முடியாய்!-மலர் அயனே வழிபட்டு,
பணி அரங்கப் பெரும் பாயற் பரஞ் சுடரை யாம்
காண,
அணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார்!
4
தான், தனக்கு வெலற்கு அரிய தானவரை, "தலை
துமித்து, என்
வான் தரக்கிற்றிகொல்?" என்று குறை இரப்ப,
வரம் கொடுத்து, ஆங்கு
ஏன்று எடுத்த சிலையினன் ஆய், இகல் புரிந்த
இவர் குலத்து ஓர்
தோன்றலை, பண்டு, இந்திரன்காண், விடை ஏறாய்ச்
சுமந்தானும். 5
அரைசன் அவன் பின்னோரை, என்னாலும் அளப்பு அரிதால்;
உரை குறுக நிமிர் கீர்த்தி இவர் குலத்தோன்
ஒருவன்காண் -
நரை திரை மூப்பு இவை மாற்றி இந்திரனும் நந்தாமல்,
குரை கடலை நெடு வரையால் கடைந்து, அமுது கொடுத்தானும்.
6
கருதல் அரும் பெருங் குணத்தோர், இவர் முதலோர்
கணக்கு இறந்தோர்;
திரி புவனம் முழுது ஆண்டு சுடர் நேமி செல நின்றோர்;-
பொருது உறை சேர் வேலினாய்!-புலிப் போத்தும்
புல்வாயும்
ஒரு துறையில் நீர் உண்ண, உலகு ஆண்டான் உளன்
ஒருவன். 7
மறை மன்னும் மணிமுடியும் ஆரமும் வாளொடு மின்ன,
பொறை மன்னு வானவரும் தானவரும் பொரும் ஒரு நாள்;-
விறல் மன்னர் தொழு கழலாய்! - இவர் குலத்தோன்,
வில் பிடித்த
அறம் என்ன, ஒரு தனியே திரிந்து, அமராபதி கரத்தோன்.
8
இன் உயிர்க்கும் இன் உயிராய் இரு நிலம் காத்தார்
என்று
பொன் உயிர்க்கும் கழலவரை யாம் போலும், புகழ்கிற்பாம்?-
மின் உயிர்க்கும் நெடு வேலாய்! - இவர் குலத்தோன்,
மென் புறவின்
மன் உயிர்க்கு, தன் உயிரை மாறாக வழங்கினனால்!
9
இடறு ஓட்ட, இன நெடிய வரை உருட்டி, இவ் உலகம்
திடல், தோட்டம், எனக் கிடந்தது என இரங்கி,-தெவ்
வேந்தர் -
உடல் தோட்ட நெடு வேலாய்!-இவர் குலத்தோர், உவரி
நீர்க்
கடல் தோட்டார் எனின், வேறு ஓர் கட்டுரையும்
வேண்டுமோ? 10
'தூ நின்ற சுடர் வேலாய்! அனந்தனுக்கும் சொலற்கு
அரிதேல்,
யான் இன்று புகழ்ந்துரைத்தற்கு எளிதோ? ஏடு
அவிழ் கொன்றைப்
பூ நின்ற மவுலியையும் புக்கு அளைந்த புனற்
கங்கை,
வான் நின்று கொணர்ந்தானும், இவர் குலத்து ஓர்
மன்னவன்காண்! 11
கயற் கடல் சூழ் உலகு எல்லாம் கைந் நெல்லிக்
கனி ஆக்கி,
இயற்கை நெறி முறையாலே இந்திரற்கும் இடர் இயற்றி,-
முயற் கறை இல் மதிக் குடையாய்! - இவர் குலத்தோன்
முன் ஒருவன்,
செயற்கு அரிய பெரு வேள்வி ஒரு நூறும் செய்து
அமைத்தான். 12
சந்திரனை வென்றானும், உருத்திரனைச் சாய்த்தானும்,
துந்து எனும் தானவனைச் சுடு சரத்தால் துணித்தானும்,
வந்த குலத்திடை வந்த ரகு என்பான், வரி சிலையால்,
இந்திரனை வென்று, திசை இரு - நான்கும் செரு
வென்றான். 13
வில் என்னும் நெடு வரையால் வேந்து என்னும்
கடல் கலக்கி,
எல் என்னும் மணி முறுவல் இந்துமதி எனும் திருவை,
அல் என்னும் திரு நிறத்த அரி என்ன, - அயன்
என்பான் -
மல் என்னும் திரள் புயத்துக்கு அணி என்ன வைத்தானே!
14
தயரதன் மகப்பேறு பெற்ற வரலாற்றை முனிவன் உரைத்தல்
அயன் புதல்வன் தயரதனை அறியாதார் இல்லை; அவன்
பயந்த குலக் குமரர் இவர் தமக்கு உள்ள பரிசு
எல்லாம்
நயந்து உரைத்துக் கரை ஏறல் நான்முகற்கும் அரிது
ஆம்;-பல்
இயம் துவைத்த கடைத் தலையாய்!-யான் அறிந்தபடி
கேளாய்: 15
துனி இன்றி உயிர் செல்ல, சுடர் ஆழிப் படை வெய்யோன்
பனி வென்றபடி என்ன, பகை வென்று படி காப்போன்,
தனு அன்றித் துணை இல்லான், தருமத்தின் கவசத்தான்,
மனு வென்ற நீதியான், மகவு இன்றி வருந்துவான்;
16
சிலைக் கோட்டு நுதல், குதலைச் செங் கனி வாய்,
கரு நெடுங் கண்,
விலைக்கு ஓட்டும் பேர் அல்குல், மின் நுடங்கும்
இடையாரை,
"முலைக் கோட்டு விலங்கு" என்று,
தொடர்ந்து அணுகி முன் நின்ற
கலைக் கோட்டுப் பெயர் முனியால், துயர் நீங்கக்
கருதினான்; 17
'"தார் காத்த நறுங் குஞ்சித் தனயர்கள்,
என் தவம் இன்மை,
வார் காத்த வன முலையார் மணி வயிறு வாய்த்திலரால்,
நீர் காத்த கடல் புடை சூழ் நிலம் காத்தேன்;
என்னின் பின்,
பார் காத்தற்கு உரியாரைப் பணி, நீ" என்று
அடி பணிந்தான். 18
அவ் உரை கேட்டு, அம் முனியும், அருள் சுரந்த
உவகையன் ஆய்,
"இவ் உலகம் அன்றியே, எவ் உலகும் இனிது
அளிக்கும்
செவ்வி இளஞ் சிறுவர்களைத் தருகின்றேன்; இனித்
தேவர்
வவ்வி நுகர் பெரு வேள்விக்கு உரிய எலாம் வருக"
என்றான். 19
காதலரைத் தரும் வேள்விக்கு உரிய எலாம் கடிது
அமைப்ப,
மா தவரில் பெரியோனும், மற்றதனை முற்றுவித்தான்;
சோதி மணிப் பொற் கலத்துச் சுதை அனைய வெண் சோறு,
ஓர்
பூத கணத்து அரசு ஏந்தி, அனல் நின்றும் போந்ததால்.
20
'பொன்னின் மணிப் பரிகலத்தில் புறப்பட்ட இன்
அமுதை,
பன்னு மறைப் பொருள் உணர்ந்த பெரியோன் தன் பணியினால்,
தன் அனைய நிறை குணத்துத் தசரதனும், வரன்முறையால்,
நல் நுதலார் மூவருக்கும், நாலு கூறிட்டு, அளித்தான்.
21
விரிந்திடு தீவினை செய்த வெவ்விய தீவினையாலும்,
அருங் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும்,
இருங் கடகக் கரதலத்து இவ் எழுத அரிய திருமேனிக்
கருங்கடலைச் செங் கனி வாய்க் கவுசலை என்பாள்
பயந்தாள். 22
'தள்ள அரிய பெரு நீதித் தனி ஆறு புக மண்டும்
பள்ளம் எனும் தகையானை, பரதன் எனும் பெயரானை,
எள்ள அரிய குணத்தாலும் எழிலாலும் இவ் இருந்த
வள்ளலையே அனையானை, கேகயர்கோன் மகள் பயந்தாள்.
23
அரு வலிய திறலினர் ஆய், அறம் கெடுக்கும் விறல்
அரக்கர்
வெருவரு திண் திறலார்கள், வில் ஏந்திம் எனில்
செம் பொன்
பரு வரையும், நெடு வெள்ளிப் பருப்பதமும் போல்வார்கள்,
இருவரையும், இவ் இருவர்க்கு இளையாளும் ஈன்று
எடுத்தாள். 24
தசரத குமாரர்கள் வளர்ந்து, கல்வி கற்ற வரலாறு
'தலை ஆய பேர் உணர்வின் கலைமகட்குத் தலைவர்
ஆய்,
சிலை ஆயும் தனு வேதம் தெவ்வரைப்போல் பணி செய்ய,
கலை ஆழிக் கதிர்த் திங்கள் உதயத்தில் கலித்து
ஓங்கும்
அலை ஆழி என வளர்த்தார் - மறை நான்கும் அனையார்கள்.
25
'திறையோடும் அரசு இறைஞ்சும் செறி கழற் கால்
தசரதன் ஆம்
பொறையோடும் தொடர் மனத்தான் புதல்வர் எனும்
பெயரேகாண்!-
உறை ஓடும் நெடு வேலாய்!-உபநயன விதி முடித்து,
மறை ஓதுவித்து, இவரை வளர்த்தானும் வசிட்டன்காண்.
26
இராம இலக்குவர் வேள்வி காத்த திறம் பற்றி முனிவன்
கூறுதல்
'ஈங்கு, இவரால், என் வேள்விக்கு இடையூறு கடிது
இயற்றும்
தீங்குடைய கொடியோரைக் கொல்விக்கும் சிந்தையன்
ஆய்
பூங் கழலார்க் கொண்டுபோய் வனம் புக்கேன், புகாமுன்னம்,
தாங்க அரிய பேர் ஆற்றல் தாடகையே தலைப்பட்டாள்.
27
'அலை உருவக் கடல் உருவத்து ஆண் தகைதன் நீண்டு
உயர்ந்த
நிலை உருவப் புய வலியை நீ உருவ நோக்கு ஐயா!
உலை உருவக் கனல் உமிழ் கண் தாடகைதன் உரம் உருவி,
மலை உருவி, மரம் உருவி, மண் உருவிற்று, ஒரு
வாளி! 28
'செக்கர் நிறத்து எரி குஞ்சிச் சிரக் குவைகள்
பொருப்பு என்ன
உக்கனவோ முடிவு இல்லை; ஓர் அம்பினொடும், அரக்கி
மக்களில், அங்கு ஒருவன் போய் வான் புக்கான்;
மற்றையவன்
புக்க இடம் அறிந்திலேன்; போந்தனென், என் வினை
முடித்தே. 29
இராமனது வில்லாற்றலை பற்றி முனிவன் வியந்து
பேசுதல்
ஆய்ந்து ஏற உணர்-ஐய!-அயற்கேயும் அறிவு அரிய;
காய்ந்து ஏவின், உலகு அனைத்தும் கடலோடும் மலையோடும்
தீய்ந்து ஏறச் சுடுகிற்கும் படைக் கலங்கள்,
செய் தவத்தால்
ஈந்தேனும் மனம் உட்க, இவற்கு ஏவல் செய்குனவால்.
30
அகலிகைக்கு உரு அளித்த இராமனது பாத மகிமையைப்
போற்றுதல்
'கோதமன் தன் பன்னிக்கு முன்னை உருக் கொடுத்தது,
இவன்,
போது வென்றது எனப் பொலிந்த, பொலங் கழற் கால்
பொடி கண்டாய்;
காதல் என் தன் உயிர்மேலும் இக் கரியோன்பால்
உண்டால்;
ஈது, இவன் தன் வரலாறும், புய வலியும்' என உரைத்தான்.
31
மிகைப் பாடல்கள்
அந்தரத்தில் உருள் சேர, அடு சனி வந்து உறும்
அளவில்,
சிந்தை மகிழ் தசரதனும் சென்று அவன்மேல் சரங்கள்
தொடுத்து,
'இந்த வழி போகு அரிது' என்று இயைந்தவனை எந்நாளும்
உந்தும் என உலகுதனக்கு உறுதுயர் தீர்ந்திடும்
உரவோன். 15-1
'கோதமன் தன் மனைக்கிழத்திக்கு உரைத்த கொடுஞ்
சாபம் எனும்
ஓத அருங் கல் உருத் தவிர்த்து, முன்னை உருக்
கொடுத்தது இவன்
பாதமிசைத் துவண்டு எழுந்த பசும் பொடி மற்று
அது கண்டாய்;
ஈது இவன் தன் அருள் வடிவும் வரலாறும்' என உரைத்தான்.
31-1
13. கார்முகப் படலம்
மாய வில்லை இராமன் நாணேற்றினால் தான் தன் துயர் நீங்கும்
எனச் சனகன் உரைத்தல்
'மாற்றம் யாது உரைப்பது? மாய விற்கு நான்
தோற்றனென் என மனம் துளங்குகின்றதால்;
நோற்றனள் நங்கையும்; நொய்தின் ஐயன் வில்
ஏற்றுமேல், இடர்க் கடல் ஏற்றும்' என்றனன்.
1
சனகனது ஆணைப்படி ஏவலர் வில்லை மண்டபத்திற்குக்
கொண்டுவருதல்
என்றனன், ஏன்று, தன் எதிர் நின்றாரை, 'அக்
குன்று உறழ் வரி சிலை கொணர்மின், ஈண்டு' என,
'நன்று' என வணங்கினர், நால்வர் ஓடினர்;
பொன் திணி கார்முகச் சாலை புக்கனர். 2
உறு வலி யானையை ஒத்த மேனியர்,
செறி மயிர்க் கல் எனத் திரண்ட தோளினர்,
அறுபதினாயிரர், அளவு இல் ஆற்றலர்,
தறி மடுத்து, இடையிடை, தண்டில் தாங்கினர்;
3
நெடு நிலமகள் முதுகு ஆற்ற, நின்று உயர்
தட நிமிர் வடவரைதானும் நாண் உற,
'இடம் இலை உலகு' என வந்தது,-எங்கணும்
கடல் புரை திரு நகர் இரைத்துக் காணவே. 4
வில்லினைக் கண்டார் கூறிய மொழிகள்
'சங்கொடு சக்கரம் தரித்த செங்கை அச்
சிங்க ஏறு அல்லனேல், இதனைத் தீண்டுவான்
எங்கு உளன் ஒருவன்? இன்று ஏற்றின், இச் சிலை,
மங்கைதன் திருமணம் வாழுமால்' என்பார். 5
'கைதவம், தனு எனல்; கனகக் குன்று' என்பார்;
'செய்தது, அத் திசைமுகன் தீண்டி அன்று; தன்
மொய் தவப் பெருமையின் முயற்சியால்' என்பார்;
'எய்தவன் யாவனோ, ஏற்றிப் பண்டு?' என்பார்.
6
'திண் நெடு மேருவைத் திரட்டிற்றோ?' என்பார்;
'வண்ண வான் கடல் பண்டு கடைந்த மத்து' என்பார்;
'அண்ணல் வாள் அரவினுக்கு அரசனோ?' என்பார்;
'விண் இடு நெடிய வில் வீழ்ந்ததோ?' என்பார்.
7
'என், "இது கொணர்க" என, இயம்பினான்?'
என்பார்;
'மன்னவர் உளர்கொலோ மதி கெட்டார்?' என்பார்;
'முன்னை ஊழ் வினையினால் முடிக்கில் ஆம்' என்பார்;
'கன்னியும் இச் சிலை காணுமோ?' என்பார். 8
'இச் சிலை உதைத்த கோற்கு இலக்கம் யாது?' என்பார்;
'நச் சிலை நங்கைமேல் நாட்டும், வேந்து' என்பார்;
'நிச்சயம் எடுக்கும்கொல் நேமியான்!' என்பார்;
சிற்சிலர், 'விதி செய்த தீமை ஆம்' என்பார்.
9
வில்லைக் கண்ட வேந்தர்கள் கைவிரித்தல்
மொய்த்தனர் இன்னணம் மொழிய, மன்னன் முன்
உய்த்தனர், நிலம் முதுகு உளுக்கிக் கீழ் உற,
வைத்தனர்; 'வாங்குநர் யாவரோ?' எனா,
கைத்தலம் விதிர்த்தனர், கண்ட வேந்தரே. 10
சதானந்த முனிவன் கூறிய வில்லின் வரலாறு
போதகம் அனையவன் பொலிவை நோக்கி, அவ்
வேதனை தருகின்ற வில்லை நோக்கி, தன்
மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய
கோதமன் காதலன் கூறல்மேயினான்: 11
'இமைய வில் வாங்கிய ஈசன், "பங்கு உறை
உமையினை இகழ்ந்தனன் என்ன" ஓங்கிய
கமை அறு சினத் தனிக் கார்முகம் கொளா,
சமை உறு தக்கனார் வேள்வி சாரவே. 12
'உக்கன பல்லொடு, கரங்கள் வீழ்ந்தன;
புக்கனர், வானவர் புகாத சூழல்கள்;
தக்கன் நல் வேள்வியில் தழலும் ஆறின;
முக் கண் எண் தோளவன் முனிவும் மாறினான்.
13
'தாளுடை வரி சிலை, சம்பு, உம்பர்தம்
நாள் உடைமையின், அவர் நடுக்கம் நோக்கி, இக்
கோளுடை விடை அனான் குலத்துள் தோன்றிய
வாளுடை உழவன் ஓர் மன்னன்பால் வைத்தான். 14
'கார்முக வலியை யான் கழறல் வேண்டுமோ?
வார் சடை அரன் நிகர் வரத! நீ அலால்,
யார் உளர் அறிபவர்? இவற்குத் தோன்றிய
தேர் முக அல்குலாள் செவ்வி கேள்' எனா, 15
'இரும்பு அனைய கரு நெடுங் கோட்டு இணை ஏற்றின்
பணை ஏற்ற
பெரும் பியலில் பளிக்கு நுகம் பிணைத்து, அதனோடு
அணைத்து ஈர்க்கும்
வரம்பு இல் மணிப் பொன் - கலப்பை வயிரத்தின்
கொழு மடுத்திட்டு
உரம் பொரு இல் நிலம், வேள்விக்கு, அலகு இல்
பல சால் உழுதேம். 16
'உழுகின்ற கொழு முகத்தின், உதிக்கின்ற கதிரின்
ஒளி
பொழிகின்ற, புவி மடந்தை திரு வெளிப்பட்டென,
புணரி
எழுகின்ற தெள் அமுதொடு எழுந்தவளும், இழிந்து
ஒதுங்கித்
தொழுகின்ற நல் நலத்துப் பெண் அரசி தோன்றினாள்.
17
'குணங்களை என் கூறுவது? கொம்பினைச் சேர்ந்து,
அவை உய்யப்
பிணங்குவன; அழகு, இவளைத் தவம் செய்து பெற்றதுகாண்;
கணங் குழையாள் எழுந்ததற்பின், கதிர் வானில்
கங்கை எனும்
அணங்கு இழியப் பொலிவு இழந்த ஆறு ஒத்தார், வேறு
உற்றார். 18
'சித்திரம் இங்கு இது ஒப்பது எங்கு உண்டு-செய்வினையால்
வித்தகமும் விதி வசமும் வெவ்வேறே புறம் கிடப்ப,
அத் திருவை அமரர் குலம் ஆதரித்தார் என, அறிஞர்!
இத் திருவை நில வேந்தர் எல்லாரும் காதலித்தார்!
19
'கலித் தானைக் கடலோடும் கைத் தானக் களிற்று
அரசர்
ஒலித்து ஆனை என வந்து, மணம் மொழிந்தார்க்கு
எதிர், "உருத்த
புலித் தானை, களிற்று உரிவைப் போர்வையான் வரி
சிலையை
வலித்தானே மங்கை திருமணத்தான்" என்று,
யாம் வலித்தேம். 20
'வல் வில்லுக்கு ஆற்றார்கள், மார வேள் வளை
கருப்பின்
மெல் வில்லுக்கு ஆற்றாராய், தாம் எம்மை விளிகுற்றார்;
கல் வில்லோடு உலகு ஈந்த கனங் குழையைக் காதலித்து,-
சொல் வில்லால் உலகு அளிப்பாய்!-போர் செய்யத்
தொடங்கினார். 21
'எம் மன்னன் பெருஞ் சேனை ஈவதனை மேற்கொண்ட
செம் மன்னர் புகழ் வேட்ட பொருளேபோல் தேய்ந்ததால்;
பொம்மென்ன வண்டு அலம்பும் புரி குழலைக் காதலித்த
அம் மன்னர் சேனை, தமது ஆசைபோல் ஆயிற்றால்.
22
'மல் காக்கும் மணிப் புயத்து மன்னன் இவன்,
மழவிடையோன்
வில் காக்கும் வாள் அமருள் மெலிகின்றான் என
இரங்கி,
எல் காக்கும் முடி விண்ணோர் படை ஈந்தார் என,
வேந்தர்,
அல் காக்கை கூகையைக் கண்டு அஞ்சினவாம் என,
அகன்றார். 23
'அன்று முதல், இன்று அளவும், ஆரும் இந்தச்
சிலை அருகு
சென்றும் இலர்; போய் ஒளித்த தேர் வேந்தர் திரிந்தும்
இலார்;
"என்றும் இனி மணமும் இலை" என்று
இருந்தோம்; இவன் ஏற்றின்,
நன்று; மலர்க் குழல் சீதை நலம் பழுது ஆகாது'
என்றான். 24
இராமன் வில்லை நோக்கி எழுதல்
நினைந்த முனி பகர்ந்த எலாம் நெறி உன்னி, அறிவனும்
தன்,
புனைந்த சடைமுடி துளக்கி, போர் ஏற்றின் முகம்
பார்த்தான்;
வனைந்தனைய திருமேனி வள்ளலும், அம் மா தவத்தோன்
நினைந்த எலாம் நினைந்து, அந்த நெடுஞ் சிலையை
நோக்கினான். 25
பொழிந்த நெய் ஆகுதி வாய்வழி பொங்கி
எழுந்த கொழுங் கனல் என்ன எழுந்தான்;
'அழிந்தது, வில்' என, விண்ணவர் ஆர்த்தார்;
மொழிந்தனர் ஆசிகள், முப் பகை வென்றார். 26
மங்கையர் மன நிலையும், வாய் மொழியும்
தூய தவங்கள் தொடங்கிய தொல்லோன்
ஏயவன் வல் வில் இறுப்பதன் முன்னம்,
சேயிழை மங்கையர் சிந்தைதொறு எய்யா,
ஆயிரம் வில்லை அனங்கன் இறுத்தான். 27
'காணும் நெடுஞ் சிலை கால் வலிது' என்பார்;
'நாணுடை நங்கை நலம் கிளர் செங் கேழ்ப்
பாணி, இவன் படர் செங் கை படாதேல்,
வாள் நுதல் மங்கையும் வாழ்வு இலள்' என்பார்.
28
கரங்கள் குவித்து, இரு கண்கள் பனிப்ப,
'இருங் களிறு இச் சிலை ஏற்றிலன் ஆயின்,
நரந்த நறைக் குழல் நங்கையும், நாமும்,
முருங்கு எரியில் புக மூழ்குதும்' என்பார்.
29
'வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால்,
"கொள்" என் முன்பு கொடுப்பதை அல்லால்,
வெள்ளம் அணைத்தவன் வில்லை எடுத்து, இப்
பிள்ளை முன் இட்டது பேதைமை' என்பார். 30
'ஞான முனிக்கு ஒரு நாண் இலை' என்பார்;
'கோன் இவனின் கொடியோன் இலை' என்பார்;
'மானவன் இச் சிலை கால் வளையானேல்,
பீன தனத்தவள் பேறு இலள்' என்பார். 31
வில்லை நோக்கி இராமன் நடத்தல்
தோகையர் இன்னன சொல்லிட, நல்லோர்
ஓகை விளம்பிட, உம்பர் உவப்ப,
மாக மடங்கலும், மால் விடையும், பொன்
நாகமும், நாகமும், நாண நடந்தான். 32
இமைப் பொழுதில் வில்லை எடுத்து இராமன் நாண்
ஏற்ற, அவ் வில் ஒடிதல்
ஆடக மால் வரை அன்னது தன்னை,
'தேட அரு மா மணி, சீதை எனும் பொன்
சூடக வால் வளை, சூட்டிட நீட்டும்
ஏடு அவிழ் மாலை இது' என்ன, எடுத்தான். 33
தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில்
மடுத்ததும், நாண் நுதி வைத்ததும், நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார். 34
வில் இற்ற பேரோசையால் மூவுலகிலும் தோன்றிய
அச்சம்
'ஆரிடைப் புகுதும் நாம்?' என்று, அமரர்கள்,
கமலத்தோன் தன்
பேருடை அண்ட கோளம் பிளந்தது' என்று ஏங்கி,
நைந்தார்;
பாரிடை உற்ற தன்மை பகர்வது என்? பாரைத் தாங்கி,
வேரெனக் கிடந்த நாகம் இடி என வெருவிற்று அன்றே!
35
வானவர் வாழ்த்த, மண்ணகத்தார் மகிழ்ந்தனர்
பூ மழை சொரிந்தார் விண்ணோர்; பொன் மழை பொழிந்த
மேகம்;
பாம மா கடல்கள் எல்லாம் பல் மணி தூவி ஆர்த்த;
கோ முனிக் கணங்கள் எல்லாம் கூறின ஆசி; - 'கொற்ற
நாம வேல் சனகற்கு, இன்று, நல்வினை பயந்தது'
என்னா. 36
மாலையும், இழையும், சாந்தும், சுண்ணமும், வாச
நெய்யும்,
வேலை வெண் முத்தும், பொன்னும், காசும், நுண்
துகிலும், வீசி;
பால் வளை, வயிர்கள், ஆர்ப்ப; பல் இயம் துவைப்ப;
முந்நீர்
ஓல் கிளர்ந்து உவா உற்றென்ன, ஒலி நகர் கிளர்ந்தது
அன்றே! 37
நல் இயல் மகர வீணைத் தேன் உக, நகையும் தோடும்
வில் இட, வாளும் வீச, வேல் கிடந்தனைய நாட்டத்து
எல் இயல் மதியம் அன்ன முகத்தியர், எழிலி தோன்றச்
சொல்லிய பருவம் நோக்கும் தோகையின் ஆடினாரே!
38
உண் நறவு அருந்தினாரின் சிவந்து ஒளிர் கருங்
கண் மாதர்,
புண் உறு புலவி நீங்க, கொழுநரைப் புல்லிக்
கொண்டார்;
வெண் நிற மேகம் மேன்மேல் விரி கடல் பருகுமாபோல்,
மண் உறு வேந்தன் செல்வம், வறியவர் முகந்து
கொண்டார். 39
வயிரியர் மதுர கீதம், மங்கையர் அமுத கீதம்,
செயிரியர் மகர யாழின் தேம் பிழி தெய்வ கீதம்,
பயிர் கிளை வேயின் கீதம், என்று இவை பருகி,
விண்ணோர்
உயிருடை உடம்பும் எல்லாம் ஓவியம் ஒப்ப நின்றார்.
40
ஐயன் வில் இறுத்த ஆற்றல் காணிய, அமரர் நாட்டுத்
தையலார் இழிந்து, பாரின் மகளிரைத் தழுவிக்
கொண்டார்-
செய்கையின், வடிவின், ஆடல் பாடலின் தெளிதல்
தேற்றார்,-
மை அரி நெடுங் கண் நோக்கம் இமைத்தலும், மயங்கி
நின்றார். 41
மிதிலை நகர மக்களின் மகிழ்ச்சி
'தயரதன் புதல்வன்' என்பார்; 'தாமரைக் கண்ணன்'
என்பார்;
'புயல் இவன் மேனி' என்பார்; 'பூவையே பொருவும்'
என்பார்;
'மயல் உடைத்து உலகம்' என்பார்; 'மானிடன் அல்லன்'
என்பார்;
'கயல் பொரு கடலுள் வைகும் கடவுளே காணும்"
என்பார். 42
'நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்;
கொம்பினைக் காணும் தோறும், குரிசிற்கும் அன்னதே
ஆம்!
தம்பியைக் காண்மின்!' என்பார்; 'தவம் உடைத்து
உலகம்' என்பார்;
'இம்பர், இந் நகரில் தந்த முனிவனை இறைஞ்சும்'
என்பார். 43
காதல் நோய் மிக சீதை உள்ளம் நைந்து உருகுதல்
இற்று, இவண் இன்னது ஆக,-மதியொடும் எல்லி நீங்கப்
பெற்று, உயிர் பின்னும் காணும் ஆசையால், சிறிது
பெற்ற,
சிற்றிடை, பெரிய கொங்கை, சேயரிக் கரிய வாள்-கண்,
பொன் - தொடி,-மடந்தைக்கு அப்பால் உற்றது புகலலுற்றாம்:
44
ஊசல் ஆடு உயிரினோடும், உருகு பூம் பள்ளி நீங்கி,
பாசிழை மகளிர் சூழ, போய், ஒரு பளிக்கு மாட,
காசு இல் தாமரையின் பொய்கை, சந்திர காந்தம்
ஈன்ற
சீத நீர் தெளித்த மென் பூஞ் சேக்கையை அரிதின்
சேர்ந்தாள். 45
'"பெண் இவண் உற்றது" என்னும் பெருமையால்,
அருமையான
வண்ணமும் இலைகளாலே காட்டலால், வாட்டம் தீர்ந்தேன்;-
தண் நறுங் கமலங்காள்!-என் தளிர் நிறம் உண்ட
கண்ணின்
உள் நிறம் காட்டினீர்; என் உயிர் தர உலோவினீரே!
46
'நாண் உலாவு மேருவோடு நாண் உலாவு பாணியும்,
தூண் உலாவு தோளும், வாளியூடு உலாவு தூணியும்,
வாள் நிலாவின் நூல் உலாவும் மாலை மார்பும்,
மீளவும்
காணல் ஆகும்? ஆகின், ஆவி காணல் ஆகுமேகொலாம்.
47
விண்தலம் கலந்து இலங்கு திங்களோடு, மீது சூழ்
வண்டு அலம்பு அலங்கல் தங்கு பங்கியோடும், வார்
சிலைக்
கொண்டல் ஒன்று, இரண்டு கண்ணின் மொண்டு கொண்டு,
என் ஆவியை
உண்டது உண்டு;என் நெஞ்சில் இன்னும்உண்டு;அது
என்றும்உண்டு அரோ!48
'பஞ்சு அரங்கு தீயின் ஆவி பற்ற, நீடு கொற்ற
வில்
வெஞ் சரங்கள் நெஞ்சு அரங்க, வெய்ய காமன் எய்யவே,
சஞ்சலம் கலந்தபோது, தையலாரை, உய்ய வந்து,
"அஞ்சல்! அஞ்சல்!" என்கிலாத ஆண்மை
என்ன ஆண்மையே? 49
இளைக்கலாத கொங்கைகாள்! எழுந்து விம்மி என்
செய்வீர்!
முளைக்கலா மதிக்கொழுந்து போலும் வாள் முகத்தினான்.
விளைக்கலாத விற் கையாளி, வள்ளல், மார்பின்
உள்ளுறத்
திளைக்கல் ஆகும் ஆகில், ஆன செய் தவங்கள் செய்ம்மினே!
50
எங்கு நின்று எழுந்தது, இந்த இந்து? வந்து
என் நெஞ்சு உலா
அங்கு இயன்று, அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை
நோய்
பொங்குகின்ற கொங்கைமேல் விடம் பொழிந்தது; என்னினும்,
கங்குல் வந்த திங்கள் அன்று; அகம் களங்கம்
இல்லையே! 51
'அடர்ந்த வந்து, அனங்கன், நெஞ்சு அழன்று சிந்தும்
அம்பு எனும்
விடம் குடைந்த மெய்யின்நின்று வெந்திடாது எழுந்து,
வெங்
கடம் துதைந்த காரி யானை அன்ன காளை தாள் அடைந்து,
உடன் தொடர்ந்து போன ஆவி வந்தவா என்? - உள்ளமே!
52
'விண்ணுளே எழுந்த மேகம் மார்பின் நூலின் மின்னொடு,
இம்
மண்ணுளே இழிந்தது என்ன, வந்து போன மைந்தனார்,
எண்ணுளே இருந்த போதும், யாவரென்று தேர்கிலென்;
கண்ணுளே இருந்த போதும், என்கொல் காண்கிலாதவே?
53
'பெய் கடல் பிறந்து, அயல் பிறக்கொணா மருந்து
பெற்று,
ஐய பொற் கலத்தொடு அங்கை விட்டு இருந்த ஆதர்போல்,
மொய் கிடங்கும் அண்ணல் தோள் முயங்கிடாது முன்னமே,
கைகடக்க விட்டு இருந்த கட்டுரைப்பது என்கொலோ?'
54
ஒன்று கொண்டு, உள் நைந்து நைந்து, இரங்கி,
விம்மி விம்மியே,
பொன் திணிந்த கொங்கை மங்கை இடரின் மூழ்கு போழ்தின்வாய்,
குன்றம் அன்ன சிலை முறிந்த கொள்கை கண்டு, குளிர்
மனத்து
ஒன்றும் உண்கண் மதி முகத்து ஒருத்தி செய்தது
உரைசெய்வாம்: 55
நீலமாலை வில் முறிந்த செய்தியை சீதையிடம் செப்புதல்
வடங்களும் குழைகளும் வான வில்லிட,
தொடர்ந்த பூங் கலைகளும் குழலும் சோர்தர,
நுடங்கிய மின் என நொய்தின் எய்தினாள்,
நெடுந் தடங் கிடந்த கண் நீலமாலையே. 56
வந்து அடி வணங்கிலள்; வழங்கும் ஓதையள்;
அந்தம் இல் உவகையள், ஆடிப் பாடினள்,
'சிந்தையுள் மகிழ்ச்சியும், புகுந்த செய்தியும்,
சுந்தரி! சொல்' என, தொழுது சொல்லுவாள்: 57
'தய ரத துரக மாக் கடலன், கல்வியன்,
தயரதன் எனும் பெயர்த் தனிச் செல் நேமியான்,
புயல் பொழி தடக் கையான், புதல்வன்; பூங் கணை
மயல் விளை மதனற்கும் வடிவு மேன்மையான்; 58
மரா மரம் இவை என வளர்ந்த தோளினான்;
"அரா-அணை அமலன்" என்று அயிர்க்கும்
ஆற்றலான்;
'இராமன்' என்பது பெயர்; இளைய கோவொடும்,
பராவ அரு முனியொடும், பதி வந்து எய்தினான்;
59
'"பூண் இயல் மொய்ம்பினன், புனிதன் எய்த
வில்
காணிய வந்தனன்" என்ன, காவலன்
ஆணையின் அடைந்த வில் அதனை, ஆண்தகை,
நாண் இனிது ஏற்றினான்; நடுங்கிற்று உம்பரே!
60
'மாத்திரை அளவில் தாள் மடுத்து, முன் பயில்
"சூத்திரம் இது" என, தோளின் வாங்கினான்;
ஏத்தினர் இமையவர்; இழிந்த, பூ மழை;
வேத்தவை நடுக்குற முறிந்து வீழ்ந்ததே!' 61
சீதை ஐயம் நீங்கி, அகத்துள் உறுதி பூணுதல்
'கோமுனியுடன் வரு கொண்டல்' என்ற பின்,
'தாமரைக் கண்ணினான்' என்ற தன்மையால்,
'ஆம்; அவனேகொல்' என்று, ஐயம் நீங்கினாள்-
வாம மேகலையினுள் வளர்ந்தது, அல்குலே! 62
'இல்லையே நுசுப்பு' என்பார், 'உண்டு, உண்டு'
என்னவும்,
மெல்லியல், முலைகளும் விம்ம விம்முவாள்;
'சொல்லிய குறியின், அத் தோன்றலே அவன்;
அல்லனேல், இறப்பென்' என்று, அகத்துள் உன்னினாள்.
63
சனகன் முனிவனிடம் திருமணம் குறித்து வினாவுதல்
ஆசையுற்று அயர்பவள் இன்னள் ஆயினள்;
பாசடைக் கமலத்தோன் படைத்த வில் இறும்
ஓசையின் பெரியது ஓர் உவகை எய்தி, அக்
கோசிகற்கு ஒரு மொழி, சனகன் கூறுவான்: 64
'உரை செய்-எம் பெரும! உன் புதல்வன் வேள்விதான்,
விரைவின், இன்று, ஒரு பகல் முடித்தல் வேட்கையோ?
முரசு எறிந்து அதிர் கழல் முழங்கு தானை அவ்
அரசையும், இவ் வழி அழைத்தல் வேட்கையோ? 65
முனிவன் மொழிப்படி, சனகன் தயரதனுக்குத் தூது
விடுத்தல்
மல் வலான் அவ் உரை பகர, மா தவன்,
'ஒல்லையில் அவனும் வந்துறுதல், நன்று என,
எல்லை இல் உவகையான், 'இயைந்தவாறு எலாம்
சொல்லுக' என்று, ஓலையும் தூதும் போக்கினான்.
66
மிகைப் பாடல்கள்
புக்கனர்; சனகர் கோன், 'பொரு இல் நீங்கள்தாம்
ஒக்கவே வில்லினை உரத்து அடுத்து எடுத்து,
இக் கணத்து எய்துவீர்' என்றனன்; என,
மிக்கவர் அவ் உரை விளம்பினார் அரோ. 2-1
புக்கனர், அவர்களைப் பொருந்த நோக்கி, 'இம்
முக்கணன் வில்லினை மொய்ம்பின் ஆற்றலோடு
இக் கணத்து அளித்திர் என்று, எம்மை ஆளுடை
மிக்குறு சனகனும் விளம்பினான்' என்றார்.
2-2
என்று சாலவே வெதும்பி இன்ன இன்னவாறெலாம்
ஒன்றலாது பன்னி ஆவி ஊசலாட வாடுவாள்
மன்றல் நாறு மாலை மீளி மான யானை போல முன்
சென்ற வீதியூடு பார்வை செல்லநிற்கும் எல்லையே.
54-1
என்று மாதராள் நினைத்து, இவ் இடரின் மூழ்கு
போதினில்,
குன்றுபோல் எழுந்த கொங்கை மங்கை கொம்பை அன்னவள்,
'வென்றி வீரன் இங்கு வந்து வில் இறுத்த மேன்மையைச்
சென்று கூறுவோம்' எனத் தெளிந்து சிந்தை முந்துவாள்.
55-1
14. எழுச்சிப் படலம்
சனகன் தூதர் தயரதனை அடுத்து, செய்தி தெரிவித்தல்
கடுகிய தூதரும், காலில் காலின் சென்று,
இடி குரல் முரசு அதிர் அயோத்தி எய்தினார்;
அடி இணை தொழ இடம் இன்றி, மன்னவர்
முடியொடு முடி பொரு வாயில் முன்னினார். 1
முகந்தனர் திருவருள், முறையின் எய்தினார்;
திகழந்து ஒளிர் கழல் இணை தொழுது, செல்வனைப்
புகழ்ந்தனர்; 'அரச! நின் புதல்வர் போய பின்
நிகழ்ந்ததை இது' என, நெடிது கூறினார். 2
தயரதன் உவகையுற்று மொழிதல்
கூறிய தூதரும், கொணர்ந்த ஓலையை,
'ஈறு இல் வண் புகழினாய்! இது அது' என்றனர்;
வேறு ஒரு புலமகன் விரும்பி வாங்கினான்;
மாறு அதிர் கழலினான், 'வாசி' என்றனன். 3
இலை முகப் படத்து அவன் எழுதிக் காட்டிய
தலை மகன் சிலைத் தொழில் செவியில் சார்தலும்,
நிலை முக வலையங்கள் நிமிர்ந்து நீங்கிட,
மலை என வளர்ந்தன, வயிரத் தோள்களே. 4
வெற்றிவேல் மன்னவன், 'தக்கன் வேள்வியில்,
கற்றை வார் சடை முடிக் கணிச்சி வானவன்,
முற்ற ஏழ் உலகையும் வென்ற மூரி வில்
இற்ற பேர் ஒலிகொலாம் இடித்தது, ஈங்கு?' என்றான்.
5
தூதுவர்க்கு பரிசு வழங்குதல்
என்று உரைத்து எதிர் எதிர், இடைவிடாது, 'நேர்
துன்றிய கனை கழல் தூதர் கொள்க!' எனா,
பொன் திணி கலங்களும் தூசும் போக்கினான் -
குன்று என உயரிய குவவுத் தோளினான். 6
'சேனையும் அரசரும் மிதிலைக்கு முந்துக!' என
தயரதன் ஆணைப்படி, வள்ளுவன் மணமுரசு அறைதல்
'வானவன் குலத்து எமர் வரத்தினால் வரும்
வேனில் வேள் இருந்த அம் மிதிலை நோக்கி, நம்
சேனையும் அரசரும் செல்க, முந்து!' எனா,
'ஆனைமேல் மணமுரசு அறைக!' என்று ஏவினான். 7
வாம் பரி விரி திரைக் கடலை, வள்ளுவன்,-
தேம் பொழி துழாய் முடிச் செங் கண் மாலவன்,
ஆம் பரிசு, உலகு எலாம் அளந்துகொண்ட நாள்,
சாம்புவன் திரிந்தென,-திரிந்து சாற்றினான்.
8
நால்வகை சேனையின் எழுச்சி
விடை பொரு நடையினான் சேனை வெள்ளம், 'ஓர்
இடை இலை, உலகினில்' என்ன, ஈண்டிய;
கடையுக முடிவினில், எவையும் கால் பட,
புடை பெயர் கடல் என, எழுந்து போயதே. 9
சில் இடம் உலகு எனச் செறிந்த தேர்கள்தாம்
புல்லிடு சுடர் எனப் பொலிந்த, வேந்தரால்;
எல் இடு கதிர் மணி எறிக்கும் ஓடையால்,
வில் இடும் முகில் எனப் பொலிந்த, வேழமே.
10
கால் விரிந்து எழு குடை, கணக்கு இல் ஓதிமம்,
பால் விரிந்து, இடை இடை பறப்ப போன்றன;
மேல் விரிந்து எழு கொடிப் படலை, விண் எலாம்
தோல் உரிந்து உகுவன போன்று தோன்றுமால்! 11
நுடங்கிய துகிற் கொடி நூழைக் கைம் மலைக்
கடம் கலுழ் சேனையை, 'கடல் இது ஆம்' என,
இடம் பட எங்கணும் எழுந்த வெண் முகில்,
தடம் புனல் பருகிடத் தாழ்வ போன்றவே. 12
இழையிடை இள வெயில் எறிக்கும்; அவ் வெயில்,
தழையிடை நிழல் கெடத் தவழும்; அத் தழை,
மழையிடை எழில் கெட மலரும்; அம் மழை,
குழைவுற முழங்கிடும், குழாம் கொள் பேரியே.
13
மன் மணிப் புரவிகள் மகளிர் ஊர்வன,
அன்னம் உந்திய திரை ஆறு போன்றன;
பொன் அணி புணர் முலைப் புரி மென் கூந்தலார்
மின் என, மடப் பிடி மேகம் போன்றவே. 14
சேனைகள் சென்ற பெரு வழி
இணை எடுத்து இடை இடை நெருக்க, ஏழையர்
துணை முலைக் குங்குமச் சுவடும், ஆடவர்
மணி வரைப் புயந்து மென்சாந்தும், மாழ்கி, மெல்
அணை எனப் பொலிந்தது - அக் கடல் செல் ஆறுஅரோ.
15
மகளிர் ஆடவர் திரள்
முத்தினால், முழு நிலா எறிக்கும்; மொய்ம் மணிப்
பத்தியால், இள வெயில் பரப்பும்;-பாகினும்
தித்தியாநின்ற சொல் சிவந்த வாய்ச்சியர்
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே. 16
வில்லினர்; வாளினர்; வெறித்த குஞ்சியர்;
கல்லினைப் பழித்து உயர் கனகத் தோளினர்;
வல்லியின் மருங்கினர் மருங்கு, மாப் பிடி
புல்லிய களிறு என, மைந்தர் போயினார். 17
மன்றல் அம் புது மலர் மழையில் சூழ்ந்தெனத்
துன்று இருங் கூந்தலார் முகங்கள் தோன்றலால்,
ஒன்று அலா முழுமதி ஊரும் மானம்போல்,
சென்றன தரள வான் சிவிகை ஈட்டமே. 18
யானைகளும் குதிரைகளும் சென்ற காட்சி
மொய் திரைக் கடல் என முழங்கு மூக்குடைக்
கைகளின், திசை நிலைக் களிற்றை ஆய்வன, -
மையல் உற்று, இழி மத மழை அறாமையால்,
தொய்யலைக் கடந்தில, சூழி யானையே. 19
சூருடை நிலை என, தோய்ந்தும் தோய்கிலா
வாருடை வனமுலை மகளிர் சிந்தைபோல்,
தாரொடும் சதியொடும் தாவும் ஆயினும்,
பாரிடை மிதிக்கில - பரியின் பந்தியே. 20
மகளிரின் ஊடல்
ஊடிய மனத்தினர், உறாத நோக்கினர்,
நீடிய உயிர்ப்பினர், நெரிந்த நெற்றியர்;
தோடு அவிழ் கோதையும் துறந்த கூந்தலர்;
ஆடவர் உயிர் என அருகு போயினார். 21
தறுகண் யானையின் செலவு
மாறு எனத் தடங்களைப் பொருது, மா மரம்
ஊறு பட்டு இடையிடை ஒடித்து, சாய்த்து, உராய்,
ஆறு எனச் சென்றன-அருவி பாய் கவுள்,
தாறு எனக் கனல் உமிழ் தறுகண் யானையே. 22
தயரதனது படைப் பெருக்கம்
உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்,
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான்
எழுந்திலன்; எழுந்து இடைப் படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே!
23
மூடு வண்டியில் இருந்த மகளிரின் முகமும் நோக்கமும்
கண்டவர் மனங்கள் கைகோப்பக் காதலின்,
வண்டு இமிர் கோதையர் வதன ராசியால்,
பண் திகழ் பண்டிகள் பரிசின் செல்வன,
புண்டரிகத் தடம் போவ போன்றவே. 24
பாண்டிலின் வையத்து ஓர் பாவை தன்னொடும்
ஈண்டிய அன்பினோடு ஏகுவான், இடைக்
காண்டலும், நோக்கிய கடைக்கண் அஞ்சனம்,
ஆண்தகைக்கு இனியது ஓர் அமுதம் ஆயதே! 25
மனைவியைப் பிரிந்து சேனையோடு செல்லும் ஓர்
ஆடவனின் நிலை
பிள்ளை மான் நோக்கியைப் பிரிந்து போகின்றான்,
அள்ளல் நீர் மருத வைப்பு அதனில், அன்னம் ஆம்
புள்ளும் மென் தாமரைப் பூவும் நோக்கினான்,
உள்ளமும் தானும் நின்று ஊசலாடினான். 26
தானை சென்ற காட்சி
அம் கண் ஞாலத்து அரசு மிடைந்து, அவர்
பொங்கு வெண்குடை சாமரை போர்த்தலால்,
கங்கை யாறு கடுத்தது - கார் எனச்
சங்கு, பேரி, முழங்கிய தானையே. 27
அமரர் அம் சொல் அணங்கு அனையார் உயிர்
கவரும் கூர் நுதிக் கண் எனும் காலவேல்,
குமரர் நெஞ்சு குளிப்ப வழங்கலால்,
சமர பூமியும் ஒத்தது - தானையே. 28
தோள் மிடைந்தன, தூணம் மிடைந்தென;
வாள் மிடைந்தன, வான்மின் மிடைந்தென;
தாள் மிடைந்தன, தம்மி மிடைந்தென;
ஆள் மிடைந்தன, ஆளி மிடைந்தென. 29
இளைஞர்களின் காதல் நாடகம்
வார் குலாம் முலை வைத்த கண் வாங்கிடப்
பேர்கிலாது பிறங்கு முகத்தினான்
தேர்கிலான், நெறி; அந்தரில் சென்று, ஒரு
மூரி மா மத யானையை முட்டினான். 30
சுழி கொள் வாம் பரி துள்ள, ஒர் தோகையாள்
வழுவி வீழலுற்றாளை, ஒர் வள்ளல் தான்,
எழுவின் நீள் புயத்தால் எடுத்து ஏந்தினான்;
தழுவி நின்று ஒழியான்; தரை மேல் வையான்.
31
துணைத்த தாமரை நோவத் தொடர்ந்து, அடர்
கணைக் கருங் கணினாளை ஓர் காளைதான்,
'பணைத்த வெம் முலைப் பாய் மத யானையை
அணைக்க, நங்கைக்கு, அகல் இடம் இல்' என்றான்.
32
சுழியும் குஞ்சிமிசைச் சுரும்பு ஆர்த்திட,
பொழியும் மா மத யானையின் போகின்றான்,
கழிய கூரிய என்று ஒரு காரிகை
விழியை நோக்கி, தன் வேலையும் நோக்கினான்.
33
தரங்க வார் குழல் தாமரைச் சீறடிக்
கருங் கண் வாள் உடையாளை, ஒர் காளைதான்,
'நெருங்கு பூண் முலை நீள் வளைத் தோளினீர்!
மருங்குல் எங்கு மறந்தது நீர்?' என்றான்.
34
கூற்றம் போலும் கொலைக் கணினால் அன்றி,
மாற்றம் பேசுகிலாளை, ஒர் மைந்தன் தான்,
'ஆற்று நீரிடை, அம் கைகளால் எடுத்து
ஏற்றுவார் உமை, யாவர் கொலோ?' என்றான். 35
ஒட்டகங்கள் சென்ற வகை
தள்ள அரும் பரம் தாங்கிய ஒட்டகம்,
தெள்ளு தேம் குழை யாவையும் தின்கில;
உள்ளம் என்னத் தம் வாயும் உலர்ந்தன,
கள் உண் மாந்தரின் கைப்பன தேடியே. 36
பப்பரர் பாரம் சுமந்து செல்லுதல்
அரத்த நோக்கினர், அல் திரள் மேனியர்,
பரிந்த காவினர், பப்பரர் ஏகினார்-
திருந்து கூடத்தைத் திண் கணையத்தொடும்
எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே. 37
பிடியின் மேல் செல்லும் மகளிர்
பித்த யானை பிணங்கி, பிடியில் கை
வைத்த; மேல் இருந்து அஞ்சிய மங்கைமார்,
எய்த்து இடுக்கண் உற்றார், புதைத்தார்க்க்கு
இரு
கைத்தலங்களில் கண் அடங்காமையே. 38
சித்தர் தம் மடவாரோடு பிடியில் சென்றவகை
வாம மேகலையாரிடை, வாலதி
பூமி தோய் பிடி, சிந்தரும் போயினார்-
காமர் தாமரை நாள்மலர்க் கானத்துள்,
ஆமைமேல் வரும் தேரையின் ஆங்கு அரோ. 39
ஒருத்தியை தன் முதுகில் கொண்டு ஓடும் குதிரையின்
தோற்றம்
இம்பர் நாட்டின் தரம் அல்லள், ஈங்கு இவள்;
உம்பர் கோமகற்கு' என்கின்றது ஒக்குமால்-
கம்ப மா வர, கால்கள் வளைத்து, ஒரு
கொம்பு அனாளைக் கொண்டு ஓடும் குதிரையே! 40
மகளிர் மனம் களித்து ஓடுதல்
தந்த வார்குழல் சோர்பவை தாங்கலார்,
சிந்து மேகலை சிந்தையும் செய்கலார்,
'எந்தை வில் இறுத்தான்' எனும் இன் சொலை
மைந்தர் பேச, மனம் களித்து ஓடுவார். 41
அந்தணர் முற்பட்டுச் செல்லுதல்
குடையர், குண்டிகை தூக்கினர், குந்திய
நடையர், நாசி புதைத்த கை நாற்றலர்,-
கட களிற்றையும் காரிகையாரையும்
அடைய அஞ்சிய, அந்தணர்-முந்தினார். 42
நங்கையர் திரண்டு செல்லுதல்
நாறு பூங் குழல் நங்கையர் கண்ணின் நீர்
ஊறு நேர் வந்து உருவு வெளிப்பட,
'மாறு கொண்டனை வந்தனை ஆகில், வந்து
ஏறு தேர்' எனக் கைகள் இழிச்சுவார். 43
குரைத்த தேரும், களிறும் குதிரையும்,
நிரைத்த வார் முரசும், நெளிந்து எங்கணும்
இரைத்த பேர் ஒலியால், இடை, யாவரும்
உரைத்த உணர்ந்திலர்; ஊமரின் ஏகினார். 44
நுண் சிலம்பி வலந்தன நுண் துகில்,
கள் சிலம்பு கருங் குழலார் குழ
உள் சிலம்பு சிலம்ப ஒதுங்கலால்,
உள் சிலம்பிடு பொய்கையும் போன்றதே. 45
மகளிர் கண்களைக் கண்ட ஆடவர்களின் மகிழ்ச்சி
தெண் திரைப் பரவைத் திரு அன்னவர்,
நுண் திரைப் புரை நோக்கிய நோக்கினை,
கண்டு இரைப்பன, ஆடவர் கண்; களி
வண்டு இரைப்பன, ஆனை மதங்களே. 46
உழை கலித்தன என்ன, உயிர்த் துணை
நுழை கலிக் கருங் கண்ணியர் நூபுர
இழை கலித்தன; இன் இயமா, எழும்
மழை கலித்தென, வாசி கலித்தவே. 47
மண் களிப்ப நடப்பவர் வாள் முக
உண் களிக் கமலங்களின் உள் உறை
திண் களிச் சிறு தும்பி என, சிலர்
கண் களித்தன, காமன் களிக்கவே. 48
சுண்ணமும் தூளியும் நிறைய, யாவரும் செல்லுதலால்
புழுதி கிளம்புதல்
எண்ண மாத்திரமும் அரிதாம் இடை,
வண்ண மாத்துவர் வாய், கனி வாய்ச்சியர்,
திண்ணம் மாத்து ஒளிர் செவ் இளநீர், இழி
சுண்ணம் ஆத்தன; தூளியும் ஆத்தவே. 49
சித்திரத் தடந் தேர் மைந்தர் மங்கையர்,
உய்த்து உரைப்ப, நினைப்ப, உலப்பிலர்,
இத் திறத்தினர் எத்தனையோ பலர்,
மொய்த்து இரைத்து வழிக்கொண்டு முன்னினார்.
50
குசை உறு பரியும், தேரும், வீரரும், குழுமி,
எங்கும்
விசையொடு கடுகப் பொங்கி வீங்கிய தூளி விம்மி,
பசை உறு துளியின் தாரைப் பசுந் தொளை அடைத்த,
மேகம்;
திசைதொறும் நின்ற யானை மதத் தொளை செம்மிற்று
அன்றே. 51
மங்கையரை ஆடவர் அழைத்துச் சென்ற வகை
கேட்கத் தடக் கையாலே, கிளர் ஒளி வாளும் பற்றி,
சூடகத் தளிர்க் கை, மற்றைச் சுடர் மணித் தடக்
கை பற்றி,
ஆடகத்து ஓடை யானை அழி மதத்து இழுக்கல் - ஆற்றில்,
பாடகக் காலினாரை, பயப் பயக் கொண்டு போனார்.
52
மலர் பறித்துத் தருமாறு மகளிர் கணவரை வேண்டுதல்
செய்களின் மடுவில், நல் நீர்ச் சிறைகளில்,
நிறையப் பூத்த
நெய்தலும், குமுதப் பூவும், நெகிழ்ந்த செங்
கமலப் போதும்,
கைகளும், முகமும், வாயும், கண்களும், காட்ட,
கண்டு,
'கொய்து, அவை தருதிர்' என்று, கொழுநரைத் தொழுகின்றாரால்.
53
யானை வருதல் அறிந்து மகளிர் ஓடுதல்
பந்தி அம் புரவிநின்றும் பாரிடை இழிந்தோர்,
வாசக்
குந்தள பாரம் சோர, குலமணிக் கலன்கள் சிந்த,
சந்த நுண் துகிலும் வீழ, தளிர்க் கையால் அணைத்து,
'சார
வந்தது வேழம்' என்ன, மயில் என இரியல் போவார்.
54
குடை, கொடியின் நெருக்கம்
குடையொடு பிச்சம், தொங்கல் குழாங்களும், கொடியின்
காடும்,
இடை இடை மயங்கி, எங்கும் வெளி சுரந்து இருளைச்
செய்ய,
படைகளும், முடியும், பூணும், படர் வெயில் பரப்பிச்
செல்ல-
இடை ஒரு கணத்தினுள்ளே, இரவு உண்டு, பகலும்
உண்டே! 55
மகளிர்க்கு செல்ல ஆடவர் வழி விட்டு விலகுதல்
முருக்கு இதழ் முத்த மூரல் முறுவலார் முகங்கள்
என்னும்
திருக் கிளர் கமலப் போதில் தீட்டின கிடந்த
கூர் வாள்,
'நெருக்கு இடை அறுக்கும்; நீவிர் நீங்குமின்
நீங்கும்' என்று என்று,
அருக்கனில் ஒளிரும் மேனி ஆடவர் அகலப் போவார்.
56
நந்த அரு நெறியின் உற்ற நெருக்கினால் சுருக்குண்டு
அற்று,
காந்தின மணியும் முத்தும் சிந்தின, கலாபம்
சூழ்ந்த
பாந்தளின் அல்குலார்தம் பரிபுரம் புலம்பு பாதப்
பூந் தளிர் உறைப்ப, மாழ்கி, 'போக்கு அரிது'
என்ன நிற்பார். 57
இசை கேட்டு எருதுகள் மிரண்டு ஓடுதல்
கொற்ற நல் இயங்கள் எங்கும் கொண்டலின் துவைப்ப,
பண்டிப்
பெற்ற ஏறு, அன்னப் புள்ளின் பேதையர் வெருவி
நீங்க,
முற்று உறு பரங்கள் எல்லாம், முறை முறை, பாசத்தோடும்
பற்று அற வீசி ஏகி, யோகியின் பரிவு தீர்ந்த.
58
நீர்நிலைகளில் படிந்த யானைகள்
கால் செறி வேகப் பாகர் கார்முக உண்டை பாரா,
வார்ச் செறி கொங்கை அன்ன கும்பமும் மருப்பும்
காணப்
பால் செறி கடலில் தோன்றும் பனைக் கை மால் யானை
என்ன,
நீர்ச் சிறை பற்றி, ஏறா நின்ற - குன்று அனைய
வேழம். 59
பாணரும் விறலியரும் இசையுடன் பாடல்
அறல் இயல் கூந்தல், கண் வாள், அமுது உகு குமுதச்
செவ் வாய்,
விறலியரோடு, நல் யாழ்ச் செயிரியர், புரவி மேலார்,
நறை செவிப் பெய்வது என்ன, நைவள அமுதப் பாடல்
முறை முறை பகர்ந்து போனார், கின்னர மிதுனம்
ஒப்பார். 60
மத யானைகளின் போக்கு
அருவி பெய் வரையின் பொங்கி, அங்குசம் நிமிர,
எங்கும்
இரியலின் சனங்கள் சிந்த, இளங் களிச் சிறு கண்
யானை,
விரி சிறைத் தும்பி, வேறு ஓர் வீழ் மதம் தோய்ந்து,
மாதர்
சுரி குழல் படிய, வேற்றுப் பிடியொடும் தொடர்ந்து
செல்ப. 61
தயரனது நேய மங்கையரின் எழுச்சி
நிறை மதித் தோற்றம் கண்ட நீல் நெடுங் கடலிற்று
ஆகி,
அறை பறை துவைப்ப, தேரும், ஆனையும், ஆடல் மாவும்,
கறை கெழு வேல் கணாரும், மைந்தரும், கவினி,
ஒல்லை
நெறியிடைப் படர, வேந்தன் நேய மங்கையர் செல்வார்.
62
அரசியர் மூவரும் செல்லுதல்
பொய்கை அம் கமலக் கானில் பொலிவது ஓர் அன்னம்
என்ன,
கைகயர் வேந்தன் பாவை, கணிகையர் ஈட்டம் பொங்கி
ஐ - இருநூறு சூழ, ஆய் மணிச் சிவிகைதன்மேல்,
தெய்வ மங்கையரும் நாண, தேன் இசை முரல, போனாள்.
63
விரி மணித் தார்கள் பூண்ட வேசரி வெரிநில் தோன்றும்
அரி மலர்த் தடங் கண் நல்லார் ஆயிரத்து இரட்டி
சூழ,
குரு மணிச் சிவிகைதன் மேல், கொண்டலின் மின்
இது என்ன,
இருவரைப் பயந்த நங்கை, யாழ் இசை முரல, போனாள்.
64
வெள் எயிற்று இலவச் செவ் வாய் முகத்தை வெண்
மதியம் என்று,
கொள்ளையின் சுற்று மீன்கள் குழுமிய அனைய ஊர்தி,
தெள் அரிப் பாண்டிற் பாணிச் செயிரியர் இசைத்
தேன் சிந்த,
வள்ளலைப் பயந்த நங்கை, வானவர் வணங்க, போனாள்.
65
செங் கையில், மஞ்ஞை, அன்னம், சிறு கிளி, பூவை,
பாவை,
சங்கு உறை கழித்த அன்ன சாமரை, முதல தாங்கி,
'இங்கு அலது, எண்ணுங்கால், இவ் எழு திரை வளாகம்
தன்னில்
மங்கையர் இல்லை' என்ன, மடந்தையர், மருங்கு
போனார். 66
ஏவல்மாந்தர் சுற்றிலும் காவல் புரிந்து செல்லுதல்
காரணம் இன்றியேயும் கனல் எழ விழிக்கும் கண்ணார்,
வீர வேத்திரத்தார், தாழ்ந்து விரிந்த கஞ்சுகத்து
மெய்யார்,
தார் அணி புரவி மேலார், தலத்து உளார், கதித்த
சொல்லார்,
ஆர் அணங்கு அனைய மாதர், அடி முறை காத்துப்
போனார். 67
கூனொடு குறளும், சிந்தும், சிலதியர் குழாமும்,
கொண்ட
பால் நிறப் புரவி அன்னப் புள் எனப் பாரில்
செல்ல,
தேனொடு மிஞிறும் வண்டும் தும்பியும் தொடர்ந்து
செல்லப்
பூ நிறை கூந்தல் மாதர் புடை பிடி நடையில் போனார்.
68
துப்பினின், மணியின், பொன்னின், சுடர் மரகதத்தின்,
முத்தின்,
ஒப்பு அற அமைத்த வையம், ஓவியம் புகழ ஏறி,
முப்பதிற்று - இரட்டி கொண்ட ஆயிரம், முகிழ்
மென் கொங்கைச்
செப்ப அருந் திருவின் நல்லார், தெரிவையர் சூழப்
போனார். 69
வசிட்டன் சிவிகையில் செல்லுதல்
செவி வயின் அமுதக் கேள்வி தெவிட்டினார், தேவர்
நாவின்
அவி கையின் அளிக்கும் நீரார், ஆயிரத்து இரட்டி
சூழ,
கவிகையின் நீழல், கற்பின் அருந்ததி கணவன்,
வெள்ளைச்
சிவிகையில், அன்னம் ஊரும் திசைமுகன் என்ன,
சென்றான். 70
பரத சத்துருக்கனர் வசிட்டன் பின் செல்லுதல்
பொரு களிறு, இவுளி, பொன் தேர், பொலங் கழல்
குமரர், முந்நீர்
அரு வரை சூழ்ந்தது என்ன, அருகு முன் பின்னும்
செல்ல,
திரு வளர் மார்பர், தெய்வச் சிலையினர், தேரர்,
வீரர்,
இருவரும், முனி பின் போன இருவரும் என்ன, போனார்.
71
தயரதன் போதல்
நித்திய நியமம் முற்றி, நேமியான் பாதம் சென்னி
வைத்த பின், மறை வல்லோர்க்கு வரம்பு அறு மணியும்
பொன்னும்,
பத்தி ஆன் நிரையும், பாரும், பரிவுடன் நல்கி,
போனான் -
முத்து அணி வயிரப் பூணான், மங்கல முகிழ்ந்த
நல் நாள். 72
அரசர் குழாம் தயரதனைச் சூழ்ந்து செல்லுதல்
இரு பிறப்பாளர் எண்ணாயிரர், மணிக் கலசம் ஏந்தி,
அரு மறை வருக்கம் ஓதி, அறுகு நீர் தெளித்து
வாழ்த்தி;
வரன் முறை வந்தார், கோடி மங்கல மழலைச் செவ்வாய்ப்
பரு மணிக் கலாபத்தார், பல்லாண்டு இசை பரவிப்
போனார். 73
'கண்டிலன் என்னை' என்பார்; 'கண்டனன் என்னை'
என்பார்;
'குண்டலம் வீழ்ந்தது' என்பார்; 'குறுக அரிது,
இனிச் சென்று' என்பார்;
'உண்டு கொல், எழுச்சி?' என்பார்; 'ஒலித்தது
சங்கம்' என்பார்;
மண்டல வேந்தர் வந்து நெருங்கினர், மருங்கு
மாதோ. 74
பொற்றொடி மகளிர் ஊரும் பொலன் கொள் தார்ப் புரவி
வெள்ளம்,
சுற்றுறு கமலம் பூத்த தொடு கடல் திரையின் செல்ல,
கொற்ற வேல் மன்னர் செங் கைப் பங்கயப் குழாங்கள்
கூம்ப,
மற்று ஒரு கதிரோன் என்ன, மணி நெடுந் தேரில்
போனான். 75
ஆர்த்தது, விசும்பை முட்டி; மீண்டு, அகன் திசைகள்
எங்கும்
போர்த்தது; அங்கு, ஒருவர் தம்மை ஒருவர் கட்புலம்
கொளாமைத்
தீர்த்தது; செறிந்தது ஓடி, திரை நெடுங் கடலை
எல்லாம்
தூர்த்தது, சகரரோடு பகைத்தென, - தூளி வெள்ளம்.
76
சங்கமும் பணையும் கொம்பும் தாளமும் காளத்தோடு
மங்கல பேரி செய்த பேர் ஒலி மழையை ஓட்ட,
தொங்கலும் குடையும் தோகைப் பிச்சமும் சுடரை
ஓட்ட,
திங்கள் வெண்குடை கண்டு ஓட, தேவரும் மருள,
- சென்றான். 77
மந்திர கீத ஓதை, வலம்புரி முழங்கும் ஓதை,
அந்தணர் ஆசி ஓதை, ஆர்த்து எழு முரசின் ஓதை,
கந்து கொல் களிற்றின் ஓதை, கடிகையர் கவியின்
ஓதை,-
இந்திர திருவன் செல்ல-எழுந்தன, திசைகள் எல்லாம்.
78
நோக்கிய திசைகள் தோறும் தன்னையே நோக்கிச் செல்ல,
வீக்கிய கழற் கால், வேந்தர் விரிந்த கைம் மலர்கள்
கூப்ப,
தாக்கிய களிறும் தேரும் புரவியும் படைஞர் தாளும்
ஆக்கிய தூளி, விண்ணும் மண்ணுலகு ஆக்க,-போனான்.
79
வீரரும், களிறும், தேரும், புரவியும் மிடைந்த
சேனை,
பேர்வு இடம் இல்லை; மற்று ஓர் உலகு இல்லை,
பெயர்க்கலாகா;
நீருடை ஆடையாளும் நெளித்தனள் முதுகை என்றால்,
'பார் பொறை நீக்கினான்' என்று உரைத்தது எப்
பரிசு மன்னோ? 80
சந்திரசயிலத்தின் சாரலில் தயரதன் தங்குதல்
இன்னணம் ஏகி, மன்னன் யோசனை இரண்டு சென்றான்;
பொன் வரை போலும் இந்துசயிலத்தின் சாரல் புக்கான்;
மன்மதக் களிறும், மாதர் கொங்கையும், மாரன்
அம்பும்,
தென்வரைச் சாந்தும், நாறச் சேனை சென்று, இறுத்தது
அன்றே. 81
மிகைப் பாடல்கள்
ஓது நீதியின் கோசிக மா முனி ஓலை
தாது சேர் தொடைத் தயரதன் காண்க! தற் பிரிந்து
போது கானிடைத் தாடகை பொருப்பு எனப் புகுந்து,
வாது செய்து நின்று, இராகவன் வாளியால் மாண்டாள்.
3-1
'சிறந்த வேள்வி ஒன்று அமைத்தனென்; அது தனைச்
சிதைக்க,
இறந்த தாடகை புதல்வர் ஆம் இருவர் வந்து எதிர்த்தார்;
அறம் கொள் மாலவன் வாளியால் ஒருவன் தன் ஆவி
குறைந்து போயினன்; ஒருவன் போய்க் குரை கடல்
குளித்தான். 3-2
'கூட மேவு போர் அரக்கரை இளையவன் கொன்று,
நீடு வேள்வியும் குறை படாவகை நின்று நிரப்பி,
பாடல் மா மறைக் கோதமன் பன்னி சாபத்தை,
ஆடல் மா மலர்ச் சோலையில், இராகவன் அகற்றி,
3-3
'பொரு இல் மா மதில் மிதிலையில் புகுந்து, போர்
இராமன்
மருவு வார் சிலை முறித்தலின், சனகன் தன் மகளை,
"தருவென் யான்" என இசைந்தனன்; தான்
இங்கு விரைவின்
வருக' என்பதாம் வாசகம் கேட்டு, உளம் மகிழ்ந்தான்.
3-4
பன்னும் நான் மறை வசிட்டனும் பராவ அரு முனிக்கும்,
அன்னைமார்க்கும், தன் அமைச்சர்க்கும், சோபனம்
அறிவித்து,
இன்ன வாசக ஓலை அங்கு இட்ட தூதர்க்குச்
சொன்னம் ஆயிரம் கோடியும் தூசுடன் கொடுத்தான்.
3-5
மாண்ட பின்னரும் மந்திர வேள்வியும் இயற்றித்
தூண்டு அரும் பெரும் ..........
.............. ..............
............. ..............
.............. .............. ...............
............. .............. சனகனும் மகட்கொடை
நேர்ந்தான். 3-6
மன்னன் அங்கு அவர் பெருமகம் காணிய வருவான்
அன்ன வசிட்டன் அந்தணர் அரசர் ஆபாலர்
இன்னர் இன்றியே வருக என எழுதினன்; இச் சொல்
சொன்ன வாசகம் சொல்தொறும் அமுது எனச் சொரிந்த.
3-7
சாற்றிய முரசு ஒலி செவியில் சாருமுன்,
கோல் தொடி மகளிரும், கோல மைந்தரும்,
வேல் தரு குமரரும், வென்றி வேந்தரும்,
காற்று எறி கடல் எனக் களிப்பின் ஓங்கினர்.
8-1
எதிர் கொண்டு ஏந்தி ஓர் ஏந்திழை கொங்கை பூண்
அதிர, மார்பம் அழுந்தத் தழுவினான்,
'முதிரும் தோள் மலையோ, முலைக் குன்றமோ
அதிகம் என்பது அறிக வந்தேன்' என்றான்.
37-1
15.சந்திரசயிலப் படலம்
யானைகளை மரத்தில் பிணித்தலும், அவற்றின் செயல்களும்
கோவை ஆர் வடக் கொழுங் குவடு ஒடிதர நிவந்த,
ஆவி வேட்டன, வரிசிலை அனங்கன் மேல் கொண்ட,
பூவை வாய்ச்சியர் முலை சிலர் புயத்தொடும் பூட்ட,
தேவதாரத்தும், சந்தினும், பூட்டின - சில மா.
1
நேர் ஒடுங்கல் இல் பகையினை நீதியால் வெல்லும்
சோர்வு இடம் பெறா உணர்வினன் சூழ்ச்சியே போல,
காரொடும் தொடர் கவட்டு எழில், மராமரக் குவட்டை
வேரொடும் கொடு, கிரி என நடந்தது - ஓர் வேழம்.
2
திரண்ட தாள் நெடுஞ் செறி பணை மருது இடை ஒடியப்
புரண்டு பின் வரும் உரலொடு போனவன் போல,
உருண்டு கால் தொடர் பிறகிடு தறியொடும், ஒருங்கே
இரண்டு மா மரம் இடை இற நடந்தது - ஓர் யானை.
3
கதம் கொள் சீற்றத்தை ஆற்றுவான், இனியன கழறி,
பதம் கொள் பாகனும் மந்திரி ஒத்தனன்; பல் நூல்
விதங்களால், அவன், மெல்லென மெல்லென விளம்பும்
இதங்கள் கொள்கிலா இறைவனை ஒத்தது - ஓர் யானை.
4
மாறு காண்கிலதாய் நின்று, மழை என முழங்கும்
தாறு பாய் கரி, வன கரி தண்டத்தைத் தடவி,
பாறு பின் செல, கால் எனச் செல்வது, பண்டு ஓர்
ஆறு போகிய ஆறு போம் ஆறு போன்றதுவே. 5
பாத்த யானையின் பதங்களில் படு மதம் நாற,
காத்த அங்குசம் நிமிர்ந்திட, கால் பிடித்து
ஓடி,
பூத்த ஏழிலைப் பாலையைப் பொடிப் பொடி ஆக,
காத்திரங்களால், தலத்தொடும் தேய்ந்தது - ஓர்
களிறு. 6
அலகு இல் ஆனைகள் அநேகமும், அவற்றோடு மிடைந்த
திலக வாள் நுதல் பிடிகளும், குருளையும், செறிந்த
உலவை நீள் வனத்து, ஊதமே ஒத்த; அவ் ஊதத்
தலைவனே ஒத்துப் பொலிந்தது, சந்திரசயிலம்.
7
கருங்கல்லைப் பொன்னாக்கிச் சென்ற தேர்கள்
'தெருண்ட மேலவர், சிறியவர்ச் சேரினும், அவர்தம்
மருண்ட புன்மையை மாற்றுவர்' எனும் இது வழக்கே:
உருண்ட வாய்தொறும், பொன் உருள் உரைத்து உரைத்து
ஓடி,
இருண்ட கல்லையும் தன் நிறம் ஆக்கிய - இரதம்.
8
மலையில் இறங்கிய மகளிர், மர நிழல் மற்றும்
பளிக்குப் பாறையில் இளைப்பாறி, துயில் கொள்ளுதல்
கொவ்வை நோக்கிய வாய்களை, இந்திர கோபம்
கவ்வி நோக்கின என்றுகொல் - காட்டு இன மயில்கள்,
நவ்வி நோக்கியர், நலம் கொள் மேகலை, பொலஞ் சாயல்-
செவ்வி நோக்கின திரிவன போல்வன, திரிந்த? 9
உய்க்கும் வாசிகள் இழிந்து, இள அன்னத்தின்
ஒதுங்கி,
மெய்க் கலாபமும், குழைகளும், இழைகளும் விளங்க,
தொக்க மென் மர நிழல் படத் துவன்றிய சூழல்
புக்க மங்கையர், பூத்த கொம்பு ஆம் எனப் பொலிந்தார்.
10
தளம் கொள் தாமரை என, தளிர் அடியினும், முகத்தும்,
வளம் கொள் மாலை வண்டு அலமர, வழி வருந்தினர்
ஆய்,
விளங்கு தம் உருப் பளிங்கிடை வெளிப்பட, வேறு
ஓர்
துளங்கு பாறையில், தோழியர் அயிர்த்திடத் துயின்றார்.
11
பிடி புக்கு ஆயிடை, மின்னொடும் பிறங்கிய மேகம்
படி புக்காலெனப் படிதர, பரிபுரம் புலம்ப,
துடி புக்கா இடைத் திருமகள் தாமரை துறந்து
குடி புக்காலென, குடில் புக்கார் - கொடி அன்ன
மடவார். 12
வரிசையாகக் கட்டி வைத்த குதிரைகள்
உண் அமுதம் ஊட்டி, இளையோர் நகர் கொணர்ந்த,
துண்ணெனும் முழக்கின, துருக்கர் தர வந்த,
மண்மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன,
பண் இயல் வயப் பரிகள், பந்தியில் நிரைத்தார்.
13
பணியாளர்கள் தங்குவதற்கு வசதி செய்தல்
நீர் திரை நிரைத்த என, நீள் திரை நிரைத்தார்;
ஆர்கலி நிரைத்த என, ஆவணம் நிரைத்தார்;
கார் நிரை என, களிறு காவிடை நிரைத்தார்;
மாருதம் நிரைத்த என, வாசிகள் நிரைத்தார்.
14
மங்கையரும் மைந்தரும் மயங்கித் திரிதல்
நடிக்கும் மயில் என்ன வரும் நவ்விவிழியாரும்,
வடிக்கும் அயில் வீரரும், மயங்கினர் திரிந்தார்;
இடிக்கும் முரசக் குரலின், எங்கும் முரல் சங்கின்,
கொடிக்களின் உணர்ந்து, அரசர் கோ நகர் அடைந்தார்.
15
மிதிக்க நிமிர் தூளியின் விளக்கம் அறு மெய்யை,
சுதைக் கண் நுரையைப் பொருவு தூசு கொடு, தூய்தா
உதிர்த்தனர், இளங் குமரர், ஓவியரின்; ஓவம்
புதுக்கினர் என, தருண மங்கையர் பொலிந்தார்.
16
யானைகளிலிருந்து இறங்கி, அரச குமாரர் பட மாடங்களில்
புகுதல்
தாள் உயர் தடக் கிரி இழிந்து தரை சேரும்
கோள் அரி என, கரிகள் கொற்றவர் இழிந்தார்;
பாளை விரி ஒத்து உலவு சாமரை படப் போய்,
வாள் எழ நிரைத்த படமாடம் அவை புக்கார். 17
தூசின் நெடு வெண் பட முடைக் குடிலகள்தோறும்,
வாச நகை மங்கையர் முகம் பொலிவ, வானில்,
மாசு இல் மதியின் கதிர் வழங்கும் நிழல் எங்கும்,
வீசு திரை வெண் புனல், விளங்கியன போலும்.
18
புழுதி படிய வரும் யானை
மண் உற விழுந்து, நெடு வான் உற எழுந்து, -
கண்ணுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் - கார்
உண் நிற நறும் பொடியை வீசி, ஒரு பாகம்
வெண் நிற நறும் பொடி புனைந்த மத வேழம். 19
குதிரைகள் அடங்கி வருதல்
தீயவரொடு ஒன்றிய திறத்து அரு நலத்தோர்,
ஆயவரை, அந் நிலை, அறிந்தனர், துறந்தாங்கு,
ஏய அரு நுண் பொடி படிந்து, உடன் எழுந்து ஒண்
பாய் பரி விரைந்து உதறி நின்றன, பரந்தே.
20
மும்மை புரி வன் கயிறு கொய்து, செயல் மொய்ம்பால்
தம்மையும் உணர்ந்து, தரை கண்டு, விரைகின்ற,
அம்மையினொடு இம்மையை அறிந்து நெறி செல்லும்
செம்மையவர் என்ன, நனி சென்றன - துரங்கம்.
21
திரைக் குடிலில் கழங்கு ஆடும் மங்கையர்
விழுந்த பனி அன்ன, திரை வீசு புரைதோறும்,
கழங்கு பயில் மங்கையர் கருங் கண் மிளிர்கின்ற
-
தழங்கு கழி சிந்திய தரம் பயில் தரங்கத்து,
எழுந்து இடை பிறழ்ந்து ஒளிர் கொழுங் கயல்கள்
என்ன. 22
ஆறு உதவும் ஊற்றுப்பெருக்கு
வெள்ள நெடு வாரி அற வீசி உளவேனும்,
கிள்ள எழுகின்ற புனல், கேளிரின் விரும்பி,
-
தெள்ளு புனல் ஆறு - சிறிதே உதவுகின்ற;
உள்ளது மறாது உதவும் வள்ளலையும் ஒத்த. 23
படமாடத்தில் நுழைகின்ற வீரர்கள்
துன்றி நெறி பங்கிகள் துளங்க, அழலோடும்
மின் திரிவ என்ன, மணி ஆரம் மிளிர் மார்பர்,
மன்றல் மணம் நாறு பட மாடம் நுழைகின்றார்,
குன்றின் முழைதோறும் நுழை கோள் அரிகள் ஒத்தார்.
24
நீரில் விழுந்து உழக்கி நிற்கும் யானைகள்
நெருங்கு அயில் எயிற்றனைய செம் மயிரின் நெற்றிப்
பொருங் குலிகம் அப்பியன, போர் மணிகள் ஆர்ப்ப,-
பெருங் களிறு - அலைப் புனல் கலக்குவன; பெட்கும்
கருங் கடல் கலக்கும் மது கயிடவரை ஒத்த. 25
ஒக்க நெறி உய்ப்பவர் உரைத்த குறி கொள்ளா,
பக்கம் இனம் ஒத்து, அயல் அலைக்க, நனி பாரா,-
மைக் கரி, மதத்த - விலை மாதர் கலை அல்குல்
புக்கவரை ஒத்தன, புனல் சிறைகள் ஏறா. 26
அட்டிலில் எழும் புகை
துகில் இடை மடந்தையரொடு ஆடவர் துவன்றி,
பகல் இடைய, அட்டிலில் மடுத்து, எரி பரப்பும்
அகில் இடு கொழும் புகை அழுங்கலின், முழங்கா
முகில் படு நெடுங் கடலை ஒத்து உளது, அம் மூதூர்.
27
பொலிவுற்ற சேனை வெள்ளம்
கமர் உறு பொருப்பின் வாழும் விஞ்சையர் காண
வந்தார்,
தமரையும் அறியார் நின்று திகைப்புறு தகைமை
சான்ற
குமரரும் மங்கைமாரும் குழுமலால், வழுவி விண்
நின்று
அமரர் நாடு இழிந்தது என்னப் பொலிந்தது, அவ்
அனீக வெள்ளம். 28
மகளிரும் மைந்தரும் மகிழ்வுடன் திரிதல்
வெயில் நிறம் குறையச் சோதி மின் நிழல் பரப்ப,
முன்னம்
துயில் உணர் செவ்வியோரும், துனி உறு முனிவினோரும்,
குயிலொடும் இனிது பேசி, சிலம்பொடும் இனிது
கூவி,
மயிலினம் திரிவ என்ன, திரிந்தனர் - மகளிர்
எல்லாம். 29
தாள் இணை கழல்கள் ஆர்ப்ப, தார் இடை அளிகள்
ஆர்ப்ப,
வாள் புடை இலங்க, செங் கேழ் மணி அணி வலையம்
மின்ன,
தோள் என உயர்ந்த குன்றின் சூழல்கள் இனிது நோக்கி,
வாள் அரி திரிவ என்ன, திரிந்தனர் - மைந்தர்
எல்லாம். 30
16. வரைக்காட்சிப் படலம்
சந்திரசயில மலையின் மாட்சி
சுற்றிய கடல்கள் எல்லாம் சுடர் மணிக் கனகக்
குன்றைப்
பற்றிய வளைந்தவென்ன, பரந்து வந்து இறுத்த சேனை;
கொற்றவர், தேவிமார்கள், மைந்தர்கள், கொம்பனார்,
வந்து
உற்றவர், காணலுற்ற மலை நிலை உரைத்தும் அன்றே!
1
பம்பு தேன் மிஞிறு தும்பி பரந்து இசை பாடி
ஆட,
உம்பர் வானகத்து நின்ற ஒலி வளர் தருவின் ஓங்கும்
கொம்புகள், பனைக் கை நீட்டி, குழையொடும் ஒடித்து,
கோட்டுத்
தும்பிகள், உயிரே அன்ன துணை மடப் பிடிக்கு
நல்கும். 2
பண் மலர் பவளச் செவ் வாய்ப் பனி மலர்க் குவளை
அன்ன
கண் மலர்க் கொடிச்சிமார்க்குக் கணித் தொழில்
புரியும் வேங்கை
உண் மலர் வெறுத்த தும்பி, புதிய தேன் உதவும்
நாகத்
தண் மலர் என்று, வானத் தாரகை தாவும் அன்றே!
3
மீன் எனும் பிடிகளோடும் விளங்கும் வெண் மதி
நல் வேழம்
கூனல் வான் கோடு நீட்டிக் குத்திட, குமுறிப்
பாயும்
தேன் உகு மடையை மாற்றி, செந் தினைக் குறவர்,
முந்தி
வான நீர் ஆறு பாய்ச்சி, ஐவனம் வளர்ப்பர் மாதோ!
4
குப்புறற்கு அருமையான குல வரைச் சாரல் வைகி,
ஒப்புறத் துளங்குகின்ற உடுபதி ஆடியின்கண்,
இப் புறத்தேயும் காண்பார், குறத்தியர், இயைந்த
கோலம்;
அப் புறத்தேயும் காண்பார், அரம்பையர், அழகு
மாதோ! 5
உதி உறு துருத்தி ஊதும் உலை உறு தீயும், வாயின்
அதி விட நீரும், நெய்யும், உண்கிலாது, ஆவி
உண்ணும்
கொதி நுனை வேல் கண் மாதர் குறத்தியர் நுதலினோடு,
மதியினை வாங்கி, ஒப்புக் காண்குவர், குறவர்
மன்னோ! 6
பேணுதற்கு அரிய கோலக் குருளை, அம் பிடிகள்
ஈன்ற
காணுதற்கு இனிய வேழக் கன்றொடு களிக்கும் முன்றில்,
கோணுதற்கு உரிய திங்கட் குழவியும், குறவர்
தங்கள்
வாள் நுதல் கொடிச்சி மாதர் மகவொடு, தவழும்
மாதோ! 7
அஞ்சனக் கிரியின் அன்ன அழி கவுள் யானை கொன்ற
வெஞ் சினத்து அரியின் திண் கால் சுவட்டொடு,
- விஞ்சை வேந்தர்
குஞ்சி அம் தலத்தும், நீலக் குல மணித் தலத்தும்,
- மாதர்
பஞ்சி அம் கமலம் பூத்த பசுஞ் சுவடு உடைத்து
மன்னோ. 8
செங் கயல் அனைய நாட்டம் செவி உறா, முறுவல்
தோன்றா,
பொங்கு இருங் கூந்தல் சோரா, புருவங்கள் நெரியா,
பூவின்
அம் கையும் மிடறும் கூட்டி, நரம்பு அளைந்து,
அமுதம் ஊறும்
மங்கையர் பாடல் கேட்டு, கின்னரம் மயங்கும்
மாதோ! 9
கள் அவிழ் கோதை மாதர், காதொடும் உறவு செய்யும்
கொள்ளை வாட் கண்ணினார்தம் குங்குமக் குழம்பு
தங்கும்
தெள்ளிய பளிக்குப் பாறைத் தெளி சுனை, மணியில்
செய்த
வள்ளமும் நறவும் என்ன, வரம்பு இல பொலியும்
மன்னோ! 10
ஆடவர் ஆவி சோர, அஞ்சன வாரி சோர,
ஊடலின் சிவந்த நாட்டத்து உம்பர் தம் அரம்பை
மாதர்,
தோடு அவிழ் கோதை நின்றும் துறந்த மந்தார மாலை,
வாடல, நறவு அறாத, வயின் வயின் வயங்கும் மாதோ.
11
மாந் தளிர் அனைய மேனிக் குறத்தியர் மாலை சூட்டி,
கூந்தல் அம் கமுகின் பாளை குழலினோடு ஒப்புக்
காண்பார்;
ஏந்து இழை அரம்பை மாதர் எரி மணிக் கடகம் வாங்கி,
காந்தள் அம் போதில் பெய்து, கைகளோடு ஒப்புக்
காண்பார். 12
சரம் பயில் சாபம் என்னப் புருவங்கள் தம்மின்
ஆடா,
நரம்பினோடு இனிது பாடி, நாடக மயிலோடு ஆடி,
அரம்பையர் வெறுத்து நீத்த அவிர் மணிக் கோவை
ஆரம்,
மரம் பயில கடுவன் பூண, மந்தி கண்டு உவக்கும்
மாதோ. 13
சாந்து உயர் தடங்கள் தோறும் தாதுராகத்தின்
சார்ந்த
கூந்தல் அம் பிடிகள் எல்லாம் குங்குமம் அணிந்த
போலும்;
காந்து இன மணியின் சோதிக் கதிரொடும் கலந்து
வீசச்
சேந்து, வானகம், எப்போதும் செக்கரை ஒக்கும்
அன்றே. 14
நிலமகட்கு அணிகள் என்ன நிரை கதிர் முத்தம்
சிந்தி,
மலைமகள் கொழுநன் சென்னி வந்து வீழ் கங்கை மான,
அலகு இல் பொன் அலம்பி ஓடி, சார்ந்து வீழ் அருவி
மாலை,
உலகு அளந்தவன் தன் மார்பின் உத்தரீயத்தை ஒத்த.
15
மாந்தர் கண்ட மலை நிகழ்ச்சிகள்
கோடு உலாம் நாகப் போதோடு இலவங்க மலரும் கூட்டிச்
சூடுவார், களி வண்டு ஓச்சித் தூ நறுந் தேறல்
உண்பார்,
கேடு இலா மகர யாழில் கின்னர மிதுனம் பாடும்
பாடலால் ஊடல் நீங்கும் பரிமுக மாக்கள் கண்டார்.
16
பெருங் களிறு ஏயும் மைந்தர் பேர் எழில் ஆகத்தோடு
பொரும் துணைக் கொங்கை அன்ன, பொரு இல், கோங்கு
அரும்பின் மாடே,
மருங்கு எனக் குழையும் கொம்பின் மடப் பெடை
வண்டும், தங்கள்
கருங் குழல் களிக்கும் வண்டும், கடிமணம் புணர்தல்
கண்டார். 17
'படிகத்தின் தலம்' என்று எண்ணி, படர் சுனை
முடுகிப் புக்க
சுடிகைப் பூங் கமலம் அன்ன சுடர் மதி முகத்தினார்தம்
வடகத்தோடு உடுத்த தூசை மாசு இல் நீர் நனைப்ப,
நோக்கி,
கடகக் கை எறிந்து, தம்மில் கருங் கழல் வீரர்
நக்கார். 18
பூ அணை பலவும் கண்டார்; பொன்னரிமாலை கண்டார்,
மே வரும் கோபம் அன்ன வெள்ளிலைத் தம்பல் கண்டார்;
ஆவியின் இனிய கொண்கர்ப் பிரிந்து, அறிவு அழிந்த
விஞ்சைப்
பாவையர் வைக, தீய்ந்த பல்லவ சயனம் கண்டார்.
19
பானல் அம் கண்கள் ஆட, பவள வாய் முறுவல் ஆட,
பீன வெம் முலையின் இட்ட பெரு விலை ஆரம் ஆட,
தேன் முரன்று அளகத்து ஆட, திரு மணிக் குழைகள்
ஆட,
வானவர் மகளிர் ஆடும், வாசம் நாறு ஊசல் கண்டார்.
20
சுந்தர வதன மாதர் துவர் இதழ்ப் பவள வாயும்,
அந்தம் இல் கரும்பும், தேனும், மிஞிறும் உண்டு
- அல்குல் விற்கும்
பைந் தொடி மகளிர், 'கைத்து ஓர் பசை இல்லை'
என்ன விட்ட
மைந்தரின் - நீத்த தீம் தேன் வள்ளங்கள் பலவும்
கண்டார். 21
அல் பகல் ஆக்கும் சோதிப் பளிக்கு அறை அமளிப்
பாங்கர்,
மல் பக மலர்ந்த திண் தோள் வானவர் மணந்த, கோல,
வில் பகை நுதலினார், தம் கலவியில் வெறுத்து
நீத்த
கற்பகம் ஈன்ற மாலை கலனொடும் கிடப்பக் கண்டார்.
22
கை என மலர வேண்டி அரும்பிய காந்தள் நோக்கி,
பை அரவு இது என்று அஞ்சி, படைக் கண்கள் புதைக்கின்றாரும்;
நெய் தவழ் வயிரப் பாறை நிழலிடைத் தோன்றும்
போதை,
'கொய்து இவை தருதிர்' என்று, கொழுநரைத் தொழுகின்றாரும்;
23
பின்னங்கள் உகிரின் செய்து, பிண்டி அம் தளிர்க்
கைக் கொண்ட
சின்னங்கள் முலையின் அப்பி, தே மலர் கொய்கின்றாரும்;
வன்னங்கள் பலவும் தோன்ற மணி ஒளிர் மலையின்
நில்லார்
அன்னங்கள் புகுந்த என்ன, அகன் சுனை குடைகின்றாரும்.
24
மலைக் காட்சிகள்
ஈனும் மாழை இளந் தளிர் ஏய் ஒளி
ஈனும், மாழை இளந் தளிரே - இடை,
மானும், வேழமும், நாகமும், மாதர் தோள்
மானும் வேழமும், நாகமும் - மாடு எலாம். 25
திமிர மா உடல் குங்குமச் சேதகம்
திமிர மாவொடும் சந்தொடும் தேய்க்குமால்;
அமர மாதரை ஒத்து ஒளிர் அம் சொலார்
அமர, மா தரை ஒத்தது, அவ் வானமே. 26
பேர் அவாவொடு மாசுணம் பேர, வே
பேர, ஆவொடு மா சுணம் பேரவே!
ஆர, ஆரத்தினோடும் மருவியே,
ஆரவாரத்தின் ஓடும் அருவியே! 27
புகலும் வாள் அரிக்கு அண்ணியர் பொன் புயம்,
புகலும் வாள் அரிக் கண்ணியர் பூண் முலை,
அகிலும் ஆரமும் ஆர அங்கு ஓங்குமே!
அகிலும், ஆரமும் மாரவம் கோங்குமே. 28
துன் அரம்பை நிரம்பிய, தொல் வரை,
துன் அரம்பையர் ஊருவின் தோன்றுமால்;
கின்னரம் பயில் கீதங்கள் என்ன, ஆங்கு,
இன் நரம்பு அயில்கின்றனர், ஏழைமார். 29
ஊறு, மா கடம் மா, உற ஊங்கு எலாம்,
ஊறுமா கட மா மதம் ஓடுமே;
ஆறு சேர் வனம் ஆ, வரை, ஆடுமே;
ஆறு சேர்வன, மா, வரையாடுமே. 30
கல் இயங்கு கருங் குற மங்கையர்,
கல்லி அங்கு அகழ் காமர் கிழங்கு எடா,
வல்லியங்கள் நெருங்கு மருங்கு எலாம்,
வல் இயங்கள் நெருங்கி மயங்குமே. 31
கோள் இபம் கயம் மூழ்க, குளிர் கயக்
கோளி, பங்கயம், ஊழ்கக் குலைந்தவால்;
ஆளி பொங்கும் மரம் பையர் ஓதி ஏய்,
ஆளி பொங்கும், அரம்பையர் ஓதியே. 32
ஆகம் ஆலையம் ஆக உளாள் பொலி-
வாக மால் ஐயன் நின்றெனல் ஆகுமால் -
மேக மாலை மிடைந்தன மேல் எலாம்
ஏக, மாலை கிடந்தது, கீழ் எலாம். 33
மலைமேல் மாதர் மைந்தர் விளையாடுதல்
பொங்கு தேன் நுகர் பூ மிஞிறு ஆம் என,
எங்கும் மாதரும் மைந்தரும் ஈண்டி, அத்
துங்க மால் வரைச் சூழல்கள் யாவையும்
தங்கி, நீங்கலர், தாம் இனிது ஆடுவார். 34
இறக்கம் என்பதை எண்ணிலர், எண்ணுங்கால்,
பிறக்கும் என்பது ஓர் பீழையது ஆதலால்,
துறக்கம் எய்திய தூயவரே என,
மறக்ககிற்றிலர், அன்னதன் மாண்பு எலாம். 35
அந்திப் பொழுதில் அம் மலையின் அழகு
மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது; வானின் ஓடும்
வெஞ் சாயையுடைக் கதிர், அங்கு, அதன் மீது பாயும்
பஞ்சானனம் ஒத்தது; மற்று அது பாய, ஏறு
செஞ் சோரி எனப் பொலிவுற்றது, செக்கர் வானம்.
36
திணி ஆர் சினை மா மரம் யாவையும் செக்கர் பாய,
தணியாத நறுந் தளிர் தந்தன போன்று தாழ,
அணி ஆர் ஒளி வந்து நிரம்பலின், அங்கம் எங்கும்,
மணியால் இயன்ற மலை ஒத்தது - அம் மை இல் குன்றம்.
37
கண்ணுக்கு இனிது ஆகி விளங்கிய காட்சியாலும்,
எண்ணற்கு அரிது ஆகி இலங்கு சிரங்களாலும்,
வண்ணக் கொழுஞ் சந்தனச் சேதகம் மார்பு அணிந்த
அண்ணல் கரியோந்தனை ஒத்தது - அவ் ஆசு இல் குன்றம்.
38
மகளிரும் மைந்தரும் மலையிலிருந்து இறங்குதல்
ஊனும் உயிரும் அனையார் ஒருவர்க்கு ஒருவர்,
தேனும், மிஞிறும், சிறு தும்பியும், பம்பி
ஆர்ப்ப,
ஆனை இனமும் பிடியும், இகல் ஆளி ஏறும்,
மானும் கலையும், என, மால் வரை வந்து இழிந்தார்.
39
இருள் பரவ, எங்கும் தீபம் ஏற்றுதல்
கால் வானகத் தேருடை வெய்யவன், காய் கடுங் கண்
கோல் மாய் கதிர்ப் புல் உளைக் கொல் சினக் கோள்
அரிம்மா,
மேல்பால் மலையில் புக, வீங்கு இருள், வேறு
இருந்த
மால் யானை ஈட்டம் என, வந்து பரந்தது அன்றே.
40
மந்தாரம் முந்து மகரந்த மணம் குலாவும்
அம் தார் அரசர்க்கு அரசன் தன் அனீக வெள்ளம்,
நந்தாது ஒலிக்கும் நரலைப் பெரு வேலை எல்லாம்
செந்தாமரை பூத்தென, தீபம் எடுத்தது அன்றே.
41
மதியம் தோன்ற, முக மலர்ச்சி பெறும் மகளிர்
தண் நல் கடலில் துளி சிந்து தரங்கம் நீங்கி,
விண்ணில் சுடர் வெண்மதி வந்தது, மீன்கள் சூழ
-
வண்ணக் கதிர் வெண் நிலவு ஈன்றன வாலுகத்தோடு
ஒள் நித்திலம் ஈன்று, ஒளிர் வால் வளை, ஊர்வது
ஒத்தே. 42
மீன் நாறு வேலை ஒரு வெண் மதி ஈனும் வேலை,
நோனாது அதனை, நுவலற்கு அருங் கோடி வெள்ளம்
வான் நாடியரின் பொலி மாதர் முகங்கள் என்னும்
ஆனா மதியங்கள் மலர்ந்தது, அனீக வேலை. 43
கூத்தரின் ஆடலும், மகளிர் கோலம் கொள்ளுதலும்
மண்ணும் முழவின் ஒலி, மங்கையர் பாடல் ஓதை,
பண்ணும் நரம்பின் பகையா இயல் பாணி ஓதை,
கண்ணும் முடை வேய் இசை, - கண்ணுளர் ஆடல்தோறும்
-
விண்ணும் மருளும்படி விம்மி எழுந்த அன்றே.
44
மணியின் அணி நீக்கி, வயங்கு ஒளி முத்தம் வாங்கி,
அணியும் முலையார், அகில் ஆவி புலர்த்தும் நல்லார்,
தணியும் மது மல்லிகைத் தாமம் வெறுத்து, வாசம்
திணியும் இதழ்ப் பித்திகைக் கத்திகை சேர்த்துவாரும்.
45
பல வகை ஒலிகள்
புதுக் கொண்ட வேழம் பிணிப்போர் புனை பாடல்
ஓதை,
மதுக் கொண்ட மாந்தர் மடவாரின் மிழற்றும் ஓதை,
பொதுப் பெண்டிர் அல்குல் புனை மேகலைப் பூசல்
ஓதை,
கதக் கொண்ட யானை களியால் களிக்கின்ற ஓதை.
46
இரவுப் பொழுதை கழித்த வகை
உண்ணா அமுது அன்ன கலைப் பொருள் உள்ளது உண்டும்,
பெண் ஆர் அமுதம் அனையார் மனத்து ஊடல் பேர்த்தும்,
பண் ஆன பாடல் செவி மாந்திப் பயன் கொள் ஆடல்
கண்ணால் நனி துய்க்கவும், கங்குல் கழிந்தது
அன்றே. 47
17. பூக் கொய் படலம்
காலையில் தயரதன் சோணை ஆற்றை அடைதல்
மீனுடை எயிற்றுக் கங்குல்-கனகனை வெகுண்டு,
வெய்ய
கானுடைக் கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள்
ஓச்சி,
தானுடை உதயம் என்னும் தமனியத் தறியுள் நின்று,
மானுட மடங்கல் என்ன, தோன்றினன், - வயங்கு வெய்யோன்.
1
முறை எலாம் முடித்த, மன்னர் மன்னனும், மூரித்
தேர்மேல்
இறை எலாம் வணங்கப் போனான்; எழுந்து, உடன்,
சேனை வெள்ளம்,
குறை எலாம் சோலை ஆகி, குழி எலாம் கழுநீர் ஆகி,
துறை எலாம் கமலம் ஆன சோணை ஆறு அடைந்தது அன்றே.
2
உச்சி வேளையில் சோலையைச் சார்தல்
அடைந்து, அவண் இறுத்த பின்னர், அருக்கனும்
உம்பர்ச் சேர்ந்தான்;
மடந்தையர் குழாங்களோடு, மன்னரும், மைந்தர்
தாமும்,
குடைந்து வண்டு உறையும் மென் பூக் கொய்து நீராட,
மை தீர்
தடங்களும், மடுவும் சூழ்ந்த, தண் நறுஞ் சோலை
சார்ந்தார். 3
மாதரைக் கண்ட மயில் முதலியவற்றின் செய்கை
திண் சிலை புருவம் ஆக, சேயரிக் கருங் கண் அம்பால்,
புண் சிலை செய்வர் என்று போவன போன்ற, மஞ்ஞை;
பண் சிலம்பு அணி வாய் ஆர்ப்ப, நாணினால் பறந்த,
கிள்ளை;
ஒண் சிலம்பு அரற்ற, மாதர் ஒதுங்குதோறு, ஒதுங்கும்
அன்னம். 4
மாதர் தோழியரோடு ஆடக் கண்ட ஆடவர் மயங்கி நிற்றல்
செம் பொன் செய் சுருளும் தெய்வக் குழைகளும்
சேர்ந்து மின்ன,
பம்பு தேன் அலம்ப ஒல்கி, பண்ணையின் ஆடல் நோக்கி,
கொம்பொடும், கொடி அனாரைக் குறித்து அறிந்து
உணர்தல் தேற்றார்,
வம்பு அவிழ் அலங்கல் மார்பின் மைந்தரும், மயங்கி
நின்றார். 5
குயில்களின் நாணி ஒதுங்குதல்
பாசிழைப் பரவை அல்குல், பண் தரு கிளவி, தண்
தேன்
மூசிய கூந்தல், மாதர் மொய்த்த பேர் அமலை கேட்டு,
கூசின அல்ல; பேச நாணின, குயில்கள் எல்லாம்-
வாசகம் வல்லார் முன் நின்று, யாவர் வாய் திறக்க
வல்லார்? 6
மாதர் பூங் கொம்பைத் தீண்டலும், மலர் சொரிந்து
கொம்பு தாழ்தலும்
நஞ்சினும் கொடிய நாட்டம் அமுதினும் நயந்து
நோக்கி,
செஞ்செவே கமலக் கையால் தீண்டலும், நீண்ட கொம்பும்,
தம் சிலம்பு அடியில் மென் பூச் சொரிந்து உடன்
தாழ்ந்த என்றால்,
வஞ்சிபோல் மருங்குலார் மாட்டு யாவரே வணங்கலாதார்?
7
அம்புயத்து அணங்கின் அன்னார் அம் மலர்க் கைகள்
தீண்ட,
வம்பு இயல் அலங்கல் பங்கி, வாள் அரி மருளும்
கோளார் -
தம் புய வரைகள் வந்து தாழ்வன; தளிர்த்த மென்
பூங்
கொம்புகள் தாழும் என்றல், கூறல் ஆம் தகைமைத்து
ஒன்றோ! 8
மகளிரின் மேல் வண்டுகள் மொய்த்தல்
நதியினும் குளத்தும் பூவா நளினங்கள் குவளையோடு
மதி நுதல் வல்லி பூப்ப, நோக்கிய மழலைத் தும்பி
அதிசயம் எய்தி, புக்கு வீழ்ந்தன; அலைக்கப்
போகா -
புதியன கண்ட போழ்து விடுவரோ புதுமை பார்ப்பார்?
9
மலர் கொய்துநின்ற மகளிரின் செயல்கள்
உலம் தரு வயிரத் திண் தோள் ஒழுகி, வார் ஒளி
கொள் மேனி
மலர்ந்த பூந் தொடையல் மாலை மைந்தர் பால், மயிலின்
அன்னார்
கலந்தவர் போல, ஒல்கி ஒசிந்தன, சில; கை வாராப்
புலந்தவர் போல நின்று, வளைகில, பூத்த கொம்பர்.
10
பூ எலாம் கொய்து கொள்ள, பொலிவு இல துவள நோக்கி,
'யாவை ஆம் கணவர் கண்ணுக்கு? அழகு இல இவை' என்று
எண்ணி,
கோவையும், வடமும், நாணும், குழைகளும், குழையப்
பூட்டி,
பாவையர், பனி மென் கொம்பை நோக்கினர், பரிந்து
நிற்பார். 11
மகளிரின் வெறுங் கூந்தலை வண்டுகள் மொய்த்த
காட்சி
துறும் போதினில் தேன் துவைத்து உண்டு உழல்
தும்பி ஈட்டம்,
நறுங் கோதையோடு நனை சின்னமும் நீத்த நல்லார்
வெறுங் கூந்தல் மொய்க்கின்றன; வேண்டல வேண்டு
போதும்;-
உறும் போகம் எல்லாம், நலன் உள் வழி, உண்பர்
அன்றே! 12
மங்கையர் கண் பனி சோர நின்ற காட்சி
மெய்ப் போதின் நங்கைக்கு அணி அன்னவள், வெண்
பளிங்கில்
பொய்ப் போது தாங்கிப் பொலிகின்ற தன் மேனி நோக்கி
'இப் பாவை எம் கோற்கு உயிர் அன்னவள்' என்ன
உன்னி,
கைப் போதினோடு நெடுங் கண் பனி சோர நின்றாள்.
13
கோள் உண்ட திங்கள் முகத்தாள் ஒரு கொம்பு, ஒர்
மன்னன்,
தோள் உண்ட மாலை ஒரு தோகையைச் சூட்ட நோக்கி,
தாள் உண்ட கச்சின் தகை உண்ட முலைக்கண், ஆவி,
வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என, வார நின்றாள்.
14
கணவன் மறைந்து நிற்க மறுகும் மனைவி
மயில் போல் வருவாள் மனம் காணிய, காதல் மன்னன்,
செயிர் தீர் மலர்க் காவின் ஒர் மாதவிச் சூழல்
சேர,
பயில்வாள், இறை பண்டு பிரிந்து அறியாள், பதைத்தாள்;
உயிர் நாடி ஒல்கும் உடல்போல் அலமந்து உழந்தாள்.
15
புலந்து நின்ற ஒருத்தி குயிலை மலர் பறித்துத்
தர வேண்டல்
மை தாழ் கருங் கண்கள் சிவப்பு உற வந்து தோன்ற,
நெய் தாவும் வேலானொடு, நெஞ்சு புலந்து நின்றாள்,
எய்தாது நின்றம் மலர் நோக்கி, 'எனக்கு இது
ஈண்டக்
கொய்து ஈதி' என்று, ஓர் குயிலை, கரம் கூப்புகின்றாள்.
16
புலவிக் காட்சிகள்
செம்மாந்த தெங்கின் இளநீரை, ஓர் செம்மல் நோக்கி,
'அம்மா! இவை மங்கையர் கொங்கைகள் ஆகும்' என்ன,
'எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன?' என்று,
ஒர் ஏழை,
விம்மா, வெதும்பா, வெயரா, முகம் வெய்துயிர்த்தாள்.
17
'போர்' என்ன வீங்கும் பொருப்பு அன்ன பொலங்
கொள் திண் தோள்
மாரன் அனையான், மலர் கொய்து இருந்தானை, வந்து
ஒர்
கார் அன்ன கூந்தல், குயில் அன்னவள், கண் புதைப்ப,
'ஆர்?' என்னலோடும், அனல் என்ன அயிர்த்து உயிர்த்தாள்.
18
மன்னனின் செயல்
ஊற்று ஆர் நறை நாள்மலர், மாதர், ஒருங்கு வாசச்
சேற்றால் விளையாத செந்தாமரைக் கைகள் நீட்டி,
ஏற்றாரை நோக்கான், இடை ஏந்தினன், நின்று ஒழிந்தான்
-
மாற்றான், உதவான், கடு வச்சையன்போல் - ஒர்
மன்னன். 19
மாற்றவள் பேரைக் கணவன் கூறக் கேட்ட பெண்ணின்
துயரம்
தைக்கின்ற வேல் நோக்கினாள், தன் உயிர் அன்ன
மன்னன்,
மைக் கொண்ட கண்ணாள் எதிர், மாற்றவள் பேர் விளம்ப,
மெய்க் கொண்ட நாணம் தலைக்கொண்டிட விம்மி, மென்
பூக்
கைக் கொண்டு மோந்தாள்; உயிர்ப்புண்டு கரிந்தது
அன்றே! 20
தன் தேவிமாருடன் திரிந்த மன்னனின் தோற்றம்
திண் தேர் அரசன் ஒருவன், குலத் தேவிமார் தம்
ஒண் தாமரை வாள் முகத்துள் மிளிர் உண்கண் எல்லாம்
கண்டு ஆதரிக்கத் திரிவான், மதம் கவ்வி உண்ண
வண்டு ஆதரிக்கத் திரி மா மத யானை ஒத்தான்.
21
தலைவன்மேல் அவனது மனைவியர் இருவர் சினந்து
புலத்தல்
சந்திக் கலா வெண் மதி வாள் நுதலாள் தனக்கும்,
வந்திக்கல் ஆகும் மடவாட்கும், வகுத்து நல்கி,
நிந்திக்கல் ஆகா உருவத்தினன் நிற்ப, மென் பூச்
சிந்தி, கலாப மயிலின், கண் சிவந்து, போனார்.
22
மகளிர் ஆடவர் செயல்கள்
வந்து, எங்கும், தம் மன் உயிரேயோ, பிறிது ஒன்றோ?
-
கந்தம் துன்றும் சோர் குழல் காணார்; கலை பேணார்;
அந்தம் தோறும் அற்று உகும் முத்தம் அவை பாரார்;
-
சிந்தும் சந்தத் தே மலர் நாடித் திரிவாரும்;
23
யாழ் ஒக்கும் சொல் பொன் அனையாள், ஓர் இகல்
மன்னன்,
தாழத் தாழாள்; தாழ்ந்த மனத்தாள் தளர்கின்றாள்;
ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள்; அவன் நிற்கும்
சூழற்கே, தன் கிள்ளையை ஏவித் தொடர்வாளும்;
24
அம் தார் ஆகத்து ஐங் கணை நூறாயிரம் ஆகச்
சிந்தா நின்ற சிந்தையினான், செய்குவது ஓரான்,
'மந்தாரம் கொண்டு ஈகுதியோ, மாதவி?' என்று,
ஓர்
சந்து ஆர் கொங்கைத் தாழ் குழலாள்பால் தளர்வானும்;
25
நாடிக் கொண்டாள், குற்றம் நயந்தாள்; முனிவு
ஆற்றாள்;
ஊடிக் காணக் காட்டும் நலத்தாள் உடன் நில்லாள்;
தேடித் தேடிச் சேர்த்த நறும் பூஞ் செழு மாலை
சூடிச் சூடி, கண்ணடி நோக்கித் துவள்வாளும்;
26
'மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான், இடையே
வந்து
உற, இக் கோலம் பெற்றிலென் என்றால், உடன் வாழ்வு
இப்
பிறவிக்கு ஒல்லேன்; என் செய்வது, இப் பேர்
அணி?' என்று, ஓர்
விறலிக்கு ஈவாள் ஒத்து, இழை எல்லாம் விடுவாளும்;
27
வம்பின் பொங்கும் கொங்கை சுமக்கும் வலி இன்றிக்
கம்பிக்கின்ற நுண் இடை நோவ, கசிவாளும்;
பைம் பொன் கிண்ணம் மெல் விரல் தாங்கி, பயில்கின்ற
கொம்பில் கிள்ளைப் பிள்ளை ஒளிக்க, குழைவாளும்;
28
தன்னைக் கண்டாள்; மென் நடை கண்டாள்; தமரைப்போல்
துன்னக் கண்டாள்; தோழமை கொண்டாள்; துணை என்றாள்;
'உன்னைக் கண்டார் எள்ளுவர்; பொல்லாது; உடு
நீ' என்று,
அன்னக் கன்னிக்கு, ஆடை அளிப்பான் அமைவாளும்;
29
பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள்தன் படர் அல்குல்
ஆகக் கண்டு, ஓர் ஆடு அரவு ஆம் என்று, அயல்
நண்ணும்
தோகைக்கு அஞ்சி, கொம்பின் ஒதுங்கி, துணர் ஈன்ற
சாகைத் தம் கை, கண்கள் புதைத்தே தளர்வாளும்;
30
'பொன்னே, தேனே, பூமகளே, காண், எனை' என்னா,
தன் நேர் இல்லாள், அங்கு, ஒரு கொய்யல் தழை
மூழ்கி,
'இன்னே என்னைக் காணுதி நீ' என்று, இகலி, தன்
நல் நீலக் கண் கையின் மறைத்து, நகுவாளும்;
31
வில்லில் கோதை நாண் உற மிக்கோன், இகல் அங்கம்
புல்லிக் கொண்ட தாமரை மென் பூ மலர் தாங்கி,
அல்லின் கோதை மாதர் முகப் பேர் அரவிந்தச்
செல்வக் கானில், செங்கதிர் என்னத் திரிவாரும்;
32
செய்யில் கொள்ளும் தெள் அமுதச் செஞ் சிலை ஒன்று
கையில் பெய்யும் காமனும் நாணும் கவினார், தம்
மையல் பேதை மாதர் மிழற்றும் மழலைச் சொல்,
தெய்வப் பாடல் சொல் கலை என்ன, தெரிவாரும்;
33
சோலைத் தும்பி மென் குழல் ஆக, தொடை மேவும்
கோலைக் கொண்ட மன்மத ஆயன், குறி உய்ப்ப,
நீலத்து உண்கண் மங்கையர் சூழ, நிரை ஆவின்,
மாலைப் போதில் மால் விடை என்ன வருவாரும்.
34
'ஊக்கம் உள்ளத்து உடைய முனிவரால்
காக்கல் ஆவது, காமன் கை வில்' எனும்
வாக்கு மாத்திரம்; அல்லது, வல்லியில்
பூக் கொய்வாள் புருவக் கடை போதுமே! 35
நாறு பூங் குழல் நன்னுதல், புன்னைமேல்
ஏறினான் மனத்து உம்பர் சென்று, ஏறினாள்;-
ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும்,
வீறு சேர் முலை மாதரை வெல்வரோ! 36
சினையின்மேல் இருந்தான், உருத் தேவரால்
வனையவும் அரியாள் வனப்பின் தலை,
நினைவும், நோக்கமும், நீக்கலன்; கைகளால்,
நனையும் நாள் முறியும் கொய்து, நல்கினான்.
37
வண்டு வாழ் குழலாள் முகம் நோக்கி, -ஓர்
தண்டு போல் புயத்தான் தடுமாறினான்,
'உண்டு கோபம்' என்று உள்ளத்து உணர்ந்து; -
அவள்
தொண்டை வாயில் துடிப்பு ஒன்று சொல்லவே. 38
பூக் கொய்தலை வெறுத்து, யாவரும் புனலாடப் புகுதல்
ஏயும் தன்மையர் இவ் வகையார் எலாம்,
தூய தண் நிழல் சோலை, துறு மலர்
வேயும் செய்கை வெறுத்தனர்; வெண் திரை
பாயும் தீம் புனல் - பண்ணை சென்று எய்தினார்.
39
18. நீர் விளையாட்டுப் படலம்
மகளிரும் ஆடவரும் புனலாடச் சென்ற காட்சி
புனை மலர்த் தடங்கள் நோக்கி, பூசல் வண்டு ஆர்த்துப்
பொங்க,
வினை அறு துறக்க நாட்டு விண்ணவர் கணமும் நாண,
அனகரும், அணங்கனாரும், அம் மலர்ச் சோலை நின்று,
வன கரி பிடிகளோடும் வருவன போல வந்தார். 1
அங்கு, அவர், பண்ணை நல் நீராடுவான் அமைந்த
தோற்றம்,
கங்கை வார் சடையோன் அன்ன மா முனி கனல, மேல்நாள்,
மங்கையர் கூட்டத்தோடும் வானவர்க்கு இறைவன்
செல்வம்,
பொங்கு மா கடலில் செல்லும் தோற்றமே போன்றது
அன்றே. 2
மைந்தரும் மாதரும் புனலிடை விளையாடியமை
மை அவாம் குவளை எல்லாம், மாதர் கண்மலர்கள்
பூத்த;
கை அவாம் உருவத்தார் தம் கண்மலர், குவளை பூத்த;
செய்ய தாமரைகள் எல்லாம், தெரிவையர் முகங்கள்
பூத்த;
தையலார் முகங்கள், செய்ய தாமரை பூத்த அன்றே.
3
தாளை ஏய் கமலத்தாளின் மார்பு உறத் தழுவுவாரும்,
தோளையே பற்றி வெற்றித் திரு எனத் தோன்றுவாரும்,
பாளை வீ விரிந்தது என்ன, பரந்து நீர் உந்துவாரும்,
வாளைமீன் உகள, அஞ்சி, மைந்தரைத் தழுவுவாரும்;
4
வண்டு உணக் கமழும் சுண்ணம், வாச நெய் நானத்தோடும்
கொண்டு, எதிர் வீசுவாரும், கோதை கொண்டு ஓச்சுவாரும்,
தொண்டை வாய்ப் பெய்து, தூநீர், கொழுநர் மேல்
தூகின்றாரும்,
புண்டரீகக் கை கூப்பி, புனல் முகந்து இறைக்கின்றாரும்.
5
மின் ஒத்த இடையினாரும், வேய் ஒத்த தோளினாரும்,
சின்னத்தின் அளக பந்தி திருமுகம் மறைப்ப நீக்கி,
அன்னத்தை, 'வருதி, என்னோடு ஆட' என்று அழைக்கின்றாரும்;
பொன் ஒத்த முலையின் வந்து பூ ஒற்ற, உளைகின்றாரும்;
6
பண் உளர் பவளத் தொண்டை, பங்கயம் பூத்தது அன்ன
வண்ண வாய், குவளை வாட்கண், மருங்கு இலாக் கரும்பின்
அன்னார்,
உள் நிறை கயலை நோக்கி, 'ஓடு நீர்த் தடங்கட்கு
எல்லாம்
கண் உள ஆம்கொல்?' என்று, கணவரை வினவுவாரும்;
7
தேன் உகு நறவ மாலைச் செறி குழல் தெய்வம் அனனாள்,
தானுடைக் கோல மேனி தடத்திடைத் தோன்ற, நோக்கி,
'நான் நக நகுகின்றாள் இந் நல் நுதல்; தோழி
ஆம்' என்று,
ஊனம் இல் விலையின் ஆரம், உளம் குளிர்ந்து உதவுவாரும்;
8
குண்டலம் திரு வில் வீச, குல மணி ஆரம் மின்ன,
விண் தொடர் வரையின் வைகும் மென் மயிற் கணங்கள்
போல,
வண்டு உளர் கோதை மாதர் மைந்தர்தம் வயிரத் திண்
தோள்
தண்டுகள் தழுவும் ஆசைப் புனற் கரை சார்கின்றாரும்;
9
அங்கு இடை உற்ற குற்றம் யாவது என்று அறிதல்
தேற்றாம்;
செங் கயல் அனைய நாட்டம் சிவப்பு உறச் சீறிப்
போன
மங்கை, ஓர் கமலச் சூழல் மறைந்தனள்; மறைய, மைந்தன்,
'பங்கயம்', 'முகம்', என்று ஓராது, ஐயுற்றுப்
பார்க்கின்றானும்; 10
பொன் - தொடி தளிர்க் கைச் சங்கம் வண்டொடு புலம்பி
ஆர்ப்ப,
எற்று நீர் குடையும்தோறும், ஏந்து பேர் அல்குல்நின்றும்
கற்றை மேகலைகள் நீங்கி, சீறடி கவ்வ, 'காலில்
சுற்றிய நாகம்' என்று, துணுக்கத்தால் துடிக்கின்றாரும்.
11
குடைந்து நீராடும் மாதர் குழாம் புடைசூழ் ஆழித்
தடம் புயம் பொலிய, ஆண்டு, ஒர் தார் கெழு வேந்தன்
நின்றான் -
கடைந்த நாள், அமிழ்தினோடும் கடலிடை வந்து தோன்றும்
மடந்தையர் சூழ நின்ற மந்தரம் போல மாதோ. 12
தொடி உலாம் கமலச் செங் கை, தூ நகை, துவர்த்த
செவ் வாய்க்
கொடி உலாம் மருங்குல் நல்லார் குழாத்து, ஒரு
குரிசில் நின்றான், -
கடி உலாம் கமல வேலிக் கண் அகன் கான யாற்று,
பிடி எலாம் சூழ நின்ற பெய் மத யானை ஒத்தான்.
13
கான மா மயில்கள் எல்லாம் களி கெடக் களிக்கும்
சாயல்
சோனை வார் குழலினார்தம் குழாத்து, ஒரு தோன்றல்
நின்றான் -
வான யாறு அதனை நண்ணி, வயின் வயின் வயங்கித்
தோன்றும்
மீன் எலாம் சூழ நின்ற விரி கதிர்த் திங்கள்
ஒத்தான். 14
மேவலாம் தகைமைத்து அல்லால், வேழ வில் தடக்
கை வீரற்கு
ஏ எலாம் காட்டுகின்ற இணை நெடுங் கண் ஒர் ஏழை,
பாவைமார் பரந்த கோலப் பண்ணையில் பொலிவாள்,
வண்ணப்
பூ எலாம் மலர்ந்த பொய்கைத் தாமரை பொலிவது ஒத்தாள்.
15
மிடலுடைக் கொடிய வேலே என்னலாய் மிளிர்வது என்ன,
சுடர் முகத்து உலவு கண்ணாள், தோகையர் சூழ நின்றாள்;
மடலுடைப் போது காட்டும் வளர் கொடி பலவும் சூழ,
கடலிடைத் தோன்றும் மென் பூங் கற்பக வல்லி ஒத்தாள்.
16
தேரிடைக் கொண்ட அல்குல், தெங்கிடைக் கொண்ட
கொங்கை,
ஆரிடைச் சென்றும் கொள்ள ஒண்கிலா அழகு கொண்டாள்,
வாரிடைத் தனம் மீது ஆட மூழ்கினாள்; வதனம்,
மை தீர்
நீரிடைத் தோன்றும் திங்கள் நிழல் என, பொலிந்தது
அன்றே! 17
நீராடிய பொய்கையும், பூம்புனலும்
மலை கடந்த புயங்கள், மடந்தைமார்,
கலை கடந்து அகல் அல்குல், கடம் படு
முலைகள், தம்தமின் முந்தி நெருங்கலால்,
நிலை கடந்து பரந்தது, நீத்தமே. 18
செய்ய வாய் வெளுப்ப, கண் சிவப்புற,
மெய் அராகம் அழிய, துகில் நெக,
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால்,
பொய்கை, காதல் கொழுநரும் போன்றதே! 19
ஆன தூயவரோடு உடன் ஆடினார்
ஞான நீரவர் ஆகுதல் நன்று அரோ! -
தேனும், நாவியும், தேக்கு, அகில் ஆவியும்,
மீனும், நாறின; வேறு இனி வேண்டுமோ? 20
மிக்க வேந்தர்தம் மெய் அணி சாந்தொடும்
புக்க மங்கையர் குங்குமம் போர்த்தலால்,
ஒக்க, நீல முகில் தலை ஓடிய
செக்கர் வானகம் ஒத்தது அம் தீம் புனல். 21
காக துண்ட நறுங் கலவைக் களி,
ஆகம் உண்டது, அடங்கலும் நீங்கலால்,
பாகு அடர்ந்த பனிக் கனி வாய்ச்சியர்,
வேகடம் செய் மணி என, மின்னினார். 22
பாய் அரித் திறலான் பசுஞ் சாந்தினால்
தூய பொன் - புயத்துப் பொதி தூக் குறி
மீ அரித்து விளர்க்க ஓர் மெல்லியல்
சேயரிக் கருங் கண்கள் சிவந்தவே. 23
கதம்ப நாள் விரை, கள் அவிழ் தாதொடும்
ததும்பு; பூந் திரைத் தண் புனல் சுட்டதால்
-
நிதம்ப பாரத்து ஒர் நேரிழை, காமத்தால்
வெதும்புவாள் உடல், வெப்பம் வெதுப்பவே! 24
தையலாளை ஒர் தார் அணி தோளினான்,
நெய் கொள் ஓதியின் நீர் முகந்து எற்றினான்
-
செய்ய தாமரைச் செல்வியை, தீம் புனல்,
கையின் ஆட்டும் களிற்று அரசு என்னவே! 25
சுளியும் மென் நடை தோற்க நடந்தவர்
ஒளி கொள் சீறடி ஒத்தன ஆம் என,
விளிவு தோன்ற, மிதிப்பன போன்றன -
நளினம் ஏறிய நாகு இள அன்னமே. 26
ஆடவரின் அடங்கா வேட்கை
எரிந்த சிந்தையர், எத்தனை என்கெனோ?
அரிந்த கூர் உகிரால் அழி சாந்து போய்,
தெரிந்த கொங்கைகள், செவ்விய நூல் புடை
வரிந்த பொற் கலசங்களை மானவே! 27
தாழ நின்ற ததை மலர்க் கையினால்,
ஆழி மன் ஒருவன் உரைத்தான்; அது,
வீழியின் கனிவாய் ஒரு மெல்லியல்,
தோழி கண்ணில், கடைக்கணிற் சொல்லினாள். 28
தள்ளி ஓடி அலை தடுமாறலால்,
தெள்ளு நீரிடை மூழ்கு செந்தாமரை
புள்ளி மான் அனையார் முகம் போல்கிலாது,
உள்ளம் நாணி, ஒளிப்பன போன்றவே. 29
நீராடிக் கரையேறி ஆடை ஆபரணங்கள் அணிதல்
இனைய எய்தி இரும் புனல் ஆடிய,
வனை கருங் கழல் மைந்தரும், மாதரும்,
அனைய நீர் வறிது ஆக வந்து ஏறியே,
புனை நறுந் துகில், பூணொடும் தாங்கினார்.
30
மேவினார் பிரிந்தார்; அந்த வீங்கு நீர்,
தாவு தண் மதிதன்னொடும் தாரகை
ஓவு வானமும், உள் நிறை தாமரைப்
பூ எலாம் குடி போனதும், போன்றதே. 31
சூரியனின் மறைவும், சந்திரனின் தோற்றமும்
மானின் நோக்கியர் மைந்தரொடு ஆடிய
ஆன நீர் விளையாடலை நோக்கினான்;
தானும், அன்னது காதலித்தான் என,
மீன வேலையை, வெய்யவன் எய்தினான். 32
ஆற்றல் இன்மையினால் அழிந்தேயும், தம்
வேற்று மன்னர் தம்மேல் வரும் வேந்தர் போல்,
ஏற்று மாதர் முகங்களொடு எங்கணும்
தோற்ற சந்திரன், மீளவும் தோற்றினான். 33
19. உண்டாட்டுப் படலம்
நிலா எங்கும் பரந்து தோற்றுதல்
வெண் நிற நறை நிறை வெள்ளம் என்னவும்,
பண் நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும்,
உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும்,
தண் நிறை நெடு நிலாத் தழைத்தது, எங்குமே.
1
கலந்தவர்க்கு இனியது ஓர் கள்ளும் ஆய், பிரிந்து
உலந்தவர்க்கு உயிர் சுடு விடமும் ஆய், உடன்
புலந்தவர்க்கு உதவி செய் புதிய தூதும் ஆய்,
மலர்ந்தது, நெடு நிலா - மதனன் வேண்டவே. 2
ஆறு எலாம் கங்கையே ஆய; ஆழிதாம்,
கூறு பாற்கடலையே ஒத்த; குன்று எலாம்
ஈறு இலான் கயிலையே இயைந்த; என் இனி
வேறு நாம் புகல்வது, நிலவின் வீக்கமே? 3
எள்ள அருந் திசைகளோடு யாரும், யாவையும்,
கொள்ளை வெண் நிலவினால் கோலம் கோடலால்,
வள் உறை வயிர வாள் மகர கேதனன்
வெள்ளணி ஒத்தது - வேலை ஞாலமே. 4
முத்துப் பந்தரில் தங்கி மகளிர் மதுப் பருகுதல்
தயங்கு தாரகை புரை தரள நீழலும்,
இயங்கு கார் மிடைந்த கா எழினிச் சூழலும்,
கயங்கள் போன்று ஒளிர் பளிங்கு அடுத்த கானமும்,
வயங்கு பூம் பந்தரும், மகளிர் எய்தினார்.
5
பூக் கமழ் ஓதியர், போது போக்கிய
சேக்கையின் விளை செருச் செருக்கும் சிந்தையர்,
ஆக்கிய அமிழ்து என, அம் பொன் வள்ளத்து
வாக்கிய பசு நறா, மாந்தல் மேயினார். 6
மீனுடை விசும்பினார், விஞ்சை நாட்டவர்,
ஊனுடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார்,
மானுடை நோக்கினார் வாயின் மாந்தினார் -
தேனுடை மலரிடைத் தேன் பெய்தென்னவே. 7
உக்க பால்புரை நறா உண்ட வள்ளமும்,
கைக் கொள் வாள் ஒளிபடச் சிவந்து காட்ட, தன்
மைக் கணும் சிவந்தது; ஓர் மடந்தை வாய்வழிப்
புக்க தேன் அமிழ்தமாய்ப் பொலிந்த போன்றவே.
8
கள் காமத்தை தூண்டுதல்
காமமும் நானமும் ததைந்த, தண் அகில்
தூமம் உண், குழலியர் உண்ட தூ நறை,
ஓம வெங் குழி உகு நெய்யின், உள் உறை
காம வெங் கனலினைக் கனற்றிக் காட்டிற்றே. 9
கள் உண்ட மயக்கத்தால் நிகழ்ந்த தடுமாற்றங்கள்
விடன் ஒக்கும் நெடிய நோக்கின் அமிழ்து ஒக்கும்
இன்சொலார் தம்
மடன் ஒக்கும் மடனும் உண்டோ ? - வாள் நுதல்
ஒருத்தி காண,
தடன் ஒக்கும் நிழலை, 'பொன் செய் தண் நறுந்
தேறல் வள்ளத்து
உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி, தோழி!' என்றாள்.
10
அச்ச நுண் மருங்குலாள், ஓர் அணங்கு அனாள்,
அளகபந்தி
நச்சுவேல் கருங் கண் செவ் வாய் நளிர்முகம்,
மதுவுள் தோன்ற,
'பிச்சி நீ என் செய்தாய்? இப் பெரு நறவு இருக்க,
வாளா,
எச்சிலை நுகர்தியோ?' என்று, எயிற்று அரும்பு
இலங்க நக்காள். 11
அறம் எலாம் நகைசெய்து ஏசப் பொரு அரு மேனி வேறு
ஓர்
மறம் உலாம் கொலை வேல் கண்ணாள், மணியின் வள்ளத்து,
வெள்ளை
நிற நிலாக் கற்றை பாய, நிறைந்தது போன்று தோன்ற,
நறவு என, அதனை, வாயின் வைத்தனள்; நாண் உட்கொண்டாள்.
12
'யாழ்க்கும், இன் குழற்கும், இன்பம் அளித்தன
இவை ஆம்' என்ன,
கேட்கும் மென் மழலைச் சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்த
வாயாள்,
தாள் கருங் குவளை தோய்ந்த தண் நறைச் சாடியுள்,
தன்
வாள் கணின் நிழலைக் கண்டாள்; வண்டு என ஓச்சுகின்றாள்.
13
களித்த கண் மதர்ப்ப, ஆங்கு ஓர் கனங் குழை,
கள்ளின் உள்ளே
வெளிப்படுகின்ற காட்சி வெண் மதி நிழலை நோக்கி,
'அளித்தனென் அபயம்; வானத்து அரவினை அஞ்சி நீ
வந்து
ஒளித்தனை; அஞ்சல்!' என்று, ஆங்கு இனியன உணர்த்துகின்றாள்.
14
அழிகின்ற அறிவினாலோ, பேதமையாலோ, ஆற்றில்
சுழி ஒன்றி நின்றது அன்ன உந்தியாள் தூய செந்
தேன்
பொழிகின்ற பூவின் வேய்ந்த பந்தரைப் புரைத்துக்
கீழ் வந்து
இழிகின்ற கொழு நிலாவை, நறவு என, வள்ளத்து ஏற்றாள்.
15
மின் என நுடங்குகின்ற மருங்குலாள் ஒருத்தி,
வெள்ளை
இன் அமிழ்து அனைய தீம் சொல், இடை தடுமாறி என்ன,
வன்ன மேகலையை நீக்கி, மலர்த் தொடை அல்குல்
சூழ்ந்தாள்;
பொன்னரிமாலை கொண்டு, புரி குழல் புனையலுற்றாள்.
16
கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன் முகத்தை
நோக்கி,
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி
உன்னி,
'உள் மகிழ் துணைவனோடும் ஊடு நாள், வெம்மை நீங்கி,
தண் மதி ஆகின், யானும் தருவென், இந் நறவை'
என்றாள். 17
எள் ஒத்த கோல மூக்கின் ஏந்திழை ஒருத்தி, முன்கை
தள்ள, தண் நறவை எல்லாம் தவிசிடை உகுத்தும்,
தேறாள்,
உள்ளத்தின் மயக்கம் தன்னால், 'உப் புறத்து
உண்டு' என்று எண்ணி
வள்ளத்தை, மறித்து வாங்கி, மணி நிற இதழின்
வைத்தாள். 18
வான் தனைப் பிரிதல் ஆற்றா வண்டு இனம் வச்சை
மாக்கள்
ஏன்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப,
தேன் தரு கமலச் செவ்வாய் திறந்தனள் நுகர நாணி,
ஊன்றிய கழுநீர் நாளத் தாளினால், ஒருத்தி, உண்டாள்.
19
புள் உறை கமல வாவிப் பொரு கயல் வெருவி ஓட,
வள் உறை கழித்த வாள்போல் வசி உற வயங்கு கண்ணாள்,
கள் உறை மலர் மென் கூந்தல் களி இள மஞ்ஞை அன்னாள்,
'உள் உறை அன்பன் உண்ணான்' என உன்னி, நறவை உண்ணாள்.
20
கூற்று உறழ் நயனங்கள் சிவப்ப, கூன் நுதல்
ஏற்றி, வாள் எயிறுகள் அதுக்கி, இன் தளிர்
மாற்ற அருங் கரதலம் மறிக்கும் - மாது, ஒரு
சீற்றம் ஆம் அவிநயம் தெரிக்கின்றாரினே. 21
துடித்த வான் துவர் இதழ்த் தொண்டை, தூ நிலாக்
கடித்த வாள் எயிறுகள் அதுக்கி, கண்களால்
வடித்த வெங் குருதி வேல் விழிக்கும் மாதர்
மெய்
பொடித்த வேர், புறத்து உகு நறவம் போன்றவே!
22
கனித் திரள் இதழ் பொதி செம்மை கண் புக,
நினைப்பது ஒன்று, உரைப்பது ஒன்று, ஆம் ஒர்
நேரிழை,
தனிச் சுடர்த் தாமரை முகத்துச் சாபமும்
குனித்தது; பனித்தது, குழவித் திங்களே. 23
இலவு இதழ் துவர் விட, எயிறு தேன் உக,
முலைமிசை, கச்சொடு கலையும் மூட்டு அற,
அலை குழல் சோர்தர, அசதி ஆடலால்,
கலவி செய் கொழுநரும் கள்ளும் ஒத்தவே. 24
'கனை கழல் காமனால் கலக்கம் உற்றதை,
அனகனுக்கு அறிவி' என்று, அறியப் போக்கும் ஓர்
இன மணிக் கலையினாள், 'தோழி! நீயும் என்
மனம் எனத் தாழ்தியோ? வருதியோ?' என்றாள்.
25
மான் அமர் நோக்கி, ஓர் மதுகை வேந்தன்பால்,
ஆன தன் பாங்கியர் ஆயினார் எலாம்,
போனவர் போனவர் தொடரப் போக்கினாள்;
தானும், அங்கு, அவர்கள்பின் தமியள் ஏகினாள்.
26
விரை செய் பூஞ் சேக்கையின் அடுத்த மீமிசை,
கரை செயா ஆசை ஆம் கடல் உளான், ஒரு
பிரைச மென் குதலையாள், கொழுநன் பேர் எலாம்
உரைசெயும் கிள்ளையை உவந்து புல்லினாள். 27
மன்றல் நாறு ஒரு சிறை இருந்து, ஒர் வாணுதல்,
தன் துணைக் கிள்ளையைத் தழீஇ, 'என் ஆவியை
இன்று போய்க் கொணர்கிலை; என் செய்வாய்? எனக்கு
அன்றிலோடு ஒத்தி' என்று அழுது, சீறினாள்.
28
வளை பயில் முன்கை ஓர் மயில் அனாள்தனக்கு
இளையவள் பெயரினைக் கொழுநன் ஈதலும்,
முளை எயிறு இலங்கிட முறுவல் வந்தது;
களகள உதிர்ந்தது கயற் கண் ஆலியே. 29
செற்றம் முன் புரிந்தது ஓர் செம்மல், வெம்மையால்
பற்றலும், அல்குலில் பரந்த மேகலை
அற்று உகு முத்தின் முன்பு, அவனி சேர்ந்தன,
பொன் - தொடி ஒருத்தி கண் பொறாத முத்தமே.
30
தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி, 'தோன்றலோடு
ஊடுகெனோ? உயிர் உருகு நோய் கெடக்
கூடுகெனோ? அவன் குணங்கள் வீணையில்
பாடுகெனோ?' எனப் பலவும் பன்னினாள். 31
மாடகம் பற்றினள்; மகர வீணை தன்
தோடு அவிழ் மலர்க் கரம் சிவப்பத் தொட்டனள்;
பாடினள் - ஒருத்தி, தன் பாங்கிமார்களோடு
ஊடினது உரைசெயாள்,-உள்ளத்து உள்ளதே. 32
குழைத்த பூங் கொம்பு அனாள் ஒருத்தி, கூடலை
இழைத்தனள்; அது, அவள் இட்ட போது எலாம்
பிழைத்தலும், அனங்க வேள் பிழைப்பு இல் அம்பொடும்
உழைத்தனள்; உயிர்த்தனள், உயிர் உண்டு என்னவே.
33
பந்து அணி விரலினாள் ஒருத்தி, பையுளாள்,
சுந்தரன் ஒருவன்பால் தூது போக்கினாள்;
'வந்தனன்' என, கடை அடைத்து மாற்றினாள்;
சிந்தனை தெரிந்திலம்; சிவந்த, நாட்டமே. 34
உய்த்த பூம் பள்ளியின் ஊடல் நீங்குவான்
சித்தம் உண்டு, ஒருத்திக்கு; அது, அன்பன் தேர்கிலான்;
பொய்த்தது ஓர் மூரியால் நிமிர்ந்து போக்குவாள்,
'எத்தனை இறந்தன கடிகை, ஈண்டு?' என்றாள்.
35
விதைத்த மென் காதலின் வித்து, வெஞ் சிறை
இதைப் புனல் நனைத்திட முளைத்ததே என -
பதைத்தனள் ஒருத்தன்மேல், ஒருத்தி பஞ்சு அடி
உதைத்தலும், - பொடித்தன, உரோம ராசியே. 36
பொலிந்த வாள் முகத்தினான், பொங்கி, தன்னையும்
மலிந்த பேர் உவகையால், - மாற்று வேந்தரை
நலிந்த வாள் உழவன், ஓர் நங்கை கொங்கை போய்
மெலிந்தவா நோக்கி, - தன் புயங்கள் வீங்கினான்.
37
ஏய்ந்த பேர் எழிலினான் ஒருவன் எய்தினான்,
வேய்ந்த போல் எங்கணும் அனங்கன் வெங் கணை
பாய்ந்த பூம் பள்ளியில் படுத்த பல்லவம்
தீய்ந்தன நோக்கினன், திசைக்கும் சிந்தையான்.
38
ஊட்டிய சாந்து வெந்து உலரும் வெம்மையால்,
-
'நாட்டினை அளித்தி நீ' என்று நல்லவர்,
ஆட்டு நீர்க் கலசமே என்னல் ஆன - ஓர்
வாள் தொழில் மைந்தற்கு, ஓர் மங்கை கொங்கையே.
39
பயிர் உறு கிண்கிணி, பரந்த மேகலை,
வயிர வான் பூண் அணி, வாங்கி நீக்கினான்;
உயிர் உறு தலைவன்பால் போக உன்னினாள்;
செயிர் உறு திங்களைத் தீய நோக்கினாள். 40
ஏலும் இவ் வன்மையை என் என்று உன்னுதும் -
ஆலை மென் கரும்பு அனான் ஒருவற்கு, ஆங்கு, ஒரு
சோலை மென் குயில் அனாள் சுற்றி வீக்கிய
மாலையை நிமிர்ந்தில, வயிரத் தோள்களே? 41
சோர் குழல் ஒருத்தி தன் வருத்தம் சொல்லுவான்,
மாரனை நோக்கி, ஓர் மாதை நோக்கினாள்;
காரிகை இவள், அவள் கருத்தை நோக்கி, ஓர்
வேரி அம் தெரியலான் வீடு நோக்கினாள். 42
சினம் கெழு வாட் கை ஓர் செம்மல்பால், ஒரு
கனங் குழை மயில் அனாள் கடிது போயினாள்;
மனம் குழை நறவமோ? மாலைதான் கொலோ?
அனங்கனோ? யார் கொலோ, அழைத்த தூதரே? 43
தொகுதரு காதற்குத் தோற்ற சீற்றத்து ஓர்
வகிர் மதி நெற்றியாள் மழைக் கண் ஆலி வந்து
உகுதலும், 'உற்றது என்?' என்று, கொற்றவன்
நகுதலும், நக்கனள், நாணும் நீங்கினாள். 44
பொய்த் தலை மருங்குலாள் ஒருத்தி, புல்லிய
கைத்தலம் நீக்கினள், கருத்தின் நீக்கலள்;
சித்திரம் போன்ற அச் செயல், ஒர் தோன்றற்குச்
சத்திரம் மார்பிடைத் தைத்தது ஒத்ததே. 45
மெல்லியல் ஒருத்தி, தான் விரும்பும் சேடியை,
புல்லிய கையினள், 'போதி தூது' எனச்
சொல்லுவான் உறும்; உற, நாணும்; சொல்லலள்;
எல்லை இல் பொழுது எலாம் இருந்து, விம்மினாள்.
46
ஊறு பேர் அன்பினாள் ஒருத்தி, தன் உயிர்
மாறு இலாக் காதலன் செயலை, மற்று ஒரு
நாறு பூங் கோதைபால் நவில நாணுவாள்;
வேறு வேறு உற, சில மொழி விளம்பினாள். 47
கருத்து ஒரு தன்மையது; உயிரும் ஒன்று; தம்
அருத்தியும் அத் துணை ஆய நீரினார்;
ஒருத்தியும் ஒருத்தனும் உடலும் ஒன்று எனப்
பொருத்துவர் ஆம் எனப் புல்லினார் அரோ. 48
வெதிர் பொரு தோளினாள் ஒருத்தி, வேந்தன் வந்து
எதிர்தலும், தன் மனம் எழுந்து முன் செல,
மதிமுகம் கதுமென வணங்கினாள்; அது,
புதுமை ஆதலின், அவற்கு அச்சம் பூத்ததே. 49
துனி வரு நலத்தொடு, சோர்கின்றாள், ஒரு
குனி வரு நுதலிக்கு, கொழுநன் இன்றியே
தனி வரு தோழியும், தாயை ஒத்தனள் -
இனி வரும் தென்றலும் இரவும் என்னவே. 50
ஆக்கிய காதலாள் ஒருத்தி, அந்தியில்
தாக்கிய தெய்வம் உண்டு என்னும் தன்மையள்,
நோக்கினள், நின்றனள்; நுவன்றது ஓர்கிலள்;
போக்கின தூதினோடு, உணர்வும் போக்கினாள்.
51
மறப்பிலள் கொழுநனை வரவு நோக்குவாள்,
பிறப்பினொடு இறப்பு எனப் பெயரும் சிந்தையாள்,
-
துறப்ப அரு முகிலிடைத் தோன்றும் மின் என,
புறப்படும்; புகும்; - ஒரு பூத்த கொம்பு அனாள்.
52
எழுத அருங் கொங்கை மேல் அனங்கன் எய்த அம்பு
உழுத வெம் புண்களில், வளைக் கை ஒற்றினாள்;
அழுதனள்; சிரித்தனள்; அற்றம் சொல்லினாள்;
தொழுதனள் ஒருத்தியை, தூது வேண்டுவாள்! 53
'ஆர்த்தியும், உற்றதும், அறிஞர்க்கு, அற்றம்தான்
வார்த்தையின் உணர்த்துதல் வறிது அன்றோ?' என
வேர்த்தனள்; வெதும்பினள்; மெலிந்து சோர்ந்தனள்;
பார்த்தனள், ஒருத்தி தன் பாங்கு அனாளையே.
54
தனங்களின் இளையவர் தம்மின், மும் மடி,
கனம் கனம் இடை இடைக் களிக்கும் கள்வன் ஆய்,
மனங்களில் நுழைந்து, அவர் மாந்து தேறலை
அனங்கனும் அருந்தினான் ஆதல் வேண்டுமே. 55
மது உண்ட மகளிர் ஆடவர் இடையே நிகழ்ந்த ஊடலும்
கூடலும்
நறை கமழ் அலங்கல் மாலை நளிர் நறுங் குஞ்சி
மைந்தர்,
துறை அறி கலவிச் செவ்வித் தோகையர் தூசு வீசி,
நிறை அகல் அல்குல் புல்கும் கலன் கழித்து அகல
நீத்தார் -
அறை பறை அனைய நீரார் அரு மறைக்கு ஆவரோ தான்?
56
பொன் அருங் கலனும், தூசும், புறத்து உள துறத்தல்
வம்போ?
நல் நுதல் ஒருத்தி, தன்பால் அகத்து உள நாணும்,
நீத்தாள்;-
உன்ன அருந் துறவு பூண்ட உணர்வுடை ஒருவனே போல்,
தன்னையும் துறக்கும் தன்மை காமத்தே தங்கிற்று
அன்றே. 57
பொரு அரு மதனன் போல்வான் ஒருவனும், பூவின்மேல்
அத்
திருவினுக்கு உவமை சால்வாள் ஒருத்தியும், சேக்கைப்
போரில்,
ஒருவருக்கு ஒருவர் தோலார், ஒத்தனர்;- 'உயிரும்
ஒன்றே
இருவரது உணர்வும் ஒன்றே' என்ற போது யாவர் வெல்வார்?
58
கொள்ளைப் போர் வாட்கணாள் அங்கு ஒருத்தி, ஓர்
குமரன் அன்னான்
வள்ளத் தார் அகலம் தன்னை மலர்க்கையால் புதைப்ப
நோக்கி,
'"உள்ளத்து, ஆர் உயிர் அன்னாள் மேல் உதைபடும்"
என்று, நீர் நும்
கள்ளத்தால் புதைத்தி' என்னா, முன்னையின் கனன்று
மிக்காள். 59
பால் உள பவளச் செவ் வாய், பல் வளை, பணைத்த
வேய்த் தோள்,
வேல் உள நோக்கினாள், ஓர் மெல்லியல், வேலை அன்ன
மால் உள சிந்தையான், ஓர் மழை உள தடக் கையாற்கு,
மேல் உள அரம்பை மாதர் என்பது ஓர் விருப்பை,
ஈந்தாள். 60
புனத்து உள மயில் அனாள், கொழுநன் பொய் உரை
நினைத்தனள் சீறுவாள், ஒருத்தி, நீடிய
சினத்தொடு காதல்கள் செய்த போரிடை,
மனத்து உறை காதலே வாகை கொண்டதே. 61
கொலை உரு அமைந்தெனக் கொடிய நாட்டத்து ஓர்
கலை உருவு அல்குலாள், கணவற் புல்குவாள்,
சிலை உரு அழிதரச் செறிந்த மார்பில் தன்
முலை உருவின என, முதுகை நோக்கினாள். 62
குங்குமம் உதிர்ந்தன; கோதை சோர்ந்தன;
சங்குஇனம் ஆர்த்தன; கலையும் சாறின;
பொங்கின சிலம்புகள் பூசலிட்டன; -
மங்கையர் இள நலம் மைந்தர் உண்ணவே. 63
துனி உறு புலவியைக் காதல், சூழ் சுடர்
பனி என, துடைத்தலும் பதைக்கும் சிந்தையாள்,
புனை இழை ஒரு மயில், பொய் உறங்குவாள்,
கனவு எனும் நலத்தினால், கணவற் புல்லினாள்.
64
வட்ட வாள் முகத்து ஒரு மயிலும், மன்னனும்,
கிட்டிய போது, உடல் கிடைக்கப் புல்லினார்;
-
விட்டிலர்; கங்குலின் விடிவு கண்டிலர்; -
ஒட்டிய உடல் பிரிப்பு உணர்கிலாமையால். 65
அருங் களி மால் கயிறு அனைய வீரர்க்கும்
கருங் குழல் மகளிர்க்கும், கலவிப் பூசலால்,
நெருங்கிய வன முலை சுமக்க நேர்கலா
மருங்குல் போல் தேய்ந்தது - அம் மாலைக் கங்குலே.
66
சந்திரன் மறைவும், சூரியன் தோற்றமும்
கடை உற நல் நெறி காண்கிலாதவர்க்கு
இடை உறு திரு என, இந்து நந்தினான்,
படர் திரைக் கருங் கடல் பரமன் மார்பிடைச்
சுடர் மணி அரசு என, இரவி தோன்றினான். 67
மிகைப் பாடல்கள்
அரம்பையரினும், இவர் ஆடல் நன்று எனப்
புரந்தரன் கலவியின் பூசல் நோக்கி, வான்
நிரம்பிய கண்களை முகிழ்த்து, நீள் நகர்
கரந்தது கடுத்து உடுக்கணங்கள் மாண்டவே.
66-1
20. எதிர்கொள் படலம்
தயரதன் பரிவாரங்களுடன் கங்கையைக் கடந்து மிதிலையை சார்தல்
அடா நெறி அறைதல்செல்லா அரு மறை அறைந்த நீதி
விடா நெறிப் புலமைச் செங்கோல் வெண்குடை வேந்தர்வேந்தன்,
படா முக மலையில் தோன்றிப் பருவம் ஒத்து அருவி
பல்கும்
கடா நிறை ஆறு பாயும் கடலொடும், கங்கை சேர்ந்தான்.
1
கப்புடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்ற,
துப்புடை மணலிற்று ஆகி, கங்கை நீர் சுருங்கிக்
காட்ட,
அப்புடை அனீக வேலை அகன் புனல் முகந்து மாந்த,
உப்புடைக் கடலும், தெண் நீர் உண் நசை உற்றது
அன்றே. 2
ஆண்டு நின்று எழுந்து போகி, அகன் பணை மிதிலை
என்னும்
ஈண்டு நீர் நகரின் பாங்கர் இரு நிலக் கிழவன்
எய்த,
தாண்டு மா புரவித் தானைத் தண்ணளிச் சனகன் என்னும்
தூண் தரு வயிரத் தோளான் செய்தது சொல்லலுற்றாம்:
3
தயரதனை எதிர்கொள்ள சனகன் சேனை புடை சூழ வரல்
'வந்தனன் அரசன்' என்ன, மனத்து எழும் உவகை பொங்க,
கந்து அடு களிறும், தேரும், கலின மாக் கடலும்,
சூழ,
சந்திரன் இரவிதன்னைச் சார்வது ஓர் தன்மை தோன்ற,
இந்திரதிருவன் தன்னை எதிர் கொள்வான் எழுந்து
வந்தான். 4
கங்கை நீர் நாடன் சேனை, மற்று உள கடல்கள் எல்லாம்
சங்குஇனம் ஆர்ப்ப வந்து சார்வன போல, சார,
பங்கயத்து அணங்கைத் தந்த பாற்கடல் எதிர்வதேபோல்,
மங்கையைப் பயந்த மன்னன் வள நகர் வந்தது அன்றே.
5
தயரதனின் தானைச் சிறப்பு
இலை குலாவு அயிலினான் அனிகம், ஏழ் என உலாம்
நிலை குலாம் மகர நீர் நெடிய மா கடல் எலாம்,
அலகு இல் மா களிறு, தேர், புரவி, ஆள், என விராய்,
உலகு எலாம் நிமிர்வதே பொருவும் ஓர் உவமையே.
6
தொங்கல், வெண்குடை, தொகைப் பிச்சம், உட்பட
விராய்,
எங்கும் விண் புதைதரப் பகல் மறைந்து, இருள்
எழ,
பங்கயம், செய்யவும், வெளியவும், பல படத்
தங்கு தாமரையுடைத் தானமே போலுமே. 7
கொடி உளாளோ? தனிக் குடை உளாளோ? குலப்
படி உளாளோ? கடற் படை உளாளோ? பகர்
மடி இலா அரசினான் மார்பு உளாளோ? வளர்
முடி உளாளோ? தெரிந்து உணர்கிலாம் - முளரியாள்.
8
வார்முகம் கெழுவு கொங்கையர் கருங் குழலின்
வண்டு
ஏர் முழங்கு அரவம் - ஏழ் இசை முழங்கு அரவமே!
தேர் முழங்கு அரவம் - வெண் திரை முழங்கு அரவமே!
கார் முழங்கு அரவம் - வெங் கரி முழங்கு அரவமே!
9
சூழு மா கடல்களும் திடர் பட, துகள் தவழ்ந்து,
ஏழு பாரகமும் உற்றுளது எனற்கு எளிது அரோ-
ஆழியான் உலகு அளந்த அன்று தாள் சென்ற அப்
பூழையூடே பொடித்து, அப்புறம் போயதே! 10
மன் நெடுங் குடை மிடைந்து அடைய வான் மறைதர,
துன்னிடும் நிழல் வழங்கு இருள் துரப்பு எளிது
அரோ-
பொன் இடும், புவி இடும், புனை மணிக் கலன் எலாம்
மின் இடும்; வில் இடும்; வெயில் இடும்; நிலவு
இடும்! 11
சனக மன்னன் வருகின்ற வழிக் காட்சிகள்
தா இல் மன்னவர்பிரான் வர, முரண் சனகனும்
ஏ வரும் சிலையினான், எதிர் வரும் நெறி எலாம்,
தூவு தண் சுண்ணமும், கனக நுண் தூளியும்,
பூவின் மென் தாது உகும் பொடியுமே - பொடி எலாம்.
12
நறு விரைத் தேனும், நானமும், நறுங் குங்குமச்
செறி அகில் தேய்வையும், மான் மதத்து எக்கரும்,
வெறியுடைக் கலவையும், விரவு செஞ் சாந்தமும்,
செறி மதக் கலுழி பாய் சேறுமே - சேறு எலாம்.
13
மன்றல் அம் கோதையார் மணியினும் பொன்னினும்,
சென்று வந்து உலவும் அச் சிதைவு இலா நிழலின்
நேர்,
வென்ற திண் கொடியொடும், நெடு விதானமும் விராய்,
நின்ற வெண்குடைகளின் நிழலுமே - நிழல் எலாம்.
14
இரு மன்னர் சேனையும் ஒன்றுடன் ஒன்று கலந்த
காட்சி
மாறு இலா மதுகையான் வரு பெருந் தானைமேல்,
ஊறு பேர் உவகையான் அனிகம் வந்து உற்றபோது,
ஈறு இல் ஓதையினொடும், எறி திரைப் பரவைமேல்
ஆறு பாய்கின்றது ஓர் அமலைபோல் ஆனதே. 15
தயரதன் சனகனைத் தழுவுதல்
கந்தையே பொரு கரிச் சனகனும், காதலொடு
உந்த, ஓத அரியது ஓர் தன்மையோடு, உலகு உளோர்
தந்தையே அனைய அத் தகவினான் முன்பு, தன்
சிந்தையே பொரு, நெடுந் தேரின் வந்து எய்தினான்.
16
எய்த, அத் திரு நெடுந் தேர் இழிந்து, இனிய
தன்
மொய் கொள் திண் சேனை பின் நிற்க, முன் சேறலும்,
கையின் வந்து, 'ஏறு' என, கடிதின் வந்து ஏறினான்;
ஐயனும், முகம் மலர்ந்து, அகம் உறத் தழுவினான்.
17
சனகனோடு தயரதன் மிதிலை நகர் சேர்தல்
தழுவி நின்று, அவன் இருங் கிளையையும், தமரையும்,
வழு இல் சிந்தனையினான், வரிசையின் அளவளாய்,
'எழுக முந்துற' எனா, இனிது வந்து எய்தினான்,
-
உழுவை முந்து அரி அனான், எவரினும் உயரினான்.
18
இராமனின் வருகை
இன்னவாறு, இருவரும், இனியவாறு ஏக, அத்
துன்னு மா நகரின் நின்று எதிர்வரத் துன்னினான்
-
தன்னையே அனையவன், தழலையே அனையவன்,
பொன்னின் வார் சிலை இறப் புயம் நிமிர்ந்து
அருளினான். 19
தம்பியும், தானும், அத் தானை மன்னவன் நகர்ப்
பம்பு திண் புரவியும், படைஞரும், புடை வர,
செம் பொனின், பசு மணித் தேரின் வந்து எய்தினான்
-
உம்பரும் இம்பரும் உரகரும் தொழ உளான். 20
யானையோ, பிடிகளோ, இரதமோ, இவுளியோ,
ஆன பேர் உறை இலா நிறைவை யார் அறிகுவார் -
தானை ஏர் சனகன் ஏவலின், நெடுந் தாதை முன்
போன பேர் இருவர் தம் புடை வரும் படையினே?
21
இராம இலக்குவரைத் தயரதன் தழுவுதல்
காவியும், குவளையும், கடி கொள் காயாவும் ஒத்து,
ஓவியம் சுவை கெடப் பொலிவது ஓர் உருவொடே,
தேவரும் தொழு கழல் சிறுவன், முன் பிரிவது ஓர்
ஆவி வந்தென்ன வந்து, அரசன் மாடு அணுகினான்.
22
அனிகம் வந்து அடி தொழ, கடிது சென்று, அரசர்கோன்
இனிய பைங் கழல் பணிந்து எழுதலும், தழுவினான்;
மனு எனும் தகையன் மார்பிடை மறைந்தன, மலைத்
தனி நெடுஞ் சிலை இறத் தவழ் தடங் கிரிகளே.
23
இளைய பைங் குரிசில் வந்து, அடி பணிந்து எழுதலும்,
தளை வரும் தொடையல் மார்பு உற உறத் தழுவினான்,
களைவு அருந் துயர் அறக் ககனம் எண் திசை எலாம்
விளைதரும் புகழினான், எவரினும் மிகுதியான்.
24
அன்னையர் அடி வணங்குதல்
கற்றை வார் சடையினான் கைக் கொளும் தனு இற,
கொற்ற நீள் புயம் நிமிர்த்தருளும் அக் குரிசில்,
பின்
பெற்ற தாயரையும், அப் பெற்றியின் தொழுது, எழுந்து
உற்றபோது, அவர் மனத்து உவகை யார் உரை செய்வார்.
25
தன்னை வணங்கிய பரதனை இராமன் தழுவுதல்
உன்னு பேர் அன்பு மிக்கு ஒழுகி ஒத்து, ஒண்
கண் நீர்
பன்னு தாரைகள் தர, தொழுது எழும் பரதனை,
பொன்னின் மார்பு உற அணைத்து, உயிர் உறப் புல்லினான்
-
தன்னை அத் தாதை முன் தழுவினான் என்னவே. 26
இராமனை இலக்குவனும், பரதனைச் சத்துருக்கனும்,
வணங்கிப் போற்றுதல்
கரியவன் பின்பு சென்றவன், அருங் காதலின்
பெரியவன் தம்பி, என்று இனையது ஓர் பெருமை அப்
பொரு அருங் குமரர், தம் புனை நறுங் குஞ்சியால்,
இருவர் பைங் கழலும், வந்து, இருவரும் வருடினார்.
27
குமரர்கள் நால்வரும் விளங்கிய காட்சி
'கோல் வரும் செம்மையும், குடை வரும் தன்மையும்,
சால் வரும் செல்வம்' என்று உணர் பெருந் தாதைபோல்,
மேல் வரும் தன்மையால், மிக விளங்கினர்கள்,
தாம் -
நால்வரும் பொரு இல் நான்மறை எனும் நடையினார்.
28
சேனையுடன் முன் செல்ல இராமனுக்குத் தயரதன்
பணித்தல்
சான்று எனத் தகைய செங்கோலினான், உயிர்கள்தாம்
ஈன்ற நல் தாய் எனக் கருது பேர் அருளினான்,
'ஆன்ற இச் செல்வம் இத்தனையும் மொய்த்து அருகு
உற'
தோன்றலை, 'கொண்டு முன் செல்க!' எனச் சொல்லினான்.
29
சேனையின் மகிழ்ச்சி
காதலோ! அறிகிலம், கரிகளைப் பொருவினார்;
தீது இலா உவகையும், சிறிதுஅரோ? பெரிதுஅரோ?
கோதை சூழ் குஞ்சி அக் குமரர் வந்து எய்தலும்,
தாதையோடு ஒத்தது, அத் தானையின் தன்மையே!
30
தம்பியருடன் இராமன் தேர் மீது சென்ற காட்சி
தொழுது இரண்டு அருகும், அன்புடைய தம்பியர்
தொடர்ந்து,
அழிவு இல் சிந்தையின் உவந்து, ஆடல் மாமிசை
வர,
தழுவு சங்குடன் நெடும் பணை தழங்கிட, எழுந்து,
எழுத அருந் தகையது ஓர் தேரின்மேல் ஏகினான்.
31
இராமன் மிதிலை நகர வீதி வந்து சேர்தல்
பஞ்சி சூழ் மெல் அடிப் பாவைமார் பண்ணைசூழ்,
மஞ்சு சூழ் நெடிய மாளிகையின் வந்து, இடை விராய்,
நஞ்சு சூழ் விழிகள் பூ மழையின் மேல் விழ நடந்து,
இஞ்சி சூழ் மிதிலை மா வீதி சென்று எய்தினான்.
32
சூடகம் துயல் வர, கோதை சோர்தர, மலர்ப்
பாடகம் - பரத நூல் பசுர, வெங் கட கரிக்
கோடு அரங்கிட எழும் குவி தடங் கொங்கையார்,
ஆடு அரங்கு அல்லவே - அணி அரங்கு அயல் எலாம்.
33
பேதைமார் முதல் கடைப் பேரிளம்பெண்கள்தாம்,
ஏதி ஆர் மாரவேள் ஏவ, வந்து எய்தினார்,
ஆதி வானவர் பிரான் அணுகலால், அணி கொள் கார்
ஓதியார் வீதிவாய் உற்றவாறு உரைசெய்வாம்:
34
21. உலாவியற் படலம்
இராமனைக் காண வந்த மகளிரின் இயல்புகள்
மான் இனம் வருவ போன்றும், மயில் இனம் திரிவ
போன்றும்
மீன் இனம் மிளிர வானில் மின் இனம் மிடைவ போன்றும்,
தேன் இனம் சிலம்பி ஆர்ப்ப, சிலம்பு இனம் புலம்பி
ஏங்க,-
பூ நனை கூந்தல் மாதர் - பொம்மெனப் புகுந்து,
மொய்த்தார். 1
விரிந்து வீழ் கூந்தல் பாரார்; மேகலை அற்ற
நோக்கார்;
சரிந்த பூந் துகில்கள் தாங்கார்; இடை தடுமாறத்
தாழார்;
நெருங்கினர்; நெருங்கிப் புக்கு, 'நீங்குமின்,
நீங்குமின்' என்று, -
அருங் கலம் அனைய மாதர் - தேன் நுகர் அளியின்
மொய்த்தார். 2
பள்ளத்துப் பாயும் நல் நீர் அனையவர், பானல்
பூத்த
வெள்ளத்துப் பெரிய கண்ணார், மென் சிலம்பு அலம்ப,
மென் பூத்
தள்ள, தம் இடைகள் நோவ, தமை வலித்து, 'அவன்பால்
செல்லும்
உள்ளத்தைப் பிடித்தும் நாம்' என்று, ஓடுகின்றாரும்
ஒத்தார். 3
'கண்ணினால் காதல் என்னும் பொருளையே காண்கின்றோம்;
இப்
பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயன் இன்று
பெறுதும்' என்பார்;
மண்ணின் நீர் உலந்து, வானம் மழை அற வறந்த காலத்து,
உண்ணும் நீர் கண்டு வீழும் உழைக் குலம் பலவும்
ஒத்தார். 4
அரத்தம் உண்டனையே மேனி அகலிகைக்கு அளித்த தாளும்,
விரைக் கருங் குழலிக்காக வில் இற நிமிர்ந்து
வீங்கும்
வரைத் தடந் தோளும், காண, மறுகினில் வீழும்
மாதர்,
இரைத்து வந்து, அமிழ்தின் மொய்க்கும் ஈஇனம்
என்னல் ஆனார். 5
இராமன் விளைத்த மையல்
வீதிவாய்ச் செல்கின்றான்போல், விழித்து இமையாது
நின்ற
மாதரார் கண்களூடே வாவும் மான் தேரில் செல்வான்,
யாதினும் உயர்ந்தோர், தன்னை, 'யாவர்க்கும்
கண்ணன்' என்றே
ஓதிய பெயர்க்குத் தானே உறு பொருள் உணர்த்திவிட்டான்.
6
'எண் கடந்து, அலகு இலாது, இன்று, ஏகுறும் இவன்
தேர்' என்று,
பெண்கள் தாம் தம்மின் நொந்து பேதுறுகின்ற காலை,
மண் கடந்து, அமரர் வைகும் வான் கடந்தானை, தான்
தன்
கண் கடவாது காத்த காரிகை வலியளே காண்!' 7
பயிர் ஒன்று கலையும், சங்கும், பழிப்ப அரு
நலனும், பண்பும்,
செயிர் இன்றி அலர்ந்த பொற்பும், சிந்தையும்,
உணர்வும் தேசும்,
வயிரம் செய் பூணும், நாணும், மடனும், தன் நிறையும்,
மற்றும்
உயிர் ஒன்றும், ஒழிய எல்லாம் உகுத்து, ஒரு
தெரிவை நின்றாள். 8
குழை உறா மிளிரும் கெண்டை கொண்டலின் ஆலி சிந்த,
தழை உறாக் கரும்பின் சாபத்து அனங்க வேள் சரங்கள்
பாய்ந்த
இழை உறாப் புண் அறாத இள முலை ஒருத்தி சோர்ந்து,
மழை உறா மின்னின் அன்ன மருங்குல்போல் நுடங்கி,
நின்றாள். 9
பஞ்சு அணி விரலினார் தம் படை நெடுங் கண்கள்
எல்லாம்,
செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையைச் சேர்ந்தவோ
தாம்?
மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம், மாதரார்
தம்
அஞ்சன நோக்கம் போர்க்க, இருண்டதோ? அறிகிலேமால்.
10
மாந் தளிர் மேனியாள் ஓர் வாணுதல், மதனன், எங்கும்
பூந் துணர் வாளி மாரி பொழிகின்ற பூசல் நோக்கி,
'வேந்தர் கோன் ஆணை நோக்கான்; வீரன் வில் ஆண்மை
பாரான்;
ஏந்து இழையாரை எய்வான் யாவனோ ஒருவன்?' என்றாள்.
11
சொல் நலம் கடந்த காமச் சுவையை ஓர் உருவம் ஆக்கி,
இன் நலம் தெரிய வல்லார் எழுதியது என்ன நின்றாள்
-
பொன்னையும் பொருவு நீராள், புனைந்தன எல்லாம்
போக,
தன்னையும் தாங்கலாதாள், துகில் ஒன்றும் தாங்கி
நின்றாள். 12
வில் தங்கு புருவம் நெற்றி வெயர் வர, பசலை
விம்மிச்
சுற்று எங்கும் எறிப்ப, உள்ளம் சோர, ஓர் தோகை
நின்றாள்,
கொற்றம் செய் கொலை வேல் என்னக் கூற்று எனக்
கொடிய கண்ணாள் -
மற்று ஒன்றும் காண்கிலாதாள், 'தமியனோ வள்ளல்?'
என்றாள். 13
பைக் கருங் கூந்தல், செவ் வாய், வாள் நுதல்,
ஒருத்தி உள்ளம்
நெக்கனள் உருகுகின்றாள், 'நெஞ்சிடை வஞ்சன்
வந்து
புக்கனன்; போகாவண்ணம், கண் எனும் புலம் கொள்
வாயில்
சிக்கென அடைத்தேன்; தோழி! சேருதும் அமளி' என்றாள்.
14
தாக்கு அணங்கு அனைய மேனி, தைத்த வேள் சரங்கள்
பாராள்;
வீக்கிய கலனும் தூசும் வேறு வேறு ஆனது ஓராள்;
-
ஆக்கிய பாவை அன்னாள் ஒருத்தி - ஆண்டு, அமலன்
மேனி
நோக்குறுவாரை எல்லாம் எரி எழ நோக்குகின்றாள்.
15
களிப்பன, மதர்ப்ப, நீண்டு கதுப்பினை அளப்ப,
கள்ளம்
ஒளிப்பன, வெளிப்பட்டு ஓடப் பார்ப்பன, சிவப்பு
உள் ஊறி
வெளுப்பன, கறுப்ப, ஆன வேல்கணாள் ஒருத்தி, உள்ளம்
குளிர்ப்பொடு காண வந்தாள், வெதுப்பொடு கோயில்
புக்காள். 16
கருங் குழல் பாரம், வார் கொள் கன முலை, கலை
சூழ் அல்குல்,
நெருங்கின மறைப்ப, ஆண்டு ஓர் நீக்கிடம் பெறாது
விம்மும்
பெருந் தடங் கண்ணி, காணும் பேர் எழில் ஆசை
தூண்ட,
மருங்குலின் வெளிகளூடே, வள்ளலை நோக்குகின்றாள்.
17
இராமன் உலாவந்த வீதிகளின் நிலை
வரிந்த வில் அனங்கன் வாளி மனங்களில் தைப்ப,
மாதர்
எரிந்த பூண் இனமும், கொங்கை வெயர்த்த போது
இழிந்த சாந்தும்,
சரிந்த மேகலையும், முத்தும், சங்கமும், தாழ்ந்த
கூந்தல்
வரிந்த பூந் தொடையும், அன்றி வெள்ளிடை அரிது
- அவ் வீதி. 18
இராமனின் மேனி அழகு
தோள் கண்டார், தோளே கண்டார்; தொடு கழல் கமலம்
அன்ன
தாள் கண்டார், தாளே கண்டார்; தடக் கை கண்டாரும்,
அஃதே;
வாள் கொண்ட கண்ணார் யாரே, வடிவினை முடியக்
கண்டார்? -
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்.
19
இராமனைக் கண்ட பற்பல மகளிரின் நிலைகள்
அலம்பு பாரக் குழலி ஒர் ஆயிழை,
சிலம்பும் மேகலையும் ஒலி செய்திட,
நலம் பெய் கொம்பின் நடந்து வந்து எய்தினாள்,
புலம்பு சேடியர் கைமிசைப் போயினாள். 20
அருப்பு மென் முலையாள், அங்கு, ஓர் ஆயிழை,
'இருப்பு நெஞ்சினையேனும், ஓர் ஏழைக்கா,
பொருப்பு வில்லைப் பொடி செய்த புண்ணியா!
கருப்பு வில் இறுத்து ஆட்கொண்டு கா' என்றாள்.
21
மை தவழ்ந்த கருங் கண் ஒர் வாணுதல்,
'செய் தவன் தனித் தேர்மிசைச் சேறல் விட்டு,
எய்த வந்து எதிர் நின்றமைதான் இது
கைதவம்கொல்? கனவுகொலோ?' என்றாள். 22
மாது ஒருத்தி, மனத்தினை அல்லது ஓர்
தூது பெற்றிலள், இன் உயிர் சோர்கின்றாள்,
'போது அரிக் கண் பொலன் குழைப் பூண் முலைச்
சீதை எத் தவம் செய்தனளோ?' என்றாள். 23
பழுது இலா ஒரு பாவை அன்னாள், பதைத்து,
அழுது, வெய்துயிர்த்து, அன்புடைத் தோழியைத்
தொழுது, சோர்ந்து அயர்வாள், 'இந்தத் தோன்றலை
எழுதலாம்கொல், இம் மன்மதனால்?' என்றாள்.
24
வண்ண வாய் ஒரு வாணுதல், 'மானிடற்கு,
எண்ணுங்கால், இவ் இலக்கணம் எய்திட
ஒண்ணுமோ? ஒன்று உணர்த்துகின்றேன், இவன்
கண்ணனே! இது கண்டிடும், பின்' என்றாள். 25
கனக நூபுரம் கை வளையோடு உக,
மனம் நெகும்படி வாடி, ஓர் வாணுதல்,
'அனகன் இந் நகர் எய்தியது, ஆதியில்,
சனகன் செய்த தவப் பயனால்' என்றாள். 26
நனி வருந்தி, நலம் குடிபோயிட,
பனி வரும் கண் ஓர் பாசிழை அல்குலாள்,
'முனிவரும் குல மன்னரும் மொய்ப்பு அற,
தனி வரும்கொல் கனவின் தலை?' என்றாள். 27
புனம் கொள் கார் மயில் போலும் ஓர் பொற்கொடி,
மனம் கொள் காதல் மறைத்தலை எண்ணினாள்;
அனங்கவேள், அது அறிந்தனன்; - அற்றம் தான்,
மனங்கள் போல, முகமும் மறைக்குமே? 28
இணை நெடுங் கண் ஓர் இந்து முகத்தி பூ-
அணை அடைந்து, இடியுண்ட அரா என,
புணர் நலம் கிளர் கொங்கை புழுங்கிட,
உணர்வு அழுங்க, உயிர்த்தனள் ஆவியே. 29
ஆம்பல் ஒத்து அமுது ஊறு செவ் வாய்ச்சியர்,
தாம் பதைத்து உயிர் உள் தடுமாறுவார்,
தேம்பு சிற்றிடைச் சீதையைப்போல், சிறிது
ஏம்பல் பெற்றிலர்; எங்ஙனம் உய்வரே? 30
'வேர்த்து, மேனி தளர்ந்து, உயிர் விம்மலோடு
ஆர்த்தி உற்ற மடந்தையர் ஆரையும்,
தீர்த்தன், இத்தனை, சிந்தையின், செங் கணின்,
பார்த்திலான்; உள் பரிவு இலனோ?' என்றாள்.
31
வையம் பற்றிய மங்கையர் எண்ணிலர்,
ஐயன் பொற்புக்கு அளவு இலை ஆதலால்,
எய்யும் பொன் சிலை மாரனும், என் செய்வான்?
கை அம்பு அற்று, உடைவாளினும் கை வைத்தான்.
32
நான வார் குழல் நாரியரோடு அலால்,
வேனில் வேளொடு, மேல் உறைவார்களோடு,
ஆன பூசல் அறிந்திலம்; அம்பு போய்
வான நாடியர் மார்பினும் தைத்தவே. 33
'மருள் மயங்கு மடந்தையர்மாட்டு ஒரு
பொருள் நயந்திலன் போகின்றதே; இவன்
கருணை என்பது கண்டு அறியான்; பெரும்
பருணிதன்கொல்? படு கொலையான்!' என்றாள். 34
தொய்யில் வெய்ய முலை, துடி போல் இடை
நையும் நொய்ய மருங்குல், ஓர் நங்கைதான்,
கையும் மெய்யும் அறிந்திலள்; கண்டவர்,
'உய்யும், உய்யும்!' எனத் தளர்ந்து ஓய்வுற்றாள்.
35
பூக ஊசல் புரிபவர்போல், ஒரு
பாகின் மென்மொழி, தன் மலர்ப் பாதங்கள்
சேகு சேர்தர, சேவகன் தேரின்பின்,
ஏகும், மீளும்; இது என் செய்தவாறு அரோ? 36
பெருத்த காதலின் பேதுறு மாதரின்
ஒருத்தி, மற்று அங்கு ஒருத்தியை நோக்கி, 'என்
கருத்தும் அவ் வழிக் கண்டது உண்டோ ?' என்றாள்
-
அருத்தி உற்றபின் நாணம் உண்டாகுமோ? 37
நங்கை, அங்கு ஒரு பொன், 'நயந்தார் உய்ய,
தங்கள் இன் உயிரும் கொடுத்தார், தமர்;
எங்கள் இன் உயிர் எங்களுக்கு ஈகிலா
வெங்கண், எங்கண் விளைந்தது, இவற்கு? என்றாள்.
38
நாமத்தால் அழிவாள் ஒரு நன்னுதல்,
'சேமத்து ஆர் வில் இறுத்தது, தேருங்கால்,
தூமத்து ஆர் குழல் தூ மொழித் தோகைபால்
காமத்தால் அன்று, கல்வியினால்' என்றாள்.
39
ஆரமும், துகிலும், கலன் யாவையும்,
சோர, இன் உயிர் சோரும் ஒர் சோர்குழல்,
'கோர வில்லிமுன்னே எனைக் கொல்கின்ற
மாரவேளின் வலியவர் யார்?' என்றாள். 40
வசிட்டனும் கோசிகனும் இருந்த மண்டபத்தை இராமன்
சேர்தல்
மாதர் இன்னணம் எய்த்திட, வள்ளல் போய்,
கோது இல் சிந்தை வசிட்டனும், கோசிக
வேத பாரனும் மேவிய மண்டபம்,
ஏதி மன்னர் குழாத்தொடும் எய்தினான். 41
முனிவரை வணங்கி இராமன் ஆசனத்து அமர்தல்
திருவின் நாயகன், மின் திரிந்தாலெனத்
துருவு மா மணி ஆரம் துயல்வர,
பருவ மேகம் படிந்ததுபோல் படிந்து,
இருவர் தாளும் முறையின் இறைஞ்சினான். 42
இறைஞ்ச, அன்னவர் ஏத்தினர்; ஏவ, ஓர்
நிறைஞ்ச பூந் தவிசு ஏறி, நிழல்கள்போல்,
புறஞ்செய் தம்பியருள் பொலிந்தான் அரோ -
அறம் செய் காவற்கு அயோத்தியில் தோன்றினான்.
43
தயரதனும் மண்டபம் வந்து அமர்தல்
ஆன மா மணி மண்டபம் அன்னதில்
தானை மன்னன் தமரொடும் சார்ந்தனன் -
மீன் எலாம் தன் பின் வர, வெண்மதி,
வான் நிலா உற வந்தது மானவே. 44
வந்து, மா தவர் பாதம் வணங்கி, மேல்
சிந்து தே மலர் மாரி சிறந்திட,
அந்தணாளர்கள் ஆசியொடு, ஆதனம்,
இந்திரன் முகம் நாணுற, ஏறினான். 45
கங்கர், கொங்கர், கலிங்கர், குலிங்கர்கள்,
சிங்களாதிபர், சேரலர், தென்னவர்,
அங்க ராசர், குலிந்தர், அவந்திகர்,
வங்கர், மாளவர், சோளர் மராடரே, 46
மான மாகதர், மச்சர், மிலேச்சர்கள்,
ஏனை வீர இலாடர், விதர்ப்பர்கள்,
சீனர், தெங்கணர், செஞ் சகர், சோமகர்,
சோனகேசர், துருக்கர், குருக்களே, 47
ஏதி யாதவர், ஏழ் திறல் கொங்கணர்,
சேதி ராசர், தெலுங்கர், கருநடர்,
ஆதி வானம் கவித்த அவனி வாழ்
சோதி நீள் முடி மன்னரும் துன்னினார். 48
மங்கையர் சாமரை வீசுதலும், பல்லாண்டு கூறுதலும்
தீங் கரும்பினும் தித்திக்கும் இன் சொலார்
தாங்கு சாமரை, மாடு தயங்குவ:
ஓங்கி ஓங்கி வளர்ந்து, உயர் கீர்த்தியின்
பூங் கொழுந்து பொலிவன போன்றவே. 49
சுழலும் வண்டும், மிஞிறும், சுரும்பும், சூழ்ந்து
உழலும் வாச மது மலர் ஓதியர்,
குழலினோடு உற, கூறு பல்லாண்டு ஒலி,
மழலை யாழ் இசையோடு மலிந்தவே. 50
வெண்குடை விளங்கிய காட்சி
வெங் கண் ஆனையினான் தனி வெண்குடை,
திங்கள், தங்கள் குலக் கொடிச் சீதை ஆம்
மங்கை மா மணம் காணிய வந்து, அருள்
பொங்கி ஓங்கித் தழைப்பது போன்றதே. 51
தயரதன் படைப் பெருக்கம்
ஊடு பேர்விடம் இன்றி, ஒன்று ஆம் வகை
நீடு மா கடல் தானை நெருங்கலால்,
ஆடல் மா மத ஆனைச் சனகர் கோன்
நாடு எலாம், ஒரு நல் நகர் ஆயதே. 52
சனகனின் உபசரிப்பு
ஒழிந்த என் இனி? ஒண்ணுதல் தாதைதன்
பொழிந்த காதல் தொடர, பொருள் எலாம்
அழிந்து மன்றல் கொண்டாடலின், அன்புதான்
இழிந்துளார்க்கும் இராமற்கும் ஒத்ததே. 53
மிகைப் பாடல்கள்
தையல், சிற்றிடையாள், ஒரு தாழ்குழல்,
உய்ய மற்று அவள் உள்ளத்து ஒடுங்கினான் -
வையம் முற்றும் வயிற்றின் அடக்கிய
ஐயனின் பெரியார் இனி யாவரே? 19-1
22. கோலம் காண் படலம்
சீதையை அழைத்துவருமாறு வசிட்டன் கூறுதல்
தேவியர் மருங்கு சூழ, இந்திரன் இருக்கை சேர்ந்த
ஓவியம் உயிர் பெற்றென்ன உவந்த , அரசு இருந்தகாலை,
தா இல் வெண் கவிகைச் செங்கோல் சனகனை இனிது
நோக்கி,
'மா இயல் நோக்கினாளைக் கொணர்க!' என, வசிட்டன்
சொன்னான். 1
சனகன் ஏவிய மாதர் சென்று, சீதையின் தாதியர்க்குச்
செய்தி அறிவித்தல்
உரை செய, தொழுத கையன், உவந்த உள்ளத்தன், 'பெண்ணுக்கு
அரைசியைத் தருதிர் ஈண்டு' என்று, ஆயிழையவரை
ஏவ,
கரை செயற்கு அரிய காதல் கடாவிட, கடிது சென்றார்,
பிரைசம் ஒத்து இனிய சொல்லார், பேதை தாதியரில்
சொன்னார். 2
தாதியர் சீதைக்கு அழகு செய்தல்
அமிழ் இமைத் துணைகள், கண்ணுக்கு அணி என அமைக்குமாபோல்,
உமிழ் சுடர்க் கலன்கள், நங்கை உருவினை மறைப்பது
ஓரார்,
அமிழ்தினைச் சுவை செய்தென்ன, அழகினுக்கு அழகு
செய்தார் -
இமிழ் திரைப் பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ!
3
கண்ணன் தன் நிறம், தன் உள்ளக் கருத்தினை நிறைத்து,
மீதிட்டு,
உள்நின்றும் கொடிகள் ஓடி, உலகு எங்கும் பரந்ததன்ன
வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து, மழையில்
தோன்றும்
விண் நின்ற மதியின், மென் பூஞ் சிகழிகைக் கோதை
வேய்ந்தார். 4
விதியது வகையால் வான மீன் இனம் பிறையை வந்து
கதுவுறுகின்றதென்னக் கொழுந்து ஒளி கஞலத் தூக்கி,
மதியினைத் தந்த மேகம் மருங்கு நா வளைப்பதென்ன,
பொதி இருள் அளக பந்தி பூட்டிய பூட்டும் இட்டார்.
5
'வெள்ளத்தின் சடிலத்தான் தன் வெஞ் சிலை இறுத்த
வீரன்
தள்ளத் தன் ஆவி சோர, தனிப் பெரும் பெண்மைதன்னை
அள்ளிக் கொண்டு அகன்ற காளை அல்லன்கொல்? ஆம்கொல்?'
என்பாள்
உள்ளத்தின் ஊசலாடும் குழை நிழல் உமிழ இட்டார்.
6
கோன் அணி சங்கம் வந்து குடியிருந்தனைய கண்டத்து,
ஈனம் இல் கலங்கள் தம்மின் இயைவன அணிதல் செய்தார்;
மான் அணி நோக்கினார் தம் மங்கலக் கழுத்துக்கு
எல்லாம்
தான் அணி ஆன போது, தனக்கு அணி யாது மாதோ?
7
கோண் இலா வான மீன்கள் இயைவன கோத்தது என்கோ?
வாள் நிலா வயங்கு செவ்வி வளர் பிறை வகிர்ந்தது
என்கோ?
நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலாத் தவழ்ந்தது
என்கோ?
பூண் நிலாம் முலைமேல் ஆர முத்தை - யான் புகல்வது
என்னோ? 8
மொய் கொள் சீறடியைச் சேர்ந்த முளரிக்கும் செம்மை
ஈந்த
தையலாள் அமிழ்த மேனி தயங்கு ஒளி தழுவிக்கொள்ள,
வெய்ய பூண் முலையில் சேர்ந்த வெண் முத்தம்
சிவந்த; - என்றால்,
செய்யவர்ச் சேர்ந்துளாரும் செய்யராய்த் திகழ்வர்
அன்றே? 9
கொமை உற வீங்குகின்ற குலிகச் செப்பு அனைய கொங்கைச்
சுமை உற நுடங்குகின்ற நுசுப்பினாள் பூண் செய்
தோளுக்கு,
இமை உற இமைக்கும் செங் கேழ் இன மணி முத்தினோடும்
அமை உற அமைவது உண்டு ஆம் ஆகின், ஒப்பு ஆகும்
அன்றே. 10
'தலை அவிழ் கோதை ஓதிச் சானகி தளிர்க்கை என்னும்
முளரிகள், இராமன் செங் கைமுறைமையின் தீண்ட
நோற்ற;
அளியன; கங்குல் போதும் குவியல ஆகும்' என்று,
ஆங்கு,
இள வெயில் சுற்றியன்ன எரி மணிக் கடகம் இட்டார்.
11
சில் இயல் ஓதி கொங்கைத் திரள் மணிக் கனகச்
செப்பில்,
வல்லியும் அனங்கன் வில்லும் மான்மதச் சாந்தின்
தீட்டி,
பல் இயல் நெறியின் பார்க்கும் பரம் பொருள்
என்ன, யார்க்கும்,
'இல்லை', 'உண்டு', என்ன நின்ற இடையினுக்கு
இடுக்கன் செய்தார். 12
நிறம் செய் கோசிக நுண் தூசு நீவி நீவாத அல்குல்-
புறம் செய் மேகலையின் தாழத் தாரகைச் சும்மை
பூட்டி,
திறம் செய் காசு ஈன்ற சோதி பேதை சேயொளியின்
சேந்து
கறங்குபு திரிய, தாமும் கண் வழுக்குற்று நின்றார்.
13
ஐய ஆம் அனிச்சப் போதின் அதிகமும் நொய்ய, ஆடல்
பை அரவு அல்குலாள்தன் பஞ்சு இன்றிப் பழுத்த
பாதம்;
செய்ய பூங் கமலம் மன்னச் சேர்த்திய சிலம்பு,
'சால
நொய்யவே; நொய்ய' என்றோ, பலபட நுவல்வது? அம்மா!
14
நஞ்சினோடு அமுதம் கூட்டி நாட்டங்கள் ஆன என்ன,
செஞ்செவே நீண்டு, மீண்டு, சேயரி சிதறி, தீய
வஞ்சமும் களவும் இன்றி, மழை என மதர்த்த கண்கள்,
அஞ்சன நிறமோ? அண்ணல் வண்ணமோ? அறிதல் தேற்றாம்.
15
மொய் வளர் குவளை பூத்த முளரியின் முளைத்த,
முந்நாள்
மெய் வளர் மதியின் நாப்பண் மீன் உண்டேல், அனையது
ஏய்ப்ப,
வையக மடந்தைமார்க்கும், நாகர் கோதையர்க்கும்,
வானத்
தெய்வ மங்கையர்க்கும், எல்லாம், திலகத்தைத்
திலகம் செய்தார். 16
சின்னப் பூ, செருகும் மென் பூ, சேகரப் போது,
கோது இல்
கன்னப் பூ,கஞல, மீது, கற்பகக் கொழுந்து மான
மின்ன, பூஞ் சுரும்பும் வண்டும் மிஞிறும் தும்பிகளும்
பம்ப,
புன்னைப் பூந் தாது மானும் பொற் பொடி அப்பிவிட்டார்
17
தோழியர் சீதைக்கு அயினி சுற்றி காப்பு இடுதல்
நெய் வளர் விளக்கம் ஆட்டி, நீரொடு பூவும் தூவி
தெய்வமும் பராவி, வேத பாரகர்க்கு ஈந்து, செம்
பொன்
ஐயவி நுதலில் சேர்த்தி, ஆய் நிற அயினி சுற்றி
கை வளர் மயில் அனாளை வலம் செய்து, காப்பும்
இட்டார். 18
மங்கையர் சீதையின் அழகைக் கண்டு மயங்கி நிற்றல்
கஞ்சத்துக் களிக்கும் இன் தேன் கவர்ந்து உணும்
வண்டு போல,
அம் சொற்கள் கிள்ளைக்கு எல்லாம் அருளினாள்
அழகை மாந்தி,
தம் சொற்கள் குழறி, தம் தம் தகை தடுமாறி நின்றார்
-
மஞ்சர்க்கும், மாதரார்க்கும், மனம் என்பது
ஒன்றே அன்றோ? 19
இழை குலாம் முலையினாளை, இடை உவா மதியின் நோக்கி,
மழை குலாவு ஓதி நல்லார், களி மயக்குற்று நின்றார்
-
உழை குலாம் நயனத்தார் மாட்டு, ஒன்று ஒன்றே
விரும்பற்கு ஒத்த
அழகு எலாம் ஒருங்கே கண்டால், யாவரே ஆற்றவல்லார்?
20
சங்கம் கை உடைமையாலும், தாமரைக் கோயிலாலும்,
எங்கு எங்கும் பரந்து வெவ்வேறு உள்ளத்தின்
எழுதிற்றென்ன,
அங்கு அங்கே தோன்றலாலும், அருந்ததி அனைய கற்பின்
நங்கையும் நம்பி ஒத்தாள்; நாம் இனிப் புகல்வது
என்னோ? 21
சீதை மண்டபம் அடைதல்
பரந்த மேகலையும், கோத்த பாத சாலகமும், நாகச்
சிரம் செய் நூபுரமும், வண்டும், சிலம்பொடு
சிலம்பு ஆர்ப்ப,
புரந்தரன் கோற்கீழ் வானத்து அரம்பையர் புடைசூழ்ந்தென்ன,
வரம்பு அறு சும்மைத் தீம் சொல் மடந்தையர் தொடர்ந்து
சூழ்ந்தார். 22
சிந்தொடு, குறளும், கூனும், சிலதியர் குழாமும்,
தெற்றி
வந்து, அடி வணங்கிச் சுற்ற, மணி அணி விதான
நீழல்,
இந்துவின் கொழுந்து விண்மீன் இனத்தொடும் வருவது
என்ன,
நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கையும் நடக்கலுற்றாள்.
23
வல்லியை உயிர்த்த நிலமங்கை, 'இவள் பாதம்
மெல்லிய, உறைக்கும்' என அஞ்சி, வெளி எங்கும்,
பல்லவ மலர்த் தொகை பரப்பினள் என, தன்
நல் அணி மணிச் சுடர் தவழ்ந்திட, நடந்தாள்.
24
தொழும் தகைய மென் நடை தொலைந்து, களி அன்னம்,
எழுந்து, இடைவிழுந்து, அயர்வது என்ன, அயல்
எங்கும்
கொழுந்துடைய சாமரை குலாவ, ஓர் கலாபம்
வழங்கு நிழல் மின்ன வரும் மஞ்ஞை என, வந்தாள்.
25
மண் முதல் அனைத்து உலகின் மங்கையருள் எல்லாம்,
கண் மணி எனத் தகைய கன்னி எழில் காண,
அண்ணல் மரபின் சுடர், அருத்தியொடு தான் அவ்
விண் இழிவது ஒப்பது ஓர் விதான நிழல் வந்தாள்.
26
கற்றை விரி பொற் சுடர் பயிற்றுறு கலாபம்,
சுற்றும் மணி புக்க இழை மிக்கு, இடை துவன்றி,
வில் தழை, வாள் நிமிர, மெய் அணிகள் மின்ன,
சிற்றிடை நுடங்க, ஒளிர் சீறடி பெயர்த்தாள்.
27
பொன்னின் ஒளி, பூவின் வெறி, சாந்து பொதி சீதம்,
மின்னின் எழில், அன்னவள்தன் மேனி ஒளி மான,
அன்னமும், அரம்பையரும், ஆர் அமிழ்தும், நாண,
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள். 28
அனைவரும் சீதையின் அழகை ஒருங்கே பார்த்தல்
சமைத்தவரை இன்மை மறைதானும் எனலாம், அச்
சமைத் திரள், முலைத் தெரிவை தூய் வடிவு கண்டார்,
அமைத் திரள் கொள் தோளியரும், ஆடவரும் எல்லாம்,
இமைத்திலர், உயிர்த்திலர்கள், சித்திரம் எனத்
தாம். 29
சீதையைக் கண்ட இராமனது நிலை
அன்னவளை, 'அல்லள்' என, 'ஆம்' என, அயிர்ப்பான்,
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்,
உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து,
ஆண்டு,
இன் அமிழ்து எழ, களி கொள் இந்திரனை ஒத்தான்.
30
'நறத்து உறை முதிர்ச்சி உறு நல் அமுது பில்குற்று,
அறத்தின் விளைவு ஒத்து, முகடு உந்தி, அருகு
உய்க்கும்,
நிறத் துவர் இதழ்க் குயில் நினைப்பினிடை அல்லால்,
புறத்தும் உளதோ?' என மனத்தொடு புகன்றான்.
31
வசிட்ட முனிவனின் மகிழ்ச்சி
'எங்கள் செய் தவத்தினில், இராமன் என வந்தோன்,
சங்கினொடு சக்கரமுடைத் தனி முதற் பேர்
அம் கண் அரசு; ஆதலின், அவ் அல்லி மலர் புல்லும்
மங்கை இவள் ஆம்' என, வசிட்டன் மகிழ்வுற்றான்.
32
துன்று புரி கோதை எழில் கண்டு, உலகு சூழ்வந்து
ஒன்று புரி கோலொடு தனித் திகிரி உய்ப்பான்,
'என்றும், உலகு ஏழும், அரசு எய்தி உளனேனும்,
இன்று திரு எய்தியது; இது என்ன வயம்!' என்றான்.
33
சீதையைத் தெய்வம் என நல்லோர் கைகூப்புதல்
நைவளம் நவிற்று மொழி நண்ண வரலோடும்,
வையம் நுகர் கொற்றவனும், மா தவரும், அல்லார்
கைகள் தலைபுக்கன; கருத்துளதும் எல்லாம்
தெய்வம் என உற்ற; உடல் சிந்தை வசம் அன்றோ?
34
வணங்கற்கு உரியாரை முறைப்படி வணங்கி, சீதை
தந்தையின் அருகில் இருத்தல்
மா தவரை முற்கொள வணங்கி, நெடு மன்னன்
பாத மலரைத் தொழுது, கண்கள் பனி சோரும்
தாதை அருகு இட்ட தவிசில், தனி இருந்தாள் -
போதினை வெறுத்து, அரசர் பொன் மனை புகுந்தாள்.
35
விசுவாமித்திரனின் வியப்பு
அச்சு என நினைத்த முதல் அந்தணன் நினைந்தான்;
'பச்சை மலை ஒத்த படிவத்து, அடல் இராமன்,
நச்சுடை வடிக் கண் மலர் நங்கை இவள் என்றால்,
இச் சிலை கிடக்க; மலை ஏழையும் இறானோ?' 36
சீதை இராமனைக் கடைக்கண்ணால் கண்டு களித்தல்
எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்,
மெய் விளைவு இடத்து, முதல் ஐயம் விடலுற்றாள்,
ஐயனை, அகத்து வடிவே அல, புறத்தும்,
கை வளை திருத்துபு, கடைக் கணின் உணர்ந்தாள்.
37
கருங் கடை நெடுங் கண் ஒளி யாறு நிறை கண்ணப்
பெருங் கடலின் மண்ட, உயிர் பெற்று இனிது உயிர்க்கும்,
அருங் கலன் அணங்கு - அரசி, ஆர் அமிழ்து அனைத்தும்,
ஒருங்குடன் அருந்தினரை ஒத்து, உடல் தடித்தாள்.
38
கணங் குழை, 'கருத்தின் உறை கள்வன் எனல் ஆனான்,
வணங்கு வில் இறுத்தவன்' எனத் துயர் மறந்தாள்;
அணங்குறும் அவிச்சை கெட, விச்சையின் அகம்பாடு
உணர்ந்து அறிவு முற்று பயன் உற்றவரை ஒத்தாள்.
39
தயரதன் கோசிகனிடம் மண நாள் குறித்து வினாவுதல்
கொல் உயர் களிற்று அரசர் கோமகன் இருந்தான்,
கல்வி கரை உற்ற முனி கௌசிகனை, 'மேலோய்!
வல்லி பொரு சிற்றிடை மடந்தை மண நாள் ஆம்,
எல்லையில் நலத்த, பகல் என்று? உரைசெய்க!' என்றான்.
40
நாளை திருமண நாள் என கோசிக முனிவன் கூறல்
'வாளை உகள, கயல்கள் வாவி படி மேதி
மூளை முதுகைக் கதுவ, மூரிய வரால் மீன்
பாளை விரியக் குதி கொள் பண்ணை வள நாடா!
நாளை' என, 'உற்ற பகல்' நல் தவன் உரைத்தான்.
41
தயரதன் முதலிய யாவரும் தத்தம் இருப்பிடம் செல்ல,
சூரியனும் மறைதல்
சொற்ற பொழுதத்து, அரசர் கைதொழுது எழ, தன்
ஒற்றை வயிரச் சுரி கொள் சங்கின் ஒலி பொங்க,
பொன் - தட முடிப் புது வெயில் பொழிதர, போய்,
நல் தவர் அனுச்சை கொடு, நல் மனை புகுந்தான்.
42
அன்னம் அரிதின் பிரிய, அண்ணலும் அகன்று, ஓர்
பொன்னின் நெடு மாட வரை புக்கனன்; மணிப் பூண்
மன்னவர் பிரிந்தனர்கள்; மா தவர்கள் போனார்;
மின்னு சுடர் ஆதவனும், மேருவில் மறைந்தான்.
43
23. கடிமணப் படலம்'
சனகனது உபசரிப்பில் யாவரும் மகிழ்ந்திருத்தல்
இடம் படு புகழ்ச் சனகர் கோன் இனிது பேண,
கடம் படு களிற்று அரசர் ஆதி, இடை கண்டோர்,
தடம் படு புயத்த சிறு தம்பியர்கள் காறும்,
உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தார். 1
இரவில் காம வேதனை கொண்ட சீதையின் சிந்தையும்,
சொல்லும்
தேட அரு நலத்த புனல் ஆசை தெறலுற்றார்,
மாடு ஓர் தடம் உற்று, அதனை எய்தும் வகை காணார்,
ஈடு அழிவுற, தளர்வொடு ஏமுறுவர் அன்றே?
ஆடக வளைக் குயிலும், அந் நிலையள் ஆனாள். 2
'"உரவு ஏதும் இலார் உயிர் ஈதும்"
எனா,
சுரவே புரிவார் உளரோ? கதிரோன்
வரவே, எனை ஆள் உடையான் வருமே! -
இரவே! - கொடியாய், விடியாய்' எனுமால், 3
'கரு நாயிறு போல்பவர் காலொடு போய்,
வரு நாள், அயலே வருவாய்; -மனனே! -
பெரு நாள், உடனே, பிரியாது உழல்வாய்;
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ? 4
'கனை ஏழ் கடல்போல், கரு நாழிகைதான்,
வினையேன் வினையால் விடியாவிடின், நீ
தனியே பறவாய்; தகவு ஏதும் இலாய் -
பனைமேல் உறைவாய்!-பழி பூணுதியோ? 5
'அயில் வேல் அனல் கால்வன ஆம்; நிழல் ஆய்,
வெயிலே என நீ விரிவாய்; - நிலவே!
செயிர் ஏதும் இலார், உடல் தேய்வு உறுவார்,
உயிர் கோள் உறுவார், உளரோ? உரையாய்! 6
'மன்றல் குளிர் வாசம் வயங்கு அனல் வாய்,
மின் தொத்து, நிலா நகை, வீழ் மலயக்
குன்றில், குல மா முழையில், குடிவாழ்
தென்றற் புலியே! இரை தேடுதியோ? 7
தெருவே திரிவார், ஒரு சேவகனார்,
இரு போதும் விடார்; இது என்னை கொலாம்?
கரு மா முகில் போல்பவர், கன்னியர்பால்
வருவார் உளரோ, குல மன்னவரே? 8
'தெருளா வினை தீயவர் சேர் நரகோ?
அருளான் நெறி ஓடும் அவாவதுவோ?
கருள் ஆர் கடலோ? கரை காண்பு அரிதால்! -
இருளானதுதான் - எனை ஊழிகொலாம்? 9
'பண்ணோ ஒழியா; பகலோ புகுதாது;
எண்ணோ தவிரா; இரவோ விடியாது;
உள் நோவு ஒழியா; உயிரோ அகலா;
கண்ணோ துயிலா; இதுவோ கடனே? 10
இடையே வளை சோர, எழுந்து, விழுந்து,
அடல் ஏய் மகனன் சரம் அஞ்சினையோ?
உடல் ஓய்வுற, நாளும், உறங்கலையால்! -
கடலே! - உரை! நீயும், ஓர் கன்னிகொலாம்?'
11
இரவில் இராமனது நிலை
என, இன்னன பன்னி, இருந்து உளைவாள்,
துனி உன்னி, நலம் கொடு சோர்வுறுகால்,
மனைதன்னில், வயங்குறும் வைகு இருள்வாய்,
அனகன் நினைகின்றன யாம் அறைவாம்: 12
'முன் கண்டு, முடிப்ப அரு வேட்கையினால்,
என் கண் துணைகொண்டு, இதயத்து எழுதி,
பின் கண்டும், ஓர் பெண் கரை கண்டிலெனால்;
-
மின் கண்டவர் எங்கு அறிவார் வினையே? 13
'திருவே அனையாள் முகமே! தெரியின்,
கருவே, கனியே விளை காம விதைக்கு
எருவே! மதியே! இது என் செய்தவா?
ஒருவேனொடு நீ உறவாகலையோ? 14
'கழியா உயிர் உந்திய காரிகைதன்
விழி போல வளர்ந்தது; வீகில தால்;
அழி போர் இறைவன் பட, அஞ்சியவன்
பழி போல, வளர்ந்தது - பாய் இருளே! 15
'நினையாய் ஒரு கால்; நெடிதோ நெறி தான்?
வினவாதவர் பால், விடை கொண்டிலையோ? -
புன மான் அனையாரொடு போயின என்
மனனே! - எனை நீயும் மறந்தனையோ? 16
'தன் நோக்கு எரி கால், தகை, வாள், அரவின்
பல் நோக்கினது என்பது பண்டு கொலாம்;
என் நோக்கினும், நெஞ்சினும், என்றும் உளார்
மென் நோக்கினதே - கடு வல் விடமே! 17
'கல், ஆர் மலர் சூழ் கழி, வார் பொழிலோடு,
எல்லாம் உள ஆயினும், என் மனமோ -
சொல் ஆர் அமுதின் சுவையோடு இனிது ஆம்
மெல் ஓதியர் தாம் விளையாடு இடமே!' 18
மண முரசு அறையச் சனகன் கட்டளையிடுதல்
மானவர் பெருமானும், மண நினைவினன் ஆக,
'"தேன் அமர் குழலாள்தன் திருமணவினை, நாளை;
பூ நகு மணி வாசம், புனை நகர் அணிவீர்!"
என்று
ஆனையின்மிசை, யாணர், அணி, முரசு அறைக!' என்றான்.
19
நகர மாந்தர் மகிழ்ந்து நகரை அணி செய்தற்கு
விரைதல்
முரசு அறைதலும், மான முதியவரும், இளையோரும்,
விரை செறி குழலாரும், விரவினர் விரைகின்றார்;
உரை செறி கிளையோடும், உவகையின் உயர்கின்றார்;
கரை தெரிவு அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார்.
20
சூரியன் ஒளி வீசி விளங்குதல்
'அஞ்சன ஒளியானும், அலர்மிசை உறைவாளும்,
எஞ்சல் இல் மனம், நாளைப் புணர்குவர்' எனலோடும்,
செஞ் சுடர் இருள் கீறி, தினகரன், ஒரு தேர்மேல்,
மஞ்சனை அணி கோலம் காணிய என, வந்தான். 21
நகர மாந்தர் அணிசெய்த வகை
தோரணம் நடுவாரும், தூண் உறை பொதிவாரும்,
பூரண குடம் எங்கும் புனை துகில் புனைவாரும்,
கார் அணி நெடு மாடம் கதிர் மணி அணிவாரும்,
ஆரண மறைவாணர்க்கு இன் அமுது அடுவாரும், 22
அன்ன மென் நடையாரும், மழ விடை அனையாரும்,
கன்னி நல் நகர், வாழை கமுகொடு நடுவாரும்,
பன்ன அரு நிறை முத்தம் பரியன தெரிவாரும்,
பொன் அணி அணிவாரும், மணி அணி புனைவாரும்,
23
சந்தனம், அகில், நாறும் சாந்தொடு, தெரு எங்கும்
சிந்தினர் திரிவாரும், செழு மலர் சொரிவாரும்,
இந்திரதனு நாண, எரி மணி நிரை மாடத்து,
அந்தம் இல் விலை ஆரக் கோவைகள் அணிவாரும்,
24
தளம் கிளர் மணி கால, தவழ் சுடர் உமிழ் தீபம்,
இளங் குளிர் முளை ஆர் நல் பாலிகை இனம், எங்கும்,
விளிம்பு பொன் ஒளி நாற, வெயிலொடு நிலவு ஈனும்,
பளிங்குடை உயர் திண்ணைப் பத்தியின் வைப்பாரும்,
25
மந்தர மணி மாட முன்றிலின் வயின் எங்கும்,
அந்தம் இல் ஒளி முத்தின், அகல் நிரை ஒளி நாறி,
அந்தர நெடு வான் மீன் அவண் அலர்குவது என்ன,
பந்தரின் நிழல் வீச, படர் வெயில் கடிவாகும்,
26
வயிரம் மின் ஒளி ஈனும், மரகத மணி வேதி,
செயிர் அற ஒளிர் தீபம் சில தியர் கொணர்வாரும்,
வெயில் விரவிய பொன்னின் மிடை கொடி, மதி தோயும்
எயிலினில் நடுவாரும், எரி அகில் இடுவாரும்,
27
பண்டியில் நிறை வாசப் பனிமலர் கொணர்வாரும்,
தண்டலை இலையோடு, கனி பல தருவாரும்,
குண்டலம் வெயில் வீசக் குரவைகள் புரிவாரும்,
உண்டை கொள் மத வேழத்து ஓடைகள் அணிவாரும்,
28
கலவைகள் புனைவாரும், கலை நல தெரிவாரும்,
மலர் குழல் மலைவாரும், மதிமுகம் மணி ஆடித்
திலகம் முன் இடுவாரும், சிகழிகை அணிவாரும்,
இலவு இதழ் பொலி கோலம் எழில் பெற இடுவாரும்,
29
தப்பின மணி காசும், சங்கமும், மயில் அன்னார்
ஒப்பனை புரி போதும், ஊடலின் உகு போதும்,
துப்பு உறழ் இள வாசச் சுண்ணமும், உதிர் தாதும்,
குப்பைகள் என, வாரிக்கொண்டு அயல் களைவாரும்,
30
மன்னவர் வருவாரும், மறையவர் நிறைவாரும்,
இன் இசை மணி யாழின் இசை மது நுகர்வாரும்,
சென்னியர் திரிவாரும், விறலியர் செறிவாரும்,
கன்னலின் மண வேலைக் கடிகைகள் தெரிவாரும்.
31
கணிகையர் தொகுவாரும், கலை பல பயில்வாரும்,
பணி அணி இன முத்தம், பல இரு நில மன்னர்
அணி நெடு முடி ஒன்று ஒன்று அறைதலின், உகும்
அம் பொன்
மணி மலை தொகுமன்னன், வாயிலின் மிடைவாரும்,
32
கேடகம் வெயில் வீச, கிளர் அயில் நிலவு ஈன,
கோடு உயர் நெடு விஞ்சைக் குஞ்சரம் அது போல,
ஆடவர் திரிவாரும், அரிவையர் களி கூர,
நாடகம் நவில்வாரும், நகை உயிர் கவர்வாரும்,
33
கதிர் மணி ஒளி கால, கவர் பொருள் தெரியாவாறு,
எதிர் எதிர் சுடர் விம்முற்று எழுதலின், இளையோரும்,
மது விரி குழலாரும், மதிலுடை நெடு மாடம்
அது, இது, என ஓராது, அலமரல் உறுவாரும், 34
தேர்மிசை வருவாரும், சிவிகையில் வருவாரும்,
ஊர்தியில் வருவாரும், ஒளி மணி நிரை ஓடைக்
கார்மிசை வருவாரும், கரிணியில் வருவாரும்,
பார்மிசை வருவாரும், பண்டியில் வருவாரும்,
35
முத்து அணி அணிவாரும், மணி அணி முனிவாரும்,
பத்தியின் நிமிர் செம் பொற் பல கலன் மகிழ்வாரும்,
தொத்து உறு தொழில் மாலை சுரி குழல் அணிவாரும்,
சித்திர நிரை தோயும் செந் துகில் புனைவாரும்,
36
விடம் நிகர் விழியாரும், அமுது எனும் மொழியாரும்,
கிடை புரை இதழாரும், கிளர் நகை வெளியாரும்,
தட முலை பெரியாரும், தனி இடை சிறியாரும்,
பெடை அன நடையாரும், பிடி என வருவாரும், -
37
உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும்
கண்ணுறல் அரிது என்றும், கருதுதல் அரிது அம்மா!
எண்ணுறு சுடர் வானத்து இந்திரன் முடி சூடும்
மண்ணுறு திருநாளே ஒத்தது - அம் மண நாளே.
38
மண மண்டபத்திற்குத் தயரதன் வருதல்
கரை தெரிவு அரியது, கனகம் வேய்ந்தது,
வரை என உயர்ந்தது, மணியின் செய்தது,
நிரைவளை மணவினை நிரப்பு மண்டபம்,
அரைசர் தம் அரசனும் அணுகல் மேயினான். 39
வெண்குடை இள நிலா விரிக்க, மின் எனக்
கண் குடை இன மணி வெயிலும் கான்றிட,
பண் குடை வண்டினம் பாட, ஆடல் மா
மண் குடை தூளி விண் மறைப்ப, - ஏகினான். 40
மங்கல முரசுஇனம் மழையின் ஆர்த்தன;
சங்குகள் முரன்றன; தாரை, பேரிகை,
பொங்கின; மறையவர் புகலும் நான்மறை
கங்குலின் ஒலிக்கும் மா கடலும் போன்றதே.
41
பரந்த தேர், களிறு, பாய் புரவி, பண்ணையில்
தரம் தரம் நடந்தன; தானை வேந்தனை
நிரந்தரம் தொழுது எழும் நேமி மன்னவர்,
புரந்தரன் புடை வரும், அமரர் போன்றனர். 42
தயரதன், சனகன், முதலியோர் ஆசனத்து அமர்தல்
அனையவன், மண்டபம் அணுகி, அம் பொனின்
புனை மணி ஆதனம் பொலியத் தோன்றினான்;
முனிவரும், மன்னரும், முறையின் ஏறினார்;
சனகனும், தன் கிளை தழுவ, ஏறினான். 43
திருமண மண்டபத்தின் தோற்றம்
மன்னரும், முனிவரும், வானுளோர்களும்,
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும்,
துன்னினர் துவன்றலின், சுடர்கள் சூழ்வரும்
பொன் மலை ஒத்தது - அப் பொரு இல் கூடமே. 44
புயல் உள, மின் உள, பொரு இல் மீன் உள,
இயல் மணி இனம் உள, சுடர் இரண்டு உள;
மயன் முதல் திருத்திய மணி செய் மண்டபம்,
அயன் முதல் திருத்திய அண்டம் ஒத்ததே. 45
எண் தவ முனிவரும், இறைவர் யாவரும்,
அண்டரும், பிறரும், புக்கு அடங்கிற்று; ஆதலால்,
மண்டபம் வையமும் வானும் வாய் மடுத்து
உண்டவன் மணி அணி உதரம் ஒத்ததே. 46
தராதலம் முதல் உலகு அனைத்தும் தள்ளுற,
விராவின, குவிந்தன, விளம்ப வேண்டுமோ?
அரா-அணை துறந்து போந்து, அயோத்தி எய்திய
இராகவன் செய்கையை இயம்புவாம் அரோ: 47
இராமன் நீராடி மணக்கோலம் புனைதல்
சங்கு இனம் தவழ் கடல் ஏழில் தந்தவும்,
சிங்கல் இல் அரு மறை தெரிந்த தீர்த்தமும்,
கங்கையே முதலவும், கலந்த நீரினால்,
மங்கல, மஞ்சனம் மரபின் ஆடியே, 48
கோது அறு தவத்துத் தம் குலத்துளோர் தொழும்
ஆதி அம் சோதியை அடி வணங்கினான் -
காது இயல், கயல் விழிக் கன்னிமார்களை,
வேதியர்க்கு அரு மறை விதியின் நல்கியே. 49
அழி வரு தவத்தினோடு, அறத்தை ஆக்குவான்,
ஒழிவு அருங் கருணை ஓர் உருவு கொண்டென,
எழுத அரு வடிவு கொண்டு, இருண்ட மேகத்தைத்
தழுவிய நிலவு என, கலவை சாத்தியே; 50
மங்கல முழு நிலா மலர்ந்த திங்களை,
பொங்கு இருங் கருங் கடல் பூத்தது ஆம் என,
செங்கிடைச் சிகழிகை, செம் பொன் மாலையும்,
தொங்கலும், துயல்வர, சுழியம் சூடியே; 51
ஏதாம் இல் இரு குழை, இரவு, தன் பகல்,
காதல் கண்டு உண்ர்ந்தன, கதிரும் திங்களும்,
சீதைதன் கருத்தினைச் செவியின் உள்ளுற,
தூது சென்று, உரைப்பன போன்று தோன்றவே; 52
கார் விடக் கறையுடை, கணிச்சி, வானவன்
வார் சடைப் புடையின், ஓர் மதி மிலைச்ச, தான்
சூர் சுடர்க் குலம் எலாம் சூடினான் என,
வீர பட்டத்தொடு திலகம் மின்னவே; 53
சக்கரத்து அயல் வரும் சங்கம் ஆம் என
மிக்கு ஒளிர் கழுத்து அணி தரள வெண் கொடி,
மொய்க் கருங் குழலினாள், முறுவல் உள்ளுறப்
புக்கன நிறைந்து, மேல் பொடிப்ப போன்றவே.
54
பந்தி செய் வயிரங்கள் பொறியின் பாடு உற
அந்தம் இல் சுடர் மணி அழலின் தோன்றலால்,
சுந்தரத் தோள் அணி வலயம், தொல்லை நாள்
மந்தரம் சுற்றிய அரவை மானுமே. 55
கோவையின் பெரு வட முத்தம் கோத்தன,
காவல் செய் தடக் கையின் நடுவண் காந்துவ,
'மூவகை உலகிற்கும் முதல்வன் ஆம்' என,
ஏ வரும் பெருங் குறி இட்ட போன்றவே. 56
மாண்ட பொன் மணி அணி வலயம் வந்து, எதிர்
வேண்டினர்க்கு உதவுவான் விரும்பி, கற்பகம்
ஈண்டு, தன் கொம்பிடை ஈன்றது ஆம் என,
காண் தகு தடக் கையில், கடகம் மின்னவே; 57
தேனுடை மலர்மகள் திளைக்கும் மார்பினில்,
தான் இடை விளங்கிய தகையின் ஆரம்தான்,
மீனொடு சுடர் விட விளங்கும் மேகத்து,
வான் இடு வில் என, வயங்கிக் காட்டவே; 58
நணுகவும் அரியதா நடக்கும் ஞானத்தர்
உணர்வு என, ஒளி திகழ் உத்தரீயம்தான்,
தணிவு அருங் கருணையான் கழுத்தில் சாத்திய,
மணி உமிழ் கதிர் என, மார்பில் தோன்றவே; 59
மேவ அருஞ் சுடர் ஒளி விளங்கும் மார்பின் நூல்,
'ஏவரும் - தெரிந்து இனிது உணர்மின் ஈண்டு'
என,
தேவரும், முனிவரும், தெரிக்கலா முதல்
மூவரும், தான் என, முடித்தது ஒத்ததே. 60
சுற்றும் நீள் தமனியச் சோதி பொங்க, மேல்
ஒற்றை மா மணி உமிழ் உதரபந்தனம்,
மற்றும் ஓர் அண்டமும், அயனும், வந்து எழ,
பொன் தடந் தாமரை பூத்த போன்றதே. 61
'மண்ணுறு சுடர் மணி வயங்கித் தோன்றிய
கண்ணுறு கருங் கடல் அதனை, கை வளர்
தண் நிறப் பாற்கடல் தழீஇயது ஆம்' என,
வெண் நிறப் பட்டு, ஒளி விளங்கச் சாத்தியே;
62
சலம் வரு தரளமும், தயங்கு நீலமும்,
அலம்வரு நிழல் உமிழ் அம் பொன் கச்சினால்,
குலம் வரு கனக வான் குன்றை நின்று உடன்
வலம் வரு கதிர் என, வாளும் வீக்கியே; 63
முகை விரி சுடர் ஒளி முத்தின் பத்தி வான்
தொகை விரி பட்டிகைச் சுடரும் சுற்றிட,
தகை உடைவாள் எனும் தயங்கு வெய்யவன்
நகை இள வெயில் என, தொங்கல் நாற்றியே; 64
காசொடு கண் நிழல் கஞல, கைவினை
ஏசறு கிம்புரி எயிறு வெண் நிலா
வீசலின், மகரவாய் விளங்கும் வாள் முகம்,
ஆசையை ஒளிகளால் அளந்து காட்டவே; 65
'இனிப் பரந்து உலகினை அளப்பது எங்கு?' என,
தனித்தனி தடுப்பன போலும் சால்பின;
நுனிப்ப அரு நுண் வினைச் சிலம்பு நோன் கழல்,
பனிப் பருந் தாமரைப் பாதம் பற்றவே; 66
இன்னணம் ஒளிர்தர, இமையவர்க்கு எலாம்,
தன்னையே அனையது ஓர் கோலம் தாங்கினான் -
பன்னக மணி விளக்கு அழலும் பாயலுள்
அன்னவர் தவத்தினால் அனந்தல் நீங்கினான்.
67
முப் பரம் பொருளிற்குள் முதலை, மூலத்தை,
இப் பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை,
அப்பனை, அப்பினுள் அமிழ்தை, தன்னையே
ஒப்பனை, ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ? 68
இராமன் தேரில் ஏறி வரும் காட்சி
பல் பதினாயிரம் பசுவும், பைம் பொனும்,
எல்லை இல் நிலனொடு, மணிகள் யாவையும்,
நல்லவர்க்கு உதவினான்; நவிலும் நான் மறைச்
செல்வர்கள் வழுத்துற, தேர் வந்து ஏறினான்.
69
பொன் திரள் அச்சது; வெள்ளிச் சில்லி புக்கு
உற்றது; வயிரத்தின் உற்ற தட்டது;
சுற்று உறு நவ மணி சுடரும் தோற்றத்தது;
ஒற்றை ஆழிக் கதிர்த் தேரொடு ஒப்பதே. 70
நூல் வரும் தகையன, நுனிக்கும் நோன்மைய,
சால் பெருஞ் செவ்விய, தருமம் ஆதிய
நாலையும் அனையன, புரவி நான்கு, ஒரு
பாலமை உணர்ந்தவன் பக்கம் பூண்டவே. 71
அனையது ஓர் தேரினில், அருணன் நின்றெனப்
பனி வரு மலர்க்கண் நீர்ப் பரதன் கோல் கொள,
குனி சிலைத் தம்பிபின் கூட, ஏனையன்
இனிய பொற் கவரி கால் இயக்க, ஏகினான். 72
மண்ணவரும் விண்ணவரும் மகிழ்தல்
அமைவு அரு மேனியான் அழகின் ஆயதோ?
கமை உறு மனத்தினால் கருத வந்ததோ?
சமைவு உற அறிந்திலம்; தக்கது ஆகுக -
இமையவர் ஆயினார் இங்கு உளாருமே! 73
'வரம்பு அறும் உலகினை வலிந்து, மாய்வு இன்றி,
திரம் பயில் அரக்கர்தம் வருக்கம் தேய்வு இன்று
நிரம்பியது' எனக் கொடு, நிறைந்த தேவரும்,
அரம்பையர் குழாத்தொடும், ஆடல் மேயினார்.
74
சொரிந்தனர் மலர் மழை; சுண்ணம் தூவினர்;
விரிந்து ஒளிர் காசு, பொன் தூசு, வீசினர்;
பரிந்தனர்; அழகினைப் பருகினார் கொலோ?
தெரிந்திலம், திருநகர் மகளிர் செய்கையே!
75
வள்ளலை நோக்கிய மகளிர், மேனியின்
எள்ள அரும் பூண் எலாம் இரிய, நிற்கின்றார்
-
'உள்ளன யாவையும் உதவி, பூண்டவும்
கொள்ளையிற் கொள்க!' எனக் கொடுக்கின்றாரினே.
76
மண்டபம் சேர்ந்து இராமன் முனிவரையும் தந்தையையும்
தொழுது அமர்தல்
எஞ்சல் இல் உலகத்து உள்ள எறி படை அரச வெள்ளம்
குஞ்சரக் குழாத்தின் சுற்ற, கொற்றவன் இருந்த
கூடம்,
வெஞ் சினத் தனுவலானும், மேரு மால் வரையில்
சேரும்
செஞ் சுடர்க் கடவுள் என்ன, தேரிடைச் சென்று
சேர்ந்தான். 77
இரதம் ஆண்டு இழிந்த பின்னர், இரு மருங்கு,
இரண்டு கையும்,
பரதனும் இளைய கோவும், பரிந்தனர் ஏந்த, பைந்
தார்
வரதனும் எய்தி, மை தீர் மா தவர்த் தொழுது,
நீதி
விரத மெய்த் தாதை பாதம் வணங்கி, மாடு இருந்த
வேலை, 78
சீதை மண்டபத்துள் வந்த காட்சி
சிலையுடைக் கயல், வாள் திங்கள், ஏந்தி, ஓர்
செம் பொன் கொம்பர்,
முலை இடை முகிழ்ப்ப, தேரின் முன் திசை முளைத்தது
அன்னாள்,
அலை கடல் பிறந்து, பின்னை அவனியில் தோன்றி,
மீள
மலையிடை உதிக்கின்றாள்போல், மண்டபம் அதனில்
வந்தாள். 79
திருமண மாட்சி காண, வானவர் எல்லாம் வானத்து
வருதல்
நன்றி வானவர் எலாம், இருந்த நம்பியை,
'துன்று இருங் கருங் கடல் துவைப்பத் தோன்றிய
மன்றல் அம் கோதையாள் மாலை சூட்டிய
அன்றினும், இன்று உடைத்து அழகு' என்றார் அரோ.
80
ஒலி கடல் உலகினில், உம்பர், நாகரில்,
பொலிவது மற்று இவள் பொற்பு; என்றால், இவள்
மலிதரு மணம் படு திருவை, வாயினால்,
மெலிதரும் உணர்வினேன், என் விளம்புகேன்?
81
இந்திரன் சசியொடும் எய்தினான்; இளஞ்
சந்திர மௌலியும் தையலாளொடும்
வந்தனன்; மலர் அயன் வாக்கினாளுடன்
அந்தரம் புகுந்தனன்; - அழகு காணவே. 82
வசிட்டன் திருமணச் சடங்கைத் துவங்குதல்
நீந்த அருங் கடல் என, நிறைந்த வேதியர்,
தோய்ந்த நூல் மார்பினர், சுற்ற, தொல் நெறி
வாய்ந்த நல் வேள்விக்கு, வசிட்டன், மை அற
ஏய்ந்தன கலப்பையோடு இனிதின் எய்தினான். 83
தண்டிலம் விரித்தனன்; தருப்பை சாத்தினன்;
மண்டலம் விதிமுறை வகுத்து, மென் மலர்
கொண்டு நெய் சொரிந்து, எரி குழும், மூட்டினன்;
பண்டு உள மறை நெறி பரவிச் செய்தனன். 84
சீதையும் இராமனும் மணத் தவிசில் வீற்றிருத்தல்
மன்றலின் வந்து, மணத் தவிசு ஏறி,
வென்றி நெடுந் தகை வீரனும், ஆர்வத்து
இன் துணை அன்னமும், எய்தி இருந்தார்;
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார். 85
இராமனுக்குச் சீதையைச் சனகன் தாரை வார்த்துக்
கொடுத்தல்
கோமகன் முன் சனகன், குளிர் நல் நீர்,
'பூமகளும் பொருளும் என, நீ என்
மா மகள் தன்னொடும் மன்னுதி' என்னா,
தாமரை அன்ன தடக் கையின், ஈந்தான். 86
வாழ்த்து ஒலியும், மலர் மாரியும்
அந்தணர் ஆசி, அருங் கல மின்னார்
தந்த பல்லாண்டு இசை, தார் முடி மன்னர்
வந்தனை, மா தவர் வாழ்த்து ஒலியோடு
முந்திய சங்கம் முழங்கின மாதோ. 87
வானவர் பூ மழை, மன்னவர் பொன் பூ,
ஏனையர் தூவும் இலங்கு ஒளி முத்தம்,
தான் நகு நாள்மலர், என்று இவை தம்மால்,
மீன் நகு வானின் விளங்கியது, இப் பார். 88
இராமன் சீதையின் கையைப் பற்றி, தீ வலம் வருதல்
வெய்ய கனல்தலை வீரனும், அந் நாள்,
மை அறு மந்திரம் மும்மை வழங்கா,
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே,
தையல் தளிர்க் கை தடக் கை பிடித்தான். 89
இடம் படு தோளவனோடு, இயை வேள்வி
தொடங்கிய வெங் கனல் சூழ் வரு போதின்,
மடம் படு சிந்தையள், மாறு பிறப்பின்,
உடம்பு உயிரைத் தொடர்கின்றதை ஒத்தாள். 90
அம்மி மிதித்து, அருந்ததி காணுதல்
வலம்கொடு தீயை வணங்கினர், வந்து,
பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி,
இலங்கு ஒளி அம்மி மிதித்து, எதிர் நின்ற
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார். 91
இராமன் சீதையோடு தன் மாளிகை புகுதல்
மற்று உள, செய்வன செய்து, மகிழ்ந்தார்;
முற்றிய மா தவர் தாள் முறை சூடி,
கொற்றவனைக் கழல் கும்பிடலோடும்,
பொற்றொடி கைக் கொடு நல் மனை புக்கான். 92
பல் வகை மங்கல ஆரவாரம்
ஆர்த்தன பேரிகள்; ஆர்த்தன சங்கம்;
ஆர்த்தன நான்மறை; ஆர்த்தனர் வானோர்;
ஆர்த்தன பல் கலை; ஆர்த்தன பல்லாண்டு;
ஆர்த்தன வண்டு இனம்; ஆர்த்தன வேலை. 93
இராமனும் சீதையும் தாயர் மூவரையும் வணங்குதல்
கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்,
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி,
ஆய தன் அன்னை அடித் துணை சூடி,
தூய சுமித்திரை தாள் தொழலோடும், 94
மாமியர் மகிழ்ந்து சீதைக்குப் பொன் முதலியன
அளித்தல்
அன்னமும், அன்னவர் அம் பொன் மலர்த் தாள்
சென்னி புனைந்தாள்; சிந்தை உவந்தார்,
கன்னி, அருந்ததி, காரிகை, காணா,
'நல் மகனுக்கு இவள் நல் அணி' என்றார். 95
சங்க வளைக் குயிலைத் தழீஇ நின்றார்,
'அம் கணனுக்கு உரியார் உளர் ஆவார்
பெண்கள் இனிப் பிறர் யார் உளர்?' என்றார்;
கண்கள் களிப்ப, மனங்கள் களிப்பார். 96
'எண் இல கோடி பொன், எல்லை இல் கோடி
வண்ண அருங் கலம், மங்கையர் வெள்ளம்,
கண் அகல் நாடு, உயர் காசொடு தூசும்,
பெண்ணின் அணங்கு அனையாள் பெறுக!' என்றார்.
97
இராமன் சீதையொடு பள்ளி சேர்தல்
நூற் கடல் அன்னவர் சொற் கடன் நோக்கி,
மால் கடல் பொங்கும் மனத்தவளோடும்,
கார்க் கடல் போல் கருணைக் கடல், பண்டைப்
பாற்கடல் ஒப்பது ஓர் பள்ளி அணைந்தான். 98
வசிட்டன் மங்கல அங்கி வளர்த்தல்
பங்குனி உத்தரம் ஆன பகற்போது,
அங்க இருக்கினில், ஆயிர நாமச்
சிங்கம் மணத் தொழில் செய்த திறத்தால்,
மங்கல அங்கி, வசிட்டன் வகுத்தான். 99
பரதன் முதலிய மூவருக்கும் திருமணம் நிகழ்தல்
வள்ளல் தனக்கு இளையோர்கள் தமக்கும்
எள்ளல் இல் கொற்றவன், 'எம்பி அளித்த
அள்ளல் மலர்த் திரு அன்னவர் தம்மைக்
கொள்ளும்' எனத் தமரோடு குறித்தான். 100
கொய்ந் நிறை தாரன், குசத்துவசப் பேர்
நெய்ந் நிறை வேலவன், மங்கையர் நேர்ந்தார்;
மைந் நிறை கண்ணியர், வான் உறை நீரார்,
மெய்ந் நிறை மூவரை மூவரும் வேட்டார். 101
தயரதன் மிதிலையில் சில நாள் தங்கியிருத்தல்
வேட்டு அவர் வேட்டபின், வேந்தனும், மேல்நாள்
கூட்டிய சீர்த்தி கொடுத்திலன் அல்லால்,
ஈட்டிய மெய்ப் பொருள் உள்ளன எல்லாம்
வேட்டவர் வேட்டவை வேண்டளவு ஈந்தான். 102
ஈந்து, அளவு இல்லது ஓர் இன்பம் நுகர்ந்தே,
ஆய்ந்து உணர் கேள்வி அருந் தவரோடும்,
வேந்தனும், அந் நகர் வைகினன்; மெள்ளத்
தேய்ந்தன நாள் சில; செய்தது உரைப்பாம்:
103
மிகைப் பாடல்கள்
எரிகால் சுடர் ஏக, எழுந்த நிலா
வரும் ஈரமும், மா மயில் சானகிதன்
திருமேனியின் மீது சினந்து சுட,
தரியாது, உளம் நொந்து, தனித்து உறைவாள்.
2-1
என்று, ஐயன் மனத்தொடும் எண்ணினன்; மற்று
அன்று அங்கு அவை நிற்க, அருட் சனகன்
முன் தந்த தவத்து உறு மொய்குழலாள்
துன்றும் மணம் உற்றது சொல்லிடுவாம். 18-1
கதிரவன் எழலோடும், கடி நகர் இடம் எங்கும்
மதி முக மடவாரும் மைந்தரும் முதியோரும்
விதி புரி செயல் போலும், மேல் உலகினும் இல்லாப்
புதுமையின் உறு, கோலம் புனைதலை முயல்வுற்றார்.
21-1
என்றும், நான்முகன் முதல் யாரும், யாவையும்,
நின்ற பேர் இருளினை நீக்கி, நீள் நெறி
சென்று மீளாக் குறி சேரச் சேர்த்திடு
தன் திரு நாமத்தைத் தானும் சாத்தியே. 48-1
சனகனது உபசரிப்பில் யாவரும் மகிழ்ந்திருத்தல்
இடம் படு புகழ்ச் சனகர் கோன் இனிது பேண,
கடம் படு களிற்று அரசர் ஆதி, இடை கண்டோர்,
தடம் படு புயத்த சிறு தம்பியர்கள் காறும்,
உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தார். 1
இரவில் காம வேதனை கொண்ட சீதையின் சிந்தையும்,
சொல்லும்
தேட அரு நலத்த புனல் ஆசை தெறலுற்றார்,
மாடு ஓர் தடம் உற்று, அதனை எய்தும் வகை காணார்,
ஈடு அழிவுற, தளர்வொடு ஏமுறுவர் அன்றே?
ஆடக வளைக் குயிலும், அந் நிலையள் ஆனாள். 2
'"உரவு ஏதும் இலார் உயிர் ஈதும்"
எனா,
சுரவே புரிவார் உளரோ? கதிரோன்
வரவே, எனை ஆள் உடையான் வருமே! -
இரவே! - கொடியாய், விடியாய்' எனுமால், 3
'கரு நாயிறு போல்பவர் காலொடு போய்,
வரு நாள், அயலே வருவாய்; -மனனே! -
பெரு நாள், உடனே, பிரியாது உழல்வாய்;
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ? 4
'கனை ஏழ் கடல்போல், கரு நாழிகைதான்,
வினையேன் வினையால் விடியாவிடின், நீ
தனியே பறவாய்; தகவு ஏதும் இலாய் -
பனைமேல் உறைவாய்!-பழி பூணுதியோ? 5
'அயில் வேல் அனல் கால்வன ஆம்; நிழல் ஆய்,
வெயிலே என நீ விரிவாய்; - நிலவே!
செயிர் ஏதும் இலார், உடல் தேய்வு உறுவார்,
உயிர் கோள் உறுவார், உளரோ? உரையாய்! 6
'மன்றல் குளிர் வாசம் வயங்கு அனல் வாய்,
மின் தொத்து, நிலா நகை, வீழ் மலயக்
குன்றில், குல மா முழையில், குடிவாழ்
தென்றற் புலியே! இரை தேடுதியோ? 7
தெருவே திரிவார், ஒரு சேவகனார்,
இரு போதும் விடார்; இது என்னை கொலாம்?
கரு மா முகில் போல்பவர், கன்னியர்பால்
வருவார் உளரோ, குல மன்னவரே? 8
'தெருளா வினை தீயவர் சேர் நரகோ?
அருளான் நெறி ஓடும் அவாவதுவோ?
கருள் ஆர் கடலோ? கரை காண்பு அரிதால்! -
இருளானதுதான் - எனை ஊழிகொலாம்? 9
'பண்ணோ ஒழியா; பகலோ புகுதாது;
எண்ணோ தவிரா; இரவோ விடியாது;
உள் நோவு ஒழியா; உயிரோ அகலா;
கண்ணோ துயிலா; இதுவோ கடனே? 10
இடையே வளை சோர, எழுந்து, விழுந்து,
அடல் ஏய் மகனன் சரம் அஞ்சினையோ?
உடல் ஓய்வுற, நாளும், உறங்கலையால்! -
கடலே! - உரை! நீயும், ஓர் கன்னிகொலாம்?'
11
இரவில் இராமனது நிலை
என, இன்னன பன்னி, இருந்து உளைவாள்,
துனி உன்னி, நலம் கொடு சோர்வுறுகால்,
மனைதன்னில், வயங்குறும் வைகு இருள்வாய்,
அனகன் நினைகின்றன யாம் அறைவாம்: 12
'முன் கண்டு, முடிப்ப அரு வேட்கையினால்,
என் கண் துணைகொண்டு, இதயத்து எழுதி,
பின் கண்டும், ஓர் பெண் கரை கண்டிலெனால்;
-
மின் கண்டவர் எங்கு அறிவார் வினையே? 13
'திருவே அனையாள் முகமே! தெரியின்,
கருவே, கனியே விளை காம விதைக்கு
எருவே! மதியே! இது என் செய்தவா?
ஒருவேனொடு நீ உறவாகலையோ? 14
'கழியா உயிர் உந்திய காரிகைதன்
விழி போல வளர்ந்தது; வீகில தால்;
அழி போர் இறைவன் பட, அஞ்சியவன்
பழி போல, வளர்ந்தது - பாய் இருளே! 15
'நினையாய் ஒரு கால்; நெடிதோ நெறி தான்?
வினவாதவர் பால், விடை கொண்டிலையோ? -
புன மான் அனையாரொடு போயின என்
மனனே! - எனை நீயும் மறந்தனையோ? 16
'தன் நோக்கு எரி கால், தகை, வாள், அரவின்
பல் நோக்கினது என்பது பண்டு கொலாம்;
என் நோக்கினும், நெஞ்சினும், என்றும் உளார்
மென் நோக்கினதே - கடு வல் விடமே! 17
'கல், ஆர் மலர் சூழ் கழி, வார் பொழிலோடு,
எல்லாம் உள ஆயினும், என் மனமோ -
சொல் ஆர் அமுதின் சுவையோடு இனிது ஆம்
மெல் ஓதியர் தாம் விளையாடு இடமே!' 18
மண முரசு அறையச் சனகன் கட்டளையிடுதல்
மானவர் பெருமானும், மண நினைவினன் ஆக,
'"தேன் அமர் குழலாள்தன் திருமணவினை, நாளை;
பூ நகு மணி வாசம், புனை நகர் அணிவீர்!"
என்று
ஆனையின்மிசை, யாணர், அணி, முரசு அறைக!' என்றான்.
19
நகர மாந்தர் மகிழ்ந்து நகரை அணி செய்தற்கு
விரைதல்
முரசு அறைதலும், மான முதியவரும், இளையோரும்,
விரை செறி குழலாரும், விரவினர் விரைகின்றார்;
உரை செறி கிளையோடும், உவகையின் உயர்கின்றார்;
கரை தெரிவு அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார்.
20
சூரியன் ஒளி வீசி விளங்குதல்
'அஞ்சன ஒளியானும், அலர்மிசை உறைவாளும்,
எஞ்சல் இல் மனம், நாளைப் புணர்குவர்' எனலோடும்,
செஞ் சுடர் இருள் கீறி, தினகரன், ஒரு தேர்மேல்,
மஞ்சனை அணி கோலம் காணிய என, வந்தான். 21
நகர மாந்தர் அணிசெய்த வகை
தோரணம் நடுவாரும், தூண் உறை பொதிவாரும்,
பூரண குடம் எங்கும் புனை துகில் புனைவாரும்,
கார் அணி நெடு மாடம் கதிர் மணி அணிவாரும்,
ஆரண மறைவாணர்க்கு இன் அமுது அடுவாரும், 22
அன்ன மென் நடையாரும், மழ விடை அனையாரும்,
கன்னி நல் நகர், வாழை கமுகொடு நடுவாரும்,
பன்ன அரு நிறை முத்தம் பரியன தெரிவாரும்,
பொன் அணி அணிவாரும், மணி அணி புனைவாரும்,
23
சந்தனம், அகில், நாறும் சாந்தொடு, தெரு எங்கும்
சிந்தினர் திரிவாரும், செழு மலர் சொரிவாரும்,
இந்திரதனு நாண, எரி மணி நிரை மாடத்து,
அந்தம் இல் விலை ஆரக் கோவைகள் அணிவாரும்,
24
தளம் கிளர் மணி கால, தவழ் சுடர் உமிழ் தீபம்,
இளங் குளிர் முளை ஆர் நல் பாலிகை இனம், எங்கும்,
விளிம்பு பொன் ஒளி நாற, வெயிலொடு நிலவு ஈனும்,
பளிங்குடை உயர் திண்ணைப் பத்தியின் வைப்பாரும்,
25
மந்தர மணி மாட முன்றிலின் வயின் எங்கும்,
அந்தம் இல் ஒளி முத்தின், அகல் நிரை ஒளி நாறி,
அந்தர நெடு வான் மீன் அவண் அலர்குவது என்ன,
பந்தரின் நிழல் வீச, படர் வெயில் கடிவாகும்,
26
வயிரம் மின் ஒளி ஈனும், மரகத மணி வேதி,
செயிர் அற ஒளிர் தீபம் சில தியர் கொணர்வாரும்,
வெயில் விரவிய பொன்னின் மிடை கொடி, மதி தோயும்
எயிலினில் நடுவாரும், எரி அகில் இடுவாரும்,
27
பண்டியில் நிறை வாசப் பனிமலர் கொணர்வாரும்,
தண்டலை இலையோடு, கனி பல தருவாரும்,
குண்டலம் வெயில் வீசக் குரவைகள் புரிவாரும்,
உண்டை கொள் மத வேழத்து ஓடைகள் அணிவாரும்,
28
கலவைகள் புனைவாரும், கலை நல தெரிவாரும்,
மலர் குழல் மலைவாரும், மதிமுகம் மணி ஆடித்
திலகம் முன் இடுவாரும், சிகழிகை அணிவாரும்,
இலவு இதழ் பொலி கோலம் எழில் பெற இடுவாரும்,
29
தப்பின மணி காசும், சங்கமும், மயில் அன்னார்
ஒப்பனை புரி போதும், ஊடலின் உகு போதும்,
துப்பு உறழ் இள வாசச் சுண்ணமும், உதிர் தாதும்,
குப்பைகள் என, வாரிக்கொண்டு அயல் களைவாரும்,
30
மன்னவர் வருவாரும், மறையவர் நிறைவாரும்,
இன் இசை மணி யாழின் இசை மது நுகர்வாரும்,
சென்னியர் திரிவாரும், விறலியர் செறிவாரும்,
கன்னலின் மண வேலைக் கடிகைகள் தெரிவாரும்.
31
கணிகையர் தொகுவாரும், கலை பல பயில்வாரும்,
பணி அணி இன முத்தம், பல இரு நில மன்னர்
அணி நெடு முடி ஒன்று ஒன்று அறைதலின், உகும்
அம் பொன்
மணி மலை தொகுமன்னன், வாயிலின் மிடைவாரும்,
32
கேடகம் வெயில் வீச, கிளர் அயில் நிலவு ஈன,
கோடு உயர் நெடு விஞ்சைக் குஞ்சரம் அது போல,
ஆடவர் திரிவாரும், அரிவையர் களி கூர,
நாடகம் நவில்வாரும், நகை உயிர் கவர்வாரும்,
33
கதிர் மணி ஒளி கால, கவர் பொருள் தெரியாவாறு,
எதிர் எதிர் சுடர் விம்முற்று எழுதலின், இளையோரும்,
மது விரி குழலாரும், மதிலுடை நெடு மாடம்
அது, இது, என ஓராது, அலமரல் உறுவாரும், 34
தேர்மிசை வருவாரும், சிவிகையில் வருவாரும்,
ஊர்தியில் வருவாரும், ஒளி மணி நிரை ஓடைக்
கார்மிசை வருவாரும், கரிணியில் வருவாரும்,
பார்மிசை வருவாரும், பண்டியில் வருவாரும்,
35
முத்து அணி அணிவாரும், மணி அணி முனிவாரும்,
பத்தியின் நிமிர் செம் பொற் பல கலன் மகிழ்வாரும்,
தொத்து உறு தொழில் மாலை சுரி குழல் அணிவாரும்,
சித்திர நிரை தோயும் செந் துகில் புனைவாரும்,
36
விடம் நிகர் விழியாரும், அமுது எனும் மொழியாரும்,
கிடை புரை இதழாரும், கிளர் நகை வெளியாரும்,
தட முலை பெரியாரும், தனி இடை சிறியாரும்,
பெடை அன நடையாரும், பிடி என வருவாரும், -
37
உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும்
கண்ணுறல் அரிது என்றும், கருதுதல் அரிது அம்மா!
எண்ணுறு சுடர் வானத்து இந்திரன் முடி சூடும்
மண்ணுறு திருநாளே ஒத்தது - அம் மண நாளே.
38
மண மண்டபத்திற்குத் தயரதன் வருதல்
கரை தெரிவு அரியது, கனகம் வேய்ந்தது,
வரை என உயர்ந்தது, மணியின் செய்தது,
நிரைவளை மணவினை நிரப்பு மண்டபம்,
அரைசர் தம் அரசனும் அணுகல் மேயினான். 39
வெண்குடை இள நிலா விரிக்க, மின் எனக்
கண் குடை இன மணி வெயிலும் கான்றிட,
பண் குடை வண்டினம் பாட, ஆடல் மா
மண் குடை தூளி விண் மறைப்ப, - ஏகினான். 40
மங்கல முரசுஇனம் மழையின் ஆர்த்தன;
சங்குகள் முரன்றன; தாரை, பேரிகை,
பொங்கின; மறையவர் புகலும் நான்மறை
கங்குலின் ஒலிக்கும் மா கடலும் போன்றதே.
41
பரந்த தேர், களிறு, பாய் புரவி, பண்ணையில்
தரம் தரம் நடந்தன; தானை வேந்தனை
நிரந்தரம் தொழுது எழும் நேமி மன்னவர்,
புரந்தரன் புடை வரும், அமரர் போன்றனர். 42
தயரதன், சனகன், முதலியோர் ஆசனத்து அமர்தல்
அனையவன், மண்டபம் அணுகி, அம் பொனின்
புனை மணி ஆதனம் பொலியத் தோன்றினான்;
முனிவரும், மன்னரும், முறையின் ஏறினார்;
சனகனும், தன் கிளை தழுவ, ஏறினான். 43
திருமண மண்டபத்தின் தோற்றம்
மன்னரும், முனிவரும், வானுளோர்களும்,
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும்,
துன்னினர் துவன்றலின், சுடர்கள் சூழ்வரும்
பொன் மலை ஒத்தது - அப் பொரு இல் கூடமே. 44
புயல் உள, மின் உள, பொரு இல் மீன் உள,
இயல் மணி இனம் உள, சுடர் இரண்டு உள;
மயன் முதல் திருத்திய மணி செய் மண்டபம்,
அயன் முதல் திருத்திய அண்டம் ஒத்ததே. 45
எண் தவ முனிவரும், இறைவர் யாவரும்,
அண்டரும், பிறரும், புக்கு அடங்கிற்று; ஆதலால்,
மண்டபம் வையமும் வானும் வாய் மடுத்து
உண்டவன் மணி அணி உதரம் ஒத்ததே. 46
தராதலம் முதல் உலகு அனைத்தும் தள்ளுற,
விராவின, குவிந்தன, விளம்ப வேண்டுமோ?
அரா-அணை துறந்து போந்து, அயோத்தி எய்திய
இராகவன் செய்கையை இயம்புவாம் அரோ: 47
இராமன் நீராடி மணக்கோலம் புனைதல்
சங்கு இனம் தவழ் கடல் ஏழில் தந்தவும்,
சிங்கல் இல் அரு மறை தெரிந்த தீர்த்தமும்,
கங்கையே முதலவும், கலந்த நீரினால்,
மங்கல, மஞ்சனம் மரபின் ஆடியே, 48
கோது அறு தவத்துத் தம் குலத்துளோர் தொழும்
ஆதி அம் சோதியை அடி வணங்கினான் -
காது இயல், கயல் விழிக் கன்னிமார்களை,
வேதியர்க்கு அரு மறை விதியின் நல்கியே. 49
அழி வரு தவத்தினோடு, அறத்தை ஆக்குவான்,
ஒழிவு அருங் கருணை ஓர் உருவு கொண்டென,
எழுத அரு வடிவு கொண்டு, இருண்ட மேகத்தைத்
தழுவிய நிலவு என, கலவை சாத்தியே; 50
மங்கல முழு நிலா மலர்ந்த திங்களை,
பொங்கு இருங் கருங் கடல் பூத்தது ஆம் என,
செங்கிடைச் சிகழிகை, செம் பொன் மாலையும்,
தொங்கலும், துயல்வர, சுழியம் சூடியே; 51
ஏதாம் இல் இரு குழை, இரவு, தன் பகல்,
காதல் கண்டு உண்ர்ந்தன, கதிரும் திங்களும்,
சீதைதன் கருத்தினைச் செவியின் உள்ளுற,
தூது சென்று, உரைப்பன போன்று தோன்றவே; 52
கார் விடக் கறையுடை, கணிச்சி, வானவன்
வார் சடைப் புடையின், ஓர் மதி மிலைச்ச, தான்
சூர் சுடர்க் குலம் எலாம் சூடினான் என,
வீர பட்டத்தொடு திலகம் மின்னவே; 53
சக்கரத்து அயல் வரும் சங்கம் ஆம் என
மிக்கு ஒளிர் கழுத்து அணி தரள வெண் கொடி,
மொய்க் கருங் குழலினாள், முறுவல் உள்ளுறப்
புக்கன நிறைந்து, மேல் பொடிப்ப போன்றவே.
54
பந்தி செய் வயிரங்கள் பொறியின் பாடு உற
அந்தம் இல் சுடர் மணி அழலின் தோன்றலால்,
சுந்தரத் தோள் அணி வலயம், தொல்லை நாள்
மந்தரம் சுற்றிய அரவை மானுமே. 55
கோவையின் பெரு வட முத்தம் கோத்தன,
காவல் செய் தடக் கையின் நடுவண் காந்துவ,
'மூவகை உலகிற்கும் முதல்வன் ஆம்' என,
ஏ வரும் பெருங் குறி இட்ட போன்றவே. 56
மாண்ட பொன் மணி அணி வலயம் வந்து, எதிர்
வேண்டினர்க்கு உதவுவான் விரும்பி, கற்பகம்
ஈண்டு, தன் கொம்பிடை ஈன்றது ஆம் என,
காண் தகு தடக் கையில், கடகம் மின்னவே; 57
தேனுடை மலர்மகள் திளைக்கும் மார்பினில்,
தான் இடை விளங்கிய தகையின் ஆரம்தான்,
மீனொடு சுடர் விட விளங்கும் மேகத்து,
வான் இடு வில் என, வயங்கிக் காட்டவே; 58
நணுகவும் அரியதா நடக்கும் ஞானத்தர்
உணர்வு என, ஒளி திகழ் உத்தரீயம்தான்,
தணிவு அருங் கருணையான் கழுத்தில் சாத்திய,
மணி உமிழ் கதிர் என, மார்பில் தோன்றவே; 59
மேவ அருஞ் சுடர் ஒளி விளங்கும் மார்பின் நூல்,
'ஏவரும் - தெரிந்து இனிது உணர்மின் ஈண்டு'
என,
தேவரும், முனிவரும், தெரிக்கலா முதல்
மூவரும், தான் என, முடித்தது ஒத்ததே. 60
சுற்றும் நீள் தமனியச் சோதி பொங்க, மேல்
ஒற்றை மா மணி உமிழ் உதரபந்தனம்,
மற்றும் ஓர் அண்டமும், அயனும், வந்து எழ,
பொன் தடந் தாமரை பூத்த போன்றதே. 61
'மண்ணுறு சுடர் மணி வயங்கித் தோன்றிய
கண்ணுறு கருங் கடல் அதனை, கை வளர்
தண் நிறப் பாற்கடல் தழீஇயது ஆம்' என,
வெண் நிறப் பட்டு, ஒளி விளங்கச் சாத்தியே;
62
சலம் வரு தரளமும், தயங்கு நீலமும்,
அலம்வரு நிழல் உமிழ் அம் பொன் கச்சினால்,
குலம் வரு கனக வான் குன்றை நின்று உடன்
வலம் வரு கதிர் என, வாளும் வீக்கியே; 63
முகை விரி சுடர் ஒளி முத்தின் பத்தி வான்
தொகை விரி பட்டிகைச் சுடரும் சுற்றிட,
தகை உடைவாள் எனும் தயங்கு வெய்யவன்
நகை இள வெயில் என, தொங்கல் நாற்றியே; 64
காசொடு கண் நிழல் கஞல, கைவினை
ஏசறு கிம்புரி எயிறு வெண் நிலா
வீசலின், மகரவாய் விளங்கும் வாள் முகம்,
ஆசையை ஒளிகளால் அளந்து காட்டவே; 65
'இனிப் பரந்து உலகினை அளப்பது எங்கு?' என,
தனித்தனி தடுப்பன போலும் சால்பின;
நுனிப்ப அரு நுண் வினைச் சிலம்பு நோன் கழல்,
பனிப் பருந் தாமரைப் பாதம் பற்றவே; 66
இன்னணம் ஒளிர்தர, இமையவர்க்கு எலாம்,
தன்னையே அனையது ஓர் கோலம் தாங்கினான் -
பன்னக மணி விளக்கு அழலும் பாயலுள்
அன்னவர் தவத்தினால் அனந்தல் நீங்கினான்.
67
முப் பரம் பொருளிற்குள் முதலை, மூலத்தை,
இப் பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை,
அப்பனை, அப்பினுள் அமிழ்தை, தன்னையே
ஒப்பனை, ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ? 68
இராமன் தேரில் ஏறி வரும் காட்சி
பல் பதினாயிரம் பசுவும், பைம் பொனும்,
எல்லை இல் நிலனொடு, மணிகள் யாவையும்,
நல்லவர்க்கு உதவினான்; நவிலும் நான் மறைச்
செல்வர்கள் வழுத்துற, தேர் வந்து ஏறினான்.
69
பொன் திரள் அச்சது; வெள்ளிச் சில்லி புக்கு
உற்றது; வயிரத்தின் உற்ற தட்டது;
சுற்று உறு நவ மணி சுடரும் தோற்றத்தது;
ஒற்றை ஆழிக் கதிர்த் தேரொடு ஒப்பதே. 70
நூல் வரும் தகையன, நுனிக்கும் நோன்மைய,
சால் பெருஞ் செவ்விய, தருமம் ஆதிய
நாலையும் அனையன, புரவி நான்கு, ஒரு
பாலமை உணர்ந்தவன் பக்கம் பூண்டவே. 71
அனையது ஓர் தேரினில், அருணன் நின்றெனப்
பனி வரு மலர்க்கண் நீர்ப் பரதன் கோல் கொள,
குனி சிலைத் தம்பிபின் கூட, ஏனையன்
இனிய பொற் கவரி கால் இயக்க, ஏகினான். 72
மண்ணவரும் விண்ணவரும் மகிழ்தல்
அமைவு அரு மேனியான் அழகின் ஆயதோ?
கமை உறு மனத்தினால் கருத வந்ததோ?
சமைவு உற அறிந்திலம்; தக்கது ஆகுக -
இமையவர் ஆயினார் இங்கு உளாருமே! 73
'வரம்பு அறும் உலகினை வலிந்து, மாய்வு இன்றி,
திரம் பயில் அரக்கர்தம் வருக்கம் தேய்வு இன்று
நிரம்பியது' எனக் கொடு, நிறைந்த தேவரும்,
அரம்பையர் குழாத்தொடும், ஆடல் மேயினார்.
74
சொரிந்தனர் மலர் மழை; சுண்ணம் தூவினர்;
விரிந்து ஒளிர் காசு, பொன் தூசு, வீசினர்;
பரிந்தனர்; அழகினைப் பருகினார் கொலோ?
தெரிந்திலம், திருநகர் மகளிர் செய்கையே!
75
வள்ளலை நோக்கிய மகளிர், மேனியின்
எள்ள அரும் பூண் எலாம் இரிய, நிற்கின்றார்
-
'உள்ளன யாவையும் உதவி, பூண்டவும்
கொள்ளையிற் கொள்க!' எனக் கொடுக்கின்றாரினே.
76
மண்டபம் சேர்ந்து இராமன் முனிவரையும் தந்தையையும்
தொழுது அமர்தல்
எஞ்சல் இல் உலகத்து உள்ள எறி படை அரச வெள்ளம்
குஞ்சரக் குழாத்தின் சுற்ற, கொற்றவன் இருந்த
கூடம்,
வெஞ் சினத் தனுவலானும், மேரு மால் வரையில்
சேரும்
செஞ் சுடர்க் கடவுள் என்ன, தேரிடைச் சென்று
சேர்ந்தான். 77
இரதம் ஆண்டு இழிந்த பின்னர், இரு மருங்கு,
இரண்டு கையும்,
பரதனும் இளைய கோவும், பரிந்தனர் ஏந்த, பைந்
தார்
வரதனும் எய்தி, மை தீர் மா தவர்த் தொழுது,
நீதி
விரத மெய்த் தாதை பாதம் வணங்கி, மாடு இருந்த
வேலை, 78
சீதை மண்டபத்துள் வந்த காட்சி
சிலையுடைக் கயல், வாள் திங்கள், ஏந்தி, ஓர்
செம் பொன் கொம்பர்,
முலை இடை முகிழ்ப்ப, தேரின் முன் திசை முளைத்தது
அன்னாள்,
அலை கடல் பிறந்து, பின்னை அவனியில் தோன்றி,
மீள
மலையிடை உதிக்கின்றாள்போல், மண்டபம் அதனில்
வந்தாள். 79
திருமண மாட்சி காண, வானவர் எல்லாம் வானத்து
வருதல்
நன்றி வானவர் எலாம், இருந்த நம்பியை,
'துன்று இருங் கருங் கடல் துவைப்பத் தோன்றிய
மன்றல் அம் கோதையாள் மாலை சூட்டிய
அன்றினும், இன்று உடைத்து அழகு' என்றார் அரோ.
80
ஒலி கடல் உலகினில், உம்பர், நாகரில்,
பொலிவது மற்று இவள் பொற்பு; என்றால், இவள்
மலிதரு மணம் படு திருவை, வாயினால்,
மெலிதரும் உணர்வினேன், என் விளம்புகேன்?
81
இந்திரன் சசியொடும் எய்தினான்; இளஞ்
சந்திர மௌலியும் தையலாளொடும்
வந்தனன்; மலர் அயன் வாக்கினாளுடன்
அந்தரம் புகுந்தனன்; - அழகு காணவே. 82
வசிட்டன் திருமணச் சடங்கைத் துவங்குதல்
நீந்த அருங் கடல் என, நிறைந்த வேதியர்,
தோய்ந்த நூல் மார்பினர், சுற்ற, தொல் நெறி
வாய்ந்த நல் வேள்விக்கு, வசிட்டன், மை அற
ஏய்ந்தன கலப்பையோடு இனிதின் எய்தினான். 83
தண்டிலம் விரித்தனன்; தருப்பை சாத்தினன்;
மண்டலம் விதிமுறை வகுத்து, மென் மலர்
கொண்டு நெய் சொரிந்து, எரி குழும், மூட்டினன்;
பண்டு உள மறை நெறி பரவிச் செய்தனன். 84
சீதையும் இராமனும் மணத் தவிசில் வீற்றிருத்தல்
மன்றலின் வந்து, மணத் தவிசு ஏறி,
வென்றி நெடுந் தகை வீரனும், ஆர்வத்து
இன் துணை அன்னமும், எய்தி இருந்தார்;
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார். 85
இராமனுக்குச் சீதையைச் சனகன் தாரை வார்த்துக்
கொடுத்தல்
கோமகன் முன் சனகன், குளிர் நல் நீர்,
'பூமகளும் பொருளும் என, நீ என்
மா மகள் தன்னொடும் மன்னுதி' என்னா,
தாமரை அன்ன தடக் கையின், ஈந்தான். 86
வாழ்த்து ஒலியும், மலர் மாரியும்
அந்தணர் ஆசி, அருங் கல மின்னார்
தந்த பல்லாண்டு இசை, தார் முடி மன்னர்
வந்தனை, மா தவர் வாழ்த்து ஒலியோடு
முந்திய சங்கம் முழங்கின மாதோ. 87
வானவர் பூ மழை, மன்னவர் பொன் பூ,
ஏனையர் தூவும் இலங்கு ஒளி முத்தம்,
தான் நகு நாள்மலர், என்று இவை தம்மால்,
மீன் நகு வானின் விளங்கியது, இப் பார். 88
இராமன் சீதையின் கையைப் பற்றி, தீ வலம் வருதல்
வெய்ய கனல்தலை வீரனும், அந் நாள்,
மை அறு மந்திரம் மும்மை வழங்கா,
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே,
தையல் தளிர்க் கை தடக் கை பிடித்தான். 89
இடம் படு தோளவனோடு, இயை வேள்வி
தொடங்கிய வெங் கனல் சூழ் வரு போதின்,
மடம் படு சிந்தையள், மாறு பிறப்பின்,
உடம்பு உயிரைத் தொடர்கின்றதை ஒத்தாள். 90
அம்மி மிதித்து, அருந்ததி காணுதல்
வலம்கொடு தீயை வணங்கினர், வந்து,
பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி,
இலங்கு ஒளி அம்மி மிதித்து, எதிர் நின்ற
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார். 91
இராமன் சீதையோடு தன் மாளிகை புகுதல்
மற்று உள, செய்வன செய்து, மகிழ்ந்தார்;
முற்றிய மா தவர் தாள் முறை சூடி,
கொற்றவனைக் கழல் கும்பிடலோடும்,
பொற்றொடி கைக் கொடு நல் மனை புக்கான். 92
பல் வகை மங்கல ஆரவாரம்
ஆர்த்தன பேரிகள்; ஆர்த்தன சங்கம்;
ஆர்த்தன நான்மறை; ஆர்த்தனர் வானோர்;
ஆர்த்தன பல் கலை; ஆர்த்தன பல்லாண்டு;
ஆர்த்தன வண்டு இனம்; ஆர்த்தன வேலை. 93
இராமனும் சீதையும் தாயர் மூவரையும் வணங்குதல்
கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்,
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி,
ஆய தன் அன்னை அடித் துணை சூடி,
தூய சுமித்திரை தாள் தொழலோடும், 94
மாமியர் மகிழ்ந்து சீதைக்குப் பொன் முதலியன
அளித்தல்
அன்னமும், அன்னவர் அம் பொன் மலர்த் தாள்
சென்னி புனைந்தாள்; சிந்தை உவந்தார்,
கன்னி, அருந்ததி, காரிகை, காணா,
'நல் மகனுக்கு இவள் நல் அணி' என்றார். 95
சங்க வளைக் குயிலைத் தழீஇ நின்றார்,
'அம் கணனுக்கு உரியார் உளர் ஆவார்
பெண்கள் இனிப் பிறர் யார் உளர்?' என்றார்;
கண்கள் களிப்ப, மனங்கள் களிப்பார். 96
'எண் இல கோடி பொன், எல்லை இல் கோடி
வண்ண அருங் கலம், மங்கையர் வெள்ளம்,
கண் அகல் நாடு, உயர் காசொடு தூசும்,
பெண்ணின் அணங்கு அனையாள் பெறுக!' என்றார்.
97
இராமன் சீதையொடு பள்ளி சேர்தல்
நூற் கடல் அன்னவர் சொற் கடன் நோக்கி,
மால் கடல் பொங்கும் மனத்தவளோடும்,
கார்க் கடல் போல் கருணைக் கடல், பண்டைப்
பாற்கடல் ஒப்பது ஓர் பள்ளி அணைந்தான். 98
வசிட்டன் மங்கல அங்கி வளர்த்தல்
பங்குனி உத்தரம் ஆன பகற்போது,
அங்க இருக்கினில், ஆயிர நாமச்
சிங்கம் மணத் தொழில் செய்த திறத்தால்,
மங்கல அங்கி, வசிட்டன் வகுத்தான். 99
பரதன் முதலிய மூவருக்கும் திருமணம் நிகழ்தல்
வள்ளல் தனக்கு இளையோர்கள் தமக்கும்
எள்ளல் இல் கொற்றவன், 'எம்பி அளித்த
அள்ளல் மலர்த் திரு அன்னவர் தம்மைக்
கொள்ளும்' எனத் தமரோடு குறித்தான். 100
கொய்ந் நிறை தாரன், குசத்துவசப் பேர்
நெய்ந் நிறை வேலவன், மங்கையர் நேர்ந்தார்;
மைந் நிறை கண்ணியர், வான் உறை நீரார்,
மெய்ந் நிறை மூவரை மூவரும் வேட்டார். 101
தயரதன் மிதிலையில் சில நாள் தங்கியிருத்தல்
வேட்டு அவர் வேட்டபின், வேந்தனும், மேல்நாள்
கூட்டிய சீர்த்தி கொடுத்திலன் அல்லால்,
ஈட்டிய மெய்ப் பொருள் உள்ளன எல்லாம்
வேட்டவர் வேட்டவை வேண்டளவு ஈந்தான். 102
ஈந்து, அளவு இல்லது ஓர் இன்பம் நுகர்ந்தே,
ஆய்ந்து உணர் கேள்வி அருந் தவரோடும்,
வேந்தனும், அந் நகர் வைகினன்; மெள்ளத்
தேய்ந்தன நாள் சில; செய்தது உரைப்பாம்:
103
மிகைப் பாடல்கள்
எரிகால் சுடர் ஏக, எழுந்த நிலா
வரும் ஈரமும், மா மயில் சானகிதன்
திருமேனியின் மீது சினந்து சுட,
தரியாது, உளம் நொந்து, தனித்து உறைவாள்.
2-1
என்று, ஐயன் மனத்தொடும் எண்ணினன்; மற்று
அன்று அங்கு அவை நிற்க, அருட் சனகன்
முன் தந்த தவத்து உறு மொய்குழலாள்
துன்றும் மணம் உற்றது சொல்லிடுவாம். 18-1
கதிரவன் எழலோடும், கடி நகர் இடம் எங்கும்
மதி முக மடவாரும் மைந்தரும் முதியோரும்
விதி புரி செயல் போலும், மேல் உலகினும் இல்லாப்
புதுமையின் உறு, கோலம் புனைதலை முயல்வுற்றார்.
21-1
என்றும், நான்முகன் முதல் யாரும், யாவையும்,
நின்ற பேர் இருளினை நீக்கி, நீள் நெறி
சென்று மீளாக் குறி சேரச் சேர்த்திடு
தன் திரு நாமத்தைத் தானும் சாத்தியே. 48-1
24. பரசுராமப் படலம்
விசுவாமித்திரன் ஆசி கூறி, வட மலைக்குச் செல்லுதல்
தான் ஆவது ஓர் வகையே நனி சனகன் தரு தயலும்,
நானா விதம் உறு போகமும் நுகர்கின்ற அந் நாள்வாய்,
ஆனா மறை நெறி ஆசிகள் முனி கோசிகன் அருளி,
போனான் வட திசைவாய், உயர் பொன் மால் வரை புக்கான்.
1
தயரதன் சேனைச் சுற்றமுடன் அயோத்திக்குப் பயணமாதல்
அப் போதினில் முடி மன்னவன், 'அணி மா நகர் செலவே,
இப்போது, நம் அனிகம்தனை எழுக!' என்று இனிது
இசையா,
கைப் போதகம் நிகர் காவலர் குழு வந்து, அடி
கதுவ,
ஒப்பு ஓத அரு தேர்மீதினில், இனிது ஏறினன்,
உரவோன். 2
தன் மக்களும், மருமக்களும், நனி தன் கழல் தழுவ,
மன் மக்களும், அயல் மக்களும், வயின் மொய்த்திட,
மிதிலைத்
தொல் மக்கள் தம் மனம் உக்கு, உயிர் பிரிவு
என்பது ஒர் துயரின்,
வன்மைக் கடல் புக, உய்ப்பது ஓர் வழி புக்கனன்
மறவோன். 3
இராமன் தம்பியரோடு சென்ற காட்சி
முன்னே நெடு முடி மன்னவன் முறையில் செல, மிதிலை
நன் மா நகர் உறைவார் மனம் நனி பின் செல, நடுவே,
தன் ஏர் புரை தரு தம்பியர் தழுவிச் செல, மழைவாய்
மின்னே புரை இடையாளொடும் இனிது ஏகினன் வீரன்.
4
பறவைகள் அபசகுனமாய்ச் செல்வது கண்டு, தயரதன்
தயங்கி நிற்றல்
ஏகும் அளவையின் வந்தன, வலமும் மயில், இடமும்
காகம் முதலிய, முந்திய தடை செய்வன; கண்டான்;
நாகம் அனன், 'இடை இங்கு உளது இடையூறு' என,
நடவான்;
மாகம் மணி அணி தேரொடு நின்றான், நெறி வந்தான்.
5
மன்னன் நிமித்திகனை வினாவ, அவன், 'இடையூறு
இன்றே வந்து, நன்றாய்விடும்' எனல்
நின்றே, நெறி உணர்வான், ஒரு நினைவாளனை அழையா,
'நன்றோ? பழுது உளதோ? நடு உரை நீ, நயம்' என்ன,
குன்றே புரை தோளான் எதிர், புள்ளின் குறி தேர்வான்,
'இன்றே வரும் இடையூறு; அது நன்றாய்விடும்'
என்றான். 6
பரசுராமனது வருகையும், அது கண்டு தயரதன் சோர்தலும்
என்னும் அளவினில், வானகம் இருள் கீறிட, ஒளியாய்
மின்னும்படி புடை வீசிய சடையான்; மழு உடையான்;
பொன்னின் மலை வருகின்றது போல்வான்; அனல் கால்வான்;
உன்னும் சுழல் விழியான்; உரும் அதிர்கின்றது
ஒர் மொழியான்; 7
கம்பித்து, அலை எறி நீர் உறு கலம் ஒத்து, உலகு
உலைய,
தம்பித்து, உயர் திசை யானைகள் தளர, கடல் சலியா
வெம்பித் திரிதர, வானவர் வெருவுற்று இரிதர,
ஓர்
செம் பொன் சிலை தெறியா, அயில் முக வாளிகள்
தெரிவான்; 8
'விண் கீழுற என்றோ? படி மேல்கீழ் உற என்றோ?
எண் கீறிய உயிர் யாவையும் யமன் வாய் இட என்றோ?-
புண் கீறிய குருதிப் புனல் பொழிகின்றன புரையக்
கண் கீறிய கனலான் முனிவு - யாது?' என்று அயல்
கருத; 9
போரின்மிசை எழுகின்றது ஓர் மழுவின் சிகை புகைய,
தேரின்மிசை மலை சூழ் வரு கதிரும் திசை திரிய,
நீரின்மிசை வடவைக் கனல் நெடு வான் உற முடுகி,
பாரின்மிசை வருகின்றது ஓர் படி வெஞ் சுடர்
படர, 10
பாழிப் புயம் உயர் திக்கிடை அடையப் புடை படர,
சூழிச் சடைமுடி விண் தொட, அயல் வெண் மதி தோற்ற,
ஆழிப் புனல், எரி, கால், நிலம், ஆகாயமும்,
அழியும்
ஊழிக் கடை முடிவில், தனி உமை கேள்வனை ஒப்பான்;
11
அயிர் துற்றிய கடல் மா நிலம் அடைய, தனி படரும்
செயிர் சுற்றிய படையான், அடல் மற மன்னவர் திலகன்,
உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என, ஓர் ஆயிரம்
உயர்தோள்
வயிரப் பணை துணிய, தொடு வடி வாய் மழு உடையான்;
12
நிருபர்க்கு ஒரு பழி பற்றிட, நில மன்னவர் குலமும்
கரு அற்றிட, மழுவாள் கொடு களை கட்டு, உயிர்
கவரா,
இருபத்தொரு படிகால், இமிழ் கடல் ஒத்து அலை
எறியும்
குருதிப் புனல் அதனில், புக முழுகித் தனி குடைவான்;
13
கமை ஒப்பது ஓர் தவமும், சுடு கனல் ஒப்பது ஓர்
சினமும்,
சமையப் பெரிது உடையான்; நெறி தள்ளுற்று, இடை
தளரும்
அமையத்து, உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை,
சீறா,
சிமையக் கிரி உருவ, தனி வடி வாளிகள் தெரிவான்;
14
சையம் புக நிமிர் அக் கடல் தழுவும்படி சமைவான்;
மையின் உயர் மலை நூறிய மழு வாளவன் வந்தான்.
ஐயன்தனை அரிதின் தரும் அரசன் அது கண்டான்,
'வெய்யன் வர நிபம் என்னைகொல்?' என வெய்துறும்
வேலை. 15
எதிரே வந்த பரசுராமனை, 'யார்?' என இராமன் வினாவுதல்
பொங்கும் படை இரிய, கிளர் புருவம் கடை நெரிய,
வெங் கண் பொறி சிதற, கடிது உரும் ஏறு என விடையா,
சிங்கம் என உயர் தேர் வரு குமரன் எதிர், சென்றான்,
அம் கண் அரசன் மைந்தனும், "ஆரோ?"
எனும் அளவில், 16
தயரதன் இடை வந்து வணங்க, சினம் தணியாது, பரசுராமன்
பேசுதல்
அரைசன், அவனிடை வந்து, இனிது ஆராதனை புரிவான்,
விரை செய் முடி படிமேல் உற அடி மேல் உற விழவும்,
கரை சென்றிலன் அனையான், நெடு முடிவின் கனல்
கால்வான்;
முரைசின் குரல் பட, வீரனது எதிர் நின்று, இவை
மொழிவான்: 17
'உன் தோள் வலி அறிய இங்கு வந்தேன்' என இராமனை
நோக்கி பரசுராமன் மொழிதல்
'இற்று ஓடிய சிலையின் திறம் அறிவென்; இனி,
யான் உன்
பொன் தோள் வலி நிலை சோதனை புரிவான் நசை உடையேன்;
செற்று ஓடிய திரள் தோள் உறு தினவும் சிறிது
உடையேன்;
மற்று ஓர் பொருள் இலை; இங்கு இது என் வரவு'
என்றனன், உரவோன். 18
தயரதன் பரசுராமனிடம் அபயம் வேண்டுதல்
அவன் அன்னது பகரும் அளவையின், மன்னவன் அயர்வான்,
'புவனம் முழுவதும் வென்று, ஒரு முனிவற்கு அருள்புரிவாய்!
சிவனும், அயன், அரியும் அலர்; சிறு மானிடர்
பொருளோ?
இவனும், எனது உயிரும், உனது அபயம், இனி' என்றான்.
19
'விளிவார் விளிவது, தீவினை விழைவாருழை அன்றோ?
களியால், இவன் அயர்கின்றன உளவோ? - கனல் உமிழும்
ஒளி வாய் மழு உடையாய்! - பொர உரியாரிடை அல்லால்,
எளியாரிடை, வலியார் வலி என் ஆகுவது?' என்றான்.
20
'நனி மாதவம் உடையாய்! "இது பிடி நீ"
என நல்கும்
தனி நாயகம், உலகு ஏழையும் உடையாய்! இது தவிராய்;
பனி வார் கடல் புடை சூழ் படி நரபாலரை அருளா,
முனிவு ஆறினை; முனிகின்றது முறையோ?' என மொழிவான்.
21
'அறன் நின்றவர் இகழும்படி, நடுவின் தலை புணராத்
திறன் நின்று, உயர் வலி என்? அது ஓர் அறிவின்
தகு செயலோ?
அறன் நின்றதன் நிலை நின்று, உயர் புகழ் ஒன்றுவது
அன்றோ,
மறன் என்பது? மறவோய்! இது வலி என்பது வலியோ!
22
'சலத்தோடு இயைவு இலன், என் மகன்; அனையான் உயிர்
தபுமேல்,
உலத்தோடு எதிர் தோளாய்! எனது உறவோடு, உயிர்
உகுவேன்;
நிலத்தோடு உயர் கதிர் வான் உற நெடியாய்! உனது
அடியேன்;
குலத்தோடு அற முடியேல்; இது குறை கொண்டனென்'
என்றான். 23
பரசுராமன் இராமன் எதிர் செல்லக் கண்டு, தயரதன்
துன்பத்தில் ஆழ்தல்
என்னா அடி விழுவானையும் இகழா, எரி விழியா,
பொன் ஆர் கலை அணிவான் எதிர் புகுவான் நிலை
உணரா,
தன்னால் ஒரு செயல் இன்மையை நினையா, உயிர் தளரா,
மின்னால் அயர்வுறும் வாள் அரவு என, வெந் துயர்
உற்றான். 24
பரசுராமன் தன் கை வில்லின் பெருமை கூறி, 'நீ
வல்லையேல், என் வில்லை வளை' என்று வீரம் பேசுதல்
மானம் மணி முடி மன்னவன், நிலை சோர்வுறல் மதியான்,
தான் அந் நிலை உறுவான் உறு வினை உண்டது தவிரான்;
'ஆன(ம்)முடை உமை அண்ணலை அந் நாள் உறு சிலைதான்
ஊனம் உளது; அதன் மெய்ந்நெறி கேள்!' என்று உரைபுரிவான்:
25
'ஒரு கால் வரு கதிர் ஆம் என ஒளி கால்வன, உலையா
வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன, வையம்
அருகா வினை புரிவான் உளன்; அவனால் அமைவனதாம்
இரு கார்முகம் உள; யாவையும் ஏலாதன, மேல்நாள்:
26
'ஒன்றினை உமையாள் கேள்வன் உவந்தனன்; மற்றை
ஒன்றை
நின்று உலகு அளந்த நேமி நெடிய மால் நெறியின்
கொண்டான்;
என்று இது உணர்ந்த விண்ணோர், "இரண்டினும்
வன்மை எய்தும்
வென்றியது யாவது?" என்று விரிஞ்சனை வினவ,
அந் நாள், 27
'"சீரிது தேவர்தங்கள் சிந்தனை" என்பது
உன்னி,
வேரி அம் கமலத்தோனும், இயைவது ஓர் வினயம்தன்னால்
யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவர் ஆம் இருவர்
தம்மை,
மூரி வெஞ் சிலை மேல் இட்டு, மொய் அமர் மூட்டி
விட்டான்; 28
இருவரும், இரண்டு வில்லும் ஏற்றினர்; உலகம்
ஏழும்
வெருவர, திசைகள் பேர, வெங் கனல் பொங்க, மேன்மேல்,
செரு மலைகின்ற போழ்தில், திரிபுரம் எரித்த
தேவன்,
வரி சிலை இற்றது ஆக, மற்றவன் முனிந்து மன்னோ,
29
'மீட்டும் போர் தொடங்கும் வேலை, விண்ணவர் விலக்க,
வல் வில்
நீட்டினன் தேவர்கோன் கை, நெற்றியில் கண்ணன்;
வெற்றி
காட்டிய கரிய மாலும், கார்முகம்தன்னை, பாரில்,
ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகற்கு ஈந்து போனான்;
30
இரிசிகன் எந்தைக்கு ஈய, எந்தையும் எனக்குத்
தந்த
வரிசிலை இது, நீ நொய்தின் வாங்குதி ஆயின்,
மைந்த!
குரிசில்கள் நின்னோடு ஒப்பார் இல்லை; யான்
குறித்த போரும்
புரிகிலென், நின்னொடு; இன்னம் புகல்வது கேட்டி'
என்றான். 31
ஊன வில் இறுத்த மொய்ம்பை நோக்குவது ஊக்கம்
அன்றால்;
மானவ! மற்றும் கேளாய்: வழிப் பகை உடையன் நும்பால்;
ஈனம் இல் எந்தை, "சீற்றம் நீக்கினான்"
என்ன, முன் ஓர்
தானவன் அனைய மன்னன் கொல்ல, யான் சலித்து மன்னோ,
32
'மூ-எழு முறைமை, பாரில் முடியுடை வேந்தை எல்லாம்,
வேவு எழு மழுவின் வாயால், வேர் அறக் களைகட்டு,
அன்னார்
தூ எழு குருதி வெள்ளத் துறையிடை, முறையின்,
எந்தைக்கு
ஆவன கடன்கள் நேர்ந்தேன்; அருஞ் சினம் அடக்கி
நின்றேன். 33
'உலகு எலாம் முனிவற்கு ஈந்தேன், உறு பகை ஒடுக்கிப்
போந்தேன்,
அலகு இல் மா தவங்கள் செய்து, ஓர் அரு வரை இருந்தேன்;
ஆண்டை,
சிலையை நீ இறுத்த ஓசை செவி உற, சீறி வந்தேன்;
மலைகுவென்; வல்லைஆகின், வாங்குதி, தனுவை!'
என்றான். 34
வில்லை வாங்கி வளைத்து, 'இதற்கு இலக்கு யாது?'
என இராமன் பரசுராமனிடம் கேட்டல்
என்றனன் என்ன, நின்ற இராமனும் முறுவல் எய்தி,
நன்று ஒளிர் முகத்தன் ஆகி, 'நாரணன் வலியின்
ஆண்ட
வென்றி வில் தருக!' என்ன, கொடுத்தனன்; வீரன்
கொண்டு, அத்
துன்று இருஞ் சடையோன் அஞ்ச, தோளுற வாங்கி,
சொல்லும்: 35
'பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனை; என்றாலும்,
வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ, விரதம் பூண்டாய்,
ஆதலின் கொல்லல் ஆகாது; அம்பு இது பிழைப்பது
அன்றால்;
யாது இதற்கு இலக்கம் ஆவது? இயம்புதி விரைவின்!'
என்றான். 36
பரசுராமன் இராமனைப் புகழ்ந்து, தன் தவத்தை
அம்புக்கு இலக்கு ஆக்குதல்
'நீதியாய்! முனிந்திடேல்; நீ இங்கு யாவர்க்கும்
ஆதி; யான் அறிந்தனென்; அலங்கல் நேமியாய்!
வேதியா இறுவதே அன்றி, வெண் மதிப்
பாதியான் பிடித்த வில் பற்றப் போதுமோ? 37
'பொன்னுடை வனை கழல் பொலம் கொள் தாளினாய்!
மின்னுடை நேமியன் ஆதல் மெய்ம்மையால்;
என் உளது உலகினுக்கு இடுக்கண்? யான் தந்த
உன்னுடை வில்லும், உன் உரத்துக்கு ஈடு அன்றால்,
38
'எய்த அம்பு இடை பழுது எய்திடாமல், என்
செய் தவம் யாவையும் சிதைக்கவே!' என,
கை அவண் நெகிழ்தலும், கணையும் சென்று, அவன்
மை அறு தவம் எலாம் வாரி, மீண்டதே. 39
பரசுராமன் வாழ்த்தி, விடை பெற்றுச் செல்லுதல்
'எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக!
மண்ணிய மணி நிற வண்ண! வண் துழாய்க்
கண்ணிய! யாவர்க்கும் களைகண் ஆகிய
புண்ணிய! விடை' எனத் தொழுது போயினான். 40
இராமன் தந்தையைத் தொழுது, அவரது துயரைப் போக்குதல்
அழிந்து, அவன் போனபின், அமலன், ஐ - உணர்வு
ஒழிந்து, தன் உயிர் உலைந்து, உருகு தாதையை,
பொழிந்த பேர் அன்பினால், தொழுது, முன்பு புக்கு,
இழிந்த வான் துயர்க் கடல் கரை நின்று ஏற்றினான்.
41
தயரதன் மகிழ்ந்து, இராமனை உச்சி மோந்து, பாராட்டுதல்
வெளிப்படும் உணர்வினன், விழுமம் நீங்கிட,
தளிர்ப்பு உறு மத கரித் தானையான், இடை
குளிப்ப அருந் துயர்க் கடற் கோடு கண்டவன்,
களிப்பு எனும் கரை இலாக் கடலுள் ஆழ்ந்தனன்.
42
பரிவு அறு சிந்தை, அப் பரசுராமன் கை
வரி சிலை வாங்கி, ஓர் வசையை நல்கிய
ஒருவனைத் தழுவிநின்று, உச்சி மோந்து, தன்
அருவி அம் கண் எனும் கலசம் ஆட்டினான். 43
'பொய்ம்மை இல், சிறுமையில் புரிந்த, ஆண் தொழில்,
மும்மையின் உலகினால் முடிக்கல் ஆவதோ?
மெய்ம்மை இச் சிறுவனே, வினை செய்தோர்களுக்கு,
இம்மையும் மறுமையும் ஈயும்' என்றனன். 44
தேவர்கள் மலர் மழை பொழிய இராமன் வருணனிடம்,
'சேமித்து வை' என்று, பரசுராமனின் வில்லைக் கொடுத்து, அயோத்தி சேர்தல்
பூ மழை பொழிந்தனர் புகுந்த தேவருள்
வாம வேல் வருணனை, 'மான வெஞ் சிலை
சேமி' என்று உதவி, தன் சேனை ஆர்த்து எழ,
நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான். 45
தயரதன் பரதனைக் கேகய நாட்டிற்கு அனுப்புதல்
நண்ணினர், இன்பத்து வைகும் நாளிடை,
மண்ணுறு முரசு இனம் வயங்கு தானையான்,
அண்ணல், அப் பரதனை நோக்கி, ஆண்தகை,
எண்ண அருந் தகையது ஓர் பொருள் இயம்புவான்:
46
'ஆணையின் நினது மூதாதை, ஐய! நிற்
காணிய விழைவது ஓர் கருத்தன்; ஆதலால்,
கேணியில் வளை முரல் கேகயம் புக,
பூண் இயல் மொய்ம்பினாய்! போதி' என்றனன்.
47
இராமனை வணங்கிப் பரதன் கேகய நாட்டிற்குப் புறப்படுதல்
ஏவலும், இறைஞ்சிப் போய், இராமன் சேவடிப்
பூவினைச் சென்னியில் புனைந்து, போயினான் -
ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலான்,
ஓவல் இல் உயிர் பிரிந்து உடல் சென்றென்னவே.
48
சத்துருக்கனோடு பரதன் ஏழு நாளில் கேகய நாடு
சென்று சேர்தல்
உளை விரி புரவித் தேர் உதயசித்து எனும்
வளை முரல் தானையான் மருங்கு போதப் போய்,
இளையவன் தன்னொடும், ஏழு நாளிடை,
நளிர் புனல் கேகய நாடு நண்ணினான். 49
ஆனவன் போனபின், அரசர் கோமகன்
ஊனம் இல் பேர் அரசு உய்க்கும் நாளிடை,
வானவர் செய்த மா தவம் உண்டு ஆதலால்,
மேல் நிகழ் பொருள் இனி விளம்புவாம் அரோ.
50
மிகைப் பாடல்கள்
கயிலைக் கிரிதனை மூடிய அன்றிற்கிரி கந்தன்
அயிலைப் புக விடர்விட்டது போல் ஏழ் வழியாகச்
சயிலத் துளைபட எய்தனை, அயில் தெற்றிய அதனால்
முயலுற்றவர் நிருபக்குலம் மூ-ஏழ் முறை முடித்தான்.
14-1
(பால காண்டம் முற்றும்)
0 Comments: